Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 24

mandai-odu

இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். ஒருவேளை, கடந்து சென்ற நல்ல காலத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், கேசவன் பரமுவின் கதைகளையும், பரமு கேசவனின் கதைகளையும் கேட்டு மனதில் ஒன்றிப் போய் உட்கார்ந்திருக்கலாம். ஒரு பிச்சைக்காரனுக்கு இன்னொரு பிச்சைக்காரனைப் பற்றி பரிதாப உணர்ச்சி உண்டாகக் கூடாது என்றில்லையே!

கேசவன் இரக்கம் கலந்த குரலில் சொன்னான்.

“எல்லாரும் இறந்து விட்டிருப்பாங்க.''

“இருக்கலாம். அதே நேரத்தில், இறக்கவில்லை என்றும் வரலாம். நான் அவர்களை விட்டுப் பிரிய வேண்டும் என்பதற்காக வெளியே வரவில்லை. எங்கிருந்தாவது படி அரிசி தயார் பண்ண வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு வெளியே வந்தேன். நான்கு நாட்கள் அலைந்து திரிந்தேன். அதற்குப் பிறகும் நடந்தேன். இப்போ கஷ்டப்படுறேன். அங்கே கிடந்து எல்லாருடனும் சேர்ந்து செத்திருக்கலாம்.''

பரமுவின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்கலாம்... யாருக்குத் தெரியும்? இருட்டில் பார்க்க முடியவில்லை.

அவர்கள் இருக்குமிடத்திற்கு ஒரு வயதான கிழவி வந்தாள். அவளும் பிச்சைக்காரர்கள் இல்லத்தில் தங்கியிருப்பவள்தான்.

கேசவன் சொன்னான்:

“நான் என்னுடைய ஊருக்கு என்றைக்காவது போவேன். கடனை அடைத்து வீட்டையும் நிலத்தையும் திரும்பவும் வாங்குவேன் என்று சத்தியம் பண்ணிவிட்டுத்தான் என்னுடைய மகன் வீட்டை விட்டே வெளியே போயிருக்கிறான். அவன் திரும்பி வந்த பிறகு, நான் போவேன்.''

“எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் நண்பா! அதுதான் காலம்.''

கேசவன் தன்னுடைய மகன் திரும்பி வருவான் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான். பரமுவிற்கு தன்னுடைய பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா என்று தெரியாது. அந்தக் கிழவிக்கு, அவளுடைய மகன் திரும்பி வர மாட்டான் என்பது உறுதியாகத் தெரியும். ஏனென்றால், கடந்த போராட்டத்தின்போது அவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்து விட்டான். எனினும், அவன் திரும்பி வந்து அழைப்பதைப் போல அவள் கனவு காண்பதுண்டு.

பாவம்... தேங்காய் உரித்து, நார் பிரித்து மகனை வளர்த்தாள்.

கிழவி சொன்னாள்:

“அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டபோது நான் போய் கையைப் பிடித்தேன். "மகனே. போகாதே'ன்னு சொன்னேன். "எனக்கு யார் இருக்காங்க” ன்னு கேட்டேன். அவன் அப்போ சொன்னான்- "நாடு இருக்கு'ன்னு!''

பரமு முழுமையான கோபத்துடன் சொன்னான்:

“நாடு! நாடு! இப்படி எவ்வளவோ பேர் இறந்திருக்காங்க. அப்போதைய சொற்பொழிவாளர்கள் அவர்களுடைய காரியத்தைச் சாதிப்பதற்காக எவ்வளவோ பேர்களைச் சாக வைத்தார்கள். சமீபத்தில் இங்கே பார்ப்பதற்காக வந்திருந்த அமைச்சர் இருக்கிறாரே... ஆரம்பத்தில் ஒருநாள்... அப்போதும் சொற்பொழிவு நடக்கும் காலம்தான். சொற்பொழிவு ஆற்றுவதை நான் கேட்டேன். எல்லாருக்கும் வேலை கிடைக்கும்... ஊரில் வறுமை இருக்காது... அப்படியெல்லாம் பேசினார். இப்போது? அவருக்கு... அவருடைய காரியம் நிறைவேறிவிட்டது.''

கேசவன் இன்னொரு விஷயத்தைக் கூற நினைத்தான். அவனுடைய ஊரில் இருந்த விவசாயிகளின் சங்கத்தில் பாதி பங்கு அமைச்சர்களுக்குத்தான். இல்லாவிட்டால் அவர்களுடைய சொந்தக் காரர்களுக்கு. குரலை அடக்கிக் கொண்டு அவன் தொடர்ந்து சொன்னான்:

“ஊரில் எந்த இடத்திலும் ஒரு மணி அரிசி கூட இல்லாத காலம். அந்த சங்கத்தில் இரவு நேரத்தில் பறைக்கு ஐந்து ரூபாய் வைத்து நெல் விற்பனை செய்தார்கள். அது அந்த ஊர்க்காரர்களுக்கு அல்ல. வேறு எங்கோ இருப்பவர்களுக்கு...''

பரமு கேட்டான்:

“அதை பிடிக்கவில்லையா?''

“அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே? போலீஸ்காரர்கள் பிடிப்பார்களா? நல்ல விஷயம்தான்... ஒரு விஷயத்தைச் சொல்லியாகணுமே. நல்ல முறையில் நெல் விளைகிறது. வயலில் வேலையும் செய்கிறோம். இருந்தாலும் வேலை செய்பவர்களுக்கு- இந்த நெல்லை உண்டாக்கியவர்களுக்கு ஒரு மணி நெல் கிடையாது.''

கிழவி இன்னொரு கதையைச் சொன்னாள்:

“இந்த அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் அதிகமான விலைக்கு அரிசியை வாங்குகிறார்கள். அப்படி வாங்கக் கூடாது என்பதுதானே சட்டம்?''

“சட்டம்!'' -பரமு கிண்டலுடன் சொன்னான்:

“சட்டம்! பிச்சை எடுக்கக்கூடாது என்பதுதான் சட்டம்! சாலை யில் பிச்சைக்காரர்கள் இல்லாமல் இருக்கிறார்களா? அதேபோல அந்த மூலையில் இருக்கும் கடையில் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி படி அரிசியை ஒன்றரை ரூபாய்க்கு விற்கிறார்கள்.''

கேசவன் எல்லாம் தெரிந்தவனைப் போல சொன்னான்: “அதைப் பற்றி சுருக்கமாக நான் சொல்றேன். அரசாங்கம் சட்டத்தை உண்டாக்குகிறது. அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு முடியவில்லை.''

அந்தக் கருத்தை பரமு முழுமையாக ஒப்புக்கொண்டான். ஓராயிரம் விஷயங்கள்... அதை வலியுறுத்துவதற்கு அவனிடம் கூறுவதற்கு பல தகவல்கள் இருந்தன. கிழவிக்கு ஒரு சந்தேகம்- இந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் எங்கேயிருந்து உண்டாகிறார்கள்?

கேசவன் இன்னொரு கேள்வியின் மூலம் அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான்.

“நாம் பிச்சைக்காரர்களாக எப்படி ஆனோம்?''

அப்போது பரமுவிற்கு இன்னொரு சந்தேகம்.

“நாம் நம்முடைய இளம் வயதிலிருந்து வேலை செய்து வருகிறோம் அல்லவா? லாபம், மிச்சம் எல்லாவற்றையும் உண்டாக்கினோம். எல்லாம் எங்கே போயின?''

கேசவன் சிரித்துக்கொண்டே சொன்னான்:

“அவை அனைத்தும் நிலச்சுவான்தார், முதலாளி ஆகியோரின் பாக்கெட்டை வீங்க வச்சிருக்கு.''

பரமு சிந்தனையில் மூழ்கிவிட்டுச் சொன்னான்:

“நாமெல்லாம் ஏன் இருக்கிறோம் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. நமக்கு நல்லது சாகுறதுதான். இந்த பிச்சைக்காரர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சாகுறதுக்காக வெளியேறணும்... செத்துதான் ஆகணும் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.''

“இந்த இடத்தைத் தந்து நம்மை இப்படி வைத்திருக்கிறதுக்குக் காரணம் என்னன்னு நினைக்கிறே? பயந்துதான்...''

இதற்கு முன்பு வேறு எங்கோ இருக்கும் ஒரு பிச்சைக்காரர்கள் இல்லத்தில் சில நாட்கள் இருந்த அனுபவத்தைக் கொண்ட கிழவி சொன்னாள்:

“பழைய யூனியன்காரர்கள் வந்து சில இடங்களில் இதைச் சொல்வது உண்டு.''

“இனிமேல் முன்பு நடந்ததைப் போல கோஷங்கள் கொண்ட ஊர்வலம் நடந்தால், நாமும் அதில் கலந்துகொள்ள வேண்டும். நமக்கென்ன? மேலே பார்த்தால் வானம்... கீழே... பூமி.''

13

சுக்கி வைக்கப்பட்ட லட்சங்கள் கண்விழித்தன. பிச்சைக்காரர்கள் இல்லத்திற்குள் அடைத்து வைக்கப்பட்ட எச்சங்கள் எழுந்தன. எலும்பும் தோலும் மட்டுமே என்றிருந்த பிச்சைக்காரர்கள்தான் அவர்கள்.

அவர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்கக் கூடாது. அவர்களால் இறக்க முடியும்.

முழுமையான வேலை நிறுத்தம்! அதைத் தொடர்ந்து ஊரெங்கும் போராட்டங்களும்... அப்படி ஒரு போராட்டம் ஆரம்பமானபோது, அந்தப் போராட்ட ஆரவாரத்தை இளைஞர்கள் கேட்டார்கள். மாநிலம் ஒரு இக்கட்டான நிலைமையைச் சந்திக்கும்போது, சமுதாயம் சேவையைத் தேடும்போது, இளைஞர்களால் அமைதியாக இருக்க முடியாது. எதிர்காலம் அவனுக்குரியது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel