Lekha Books

A+ A A-

புரட்சிக்காரி

puratchikari

ண்ணீர்ப் பாம்பின் வாய்க்குள் இருந்து கொண்டு தவளை உயிர்போகும் வேதனையுடன் கத்தியது. முன்னோக்கி நகர்ந்து கொண்டு பிடியில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சி. தவளையின் காலோ எதுவோதான் தண்ணீர்ப் பாம்பின் வாய்க்குள் இருந்தது.

இப்போதைய சத்தம் இப்படி இருந்தது.

‘நான் போறேன்.’

இப்போது ஒரு உரத்த சத்தம்.

‘நான் போறேன்.’

இனி சத்தத்தின் அளவு குறையும். அடுத்த கட்டம் இதுவாக இருக்கும்.

‘விட்டால் போவேன். விட்டால் போவேன்.’

அதற்குப் பிறகு சத்தத்தின் அளவு மேலும் குறையும். பின்னர் அது இல்லாமலே போகும். எல்லாம் முடிந்தது!

கண்ணில் பட்ட தண்ணீர்ப் பாம்பின் தலையில் சரியாகப் படும் வண்ணம் ஒரு கல்லை எடுத்து எறிந்தால், அது தன் பிடியை விட்டு விடும். அதன்மூலம் ஒரு உயிர் தப்பிக்கும்.

ஆனால், வேறொரு விஷயம் இருக்கிறது. தண்ணீர் பாம்பின் விஷயம்! தண்ணீர்ப் பாம்பு தவளையைப் பிடித்துத் தின்றுதான் உயிர் வாழ முடியும். அது பட்டினி கிடக்கும். ஒரு உயிரினத்தின் வாயில் கிடைத்த இரையை விடுவிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். அது ஒரு உயிரினமாகவே இருந்தாலும் கூட. தவளை என்றைக்காவது தண்ணீர்ப் பாம்பின் அல்லது சாரைப் பாம்பின் வாய்க்குள் சிக்கி இரையாகியே தீர வேண்டும். இந்த தண்ணீர்ப் பாம்பின் அல்லது வேறொன்றின்.

இப்படி நினைத்து நினைத்து போய்க் கொண்டிருந்த போது ஒரு இடத்தில் போய் சேர்ந்தது. தவளை பிறந்ததே தண்ணீர்ப் பாம்பின் உணவாக ஆவதற்குத்தான்.

இல்லை!

நிச்சயமாக இல்லை.

தவளை பிறந்தது தவளையாக வாழ்வதற்குத்தான். இப்படி கற்பனை பண்ணிக் கூறியதாக தோன்றுகிறது. இல்லை... மனதில் உறுதிபடுத்திக் கொண்டு கூறியதுதான்.

ஒரே அமைதி!

பிடியிலிருந்து தவளை தப்பித்து விட்டதா? இல்லாவிட்டால் தண்ணீர்ப் பாம்பு அதை விழுங்கிவிட்டதா?

முன் பக்கமிருந்த பரந்து கிடக்கும் வயலின் அக்கரையில் இருக்கும் ஆற்றின் கரையில் வளர்ந்திருக்கும் செடிகளில் வரிசையாகத் தெரியும் சாலை விளக்குகள் அணைந்தன. நேரம் நள்ளிரவு நேரம் தாண்டி விட்டிருந்தது.

படகில் துடுப்பு மோதும் சத்தம் கேட்கிறது. யாரோ படகோட்டி வந்து கொண்டிருக்கிறான். வயலின் வடக்குப் பக்கத்தில் மடை இல்லை. ஊரின் ஏரியிலிருந்து ஆற்றில் செல்பவர்களாக இருந்தால், அந்த வழியில் வரமாட்டார்கள். சீக்கிரமாக வரவேண்டும் என்பதற்காக வயல் பக்கம் வந்தவர்களாக இருக்க வேண்டும்

ஆமாம்... அதேதான். அவர்கள் விசாரிக்கிறார்கள்.

"வீட்டுக்காரர்களே!"

பரந்த நீர்ப்பரப்பில் வழியும் திசையும் தெரியாமல் சுற்றித் திரியும் படகோட்டிகள் கேட்பார்கள்.

"வீட்டுக்காரர்களே, வடக்குப் பக்கம் மடை இருக்கிறதா?"

படகு நெருங்கி வருகிறது.

சிருதா சொன்னாள்:

"இல்லை. நீங்க எங்க போகணும்?"

"வடக்குப் பக்கம் இருக்குற ஏரிக்குப் போகணும்."

"அப்படியென்றால் வந்த வழியே திரும்பிப் போய், தெற்குப் பக்கத்து ஏரியை அடைஞ்சு மேற்குப் பக்கம் போய் வடக்குப் பக்கம் இருக்குற சின்ன நீர் பாதைக்குள் நுழைஞ்சு வடக்குப் பக்கமா போங்க"- தொடர்ந்து சிருதா சொன்னாள்:

"அந்த ஒடுகலான நீர்ப் பாதையில் படகு போகாது. ஒரே சேறும் சகதியுமா இருக்கும்."

படகு நகராமல் நின்று விட்டது. காலியான படகு அல்ல. படகில் என்னவோ இருக்கிறது. இருட்டாக இருந்தாலும், என்னவோ மூடப்பட்டிருப்பதைப்போல இருந்தது. கள்ளக்கடத்தல்காரர்களாக இருக்க வேண்டும். போலீஸ்காரர்களுக்கு பயந்து, ஆற்றையும் ஏரியையும் நிராகரித்து, சிறு வாய்க்கால்கள் வழியாகவும் வயல்கள் வழியாகவும் எடத்துவாவிற்கோ சங்ஙனாஞ்சேரிக்கோ கோட்டயத்திற்கோ சென்று அரிசி விற்க முயல்பவர்களாக இருக்க வேண்டும்.

அதிகமாக லாபம் அடைய நினைப்பவர்கள்!

மறைத்து வைத்த நெல்லைப் பணமாக்கிக் கொடுப்பவர்கள்!

சமூக துரோகிகள்!

இப்போது அவர்கள் பொறியில் சிக்கி விட்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் கமிட்டி கூடிய போது, தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

படகு சிறியதுதான். ஒரே ஒரு ஆள்தான் இருந்தான். யாரோ ஒருவன் எப்படியோ கொஞ்சம் பணம் தயார் பண்ணி, நெல்லை விலைக்கு வாங்கி, அவிய வைத்து, காயச் செய்து, குத்தி எடுத்துக் கொண்டு செல்பவனாக இருக்க வேண்டும். பிழைப்பதற்கான வழி! ஆற்றிலும் ஏரிகளிலும் நெருப்புக் கண்களைக் கொண்ட பிசாசுகளைப் போல அலைந்து கொண்டிருக்கும் போலீஸ்காரர்களின் படகிற்கு பயந்து படகு செல்லாத குறுக்கு வழியில் செல்லும் படகுக்காரன். அவனுக்கு ஐந்தோ எட்டோ பிள்ளைகள் இருப்பார்கள். போலீஸ்காரர்களின் படகிற்கு காணிக்கை செலுத்த காசில்லை. பெரிய அளவில் அரிசியைக் கடத்துபவர்கள் நேரான வழியில் செல்லலாம். போலீஸ்காரர்களின் படகு வழி மாறிச் சென்றுவிடும். இல்லாவிட்டால் அன்றைய தினம் அந்த வழியே அது வராது. இவை அனைத்தும் இயந்திரத்தனமாக நடக்கும்.

படகோட்டி படகைத் திருப்பி, துடுப்பைப் போட்டான். பாவம்! பிள்ளைகளின் வயிற்றை நிறைப்பதற்காகப் பாடுபடக்கூடியவன்!

படகு திருட்டுத்தனமாகச் செல்வதைப் போல் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. துடுப்பு நீரில் வேகமாக மோதிக் கொண்டிருந்தது. அவன் இன்று சந்தையை அடைந்து சரக்கை விற்றுக் காசாக்கி விடுவானா? நேரம் பாதி இரவு தாண்டிவிட்டது. சிறு சிறு வாய்க்கால் வழியாகத் துடுப்பு போட்டு எப்போது போய்ச் சேர்வது?

சந்தையை அடைந்துவிட்டால் சில நொடிகளில் சரக்கு விற்றுத் தீர்ந்துவிடும். நல்ல விலை. நாளை ஐந்தோ ஐந்தே காலோ ஆகும். அவனுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

வயலுக்கு மத்தியில் இருக்கும் காக்கைத் தீவில் மின்மினிப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. ஊரிலிருக்கும் மின்மினிப் பூச்சிகள் அனைத்தும் அங்குதான் வந்து கூடுகின்றன. எல்லா காலங்களிலும் அதுதான் நிலைமை. அங்கு வந்த காலத்திலிருந்தே அவள் அதைப் பார்க்கிறாள்.

தூரத்திலிருந்து இருட்டைக் கிழித்துக் கொண்டு மின்மினிப் பூச்சிகள் அந்த இடத்தை நோக்கித்தான் வேகமாகப் பறந்து செல்லும். சில இடங்களில் இருள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதனால் மின்மினிப் பூச்சிகள் மிகவும் சிரமப்பட்டு அடர்த்தி குறைவாக இருக்கும் இடத்தைத் தேடி இருட்டைக் கிழித்துக் கொண்டு செல்லும்.

மின்மினிப் பூச்சிகள் அந்த காக்கைக் தீவில் வந்து கூடுவதற்கான காரணம் என்ன? எப்போதும் அந்த இடத்தில் அதுதான் நடக்கும். சிருதா அங்கு வந்த நாளிலிருந்தே அதைப் பார்க்கிறாள். இப்போதும் அப்படித்தான்.

காக்கைத் தீவு ஒரு வரலாறு படைத்த வட்டமான நிலப் பகுதி. காக்கைத் தீவு எப்போது உண்டானது? யாருக்குத் தெரியும்?

புன்னப்புரை- வயலாருக்கு முன்னால் காக்கைத் தீவு வரலாறு படைத்தது. இந்த மனித வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு சம்பவம் அது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel