Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 7

mandai-odu

மாளிகையின் மேற்பகுதியில் மேஜையைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு முள்ளால் குத்தித் தின்பதையும், சிவப்பு, கருப்பு நிறங்களில் இருந்த திரவங்களைப் பெரிய கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் குடிப்பதையும், ஒவ்வொரு நிமிடமும் உற்சாகம் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் கீழே இருந்த பட்டாளக்காரர்கள் சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூக்கு பிடிக்கும் அளவிற்கு உணவு சாப்பிட்டாலும் அவர்களுடைய நாவில் நீர் ஊறியது.

அதன் சுவை எப்படி இருக்கும்? சுவை எப்படி இருந்தாலும், பருகுவது என்பது சுவாரசியமான விஷயம்தான். அவை அதிகமான விலையைக் கொண்ட பொருட்கள். என்றாவது அதன் ஒரு துளியின் ருசியையாவது அனுபவிக்க முடியுமா?

ஒரு பட்டாளக்காரன் தனக்கு ஆர்வம் அதிகரிப்பதாகச் சொன்னான்.

“இல்லை... நான் கேட்கிறேன். அவை நம்முடைய தொண்டைக்குள் இறங்காதா?''

“அதன் ஒரு குப்பியின் விலை எவ்வளவு என்று நீ நினைக் கிறாய்?''

அப்போது இன்னொரு ஆள் கேட்டான்:

“என்ன விலை வேண்டுமானாலும் இருக்கட்டும். நமக்குத் தந்தால் என்ன? நமக்குத்தான் தர வேண்டும். மேஜர் ஒரே இடத்தில் இருந்து கொண்டிருந்தார். சிரமப்பட்டதும் மிகப் பெரிய பாவத்தைச் செய்ததும் நாம்தான்...''

இன்னொரு மனிதன் அதை ஒப்புக் கொண்டபின், அது மட்டுமல்ல- அவன் கூறுவதற்கு இன்னும் சில விஷயங்கள் இருந்தன.

“நாம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த நிலச்சுவான்தாரும் தொழிற்சாலை உரிமையாளரும் இப்படி சந்தோஷத்தில் கிடந்து திளைக்க முடியுமா?''

நான்காவதாக ஒரு மனிதன் சொன்னான்:

“அங்கு உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருத்தனும் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த ரேஷன் வியாபாரம் செய்பவன்... அவன்தானே நமக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தவன்! அவன் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் திருட்டுத்தனம் பண்ணி சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். அந்த ஜரிகை போட்ட மேற்துண்டு அணிந்திருக்கும் மனிதன் இருக்கிறானே... அந்தப் பக்கமாக இருப்பவன்... அவனுடைய வீட்டில் மலையைப் போல நெல் குவிந்திருக்கிறது. நான் அங்கு போயிருக்கிறேன். எப்படி அவை அனைத்தையும் காலி பண்ணுவான் என்று நான் நினைத்தேன். ஆனால், ஒரு பறைக்கு ஐந்து ரூபாய் விலை. அந்த காந்தி தொப்பி அணிந்து வந்த ஆள்தான் அவர்களுடைய தலைவர்.''

சற்று போதை உள்ளே இருந்தாலும் ஒருவனின் இதயத்தின் ஆழத்திற்குள்ளிருந்து இன்னொரு கேள்வி எழுந்தது.

“எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள்?''

“எல்லாருமே இறந்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.''

அப்போது இன்னொருவன் கேட்டான்:

“எல்லாரும் கம்யூனிஸ்ட்களாக இருந்தார்களா?''

அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்த ஒருவன் சொன்னான்: “அப்பிராணிகள்... முழுமையான அப்பிராணிகள்... டேய், உங்களுக்கு எந்த விஷயமும் தெரிந்திருக்கவில்லை. இங்கே என்ன நடந்தது தெரியுமா? தெரியவில்லையென்றால் கேளுங்க. அவர்கள் எல்லாரும் இந்த நிலச்சுவான்தார்களின், முதலாளிமார்களின் வேலையாட்கள். அவர்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. இதெல்லாம் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? இந்த ஏழைகள் அரிசியும், நெல்லும் கிடைக்காமல் சிரமப்பட்டார்கள். வேலையும் இல்லை. கூலி கேட்டால் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள். நிலச்சுவான்தார் அவனுடைய வீட்டை இடித்து வெளியே போகும்படி கூறுவார். அதை தொழிலாளர்களின் சங்கம் எதிர்த்தது. ஊர் முழுவதும் எதிர்த்தார்கள். அப்போது நிலச்சுவான்தாருக்கும் முதலாளிக்கும் பயம் உண்டாகிவிட்டது. இதோ, நாம் பார்க்கும் தென்னைகளும் மரங்களும் இந்த ஏழை மனிதர்கள் வைத்தவைதான். தேங்காய்க்கு விலை அதிகரித்தபோது, முன்பு அதை கவனித்துக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த காவல் தேங்காய்களையும் நிலச்சுவான்தார்களே எடுத்துக் கொண்டார்கள். சங்கம் எதிர்த்தது. ரேஷன் கடைக்காரன் திருட்டுத்தனமாக விற்றதை சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கண்டு பிடித்தார்கள். நிலச்சுவான்தாரும் முதலாளியும் ரேஷன் கடைக்காரனும் பணம் உள்ளவர்கள் அல்லவா? அரசாங்கம் அவர்கள் பக்கம்தானே நிற்கும்? அப்போது தொழிலாளர்கள் சங்கம் அரசாங்கத்தையும் எதிர்த்தது. வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. பொதுக்கூட்டங்கள் நடந்தன. ஊர்வலங்கள் நடந்தன. நிலச் சுவான்தாரும் முதலாளியும் பயந்து நடுங்கிவிட்டார்கள். "ஜமீன்தார்தனம் அழியட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். அதுவும்... வேலை செய்து பருமனான உடல்களைக் கொண்ட ஆஜானுபாகுவான மனிதர்கள்... நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? "கஞ்சி குடிப்பதற்கு அரிசி தர முடியுமா?' என்றுதானே அவர்கள் இறந்து விழும்போதுகூட உரத்த குரலில் கூறினார்கள்?''

ஒருவன் கேட்டான்:

“அப்படியென்றால் நாம் கதையைத் தெரிந்து கொள்ளாமலே ஆட்டத்தைப் பார்த்திருக்கிறோமா?''

“ஆமாம்...''

சிந்தனையில் மூழ்கியிருந்த ஒருவன் சொன்னான்:

“பார்த்தால்... நமக்கும் இந்த இறந்துபோன அப்பிராணி மனிதர்களுக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? நாமும் பட்டினி கிடப்பவர்கள்தான்.''

“ஆமாம்...''

அந்த "ஆமாம்' என்ற சத்தம், அர்த்தத்துடன் வேறு எங்கிருந்தோ அசரீரியைப் போல அங்கு எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.

4

வாசலுக்கு மேலே சுவரில் ஒரு மண்டை ஓடு பற்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் நீளமான விரல்களுடன் இரண்டு கைகள் மண்டை ஓட்டிற்கு சற்று மேலே... அந்த இரண்டு எலும்புத் துண்டுகளையும் மணிக்கட்டில் இரும்புச் சங்கிலியால் கட்டியிருந்தார்கள்.

அந்த இளம்பெண் அந்தக் காட்சியைப் பார்த்து நடுங்கிப் போய்விட்டாள்.

அந்தக் காட்சியின் இரண்டு பக்கங்களிலும் சுவரில் மன்னர்கள், அவர்களுடைய அமைச்சர்கள், பெரிய படைத் தளபதிகள் ஆகியோரின் ஓவியங்களும் உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் வரைந்த பிரசித்தி பெற்ற ஓவியங்களும் இருந்தன. தாஜ் போன்ற கலைப் படைப்புகளின் ஓவியங்களும் இருந்தன. அந்த வகையில் வரவேற்பறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. எனினும், உள்ளே நுழையும்போது முதலில் கண்களில் படுவது அந்த மண்டை ஓடுதான்.

என்ன ஒரு பயங்கரமான காட்சி! திருமணம் முடிந்து கணவனின் வீட்டிற்கு முதல் தடவையாக கால்களை எடுத்து வைத்த போது, அவள் பார்த்த காட்சி அது. பட்டாளக்காரனின் மனைவியாக ஆகிவிட்டிருந்தாலும் ஒரு மென்மையான இதயத்தைக் கொண்ட இளம்பெண் அவள். அப்படி நடுக்கத்துடன்தான் அந்த வாழ்க்கை ஆரம்பமானது.

ஒரு மண்டை ஓடு மட்டும்தான் என்று, மேலும் ஒருமுறை கூர்ந்து பார்க்கும்போது தோன்றாது. சிறிய சிறிய மூன்று நான்கு எலும்புத் துண்டுகளை ஒன்றாகச் சேர்த்து கழுத்தும், தொடர்ந்து அப்படிப்பட்ட துண்டுகள் சேர்ந்து நீளமாகக் காட்சியளிக்கும் முதுகெலும்பும், மார்புக்கூடும், இடுப்பும், தொடை எலும்புகளும், மூட்டுகளும், கணுக்கால்களும், விரல்களும்... எல்லாம் கீழே இருக்கின்றன என்பதைப் போல தோன்றும் அந்த எலும்புக்கூடு தலையில் கையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தால்... கோர்க்கப்பட்ட பற்களுக்கு மேலே இருக்கும் பெரிய துவாரத்தின் வழியாக அது மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. அது நம்மைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel