Lekha Books

A+ A A-

நீ மட்டுமே என் உயிர்!

nee-mattumea-en-uyir

“போயிடுங்க. இங்கே இருந்து. உடனே போயிடுங்க. போதும் உங்களை நம்பி நான் மோசம் போனது.”

“போயிடுங்க... போயிடுங்கன்னா... நான் எங்கே போவேன், ஜானு...?”

“ஜானு! அப்படிக் கூப்பிடற உரிமை உங்களுக்கு இல்லை. உங்களை நல்லவர்ன்னு நம்பினேன். நீங்க ஒரு அயோக்யன்னு அம்பலமாயிடுச்சு...”

“ஐயோ, ஜானகி... என் மேலதான் தப்பு. என்னோட சூழ்நிலை அப்படி... புரிஞ்சுக்கோ....”

“அதே சூழ்நிலைதான் என்னையும் நிர்கதியாக்கிடுச்சு... ‘உன்னைக் கண்கலங்காம பார்த்துபேன்’னு சத்தியம் பண்ணிணீங்க... உங்க சாயம் வெளுத்துருச்சு... உங்க வேஷம் கலைஞ்சுருச்சு.”

“என்னை மன்னிச்சுடு, ஜானு... அநாதையா நான் உன்னைத் தேடி வந்திருக்கேன்...”

“ஏன் வந்தீங்க, எனக்கு வாழ்க்கை குடுத்த என் புருஷன் வர்றதுக்குள்ள இங்கே இருந்து போயிடுங்க.”

“உன்னை விட்டுட்டு நான் எங்கே போக முடியும், ஜானு? உன்னைப் பிரிஞ்சு என்னால எப்படி வாழ முடியும்? உன் கூட இங்கயே நான் இருந்துக்கறனே? உன் புருஷன் கேட்டா ‘தூரத்து உறவு’ன்னு சொல்லிடேன்...”

“ச்சீ... இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? நல்லவரான என் புருஷன் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார். அவர் வர்றதுக்குள்ள இங்கே இருந்து போயிடுங்க... புருஷன், குழந்தைகள்ன்னு நிம்மதியா இருக்கற என் வாழ்க்கையை நிர்மூலமாக்கிடாதீங்க...”

ஜானகியும், இன்னொரு மனிதனும் பேசிக் கொண்டிருந்தது அத்தனையையும் ஆபீஸிலிருந்து திரும்பி வாசல் வரை வந்துவிட்ட சங்கர் கேட்க நேரிட்டது. ஜானகிக்காக வாங்கி வந்திருந்த பூப் பொட்டலமும், குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த பொம்மைகளும் அவனது கையிலிருந்து நழுவி விழுந்தன.

“ஏ, ஜானகி!” அவனது கடுமையான குரல் கேட்டதும், பயந்து வெளியே ஓடிவிட்டான் அந்த மனிதன். அவனது முகத்தைச் சங்கரும் பார்க்கவில்லை. அந்த மனிதனும் சங்கரின் முகத்தைப் பார்க்கவில்லை. மின்னலென மறைந்துவிட்டான் அவன்.

வீட்டிற்குள் நுழைந்த சங்கர், கோபாவேசமானான். ஜானகியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சுவரில் மோதினான்.

“நம்பிக்கைத் துரோகி...” கத்தியபடியே அவளை அடித்து நொறுக்கினான். ஆத்திரம் தீர அடித்துப் போட்டவன், வீட்டை விட்டு வெளியேறினான். போய்க் கொண்டிருந்த அவனது கால்களில் விழுந்து கதறினாள் ஜானகி. அடிப்பட்ட வலிமையும் தாங்கிக் கொண்டு அவனிடம் கெஞ்சினாள்.

“நான் சொல்றதைக் கேளுங்க...”

“எவன்கிட்டயோ சொன்னதைத்தான் கேட்டுக்கிட்டிருந்தேனே... விடுடீ...”

“என்னைக் கொஞ்சம் பேசவிடுங்க.” கதறி அழுதபடி கேட்டவளை எட்டி உதைத்துவிட்டு வெளியேறினான். அவளது மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியும், உடலில் பட்ட அடியும் சேர்ந்து அவளது நினைவை மழுங்கடிக்க, மயங்கி விழுந்தாள் ஜானகி.

2

திருச்சி பங்களாவின் வாசலில் நின்ற கூர்க்காக்கள் சங்கரைக் கூர்ந்து கவனித்த பின் உள்ளே அனுமதித்தனர். ‘சொந்த வீட்டிற்குள் நுழைய இப்படி ஒரு நிலை?’... எண்ணியபடியே உள்ளே சென்றான் சங்கர்.

“அண்ணா... அண்ணா...” சங்கரைப் பார்த்து சந்தோஷமாகக் கூவினான் நிர்மலா.

“வாண்ணா. இப்பவாவது உனக்கு எங்க ஞாபகம் வந்துச்சே.” தங்கை நிர்மலா அன்புடன் ஓடி வந்தாள்.

அங்கே வந்த வசந்தாவைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டான் சங்கர்.

“அம்மா... அம்மா...” சங்கரின் பாசம் நிறைந்த குரலைக் கேட்ட வசந்தா, மகிழ்ச்சியில் திளைத்தாள்.

கன்றைப் பிரிந்த பசுவின் நிலையில் வாடிக் கொண்டிருந்த வசந்தா வாயார அவனை வரவேற்றாள்.

“வாப்பா, சங்கர்...” சங்கரைப் பிரிந்து வசந்தா பட்டபாடு! அம்மா சங்கரை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதைப் பார்த்து நிர்மலாவிற்கு சந்தோஷமாக இருந்தது. அவளும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தாள்.

“அம்மா உன்னைப் பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருந்தாங்க. அப்பாதான் இன்னும் கோபம் மாறாம இருக்கார். ஆனா... உன்னை நேர்ல பார்த்துட்டார்ன்னா அவரோட கோபமெல்லாம் பறந்து போயிடும்ண்ணா...”

“அதுதான் நடக்காது!” அழுத்தமாகப் பேசியபடி தன் அறையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த முத்தையா, வசந்தாவைக் கண் ஜாடையிலே கண்டித்தார்.

“என்னை மன்னிச்சிடுங்கப்பா. முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணை, அவளோட குடும்பப் பின்னணி, கடந்த காலம் எதுவும் தெரியாத பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்காதேன்னு நீங்க சொல்லியும் உங்களைப் பகைச்சுக்கிட்டு அவளை நம்பிக் கல்யாணம் பண்ணிட்டது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன்ப்பா. என்னை மன்னிச்சிடுங்க.”

“எல்லா முடிஞ்சு போச்சு மை ஸன்! எப்ப நீ ஒரு பொண்ணுக்காகப் பெத்தவங்க, கூடப்பிறந்தவ, நம்ப குடும்ப கெளரவம் எல்லாத்தையும் மறந்துட்டு அவ பின்னாடி போனியோ... அப்பவே நீ எனக்கு மகன் இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்...”

“உங்களோட முடிவுல ஆரம்பிச்ச என்னோட அந்த வாழ்க்கையும் முடிஞ்சு போச்சுப்பா. என்னை மன்னிச்சுடுங்க...”

மகன் கெஞ்சுவதைப் பார்த்து அழுதாள் வசந்தா. கணவனின் கண்டிப்பு அவளது வாயைக் கட்டிப் போட்டது.

மீண்டும் தொடர்ந்தான் சங்கர்.

“இந்த சொத்து சுகத்தை அனுபவிக்கறதுக்காக மறுபடி உங்களைத் தேடி வரலைப்பா. செஞ்ச பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்திருக்கேன். மன்னிச்சுட்டதா ஒரு வார்த்தை சொன்னா போதும். நான் போயிடுவேன்...”

அவன் இவ்விதம் கூறியதும் கல்போல் இறுகிப் போயிருந்த முத்தையாவின் மனது கசிந்தது.

“ஒரு தடவை நீ வீட்டை விட்டுப் போனப்பவே என் உயிரும் போயிருக்கும். அந்த அளவுக்கு வேதனைப்பட்டுட்டேன். மறுபடியும் எங்கடா போகப்போற? நீ இங்கேயே இருப்பா...”

அடிவயிறு நொந்து பெற்ற பாசத்தினால் முத்தையாவின் கண்டிப்பையும் மீறி அவனிடம் பாசமழை பொழிந்தான் வசந்தா.

மனம் கசிந்து நின்ற முத்தையாவாலும் அதற்குமேல் கடுமையாகப் பேச இயலவில்லை. கெஞ்சியபடி நிற்கும் சங்கரைப் பார்த்தார். தற்போதுள்ள சங்கராக அவரது கண்ணுக்குத் தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது பரிச்சையில் மிகக் குறைந்த மார்க்குகள் வாங்கி ஃபெயிலாகிவிட்டு அதை அப்பாவிடம் சொல்வதற்குப் பயந்து போய் நிற்கும் சிறுவன் சங்கராகவே காட்சி அளித்தான் அவரது கண்களுக்கு. வாழ்க்கைப் பரிச்சையில் தோல்வி அடைந்து வந்து மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியபடி நிற்கும் சங்கரிடம் அவரது வைராக்யமும், கோபமும் தோற்றுப்போனது. உணர்ச்சி வசப்பட்ட அவர், சங்கரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

“உன்னை மன்னிச்சுட்டேன்ப்பா சங்கர். நீ பண்ணினதப்பையெல்லாம் மறந்துட்டேன்ப்பா. நீ எங்கயும் போக வேண்டாம். உங்க அம்மா சொன்ன மாதிரி நீ இங்கேயே இருப்பா சங்கர்...”

இதைக் கேட்டதும் வசந்தாவும், நிர்மலாவும் சந்தோஷத்தில் திளைத்தனர். மாடியில் இருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் நிர்மலாவின் கணவன் ரமேஷ்.

“வாங்க மச்சான். எப்படி இருக்கீங்க? உங்களைப் பிரிஞ்சு நிர்மலா ரொம்ப வேதனைப் பட்டுக்கிட்டிருந்தா...”

“இப்பதான் அவன் வந்துட்டாளே மாப்பிள்ளை...”

“இனிமேல் நீங்களும், நம்ம குடும்பமும்தான்ப்பா எனக்கு முக்கியம். என் வாழ்க்கை இனி இங்கேதான்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel