Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 5

mandai-odu

அப்போது மகனுக்கு மூச்சு இருந்தது என்று கூறப்படுகிறது. எது எப்படியோ- கிழவன் மகனை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமிட்டான். அதற்காக கிழவன் ஒரு தண்டனையை அனுபவிக்க வேண்டியதிருந்தது. மகனுடைய மார்புப் பகுதியிலிருந்து பிய்ந்து வெளியே வந்து தனியே வராமல் இருந்த- சிறிய அளவிலேயே இருந்த ஒரு சதைப் பகுதியை கிழவனைத் தின்ன வைத்தார்கள் என்ற தகவலை ஜோசப் என்ற பட்டாளத்தைச் சேர்ந்தவன் கூறுவது காதில் விழுந்தது. அது தேவையற்ற ஒன்று. ஆனால், அங்கு ஒரு கேள்வி இருக்கிறது. அந்த வயதான கிழவன் அப்படிப்பட்ட ஒரு மகனை எதற்காகப் பிறக்கச் செய்தான்? அந்தக் கிழவனும் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கவே செய்கிறது.

இன்னொரு பட்டாளக்காரனுக்கு அவனுடைய ஒரு நண்பன் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயலைப் பற்றி நல்ல கருத்து இல்லை. அது மட்டுமல்ல -அது இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்பது அவனுடைய கருத்தாக இருந்தது. தாயும் மகளும் மகனும் உள்ள குடும்பத்திற்குள் அவன் நுழைந்து, மகளை பலாத்காரம் செய்தபோது, "வேண்டாம்' என்று தடுத்த மகனைக் கொண்டே அவனுடைய தாயை... உண்மையிலேயே அது மனிதத்தனத்திற்கு பொருத்தமான ஒரு செயல் அல்ல. அந்த அன்னை மட்டும் இப்போதும் இருக்கி றாள். அவளும் ஏன் மரணத்தைத் தழுவவில்லை?

இப்படி இறப்பதற்கு உரிமை உள்ளவர்கள், இறக்காமல் இருப்பதற்குக் காரணங்கள் இல்லாதவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது நோக்கம் இல்லாமலா?

அந்த முகாமில் இருக்கும் ஒவ்வொரு பட்டாளக்காரனுக்கும் உடனிருக்கும் பிற பட்டாளக்காரர்களைப் பற்றிய ஒவ்வொரு கதைகளும் தெரியும். அப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று ஒருவருக்கொருவர் அறிவுரை கூறிக் கொள்வார்கள். "நடந்தது நடந்துவிட்டது' என்று அவை எல்லாவற்றையும் மறப்பதற்கு முயற்சிப்பார்கள்.

ராணுவத்தின் ஆட்சிதான்... எனினும்... எனினும் என்று எல்லாரும் கூறினார்கள்.

3

போராட்டங்கள் முற்றிலுமாக நசுக்கப்பட்டுவிட்டன என்று ரிப்போர்ட் தயார் செய்யப்பட்டது. இரண்டு வருட பட்டாளத்தின் ஆட்சிக்குப் பிறகு கண்டமார் விடுதலை ஆகப் போகிறது.

அந்த ஊரின் உரிமையாளர்கள் என்ற தகுதியைக் கொண்ட நிலச்சுவான்தாரும் தொழில் அதிபரும் ஒன்று சேர்ந்து கலந்து பேசி முடிவு செய்தார்கள்- பிரிந்து செல்லும் ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு விடை கொடுக்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று.

இதற்கிடையில் நிலச்சுவான்தாருக்கும் தொழிற்சாலை உரிமையாளருக்கும் சில சிறிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டியதிருந்தது. நிலச்சுவான்தார் சில குடும்பங்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார். பல குடிசைகளும் ஆட்கள் யாரும் இல்லாமல் காலியாகக் கிடந்தன. வீடுகளை காலி பண்ணாதவர்களும் இருந்தார்கள். அவர்களையும் வீட்டை விட்டு வெளியேற்றி அனுப்பிவிட்டு, பூமி யாருமே இல்லாமல் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொழிற்சாலை உரிமையாளருக்கு இன்னொரு காரியம் நிறைவேற வேண்டியதிருந்தது. தொழிலாளர்களை வழி தவறிப் போகச் செய்யும் சிலர் இப்போதும் ஊரில் இருக்கிறார்கள். அவர்களைச் சற்று அச்சமடையச் செய்ய வேண்டும். இனிமேல் அவர்களிடமிருந்து தொல்லைகள் இருக்கக் கூடாது.

நிலச்சுவான்தாருக்குச் சொந்தமான ஒரு வீட்டில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மனிதனின் தந்தையும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள். அவன் இறந்துவிட்டானா அல்லது உயிருடன் இருக்கிறானா என்பதே உறுதியாகத் தெரியவில்லை. அந்த நிலையில் அந்த வீட்டில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள்தானே? அந்தக் குடும்பத்தின் ஒரு வேர் இருந்தால் போதும். அது அரும்பித் தழைத்து வளர ஆரம்பித்துவிடும். அந்த தந்தைக்கு நடக்க முடியவில்லையென்றாலும், அவன் தன் மகனைப் பிறக்கச் செய்திருக்கிறான். அந்தப் பிள்ளைகள் அவனுடைய பிள்ளைகள்தான். எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?

நிலச்சுவான்தாரின் எண்ணம் நிறைவேறியது. கண்டமாரில் எஞ்சியிருந்த குடிசைகள் ஒவ்வொன்றையும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் பிரித்து அழித்தார்கள். அந்த ஊரில் எஞ்சியிருந்தவர்கள் எல்லாருக்கும் ஒன்றும் இரண்டும் கிடைத்தன. அந்த வகையில் வீடே இல்லாத ஒரு மக்கள் கூட்டம் உண்டானது. அந்த ஊரில் ஒரு வீடு கூட இல்லாத நிலை உண்டானது.

எனினும், யாரும் ஊரை விட்டு வெளியே செல்லவில்லை. தென்னை மரங்களுக்கு அடியிலும் வீடுகள் இருந்த இடங்களின் தரைகளிலும் இப்போதும் அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். கூரை இல்லாவிட்டாலும், அங்கேயேதான் வசிக்கிறார்கள். போகவில்லை.

மீண்டுமொருமுறை அங்கு பயங்கரமான சூழ்நிலை நிலவியது. மரங்களின் நிழலிலும் தரையிலும் இருந்தவர்கள் அனைவரையும் விரட்டியடித்தார்கள். ஆனால், மறுநாள் காலையில் எங்கோ ஒளிந்திருந்துவிட்டோ என்னவோ அவர்கள் எல்லாரும் அங்கே இருந்தார்கள். அந்த இறுதி விரட்டியடித்தலில் சிலர் இறந்தனர். பாதையின் ஓரங்களிலும் தென்னை மரத்தடியிலும் இறந்துபோன பிணங்கள் கிடந்து நாறின. காகங்கள்கூட ஊரில் இல்லை.

அவர்கள் எங்கே செல்வார்கள்? அவர்கள் அங்கு பிறந்து வளர்ந்தவர்கள். நீளமான மடல்களைக் கொண்ட தென்னை மரங்கள். அவற்றை நட்டு வளர்த்தவர்களே அவர்கள்தான். அந்த மண்ணுக்கு அந்த அளவிற்கு வீரியம் கிடைத்திருப்பதே அவர்களின் வியர்வைத் துளிகள் கலந்திருப்பதால்தான். அந்த ஒற்றையடிப் பாதைகள் அவர்கள் வெட்டி உண்டாக்கியவை. வயல்கள் அவர்கள் உண்டாக்கியவை. ஜமீன்தாரின் மிகப் பெரிய மாளிகையும் அதற்குள் இருக்கும் சந்தோஷத்தைத் தரக்கூடிய பொருட்களும் யாருடைய கடுமையான உழைப்பால் வந்தவை? அந்த ஊர் நன்கு செழித்து எப்படி வந்தது? அந்த அப்பிராணிகள் எங்கு போக வேண்டும்?

ஒரு வாரத்திற்குப் பிறகு, பாதி மனிதர்கள் எஞ்சியிருந்தார்கள்.

பட்டாளத்தைச் சேர்ந்தவர்களை வழியனுப்பி வைக்கும் விழா ஒரு மிகப் பெரிய கொண்டாட்டத்தைப் போல நடந்தது. நிலச் சுவான்தாரின் மாளிகையில் அதிகாரிகளுக்கு ஐரோப்பிய பாணியில் விருந்து.... சாதாரண பட்டாளக்காரர்களுக்கு அங்கிருந்த சாப்பிடும் அறையில் விருந்து... இப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உணவைத் தயார் பண்ணுபவர்கள் நகரத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதியைச் சேர்ந்தவர்கள்.

மாநிலத்தில் இருக்கும் முக்கிய மனிதர்கள் எல்லாரும் அழைக்கப்பட்டிருந்தனர். மிகவும் முக்கியமான அரசியல் அமைப்பான ப்ரஜா பரிஷத்தின் தலைவர் வேலை பளுவின் காரணமாக வர முடியாத நிலையில் இருப்பதாக பதில் வந்தது. ஆனால், டிவிஷன் கமிட்டி தலைவரும் முக்கியமான வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் வந்திருந்தார்கள். மாநிலத்தின் உயர்ந்த நிலையை அந்த விழா வெளிப்படுத்தியது.

ஒரு புகழ் பெற்ற பாடகியின் பாட்டுக் கச்சேரியும் இருந்தது.

இரவு எட்டு மணி ஆனபோது விருந்தினர்கள் ஒவ்வொருவரும் வந்து சேர ஆரம்பித்தார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel