Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 21

mandai-odu

அமைச்சரவையின் இடது திசையை நோக்கிய சாய்வு அதன் மூலம் வெளிப்பட்டது. சோசலிசத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் மாநிலம் முக்கால் பகுதி தூரத்தைக் கடந்து வந்துவிட்டதாகக் கூறினார்கள்... இப்படிச் சென்றன அந்தப் புகழ் வார்த்தைகள்...

சிறிய விவசாயிகளிடமிருந்தும் அவர்களுடைய கைவசமிருந்த பொருட்களைத் தேடி எடுத்தார்கள். அதன்மூலம் துண்டு பூமிகளில் விவசாயம் செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய முதல் நடவடிக்கையாக அது இருந்தது. விவசாயத்தைச் செய்வதற்கு விவசாய கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் சில அமைப்புகள் மாநிலம் முழுவதும் உண்டாயின. அதைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் உற்பத்தி மேற்சொன்ன அமைப்புகளுக்கு என்றானது.

உணவுப் பொருட்களின் வினியோகமும் அப்படிப்பட்ட அமைப்புகளின் மூலம்தான் பிரித்துத் தரப்பட்டது. மாநிலத்தில் இருந்த தொழில்களும், தனிப்பட்ட நபர்களிடமிருந்து அமைப்புகளுக்கு கைமாறும் விதத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் புரட்சிகரமான ஒரு மாறுதல் மாநிலத்தின் பொருளாதார வாழ்க்கையில் வந்து சேர்ந்தது.

அந்த திட்டங்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்தவுடன், ஒரு விஷயம் முன்பிருந்த சிறிய விவசாயிக்குப் புரிய ஆரம்பித்தது. முன்பு, அவன் தொழிலாளியைவிட உயர்ந்தவன் என்று நினைத்திருந்தான். அது ஒரு தவறான எண்ணம் என்று அவனுக்குப் புரிந்தது. அவனுடைய நிலைமை தொழிலாளியைவிட மோசமாக இருந்தது. அவனும் தொழிலாளியின் அணியில் சேர்ந்து கொண்டான்.

அதன்மூலம் தொழில் மண்டலத்திலும் ஒரு விஷயம் தெளிவானது. தனி நபரைவிட தொழில் அமைப்புகள் ஆபத்தானவை என்பதே அது. அந்த ஒன்றால் மட்டும் கூலி அதிகமாகப் போவதில்லை. தொழில் இல்லாமை இல்லாமல் போகப் போவதில்லை.

உணவுப் பற்றாக்குறை பயங்கரமான வடிவத்தை எடுத்தது.

ஆனால், அன்றும் மாண்புமிகு அமைச்சர் மகளின் திருமணத்தின்போது, நான்கு நாட்கள் தொடர்ந்து விருந்து நடந்தது. நிலச் சுவான்தாரின் தந்தையின் மரண அஞ்சலி நிகழ்ச்சியைப் போன்ற ஒரு கொண்டாட்டம் இன்னொரு ஊரில் சமீப காலத்தில் நடந்ததே இல்லை. நகரத்தின் தெருக்களில் நடக்கும்போது சந்தோஷமும் செழிப்பும் மட்டுமே தெரிந்தன. பஞ்சம் எங்கே என்று கேட்டு விடுவார்கள். பற்றாக்குறையைக் காணச் செல்பவன் போக வேண்டிய இடம் வேறு.

நகரத்தில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்த மாளிகைகளுக்கு அப்பால் இருந்த- நரகத்தைப் போல விளங்கிய வீடுகளின் மீது யாருடைய கவனம் செல்லப் போகிறது? சகித்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு- பல வருடங்களாக சகித்துக் கொள்ள பழகிக் கொண்டவர்களுக்கு- கஷ்டங்களைக் கஷ்டங்களாகப் பார்க்கத் தெரியாதவர்களுக்குப் பஞ்சம் இருக்கிறதா? எந்தக் காலத்திலும் எதுவும் இல்லாமல் இருந்த இடத்தில், ஏதோ பஞ்சம் பாதிக்க ஆரம்பித்து விட்டது என்று கூற முடியுமா? வாழ்க்கை முழுவதுமே இல்லாமை தான் என்னும்போது ஒரு நாளோ மாதமோ ஒரு வருடமோ இல்லாமை என்று இல்லையே! அங்கு மரணம் நடந்தால், அது நடக்க வேண்டியதுதான் என்று தலைமுறை தலைமுறையாகப் படித்து வைத்திருக்கிறார்கள். பட்டினிதான் மரணத்தை உண்டாக்கு கிறது என்பது தெரிந்தால்...? பட்டினிக்கு மரணத்தை உண்டாக்க முடியும் என்பது தெரிந்தால் என்னவெல்லாம் நடக்கும்? இடுப்பைச் சுற்றி மட்டுமே வெட்கம் இருக்கிறது என்ற இடத்தில், ஆடை பற்றாக் குறை உண்டாகுமோ?

அப்படி உள்ளவர்களை வசதி படைத்தவனாக ஆக்குவதன் மூலமும், இல்லாதவனுக்கு இல்லாமை என்ற நிலைமையை இல்லா மல் செய்வதன் மூலமும் பற்றாக்குறை என்பது ஒரு பேசப்படும் விஷயம் மட்டுமே என்று வேண்டுமானால் கூறலாம்.

ஆனால், ஒரு விஷயம் குறிப்பிட்டுக் கூறும் வகையில் கவனத்தை ஈர்த்தது. ஏதோ சிறு சிறு இடுக்குகளுக்குள் இருந்து வெளியே வந்த பேய் வடிவங்கள் நகரங்களின் அழகை அலங் கோலப்படுத்தி வீடுகளின் வாசல்களிலும் கடைகளுக்கு முன்னாலும் ஓட்டல்களின் பின்னால் இருக்கும் எச்சில் தொட்டிகளிலும், அவற்றின் உருண்டைக் கண்களால் விழித்துப் பார்த்துக் கொண்டு காட்சியளித்தன. எந்த அளவிற்கு நாசம் பிடித்த விஷயம் அது! வெளியே என்ன ஒரு சத்தம்!

வெளியே சென்றால் மனதை உருத்தக் கூடிய ஒரு காட்சியைப் பார்க்காமல் திரும்பி வர முடியாது. சோற்றை வாய்க்குள் வைக்கும் போது, அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் வரும். சந்தோஷமாக கொஞ்சம் தூங்கலாம் என்றால் முடியாது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையின் சந்தோஷங்களுக்கு மத்தியில் ஒரு தொல்லையாக இந்தப் பிரச்சினை வளர்ந்து கொண்டிருந்தது.

அவர்களுடைய எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதும் தெரிந்தது. எங்கேயிருந்து இப்படிப் பெருகுகிறது?

நகரத்தில் இருக்கும் கோடீஸ்வரனுக்கு உணவுக்குத் தேவைப்படும் சிறு மணி அரிசிகூட கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை வந்தபோது, உணவுப் பற்றாக்குறை என்ற சத்தத்திற்கு கனம் உண்டானது. அது அரசாங்கத்திற்குத் தெரியாமல் இருக்குமா? நிலச்சுவான்தாரின் மனைவிக்குப் பிடித்த மேல்துண்டு கடைவீதியில் கிடைக்கவில்லை என்றபோது ஆடைப் பஞ்சத்தைப் பற்றிய கருத்து பரவலாக வெளியே வந்தது.

வெளியே இருந்த சத்தமும் அமைதியைக் கிழிக்கக் கூடிய நாண மின்மையின் ஒரு பிரச்சினையாகவே வளர்ந்து கொண்டிருந்தது.

யாருக்கும் தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த பிச்சைக்காரன் சாலையில் நடந்து திரியவில்லை. உணவின் வாசனை வந்த இடத்தைத் தேடி அவன் செல்கிறான். உயிர் இருப்பதால் செயல்படுகிறான்.

அரசாங்கம் பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இந்த வளர்ந்து வரும் பிரச்சினைக்கு ஒரு பரிகாரத்தைக் கண்டு பிடித்தார்கள். ஒரு சட்ட உருவாக்கத்தின் மூலம் பிச்சை எடுப்பதற்கு தடை கொண்டுவரப்பட்டது. அத்துடன் இப்போதிருக்கும் பிச்சைக்காரனுக்காக மாநிலத்தின் நாலா பக்கங்களிலும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன. இரக்க குணம் கொண்ட முக்கிய நபர்களிடமிருந்து பெரிய அளவில் நன்கொடைகள் வந்து கொண்டிருந்தன.

அதற்குப் பிறகும் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. மீண்டும் பிச்சைக்காரர்கள் உருவாகிக் கொண்டுதானே இருக்கிறார் கள்?

சாதாரண மக்களுக்குப் பல விஷயங்களும் புரிந்தன. விவசாய சங்கங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். கிராமப்பகுதிகளில் இருக்கும் ஏழைகளுக்கு அந்த சங்கங்களில் கூறிக் கொள்கிற மாதிரியான நன்மைகள் எதுவும் இல்லை. சங்கங்களில் முக்கிய நபர்களாக இருந்தவர்கள் நிலச்சுவான் தார்களும், புதிய தொழில்களையும் லாபம் தரும் வழிகளையும் தேடிக் கொண்டிருக்கும் பணக்காரர்களும்தான். அப்பிராணிகளாக இருக்கும் சிறிய விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அதில் உறுப்பினராக ஆவதற்குப் பணம் இருக்கிறதா? அப்படி இருந்தால் கூட, அவர்களுக்கு உறுப்பினராக இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அதன் செயல்பாடுகளில் எந்த அளவிற்குப் பங்காற்ற முடியும்?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel