
வாணியை அப்படி வளர்க்கணும், இப்படி வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்ட தன் மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த முடிவில்தான் அவரது வாழ்வு தொடர்ந்தது.
மனைவி ஆசைப்பட்டபடியே வாணியை நன்றாகப் படிக்க வைத்தார். துணிவே துணை எனும் வாழ்வியல் அறிவுரைகளைப் போதித்தார். எதற்கும் கலங்காத மனம் கொண்டு, பிரச்னைகளை எதிர்கொள்வதே நல்லது எனும் தைர்யத்தை ஊட்டி வளர்த்தார். நேர்மை, கௌரவம், பணிவு ஆகிய பண்புகளைப் பன்முறை கூறிப் புதுமைப் பெண்ணாக அவள் மலரவும், வளரவும், வாழவும் பாடுபட்டார்.
அம்மாவின் அன்பு மடி இல்லாமல் அப்பாவின் அரவணைப்பால் வளர்ந்த வாணி, கங்காதரனின் தியாக உணர்வைப் புரிந்து கொண்டாள். எனவே அவர் காட்டிய வழிகளைப் பின்பற்றினாள்.
ஸ்ரீதர் மீது காதல் கொள்ளும் வரை கங்காதரனிடம் எதையும் மறைக்காத வாணி, தன் காதல் பற்றி அவரிடம் வெளிப்படையாகக் கூறும் தருணத்திற்காகக் காத்திருந்தாள். அதற்குள் வேறு யாரோ சொல்லி விட்டார்களோ என்ற எண்ணம் எழுந்தது அவளுள்.
கங்காதரனின் அருகே சென்றாள்.
"என்னப்பா? உடம்பு சரி இல்லையா?"
"உடம்புக்கு ஒண்ணுமில்லம்மா..."
"ஒண்ணுமில்லைன்னா முகம் ஏன் இப்படி வாடிக்கிடக்கு?"
"வாடிப் போன என்னோட வாழ்க்கையில என்னைத் தேடி வந்த சொர்க்கமா நீ பிறந்திருக்க. நீ பிறந்ததும் உங்க அம்மா கண்ணை மூடிட்டா. அதுக்கப்புறம் எதுக்காக இந்த உலகத்துல உயிர் வாழணும்ன்னு நினைச்சேன்... 'எனக்காக நீங்க வாழணும்ப்பா'ன்னு உன்னோட அழுகுரல் சொல்லுச்சு... உனக்காக... உனக்காக மட்டுமே இந்த உயிரைச் சுமந்துக்கிட்டிருக்கேம்மா..."
"நீங்க இவ்வளவு விரத்தியா பேசற அளவுக்கு என்னப்பா நடந்துருச்சு?"
"நடக்கக் கூடாதது நடக்கலைம்மா. ஆனா... நடக்கறது நல்லபடியா நடக்கணுமேன்னுதான் கவலைப்படறேன்..."
"உங்க கவலையைத் தூக்கிப் போட்டுட்டு எந்த தயக்கமும் இல்லாம நீங்க பேசணும்னு நினைக்கற விஷயத்தைப் பேசுங்கப்பா."
"பேசத்தாம்மா போறேன். நேர்மையையும், துணிவையும் ஊட்டி வளர்த்த என் பொண்ணு கிட்ட பேசறதுக்கு எனக்கு இல்லாத உரிமையா? நேரடியாவே விஷயத்துக்கு வரேம்மா. உன்னை பார்க்ல ஒரு பையன் கூடப் பார்த்ததா கலைஞானம் மாமா சொன்னாரு... நீ தப்பு செய்யக் கூடிய பொண்ணு இல்லைன்னு எனக்கும் தெரியும். ஆனா.... எதையும் வெளிப்படையா மனம் விட்டு பேசிடறதுதானே நல்லது."
"நல்ல விஷயங்களை மட்டுமே போதிச்சு என்னை வளர்த்தீங்கப்பா. அதனால நான் தப்பு பண்ண மாட்டேன்ங்கற உங்க நம்பிக்கையும் சரிதான். ஆனா... அதே சமயம் காதல் தப்புன்னு என்னோட அப்பா சொல்ல மாட்டார்ன்னு நானும் நம்பறேன்...."
வாணி... காதல் பற்றிப் பேசியதும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாக இருந்தார் கங்காதரன். அதன் பின் அழுத்தமாகப் பேச ஆரம்பித்தார்.
"நிச்சயமா காதல் தப்பு இல்லை... தப்பான நபரைக் காதலிக்காத வரைக்கும்! சொல்லும்மா! பார்க்ல உன் கூடப் பேசிக்கிட்டிருத பையனைத்தான் நீ விரும்பறியா? அவன் யாரு? என்ன படிச்சிருக்கான்? அவனோட குடும்பத்தைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அவனுக்கு என்ன வருமானம்? உன்னைப் போலவே அவனும் புத்திசாலியா?..." மகளைப் பற்றி வேற்று மனிதர் கூறிய தகவல் பற்றி வாணியிடம் பேச ஆரம்பித்ததும் அவரது மனம் லேசாகியது. எனவே படபடப்பின்றிக் கேள்விகளைத் தொடுத்தார்.
"நானே இன்னிக்கு இது விஷயமா உங்க கிட்ட பேசணும்ன்னு காத்திருந்தேன். அதுக்குள்ள உங்க ஃப்ரெண்டு கலைஞானம் மாமா முன்னுரை குடுத்துட்டாரு. இனி விளக்கவுரையை நான் சொல்றேன்ப்பா. நான் விரும்பறவரோட பேர் ஸ்ரீதர். லாஸ்பேட்ல ஒரு பெரிய பங்களாவுல அவங்கம்மா சமையல் வேலை பார்க்கறாங்க.-.."
"என்ன?! சமையல்காரியோட மகனையா விரும்பற?!..."
"ஏம்ப்பா? சமையல் பண்ற வேலை புண்ணியமான வேலைதானே! அமெரிக்க நாட்டின் பதினாறாவது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் யாரோட மகன்னு தெரியாதாப்பா? அவர் ஒரு ஏழைத் தச்சரோட மகன்ப்பா. ஒரு தச்சரோட மகன்ங்கற காரணத்தால அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவியும், புகழும் கிடைக்காமல் போகலியே?... ஆபிரகாம் லிங்கன் ஒரு போஸ்ட் மேனா வேலை பார்த்தவர். அவரைப் போல உலக நாடுகள் முழுசும் ஏழ்மையான நிலையில இருந்தவங்களோட வாரிசுகள் பெரிய அளவுல முன்னேறி இருக்காங்க. ஏன்?... நம்ப தலைவர் காமராஜர் கூட ஏழ்மையான குடும்பத்தில பிறந்தவர்தான். கல்வித் தந்தைன்னு அவரைத் தமிழ்நாடு கொண்டாடலியா? பெருந்தலைவர்ன்னு அவரைப் பாராட்டலியா?..."
"சரிம்மா. நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிதான். ஒத்துக்கறேன். நீ விரும்பற அந்த ஸ்ரீதர் ஏதாவது ஒரு துறையில முன்னேறக் கூடிய வாய்ப்புகளோ அறிகுறிகளோ தெரியுதா?..."
"அப்பா... அவர் படிச்சதென்னவோ ப்ளஸ்டூதான். ஆனா... அவர் நடனத் துறையில ரொம்ப ஆர்வமா ஈடுபட்டுக்கிட்டிருக்கார். சின்னத்திரையில இப்போ ஆடற டான்ஸர்ஸ்ல அவர்தான்ப்பா முன்னணியா இருக்காரு. கூடிய சீக்கிரமே சினிமாவுலயும் பெரிய ஆளா வந்துருவாருப்பா. அதுக்கேத்த எல்லாத் திறமைகளும் அவருக்கு இருக்குப்பா..."
"இருக்கலாம்மா. ஆனா... திரைப்படத்துறைங்கறது ஒரு சூதாட்டக் களஞ்சியம் மாதிரி. ஜெயிச்சா உச்சிக்குக் கொண்டு போய்விடும். தோத்துட்டா... அதல பாதாளத்துல தள்ளிடும். நிலையான, நிரந்தரமான புகழோ, வருமானமோ இருக்காதே! சினிமாவுல இருக்கற எத்தனையோ பேர் கஷ்டத்துலயே இருக்காங்களே... எல்லாருமா முன்னேறிடறாங்க?..."
"முன்னேறலாம்ப்பா. நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தா... நிச்சயமா முன்னேறிடலாம். இந்த ரெண்டுமே ஸ்ரீதர்கிட்ட நிறைய இருக்கு. திறமை மட்டும் இருந்தா போதாது, அந்தத் திறமையை வெளிக் கொண்டு வர என்னென்ன முயற்சிகள் எடுக்கணுமோ அத்தனையும் எடுத்துக்கிட்டிருக்கார்ப்பா."
"முயற்சிகள் வெற்றி அடைஞ்சுட்டா சரி. இல்லைன்னா....? கைவசம் வேற தொழிலும் தெரியாம பெரிய படிப்பு இல்லாம டான்சுக்குத் தாளம் போடற மாதிரி சோத்துக்குத் தாளம் போடணுமேம்மா... எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாலும் வெற்றி, தோல்வி ரெண்டையுமே சிந்திச்சுப் பார்க்கணும்மா."
"நீங்க சொல்றது சரிதான்ப்பா. ஆனா... ஸ்ரீதரை ஒரு தடவை பார்த்து பேசிட்டிங்கன்னா அவரோட வெற்றி நிச்சயங்கற முடிவுக்கு நீங்களே வந்துருவீங்க. ஏன் சொல்றேன்னா... டான்ஸ் துறையில ஜெயிக்கணும்... ஜெயிக்கணும்ங்கற... ஒரு வெறி அவர்க்கு இருக்கு... ஒரு தீ அவருக்குள்ள எரிஞ்சுக்கிட்டே இருக்கு. சினிமாவுல டான்ஸ் மாஸ்டரா உயரணும்ங்கற ஒரு இலக்கை நோக்கி அவர் பண்ற பயணம் நிச்சயமா வெற்றி அடையும். அதுக்காக அவர் உழைக்கற உழைப்பும் மிகக் கடினமானது. ப்ளீஸ்ப்பா புரிஞ்சுக்கோங்கப்பா..."
"புரியுதும்மா. மேலே சொல்லு. அவரோட குடும்பத்தைப் பத்தி..."
"ஸ்ரீதருக்கு ஒரு அண்ணன் இருக்காரு. அவரோட பேர் தீபக். அவர் வக்கீலுக்குப் படிச்சுட்டு சென்னையில ஒரு பெரிய லாயர்கிட்ட ஜூனியரா இருக்காரு..."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook