Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 4

mandai-odu

உண்மையாக இருக்கலாம். அந்த மண் மேடுகளில் இருந்து எலும்புக் கூடுகள் எழுந்து நடந்து திரியலாம். அந்த சீட்டி ஒலி ஆங்காங்கே பரவிக் கிடக்கும் எலும்புத் துண்டுகள் வழியாக ஆள் அரவமற்ற பிரதேசத்தில் காற்று நுழையும்போது உண்டானதாக இருக்கலாம். அங்குள்ள சூடான குருதியைக் குடித்த மணல் துகள்கள் கொள்கைகள் நிறைந்த உணவுகளுடன் வளர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அவை எதுவும் இல்லாவிட்டால், அந்த முடவனும் நொண்டியும் கிழவனும் வயிறு வீங்கிய சிறுவனும் தங்களுடைய மகனின் அல்லது தந்தையின் அல்லது சகோதரனின் பிணங்கள் எரிந்த சாம்பலின் மீது நின்று கொண்டு, அவர்களுடைய சாம்பலை எடுத்து உரத்த குரலில் அழுகிறார்கள் என்று இருக்கக் கூடாதா?

அங்கு இறந்த வீர ஆன்மாக்களின் போராட்ட ஆரவார சத்தம் இன்று வரை எதிரொலித்துக் கொண்டிருப்பது நிற்கவேயில்லை. அது தொடர்ந்து காற்றில் கலந்து ஒரு நிரந்தர செய்தியாக ஆகி விட்டிருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் பதினெட்டு முழங்கள் கொண்ட துடுப்பை எடுத்து ஊன்றும் படகோட்டிக்கு, அந்த இடத்தைத் தாண்டும்போது ஒரு செய்தி கிடைத்துவிட்டிருப்பதைப் போல தோன்றியது- அந்த மணல் துகள்களின் செய்தி! அவனுக்கே தெளிவாகப் புரியாத அளவிற்கு இருந்தாலும், சிலவற்றை அவன் நினைக்கத்தான் செய்கிறான். அரசியலைப் பற்றியோ, பொருளாதாரத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ ஒன்றிரண்டு வார்த்தைகளைக் கூறிவிட்டு அவன் இப்படி நிறைவு செய்கிறான்.

"எனினும், அந்த மண்ணுக்கு வீரியம் இருக்கிறது.'

ராணுவம் இருக்கும் இடத்திலும் தெளிவற்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அந்த மக்கள் கூட்டத்தின் மன தைரியத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டுச்சுட்டு அவர்களின் விரல்களே காய்த்துப் போய்விட்டன. எனினும், வரிசை சிதறவே இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அன்றைய முயற்சியின் களைப்புடன் சேர்ந்து ஒரு பயமும் நுழைந்துவிட்டிருந்தது. பேய்கள் பேய்கள் என்று அவர்கள் கூறினார்கள். அந்த மிகப் பெரிய செயலுக்குப் பிறகு, இறப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் எஞ்சியிருக்கும் எத்தனையோ மனிதர்களும் எங்கு ஒளிந்திருக்கிறார்கள்? அது ஒவ்வொரு பட்டாளக்காரனும் ஒருவரோடொருவர் கேட்கக்கூடிய கேள்வியாக இருந்தது. அந்தப் பேய்களின் உன்னதமான ஆவேசம் எப்படி விநியோகம் செய்யப்படும்? அது செயல்பட்டே தீர வேண்டிய ஒன்றல்லவா? ஆச்சரியப்படத்தக்க அந்த ஆவேசத்தால் செயல்படாமல் இருக்க முடியுமா? இல்லை... இல்லை... நிச்சயமாக முடியாது. பூமிக்குள்ளிருந்து அந்த ஆயிரங்கள் எந்த நள்ளிரவு நேரத்தில் மேலே எழுந்து வருமோ? யாருக்குத் தெரியும்! பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் இரவில் தரையில் உறங்குவதற்காகப் படுத்திருக்கும்போது, அந்த கோஷங்கள் பூமிக்குள் முழங்குவதைக் கேட்கலாம். அன்று இறந்தவனின்- மண்ணுக்குக் கீழே சென்றவனின்- அல்ல... உயிரோடு இருப்பவனின் முழக்கம் அது. அது எந்தச் சமயத்திலும் முடிவுக்கு வராது. பூமிக்குக் கீழே பலரும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு துயர நிவாரண மையத்தை பட்டாள முகாமிற்கு அருகில் திறந்திருக்கிறார்கள். அங்கு அரிசி, ஆடைகள் எல்லாம் இருக்கின்றன. அந்த ஊரில் எஞ்சியிருப்பவர்களில் ஒருத்தன்கூட அந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்ப்பதில்லை. பேய்கள்! மரணமடைந்த பேய்களுக்கும் உயிருள்ள பேய்களுக்கும் மத்தியில் வாழ வேண்டியிருக்கிறது.

அந்த பயம் படிப்படியாக வேறொரு வடிவத்தை அடைந்தது. அந்த ஊர் நன்கு அறிமுகமானவுடன், அங்குள்ள மனிதப் புழுக்களின் வாழ்க்கையை சற்று நெருக்கமாகப் படித்தவுடன் அவர்களுக்குப் பல விஷயங்களும் புரிந்தன. பட்டாளத்தைச் சேர்ந்தவன்... அவனும் மனிதன்தானே? அவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்க்க ஆரம்பித்தார்கள். யாருக்கும் ஒரு பிடியும் கிடைக்கவில்லை. எரிந்த, புதைத்த மனிதர்களின் எண்ணிக்கை- அதைச் சரியாகக் கணக்கிட முடியவில்லை. ஏரியில் எவ்வளவு பிணங்கள் அடித்து வரப்பட்டு மூழ்கின! உறுப்புகள் செயல்படாமல் நீருக்குள் சென்றன! இப்படிப் பழைய சம்பவங்களை நினைத்த போது, ஒரு விஷயத்தை அவர்கள் ஒருவரோடொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

“இவ்வளவு பேர் எதற்காக இறந்தார்கள்?''

அதற்கு பதில் இல்லை.

கண்டமாரில் உயிர் இருப்பதாகக் கூறி நடக்கும் பேய்கள்- அவை ஒவ்வொன்றுக்கும் வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருப்பதாகத் தோன்றியது. அவை இறக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கவில்லை.

ஒரு சிறுவன்... அவனுக்கு யாருமில்லை. வேண்டியவர்கள் எல்லாரும் மரணத்தைத் தழுவிவிட்டார்கள். தந்தையைக் கொன்ற துப்பாக்கி குண்டுதான் கர்ப்பமாக இருந்த தாயையும் கொன்றது. அவளுக்கு ஒரு சிறு குழந்தை இருந்தது. அது அப்போது இறக்க வில்லை. அந்தப் பையன் ஏதாவது ஊருக்குப் போய் பிழைத்திருக்கக் கூடாதா? இந்த நாசம் பிடித்த ஊரில் எதற்காகச் சுற்றிக் கொண்டிருக்கிறான்? அவனுடைய பார்வையைப் பார்த்தால் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தந்தையையும் தாயையும் ஒரே ஒரு துப்பாக்கி குண்டை பயன்படுத்தி சாகடித்தது, அதுவும் அவள் ஒரு குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டும் இன்னொரு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டும் மூன்றாவது குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டும் இருக்கும்போது, நல்ல ஒரு விஷயமல்ல என்று அந்தக் கொலைச் செயலை நேரில் பார்த்த ஒரு பட்டாளக்காரன் நினைத்தான். அந்த ஆரவாரத்திற்கு மத்தியில் அதைப் பார்த்தபோது, அப்படிப்பட்ட ஒரு சிந்தனை மின்னலைப்போல தோன்றி மறைந்தது. அவ்வளவுதான். தாய் இறந்து கீழே விழுந்தபோது கைக்குழந்தை அவளுடைய மார்பின்மீது கிடக்கிறது. அது அதற்குப் பிறகும் அன்னையின் மார்பிலிருந்து பால் குடித்திருக்கும். அந்தக் குழந்தை எப்போது வரை வாழ்ந்திருக்கும்? இரவு நேரத்தில் நாயும் குள்ள நரியும் ரத்தத்தைக் குடிப்பதற்காக வந்தபோது அதற்கு உயிர் இருந்திருக்குமா? அந்தக் குழந்தைக்கு ஒரு நாய் தூக்கிக் கொண்டு போகக்கூடிய அளவிற்கே எடை இருந்தது. அதுமட்டும் உண்மை. அந்தப் பட்டாளத்தைச் சேர்ந்தவனுக்கு- அந்தக் குடும்பத்தை நாசம் பண்ணிய நண்பனிடம் கூற வேண்டும் என்று பல நேரங்களிலும் தோன்றியிருக்கிறது- குழந்தைகளையும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கியிருக்கலாம் என்று.

ஆறே மாதங்களில் பதினைந்து வயது அதிகமான ஒரு வயதான மனிதன் இன்னொருவனின் கவனத்தில் பட்டான். அவன் இப்போது முழுமையாக கூன் விழுந்து காணப்படுகிறான். அவனுக்கும் யாரும் எஞ்சியிருக்கவில்லை. ஒரு மகன் இருந்தான். அவன் துப்பாக்கி குண்டுக்கு இரையாகிவிட்டான். மறுநாளிலிருந்து அந்தக் கிழவனை பிணங்களை எரிப்பதற்கும் பிணங்களைப் புதைப்பதற்கும் நியமித்தார்கள். வரிசையாகக் கிடக்கும் பிணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துத் தூக்கியபோது அந்த அப்பிராணி மனிதன் தன்னுடைய மகனையும் பார்த்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel