Lekha Books

A+ A A-

தானியமும் கிழவர்களும்

Thaniyamum Kizhavargalum

ரு நாள் ஒரு ஓடையில் சில குழந்தைகள் சோள விதையைப் போன்ற ஒன்றைக் கண்டெடுத்தார்கள். அந்த விதையின் நடுப்பகுதியில் ஒரு கோடு இருந்தது. ஆனால், அது ஒரு கோழி முட்டை அளவிற்குப் பெரியதாக இருந்தது. அந்த வழியாக நடந்து சென்ற ஒரு வழிப்போக்கர் அந்தக் குழந்தைகளிடம் ஒரு பென்னியைக் (காசு) கொடுத்து விட்டு, அதை வாங்கினான். ஆர்வ மிகுதியால் அதை நகரத்திற்குக் கொண்டு சென்று மன்னனிடம் விற்றுவிட்டான்.

மன்னன் தன்னிடமிருக்கும் பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து அந்த விதை என்ன என்பதைக் கண்பிடிக்கும்படி சொன்னார். அந்தப் பண்டிதர்கள் அந்த விதையை இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்களே தவிர, அவர்களால் அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஒரு நாள் அந்த விதை ஜன்னலருகில் கிடக்கும்போது, ஒரு கோழி வேகமாக வந்து அந்த விதையைக் கொத்தி ஒரு சிறு துளையை அதில் உண்டாக்கியது. அதற்குப் பிறகுதான் அது ஒரு சோள விதை என்பதே எல்லோருக்கும் தெரிய வந்தது. பண்டிதர்கள் அனைவரும் மன்னனிடம் வந்து சொன்னார்கள். ‘‘அது ஒரு சோள விதை...’’ அதைக் கேட்டு மன்னன் ஆச்சரியப்பட்டுப் போனான். அவன் பண்டிதர்களிடம் அந்த விதை எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்கும்படி சொன்னான். பண்டிதர்கள் அந்த விதையைப் பற்றிய விவரங்கள் எந்த நூல்களிலாவது இருக்கின்றனவா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ஆனால், எந்த நூலிலும் அதற்கான ஆதாரமே இல்லை. அவர்கள் மன்னனிடம் வந்து சொன்னார்கள். ‘‘எங்களால எந்த பதிலும் கண்டுபிடிக்க முடியல. அநத் விதையைப் பற்றி நாங்க பார்த்த நூல்கள்ல எந்தத் தகவலும் இல்ல. நீங்க இதைப் பற்றி விவசாயிகள் கிட்டத்தான் கேக்கணும். அவங்கள்ல சிலபேராவது அவங்களோட தந்தைமார்கள் கிட்ட இதைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கலாம். இவ்வளவு பெரிய தானியம் எந்தக் காலத்துல இருந்துச்சுன்றதை அவங்கக்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கலாம்.’’ மன்னன் யாராவதொரு வயதான விவசாயியை தன்னிடம் கொண்டு வரும்படி ஆணை பிறப்பித்தான். அவனுடைய பணியாட்கள் அப்படிப்பட்ட ஒரு ஆளைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து மன்னன் முன்னால் நிறுத்தினார்கள். மிகவும் வயதாகி, முதுகு வளைந்து, வெளிறிப் போன முகத்துடன், பற்கள் இல்லாமல் இரண்டு கைத்தடிகளை ஊன்றியபடி மன்னன் முன்னால் வந்து நின்றான். மன்னன் கிழவனிடம அந்த தானியத்தைக் காட்டினான். ஆனால், கிழவன் கண்களுக்கு அந்த தானியம் சரியாகத் தெரியவில்லை. அவன் அதை எடுத்து கையால் தடவிப் பார்த்தான். மன்னன் அவனைப் பார்த்து கேட்டான். ‘‘பெரியவரே, இந்த தானியம் எந்தக் காலத்துல இருந்ததுன்ற உண்மையை உங்களால சொல்ல முடியுமா ? இந்த மாதிரியான ஒரு தானியத்தை நீங்க எப்பவாவது விலைக்கு வாங்கியிருக்கீங்களா ? இல்லாட்டி உங்க வயல்ல இந்த மாதிரியான ஒரு விதையை விவசாயம் பண்ணியிருக்கீங்களா ? அந்தக் கிழவன் செவிடாக இருந்தான். மன்னன் என்ன சொல்கிறான் என்பதே அவனுக்குச் சரியாக காதில் விழவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் மன்னன் என்ன சொல்கிறான் என்பதையே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘‘இல்ல...’’ - கடைசியில் அந்தக் கிழவன் சொன்னான். ‘‘நான் இந்த மாதிரியான தானியத்தை எப்பவும் விதைச்சது இல்ல. என் வயல்ல இப்படிப்பட்ட ஒரு தானியத்தை நான் அறுவடை செய்ததும் இல்ல. நாங்க தானிய விதையை வாங்குறப்போ, அது இப்போ எல்லா இடங்கள்லயும் எப்படி இருக்கோ, அப்படி சின்னதாகத்தான் இருக்கும். வேணும்னா இதைப் பற்றி நீங்க என்னோட அப்பாக்கிட்ட கேட்டுப் பாருங்க. இந்த தானியத்தைப் பற்றி அவருக்கு ஒரு வேளை தெரிஞ்சிருக்கலாம்.’’ அரசன் கிழவியின் தந்தையை அழைத்துக் கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அந்தக் கிழவனை ஆட்கள் மன்னன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்தக் கிழவன் ஒரு கம்பை ஊன்றியவாறு அங்கு வந்தான். அரசன் அங்கிருந்த தானியத்தைக் காட்டினான். அந்தக் கிழவனுக்கு நல்ல கண்பார்வை இருந்தது. அந்த தானியத்தையே அவன் உற்றுப் பார்த்தான். மன்னன் அவனைப் பார்த்து கேட்டான் : ‘‘வயதான பெரியவரே, இந்த மாதிரியான தானியம் எங்கே இருந்ததுன்னு உங்களால சொல்ல முடியுமா ? இப்படிப்பட்ட தானியத்தை நீங்க எப்போவாவது விலைக்கு வாங்கியிருக்கீங்களா ? இல்லாட்டி எப்பவாவது உங்களோட வயல்ல விவசாயம் பண்ணியிருக்கீங்களா ?’’ அந்தக் கிழவனுக்க கேட்கும் சக்தி சற்று குறைவுதான் என்றாலும் தன்னுடைய மகனின் கேட்கும் சக்தியை விட அவனுக்கு அது அதிகமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ‘‘இல்ல, மன்னா...’’ அவன் சொன்னான் : ‘‘நான் இந்த மாதிரியான தானியத்தை விதைச்சதும் இல்ல. அறுவடை செய்ததும் இல்ல. விலை கொடுத்து வாங்கியதும் இல்ல. சொல்லப்போனா, என் காலத்துல பணம்ன்றது புழகத்திலேயே வரல. மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருளை தாங்களேதான் விவசாயம் பண்ணி உண்டாக்கிக்குவாங்க. அப்படி ஏதாவது தேவைப்பட்டாக்கூட நாங்க ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து உதவிக்குவோம். இப்படிப்பட்ட ஒரு தானியம் எப்போ இருந்துச்சுன்னு எனக்கு தெரியல. நாங்க விவசாயம் செஞ்ச தானியம் இப்போ இருக்குறதை விட அளவுல பெரிசா இருந்துச்சுன்றது உண்மை. அதுல இருந்து இப்போ கிடைக்கிறதை விட அதிகமா மாவு கிடைச்சது. ஆனா, நான் இப்படிப்பட்ட ஒரு தானியத்தை இதுவரை பார்த்தது இல்ல. ஆனா என்னோட அப்பா ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவரோட காலத்துல தானியத்தோட அளவு ரொம்ப பெரிசா இருக்குமாம். இப்போ மாவு கிடைக்கிறதைவிட, அந்தத் தானியத்துல அதிகமா மாவு கிடைக்குமாம். இதைப் பற்றி நீங்க அவர்கிட்டேயே கேட்கலாமே !’’ அடுத்த நிமிடம் மன்னன் அந்தக் கிழவனின் தந்தையை உடனே தன்னிடம் அழைத்து வரும்படி ஆட்களை அனுப்பி வைத்தான். அந்த வயதான கிழவனைப் பார்த்த மன்னனின் ஆட்கள், அவனை அரசனிடம் கொண்டு வந்தார்கள். அவன் எந்தவித கம்பின் உதவியுமின்றி நன்றாக நடந்து மன்னனிடம் வந்தான். அவனுக்கு நல்ல கண்பார்வை இருந்தது. கேட்கு சக்திகூட மிகவும் சிறப்பாக இருந்தது. பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது. அரசன் அந்தக் கிழவனிடம் அங்கிருந்த தானியத்தைக் காட்டினான். வயதான அந்தத் தாத்தா அந்தத் தானியத்தைத் தன் கையில் வைத்து இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel