Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 26

abimanyu

பாறையின் ஒரு மூலையை அடைந்து அவன் மறைந்து நின்றான். சீட்டி அடிப்பதை நிறுத்தினான். மெதுவாக ஓரத்தில் தலையை நீட்டிக் கொண்டு சற்று தூரத்திலிருந்து வந்த ஒரு தலை தன்னுடைய தலையில் மோதியபோது உண்ணி நடுங்கிப் போய்விட்டான்.

“யார் அது?'' -அந்த நடுக்கத்துடன் உண்ணி கேட்டான்.

ஒரு குலுங்கல் சிரிப்பு பதிலாக வந்தது. அதுவும் பெண்ணின் குரலில். உண்ணி அதிர்ச்சியில் தெறித்துப் போய்விட்டான்.

நடுங்கிக் கொண்டு நின்றிருந்த உண்ணியின் கண்களுக்கு முன்னால் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்த உம்மிணி தோன்றினாள். உம்மிணி என்ற மலைவாழ் பெண். கோமனின் பக்கத்து வீட்டுக்காரி.

“சின்ன தம்புரானா?'' -அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். “என்ன நினைத்து...''

அவள் சொல்ல வந்ததைப் பாதியாக நிறுத்தினாள். உண்ணி திகைத்துப் போய் நின்றிருந்தான். அவனுக்குள் இருந்து சத்தம் வெளியே வரவில்லை.

உண்ணிக்கு தன் குரலை மீண்டும் பெறுவதற்கு சற்று நேரம் வேண்டி வந்தது. இறுதியில் சிரமப்பட்டு பேசக்கூடிய நிலை வந்தபோது உண்ணி கேட்டான்:

“நீ இங்கே என்ன செய்கிறாய்?''

“நான் புல்லறுக்க வந்தேன்...'' -உம்மிணி அதற்குப் பிறகும் சிரித்தாள். அவளுடைய சிரிப்பு தன்னை மயங்கச் செய்கிறது என்று உண்ணிக்குத் தோன்றியது. அவளுடைய மலர்ந்த தடித்த உதடுகளும் வரிசையாக இருந்த பற்களும் கறுத்த கண்களும் ஸ்பிரிங்கைப் போல சுருண்டிருந்த தலைமுடியும் அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்தன. இறக்கி வெட்டப்பட்டிருந்த ஜாக்கெட்டின் வழியாக அவளுடைய மார்பகங்களில் பாதியளவு வெளியே தெரிந்தது. தூக்கிக் கட்டப்பட்டிருந்த கட்டங்கள் போட்ட லுங்கியில் அவளுடைய தொடை பாதிக்கு மேல் நிர்வாணமாகத் தெரிந்தது. தனக்குள் என்னவோ எரிவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது. அவன் தாங்க முடியாமல் மேலும் கீழும் மூச்சுவிட ஆரம்பித்தான்.

“உண்ணித் தம்புரான், என்ன நினைக்கிறீங்க?'' -உம்மிணி கேட்டாள்.

“ஒண்ணுமில்ல...'' -உண்ணி திரும்பி நடந்தான். அவன் நடக்கவில்லை; ஓடினான். பின்னால் உம்மிணியின் பைத்தியம் பிடிக்கச் செய்யும் குலுங்கல் சிரிப்பு கேட்டது. உண்ணிக்கு பயம் தோன்றியது.

சற்று தூரத்தில் நின்று கொண்டு உண்ணி திரும்பிப் பார்த்தான். மலை வாழ் பெண் உம்மிணி கரடிப் பாறையின்மீது ஏறி அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் மீண்டும் திரும்பிப் பார்த்தபோது, அவள் அவனை அழைப்பதைப்போல கையை அசைப்பதைப் பார்த்தான். உண்ணி நேராக ஆசிரமத்திற்குச் சென்றான்.

உணவு சாப்பிட்டு முடித்தபோது மாமா சொன்னார்: “இன்னைக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டாம். தெரியுதா? கோவிலுக்குப் போய், கடவுளை வணங்கிவிட்டு வா, உண்ணி.''

“சரி...'' -உண்ணி சொன்னான்.

“அய்யப்பா...'' -மாமா அழைத்தார்.

“எஜமான்!'' -அய்யப்பன் பக்தியுடன் அழைப்பைக் கேட்டான்.

“இன்றுதானே?''

“ஆமாம், எஜமான்.''

இந்த அய்யப்பன் ஒரு ஆச்சரியமான மனிதனாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே உண்ணி கோவிலை நோக்கி மலையில் ஏறினான். பொதுவாகக் கூறப்போனால், அவன் ஒரு அருமையான வேலைக்காரன். இவனைவிட சிறந்த ஒரு வேலைக்காரன் கிடைக்க மாட்டான். அழைத்தால் அடுத்த நிமிடம் முன்னால் வந்து நிற்பான். நாயையே தோற்கடிக்கும் எஜமான் பக்தி. அளவுக்கு மீறிய மரியாதையும் பணிவும். இரவில் உண்ணி தூங்கிவிட்டால், மாமாவும் அய்யப்பனும் எஜமானும் வேலைக்காரனும் அல்ல. அவர்கள் சரி சமமாக ஒருவரோடொருவர் பழகும் நண்பர்கள். ஒன்றாக உட்கார்ந்து உணவு சாப்பிடுவார்கள். நகைச்சுவைகள் பேசி சிரிப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பார்கள்.

ஒருநாள் உண்ணி தூங்காமல் படுத்திருந்தபோது, மாமா அய்யப்பனுடன் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பதைக் கேட்டான். ஒரு வருடம் தாண்டியபிறகு, தான் ஏதோ முக்கியமான கடவுள் சம்பந்தப்பட்ட காரியத்திற்காக பொறுப்பில் அமர்த்தப்படப் போகிறோம் என்ற விஷயத்தை அப்படித்தான் உண்ணி தெரிந்து கொண்டான். அந்த காலகட்டம் தாண்டிவிட்டால், சட்ட திட்டங்கள் இதைவிட கடுமையாக இருக்கும் என்பதை நினைத்தபோது, ஒரு வருடம் தாண்டக்கூடாது என்று உண்ணி விரும்பினான்.

அய்யப்பனின் வெறி பிடித்த தோற்றம் உண்ணியின் மனதில் தோன்றியது. அந்த தோற்றத்தையும் சத்தத்தையும் இப்போது நினைத்தாலும் பயமாக இருந்தது. எனினும், மாமாவின் விளக்கமும் அய்யப்பனின் மன்னிப்பு கேட்ட செயலும் அவனுக்கு நிம்மதியைத் தந்திருந்தன. அது கடவுளின் வெளிப்பாடு என்றும்; பயப் படுவதற்கு அதில் எதுவுமே இல்லை என்றும் உண்ணி நம்பினான்.

கோவிலில், மலையிலிருந்து இறங்கி வந்திருந்த வேடர்களும் வேடத்திகளும் கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் காளியின் சிலைக்கு முன்னால் துள்ளிக் குதித்துக் கொண்டு, நேர்த்திக் கடன்களைச் செய்து கொண்டிருந்தார்கள். உண்ணி அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். துள்ளிக் குதிப்பது முடிந்தவுடன், ஒரு வேடத்திப் பெண் காட்டு மரங்களைச் செதுக்கி பளபளப்பாக ஆக்கிக் கடைந்தெடுத்து மரத்துண்டுகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு மாலையை உண்ணியின் கழுத்தில் அணிவித்தாள். வேடர்கள் அவனைப் பார்த்து வணங்கினார்கள். அவனுக்குத் தெளிவாகப் புரிந்திராத அவர்களுடைய மொழியில் என்னவோ பாடவும் கூறவும் செய்தார்கள்.

அந்த தகவலைக் கேட்டுவிட்டு மாமா சொன்னார்:

“உண்ணி, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய உழைப்பிற்குப் பலன் கிடைத்திருக்கிறது. காளி உனக்குள் நுழைந்திருக்கிறாள்.'' மாமாவின் முகம் மலர்ந்தது. கண்கள் பிரகாசித்தன. எந்தச் சமயத்திலும் மாறியிராத குரலில்கூட மாறுதல் உண்டானது. “காளி வேடர்களுக்கு முதலில் தெரிவித்திருக்கிறாள். அவ்வளவுதான்.'' - தலையை மேல் நோக்கித் திருப்பி, கண்களைப் பாதியாக மூடி, பக்தி வயப்பட்ட குரலில் மாமா கூறினார்: “தாயே மகாமாயே!''

மாமாவின் குரல் காடுகளில் எதிரொலித்தது. நிமிடக்கணக்கில் மாமா செயலற்ற நிலையில் இருந்தார். இறுதியில் அவர் கண்களைத் திறந்து உண்ணியைப் பார்த்தார்.

“இனிமேல் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும், உண்ணி.'' -அவர் சொன்னார்: “இனி நீ எதற்கும் அடிமைப்படக்கூடாது. சின்னஞ்சிறு தவறுகளை நோக்கி நீ விழுந்து கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தையும் நான் தெரிந்து கொண்டுதான் இருந்தேன்.'' அவருடைய குரல் சாதாரணமானதாக ஆனது. “நான் வேண்டுமென்றே கேட்காமல் இருந்தேன். இப்போது ஒரு திருப்பம் உண்டாகி இருக்கிறது. காளி உன்னைத் தேர்ந் தெடுத்திருக்கிறாள். இனிமேல் நீ மகாமாயாவைச் சேர்ந்தவன்!''

கண்களில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் உண்ணி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். மாமா தொடர்ந்து சொன்னார்: “ இனி உறவுகளும் கடமைகளும் இல்லை. உணர்ச்சிகள் இல்லை. இருக்கக்கூடாது.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel