Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 25

mandai-odu

மாணவர்கள் புத்தகங்களை மடக்கி வைத்தார்கள். பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களின் தோளோடு தோள் சேர்ந்து வரிசையில் நிற்க மாணவர்கள் தயாரானார்கள். நாளைய சமத்துவ, அழகான உலகம் அவனைக் கையசைத்து அழைக்கிறது. மாணவன் இன்று வரை படித்தவை, நாளை படிக்கப் போகின்றவை எதற்காக என்று இப்போது அவனுக்குப் புரிந்துவிட்டது.

அதிகாரம் அந்தப் போராட்டத்தை நசுக்குவதற்காக அதன் எல்லாவித சக்திகளையும் பயன்படுத்தியது. போராட்டம் ஆரம்பமான நாளன்றே பல இடங்களிலும் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. ஏராளமான பேர் மரணத்தைத் தழுவினர். இறந்தவர்கள் அனைவரும் எங்கோயிருந்து வந்த கம்யூனிஸ்ட்டுகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர்களுடைய இழப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்த வேண்டாம்.

ஆனால், இந்த முறை அந்தத் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்து மாநிலம் அஞ்சுவதற்குத் தயாராக இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் என்று அதிகாரிகள் கூறிக் கொண்டிருந்தவர்கள் யார் என்று மாநிலத்திற்குப் புரிந்துவிட்டது. அவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்தான். பசிக்கிறது என்று கூறுபவர்கள் தான். கம்யூனிஸ்ட்டுகள்! பசிக்கிறது என்று கூறுவதற்கு மனிதனுக்கு உரிமை இல்லையா?

துப்பாக்கிச் சூடுகள் பல நடந்தன. மனிதனுக்கு இறப்பதற்கு பயமில்லை. உயிருடன் இருப்பதில்தான் பயம். அந்தப் போராட்டம் ஒன்றோ இரண்டோ இல்லாவிட்டால் நான்கோ ஐந்தோ நகரங்களில் மட்டுமல்ல; கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நடந்தன. ஆட்சிப் பீடம் என்ன செய்வது? அவர்கள் பற்பல புதிய சட்டங்களையும் உண்டாக்கினார்கள். ஆனால், எந்தவொரு சட்டமும் நடக்காது. நடைமுறைக்குக் கொண்டு வருவது முடியாத ஒன்று. எல்லாரும் சட்டத்தை மீறுபவர்களே!

மேஜர் ராஜசேகரன், தன்னுடைய வீட்டில், அந்த மண்டை ஓட்டிற்கு அருகில் ஒரு நீளமான ஆணியைச் சுவற்றில் அடித்துக் கொண்டிருந்தான்.

நளினி கேட்டாள்:

“இது எதற்கு?''

“விஷயம் இருக்கு. பாரு...''

ஆணியை அடித்து முடித்துவிட்டு, ராஜசேகரன் உள்ளே போனான். சிறிது நேரம் கழித்து அவன் திரும்பி வந்தான். அவனுடைய கையில் ஒரு பை இருந்தது. நளினிக்கு எதுவும் புரியவில்லை. அவளை ஆச்சரியப்பட வைப்பதைப்போல, அந்தப் பைக்குள் இருந்து ராஜசேகரன் ஒரு பொருளைப் பிடித்து வேகமாக எடுத்து அவளுடைய முகத்திற்கு எதிரில் காட்டியவாறு கேட்டான்:

“பாரு... இது யாருடையது என்று தெரியுமா?''

நளினி அப்போது நடுங்கி விட்டாள். அந்த வீட்டில் காலை எடுத்து வைத்த நாளன்று நடுங்கியதைப் போலவே நடுங்கினாள். ஒரு ஆள் ஒரு மண்டை ஓட்டைப் பற்றி, அதை முதல் தடவையாகப் பார்க்கும்போது மட்டுமே ஒரே ஒரு தடவை நடுங்குவான். அதனுடன் நன்கு பழகிவிட்டாலும், இன்னொரு மண்டை ஓட்டை பார்க்கும்போது, அப்போதும் நடுங்குவான். ஆனால், மண்டை ஓடுகள் எல்லாவற்றின் அமைப்பும் ஒரே மாதிரிதானே இருக்கின்றன? பல் இளிப்பது, வெறித்துப் பார்ப்பது... எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒரு மண்டை ஓட்டைப் பார்த்துப் பழகிப் போய்விட்ட பிறகு, இன்னொன்றைப் பார்க்கும்போது எதற்காக நடுங்க வேண்டும்?

ஒருவேளை, ஒரு மனிதனின் குணமே இன்னொருவனுக்கும் இருக்கும் என்று கூறுவதற்கில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஒருவன் இளகிய இதயமும் பாசம் கொண்டவனாகவும் இருக்கும் போது, இன்னொருவன் கொடூரமானவனாகவும் மோசமான நடத்தை கொண்டவனாகவும் இருப்பதில்லையா? அந்த வகையில் அவர்களுடைய மண்டை ஓடுகளின் பல் இளிப்பிற்கும் பார்வைக்கும் சிறிய வித்தியாசம் இருக்கலாம். ஒரு மண்டை ஓட்டின் செய்தியே இன்னொரு மண்டை ஓட்டைப் பற்றியும் இருக்கும் என்று கூற முடியாது. நளினி மீண்டும் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்தபோது நடுங்குவதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம்.

ஒரு அச்சத்துடன் நளினி கேட்டாள்:

“அந்த எலும்புகளுக்கு நடுவில் சதை காய்ந்து போய் இருக்கிறது.''

ராஜசேகரன் அதை இப்படியும் அப்படியுமாகப் புரட்டி பார்த்துவிட்டு சொன்னான்:

“இது புதியது... எனினும், சதை முழுவதும் அழுகிப்போய் விட்டது.''

“இது நாறுது.''

“இல்லை.''

ராஜசேகரன் மண்டை ஓட்டை வாசனை பிடித்துப் பார்த்தான். அவன் கேட்டான்:

“இது அந்த மண்டை ஓட்டைவிட இன்னொரு மடங்கு பெரியதாக இருக்கிறது அல்லவா?''

நளினி எதுவும் பேசவில்லை. ராஜசேகரன் தொடர்ந்து சொன்னான்:

“என்ன கனம் என்று நினைக்கிறாய்? நல்ல கனம்... இல்லை... அது ஆச்சரியமான விஷயமே இல்லை. சாதாரண ஒரு மனிதனைவிட ஒன்றரை மடங்கு பெரிய உடலைக் கொண்ட ஆள் அவன்... நினைத்துப் பார்க்க முடியாத முரட்டுத்தனம்.. நான்கைந்து ஆட்கள் சேர்ந்தாலும் அவனிடம் எதுவுமே பண்ண முடியாது. உயரத்தை எடுத்துக் கொண்டால்... இப்படி ஒரு பிசாசை நான் பார்த்ததே இல்லை. அரக்கன்! ஒரு துப்பாக்கி குண்டில் எதுவும் நடக்கவில்லை. அவன் சாகவில்லை. என்னுடைய பெரிய வெற்றியின் சின்னம் இது. இவ்வளவு பெரிய ஒரு வெற்றி எனக்கு கிடைத்ததே இல்லை. அது மட்டுமல்ல; நான் தப்பித்ததும் ஒரு அதிர்ஷ்டம்தான்.''

அந்த மண்டை ஓட்டை அவன் ஆணியில் மாட்டிவிட்டு, இரண்டு மண்டை ஓடுகளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அவன் கேட்டான்:

“இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கு. இல்லையா?''

நளினி எதுவும் பேசவில்லை. இரண்டின் பல் இளிப்பும் ஒரே மாதிரி இருக்கிறது. அது மட்டுமல்ல- புதிய மண்டை ஓடு வந்ததும், முதல் மண்டை ஓட்டிற்கு ஒரு நண்பன் கிடைத்திருப்பதைப் போல தோன்றுகிறது. அவர்கள் சகோதரர்களாக ஆகிவிட்டனர்.

ராஜசேகரன் கேட்டான்:

“இது யாருடைய மண்டை ஓடு என்று தெரியுமா?''

நளினி பதிலெதுவும் கூறாமல் தன் கணவனின் முகத்தையே பார்த்தாள். பட்டாளக்காரனின் மனைவியாக இருப்பதால், மண்டை ஓட்டைப் பார்த்து அது யாருடையது என்று கற்பனை பண்ண வேண்டிய கடமை இருக்கிறதா என்ன?

இப்படி இன்னும் எத்தனை மண்டை ஓடுகள் அங்கு வரும்? எத்தனை மண்டை ஓடுகளைப் பற்றிய விளக்கங்களைக் கேட்க வேண்டியதிருக்கும்?

அவனிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை என்றதும் மிகுந்த பெருமிதத்துடன், மேலும் சந்தோஷத்துடன், ராஜசேகரன் சொன்னான்:

“உனக்கு அறிவே இல்லை. கற்பனை பண்ணிவிடலாம். யாருடைய மண்டை ஓடாக இருந்தால், உன் கணவனுக்குப் பெரிய வெற்றியாக இருக்கும்?''

அதற்குப் பிறகும் அவள் பேசவில்லை.

“முட்டாள் பெண்! நான் அந்தப் பெயரின் முதல் எழுத்தைக் கூறுகிறேன். ஸ்ரீ...''

அவளுடைய அறிவு வேலை செய்கிறதா என்று ராஜசேகரன் பார்த்தான். இல்லை... யாருக்குத்தான் அந்தப் பெயர் தெரியாது? ராஜசேகரன் சொன்னான்:

“ஸ்ரீகுமார்... அவனுடைய மண்டை ஓடுதான் இது.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel