
ஸ்கூட்டரை அவளது காரை ஒட்டி ஓட்டினான். அவளது கார் கதவின் கண்ணாடி ஜன்னலைத் தட்டினான். 'ப்ரேக்கைப் போடுங்க! ப்ரேக்கைப் போடுங்க,' என்று குரல் கொடுத்தான். கண்ணாடி வழியாகத் தீபக்கின் குரல் அவளுக்குக் கேட்காவிட்டாலும் அவனது உதட்டசைவில் அவன் கூறியதைப் புரிந்து கொண்ட சரண்யா, ஸ்டீயரிங்கைச் சீராக்கி, ஆக்ஸிலேட்டரை அழுத்தியிருந்த காலை மெதுவாக எடுத்து, காரை ஓர் ஓரமாகச் செலுத்தி ப்ரேக்கை அழுத்தினாள். கார் குலுங்கி நின்றது.
தீபக், தன் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு, கார் அருகே சென்றான். சரண்யாவும் தன் கார் கதவைத் திறந்து வெளியே வந்தாள். வியர்வையில் குளித்தது போல் ஈரமாகிப் போன உடையில் இருந்த சரண்யாவின் உடல் பயம் குறையாமல் நடுங்கியது. நடுக்கம் மாறாத குரலில் 'தேங்க்யூ' என்றாள்.
முயல் குட்டி போல் பயந்து போயிருந்த சரண்யாவைப் பார்க்கச் சிரிப்பாக வந்தது தீபக்கிற்கு. சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"உங்க அப்பாதான் சொன்னார்ல? ஜாக்கிரதையா போம்மான்னு... பயமே இல்லாம கார் ஓட்டக் கத்துக்கிட்டப்புறம்தான் தனியா காரை எடுக்கணும். ஓட்டணும்..."
'இவருக்கு எப்படித் தெரியும்... அப்பா சொன்னது?!' வியப்பில் விழிகள் விரிய, தன் மனதில் தோன்றிய கேள்வியைத் தீபக்கிடம் வெளிப்படுத்தினாள்.
"எங்க அப்பா சொன்னது உங்களுக்கு எப்படித் தெரியும்?...."
"உங்க ஆபீசுக்கு நான் வந்திருந்தேன். உங்க அப்பா கூடப் பேசிக்கிட்டு இருந்தேன். நீங்க புயல் மாதிரி உள்ளே வந்தீங்க. மின்னல் மாதிரி மறைஞ்சு போயிட்டிங்க..."
"ஓ... அப்படியா?! நான் கவனிக்கவே இல்லை. உங்க பேர்?"
"என் பேர் தீபக். உங்க பேர் சரணும்மா... சரிதானே?!..."
'க்ளுக்' என்று சலங்கை கொஞ்சும் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள் சரண்யா.
"சரணும்மாவா? ஐய... எங்கப்பா மட்டும் என்னை அப்படிக் கூப்பிடுவாரு. நீங்க ஆபீஸ்ல இருக்கும் போது கூப்பிட்டாரா?! என் பேர் சரண்யா..."
சரண்யாவின் குயிலோசை கலந்த குரலில் சொக்கிப் போனான் தீபக். சரண்யாவின் அழகிலும், அபிநயமான பேச்சிலும் மனதிற்குள் அவளிடம் சரண்டர் ஆனான் தீபக்.
'அடக்குடா தீபக்! அடக்கு. மனசை அடக்கு. நீயும் அடங்கு!' உள்மனம் இட்ட கட்டளைக்கு அடி பணிந்தான் தீபக்.
"உங்களுக்கு இன்னும் பயம் தெளியலை. இருங்க. என் ஸ்கூட்டரைப் பூட்டிட்டு வரேன். உங்க கார்ல உங்களை உங்க வீட்ல விட்டுடறேன். அப்புறமா நான் வந்து என்னோட ஸ்கூட்டரை எடுத்துக்கறேன்."
தீபக் கூறியதும், அவனது ஸ்கூட்டரைப் பார்த்தாள் சரண்யா.
'இத்தனை பழசான ஸ்கூட்டரா? இதை யாரு எடுத்துட்டு போகப் போறாங்கன்னு லாக் வேற போடணுங்கறார்?' சரண்யாவின் மனதிற்குள் எழுந்த கேள்விகளைப் படித்து விட்ட தீபக் சிரித்தான்.
"நீங்க என்ன நினைக்கறீங்கன்னு புரியுது. இந்த ஸ்கூட்டர் எங்க அம்மா வேலை செய்யற பங்களா முதலாளியம்மாவோட பிள்ளைங்க ஓட்டிப் பழசாப் போன ஸ்கூட்டர்தான். ஸ்கூட்டர் மட்டுமில்ல. சின்ன வயசுல இருந்தே அந்தப் பசங்களோட சட்டை, பேண்ட் இதெல்லாம் போட்டுத்தான் வளர்ந்தேன். ஏதாவது பண்டிகைன்னா முதலாளியம்மா புதுத் துணி எடுத்துக் குடுப்பாங்க. மத்த நாள்லயெல்லாம் பழந்துணிதான். அது மாதிரிதான் இந்த ஸ்கூட்டரும்..."
அவன் பேசி முடிப்பதற்குள் சரண்யா குறுக்கிட்டாள்.
"ஸாரி... பழைய ஸ்கூட்டர்னு நான் நினைச்சது உண்மை தான். ஆனா... அதுக்குப் பின்னால இப்படி ஒரு சோகப் பின்னணி இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை..."
"சோகமெல்லாம் ஒண்ணுமில்லை. ஏழ்மையின் பிரதிபலிப்பு. அவ்வளவுதான். அதே பங்களாக்காரம்மாதான் வக்கீல் படிப்பு படிக்கறதுக்கு எனக்குப் பண உதவியும் செஞ்சாங்க. பங்களாவுல டிரைவர் வேலை பார்க்கற ஒரு அண்ணன்கிட்ட கார் ஓட்டக் கத்துக்கோன்னு சொல்லி நான் கார் ஓட்டறதுக்கு அவங்கதான் ஹெல்ப் பண்ணினாங்க. சரி... சரி. என்னோட வரலாறு ஒண்ணும் பெரிய சரித்திர காலத்து வரலாறு இல்லை. வாங்க. கார்ல ஏறுங்க..."
பேச ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களில் வெகு சரளமாகப் பேச ஆரம்பித்த தீபக்கைப் பார்த்து ஆச்சர்யமானாள் சரண்யா. காரில் ஏறினாள். தீபக் காரை ஓட்டினான். சரண்யா வழி சொல்ல, சங்கரின் பங்களா போர்டிகோவின் முன் போய் நிறுத்தினான் தீபக்.
"உங்க ஆபீஸிலிருந்து ரொம்ப பக்கத்துல இருக்கு உங்க வீடு?!"
"ஆமா தீபக். ஆபீசுக்குப் பக்கத்துலயே வீடு இருந்தா வசதிதானே? அதனாலதான்..."
அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே காரின் ஹாரன் ஒலி கேட்டு வசந்தா வெராண்டாவிற்கு வந்தாள். காரிலிருந்து தீபக் இறங்குவதையும், கூடவே சரண்யா வருவதையும் பார்த்த வசந்தாவின் முகத்தில் கேள்விக்குறி உணர்வுகள் வெளிப்பட்டன.
"பாட்டி... இவர் மிஸ்டர் தீபக். வக்கீல். அப்பாவுக்குத் தெரிஞ்சவர்..." என்று ஆரம்பித்து காரைத் தன்னால் சமாளித்து ஓட்ட முடியாத நிலையையும், தீபக் உதவி செய்ததையும் விளக்கிக் கூறினாள்.
"ரொம்ப தேங்க்ஸ் தம்பி. என் மகன் சங்கர்கிட்ட இவளுக்கு இப்ப கார் வாங்கிக் குடுக்காதேன்னு எவ்வளவோ சொன்னேன். அவன் கேக்கலை. இவ ஆசைப்பட்டுட்டாள்னு, கார் ஓட்ட சரியா கத்துக்கறதுக்கு முன்னாடியே வாங்கிக் குடுத்துட்டான். நல்ல வேளை நீங்க பார்த்து உதவி செஞ்சிங்க. இவளுக்கு ஏதாவது ஆகி இருந்தா எங்க வீட்ல யாராலயும் அதைத் தாங்கிக்க முடியாது. அடடா... பேசிக்கிட்டே இருக்கேனே... உள்ள வாங்க தம்பி."
"இல்லங்கம்மா. நான் கிளம்பறேன். என்னோட ஸ்கூட்டரைப் போய் எடுக்கணும்."
"அதெல்லாம் எடுத்துக்கலாம்ப்பா. எங்க வீட்டுக்கு வர்றவங்க எதுவும் சாப்பிடாம போகவே கூடாது." வசந்தாவின் அன்புக் கட்டளையை மீற இயலாமல் உள்ளே சென்றான் தீபக்.
பங்களாவையும், பங்களாவின் உட்புறத்தையும் பார்த்து மானசீகமாக வாய் பிளந்தான் தீபக். டைனிங் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த அழகிய பீங்கான் சாமான்களிலிருந்து சுவர்களில் அங்கங்கே மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் வரை அனைத்திலும் பணம்!...பணம்!...பணம் பேசியது. அலங்கரிப்பதற்கு என்னதான் கலை உணர்வு ஒரு காரணம் எனினும் அந்தக் கலை உணர்விற்கு விலையாகப் பணமும் ஒரு தேவைதானே?!
"என்ன தீபக்? பாட்டி குடுத்த ஜூஸைக் குடிக்காம திரு திருன்னு முழிக்கறீங்க?!" சரண்யா கேட்டதும் மடமடவென்று ஜூஸைக் குடித்தான் தீபக். அவன் வேகமாக ஜூஸைக் குடித்தாலும் அவனது இரண்டு கைகளாலும் க்ளாஸைப் பிடித்துக் குடிப்பதைக் கவனித்தாள் வசந்தா.
'சங்கர் க்ளாஸைப் பிடிக்கற மாதிரியே பிடிச்சுக் குடிக்கறான் இந்தப் பையன்!' நினைத்துக் கொண்டாள் வசந்தா. அப்போது முத்தையா அங்கே வந்தார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook