Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 2

mandai-odu

அங்கே நின்று கொண்டிருந்த அறிவாளியான ஒரு குழந்தை சொன்னது:

“இந்தக் குழந்தையின் அப்பா துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்திருப்பார்!''

அதற்கும் பதில் இல்லை. அவள் அப்போதும் குழந்தைக்குச் சாதத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள். வீட்டின் தலைவி கேட்டாள்:

“என்னடி எதுவும் பேசாமல் இருக்கே?''

அவள் தலையை உயர்த்தினாள். அவளுடைய பார்வை மிகவும் பரிதாபத்தை வரவழைக்கக் கூடியதாக இருந்தது. அவள் சொன்னாள்:

“எனக்கென்று யாரும் இல்லை அம்மா!''

குழந்தைக்குச் சாதத்தை ஊட்டி முடித்ததும் அவள் சொன்னாள்:

“அம்மா! பிள்ளைகளைப் போகச் சொல்லுங்க!''

இல்லத்தரசிக்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு கூறுவதற்கு ஒரு கதை இருக்கிறது. அந்தக் குழந்தையின் தந்தையைப் பற்றி... பிள்ளைகள் கேட்கக் கூடாததாக இருக்க வேண்டும். அவள் பிள்ளைகளைக் கோபப்பட்டு வெளியேற்றினாள்.

குழந்தையைக் கீழே உட்காரச் செய்துவிட்டு அவள் சொன்னாள்:

“அம்மா, உங்களுடைய கேள்வியை நான் காதில் வாங்காததைப் போல பேசாமல் அமர்ந்து கேட்டேன். நான் பிச்சை வாங்கித் திரிபவள். நீர் தருபவர்கள் ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. நான் ஒரு பிச்சைக்காரியா ஆயிட்டேன், அம்மா. எனக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் அன்றைக்கு ஊர்வலத்திற்குப் போனாங்க. அதற்குப் பிறகு வரவில்லை. ஒரு வயதான தாயும் நானும் மட்டும் மிஞ்சினோம்...''

வீட்டின் தலைவி கேட்டாள்:

“உனக்கு சொந்தக்காரர்கள் என்று யாரும் இல்லையா?''

“இல்லை அம்மா!''

“அப்படின்னா... இந்தக் குழந்தையின் தந்தை யார்?''

“எனக்கு யாருன்னு தெரியாது, அம்மா. நான் அந்த மகா பாவியைப் பார்த்ததே இல்லை.''

இல்லத்தரசி ஆச்சரியத்திற்குள்ளானாள். அவளுக்குத் தன் குழந்தையின் தந்தை யார் என்று தெரியாதாம்! அது நடக்கலாம். ஆனால், அந்த மனிதனைப் பார்த்ததே இல்லை என்று கூறினால் எப்படி நம்புவது?

அவள் சத்தியம் பண்ணிக் கொண்டு சொன்னாள்.

“என் இரண்டு கண்களின்மீது, தந்தையின்மீது சத்தியம்... நான் பார்த்ததே இல்லை அம்மா. எனக்கு அது எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை அம்மா. ஆனால், இந்தக் குழந்தை இப்படி உயிரோடு இருக்கிறப்போ, அதை நினைத்துப் பார்ப்பேன். எங்களுடைய ஊரில் இப்படி எவ்வளவோ குழந்தைகள் பிறந்திருக்கு அம்மா. எவ்வளவோ பெண்கள் செத்தும் போயிருக்காங்க. பட்டாளத்தின் ஆட்சியாக இல்லாமல் இருந்திருந்தால்...! ஆண்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து செத்தும், பயந்தும் போயிட்டாங்க. பெண்கள் மட்டும் எஞ்சி நின்னாங்க!''

கிராமப் பகுதியைச் சேர்ந்த அந்த வீட்டின் தலைவிக்கு அவள் கூறியது எதுவுமே புரியல்லை. அவள் விளக்கிக் கூறினாள். கேட்கும்போது உரோமங்கள் எழுந்து நிற்கக்கூடிய- ரத்தம் உறைந்து போகிற அளவிற்கு பயங்கரமான- மிருகத்தனமான ஒரு பலாத்காரத்தின் வரலாறு. அது நள்ளிரவு நேரத்தில் நடைபெற்றது!

இல்லத்தரசி பயந்துபோய் விட்டாள். இப்படியெல்லாம் மனிதர்கள் நடப்பார்களா? அப்போது உரத்த குரலில் சத்தம் போட்ட வயதான கிழவியைத் துப்பாக்கியால் அடித்தார்களாம்... அதைப் பற்றியெல்லாம் கேட்பதற்கு ஆள் இல்லையா? இவற்றையெல்லாம் மனிதன் செய்வானா?

பசி தீர்ந்து உற்சாகத்துடன் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு வினோதப் பிறவியைப் பார்ப்பதைப் போல இல்லத்தரசி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அது ஒரு மனிதக் குழந்தைதானா? புரிந்து கொள்ள முடியாத கலவை! அந்த ஆணைப் பற்றி தாய்க்குத் தெரியவே தெரியாது- இருள் வேளையில்! துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணத்தைத் தழுவிய பயங்கரமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்த இடத்தில்! வயதான கிழவி இறந்து கொண்டிருக்கும்போது, அவள் பாதி சுயஉணர்வு நிலையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்கும்போது... ச்சே.... அவன் ஒரு மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. மனிதனாக இருந்தால், ஒரு தாய் பெற்றெடுத்திருக்க வேண்டும். தாய் பெற்றெடுத்திருந்தால் அதைச் செய்திருப்பானா? ஆனால், ஒரு மானிடப் பெண் கர்ப்பம் தரிக்க வேண்டுமென்றால், ஒரு மனிதனுடன் உறவு கொள்ள வேண்டும். அவள் கர்ப்பம் தரித்தாள். பிரசவமானாள். குழந்தை முன்னால் உட்கார்ந்து கொண்டு சிரிக்கிறது. கொஞ்சுகிறது. உற்சாகத்துடன் சத்தம் போடுகிறது... ஒரு பலாத்காரத்தின் விளைவை அந்த இல்லத்தின் அரசி வாழ்க்கையில் முதல் தடவையாகக் கண்களுக்கு முன்னால் பார்த்தாள்.

அந்தப் பிச்சைக்காரி தொடர்ந்து சொன்னாள்:

“அம்மா! எனக்குத் திருமணம் நிச்சயம் பண்ணியிருந்தாங்க!''

“அந்த ஆள் இப்போ இருக்கானா?''

“யாருக்குத் தெரியும்?''

இறுதியாக அவள் தன்னுடைய அந்த வரலாற்றைச் சொன்னாள். அவளுக்கு ஒரு காதல் கதை இருந்தது. ஒரு ஆணுக்காக அவள் காத்திருந்தாள். அவன் ஏழு வருடங்களாகப் பணம் சம்பாதித்து, திரும்பி வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டிற்குச் சென்றிருந்தான். வாரத்திற்கு ஒரு கடிதம் என்ற விகிதத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கும்போதுதான் அது நடந்தது- அவள் கர்ப்பிணியாக ஆன விஷயம்.

அவள் கூறி நிறுத்தினாள்.

“அந்தப் பாவம் திரும்பி வந்திருப்பான்!''

வீட்டின் தலைவி கேட்டாள்:

“அவன் இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்து கொண்டிருப்பானோ?''

“தெரியாமலே இருக்கட்டும் அம்மா. அம்மா! ஐந்தாறு பட்டாளக்காரர்கள் ஒன்றாக வந்து நுழைந்து கதவை உதைத்து உடைத்தார்கள்... எவ்வளவோ பெண்கள் அங்கு இறந்து விட்டார்கள் அம்மா. எவ்வளவோ பெண்கள்... அந்த மாதிரி ஐந்தாறு பேர் வந்திருந்தால் நானும் இறந்திருப்பேன். இப்படிப்பட்ட குழந்தைகளும் பிறந்திருக்கிறார்கள். ஆனால், அந்த விஷயங்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் வெளியே தெரிவதில்லை. அங்கிருந்து யாரையும் வெளியே அனுப்புவதும் இல்லை. யாரையும் அங்கு நுழைய விடுவதும் இல்லை. யாரும் வரவோ போகவோ முடியாது. அங்கு நடந்தது எதுவும் வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாது. அங்கு தங்கியிருந்தவர்கள் எல்லாரும் வேலைக்காரர்களாக இருந்தார்கள். அந்த ஊர் இரண்டு மூன்று நிலச்சுவான்தார்களின் கையில் இருந்தது. ஒருவனுக்கும் சொந்தம் என்று கூற இடம் கிடையாது. பிணங்களை அப்படியே மலைபோல குவித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிய வைக்கவோ, மண்ணை வெட்டி மூடவோ செய்தார்கள். பாதி வெந்த இறந்த உடல்கள் எத்தனை நாட்கள் கிடந்து நாறின தெரியுமா? அந்த மேடுகளிலும் தேவையான அளவிற்கு மண் போடவில்லை. அதுவும் நாறியது!''

அந்த பயங்கரமான கதையைக் கேட்டு இல்லத்தரசி நடுங்கிவிட்டாள். பிச்சைக்காரி தன் சொந்தக் கதையின் பகுதியைச் சொன்னாள்:

“அந்தப் பாவம் என்னைத் தேடி ஒரு ஆதாரமும் கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருப்பான். இவை அனைத்தும் தெரிந்து கொண்டாலும்- எது எப்படி இருந்தாலும் என்னை ஏற்றுக் கொள்வான். என்மீது உயிரைவிட அன்பு வைத்திருந்தான்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel