அபிமன்யு - Page 30
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9050
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, அம்மா பேசாமல் போய் விட்டதைப் பற்றி தனக்கு கடுமையான கவலை எதுவும் உண்டாகவில்லையே என்று உண்ணி ஆச்சரியப்பட்டான். "என் தாய் என்னிடம் விடை பெறாமல் போனதைப் பற்றி எனக்கு ஏன் வருத்தமே உண்டாகவில்லை?' -அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்: "நான் மரத்துப் போய் விட்டேனா? இந்த மலையில், இந்த ஆசிரமத்தின் வாழ்க்கை எனக்குள் இருந்து என்னுடைய உணர்ச்சிகளை வீசி எறியும்படி செய்து விட்டதா? ஆனால், ஆற்று நீரே! உன்னை நான் விரும்புகிறேனே! உன்னுடைய தொடுதலில் என்னுடைய உணர்ச்சிகள் தட்டி எழுப்பப்படுகின்றனவே!'
பதில் இல்லாத கேள்விகள் அவை.
தனக்கு கேள்விகள் அனைத்தும் கேள்விகளாகவே இருந்து கொண்டிருக்கும் என்று உண்ணிக்குத் தோன்றியது.
குளித்து விட்டு மேலே வந்தபோது, உண்ணியின் மனதில் இருந்த சுமை குறைந்து விட்டிருந்தது. அவனுக்கு மீண்டும் உற்சாகம் உண்டானது.
தான் சிக்கிக் கிடக்கும் வலையின் காரணகர்த்தாக்கள் யார் என்று அவன் சிந்தித்தான். காரணகர்த்தாக்கள் யாராக இருந்தாலும், வலை எதுவாக இருந்தாலும், அதிலிருந்து தப்பித்தே ஆகவேண்டும் என்ற மாமாவின் கருத்து அவனுக்கு சரியானதாகத் தோன்றியது.
சீட்டி அடித்துக் கொண்டே அவன் நடந்தான். கரடிப் பாறையை அடைந்த போது, அவன் உம்மிணியை நினைத்துப் பார்த்தான். பயம் அல்ல- ஆர்வம்தான் அவனிடம் இருந்தது. இவ்வளவு அதிகாலையில் அவள் வந்திருக்க மாட்டாள் என்பது மட்டும் உண்மை. எனினும், எதிர்பாராத நேரங்களிலும் ஏதாவது நடக்கும் என்ற சிந்தனையுடன் அவன் பாறையின் பின் பகுதிக்குச் சென்றான். ஒரு இலைகூட அசையாமல் இருக்கும் அளவிற்கு மிகவும் கவனம் செலுத்தி அவன் நடந்தான். பாறையின் மூலையில் நின்று கொண்டு முன்பு செய்ததைப் போல அவன் தலையை நீட்டி பார்த்தான். அன்று பீடித் துண்டுகளும் முல்லை மலர்களும் கிடந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், சிறிய செடிகளால் பாதி மறைக்கப்பட்ட ஒரு பெண் உருவம் படுத்திருப்பதை அவன் பார்த்தான்.
பெருகி வந்த சிரிப்பை உண்ணி அடக்கிக் கொண்டான். அதிகாலையில் வந்து என்னவோ செய்துவிட்டு உம்மிணி தூங்கிவிட்டாள் போலிருக்கிறது என்று நினைத்தபோது, தடை போட முடியாத அளவிற்கு சிரிப்பு வந்தது. வாயைக் கையால் மூடிக் கொண்டு அவன் அவளுக்கு அருகில் சென்றான்.
“டேம்...'' அருகில் சென்ற உண்ணி ஓசை எழுப்பினான்.
அவள் திடுக்கிட்டு எழுவாள் என்றும்; வெட்கப்பட்டு நிற்பாள் என்றும் அவன் எதிர்பார்த்தான்.
அப்படி எதுவும் நடக்காமல் இருக்க, சற்று பதைபதைப்பு அடைந்த உண்ணி மேலும் சற்று நெருங்கி, பெண் உருவத்தின் முகத்தைப் பார்த்தான். அடுத்த நிமிடம் அவன் பயந்து நடுங்கிவிட்டான். அவனுக்குள் இருந்து வடிவமற்ற ஒரு சத்தம் உண்டானது.
பயந்து கொண்டே அவன் ஓடினான். அவன் ஓடிக் கொண்டே இருந்தான்.
12
உண்ணி கண்களைத் திறந்து பார்த்தது காளி கோவிலில் இருந்த காளி சிலையின் முகத்தைத்தான். ரத்தமயமாக இருந்த அசுரனின் குருதியைக் குடித்த காளி பழி வாங்கும் கடவுளாக அவனுக்கு முன்னால் பிரகாசமாகத் தோன்றினாள். சிலையிலிருந்து காளி உயிர்த்தெழுந்து வந்து ஈரேழு பதிநான்கு உலகங்களிலும் நிறைந்து நின்றிருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.
உண்ணி கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னைச் சுற்றி பார்த்தான். ஆமாம்... தான் காளி கோவிலில்தான் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டான். முன்னால் சாட்சாத் சாமுண்டியின் சிலை இருப்பதைப் பார்த்தான்.
ஆனால், உண்ணி ஆச்சரியப்பட்டான். "நான் எப்படி இங்கே வந்தேன்?'
இன்றுவரை சிக்கியிராத மிகப் பெரிய வலையில் தான் சிக்கிக் கொண்டிருக் கிறோம் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். இந்த வலையின் சணலைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள்.
திடீரென்று கரடிப் பாறைக்குப் பின்னால் பார்த்த இறந்த உடலின் விஷம் நீலம் படர்ந்த, வீங்கிப் போன முகம் அவனுடைய கண்களுக்குத் தெரிந்தது. உண்ணி அதிர்ச்சியடைந்து சிதறிப் போய்விட்டான்.
அந்தப் பெண் தன்னுடைய அன்னையா? அவன் தனக்குத்தானே ஆராய்ந்து பார்த்தான். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒரு விஷயம் உண்மை. அவள் ஒரு மனிதப் பெண். அவள் இறந்து போய்விட்டாள். கொல்லப்பட்டிருக்கிறாள். இங்கு பிரச்சினை-மரணம். கொலைச் செயல். மரணம் என்ற பரிகாரம் இல்லாத பிரச்சினையின் காலடிக்குக் கீழே வாடிய ஒரு வாழைத் தண்டைப் போல தான் விழுகிறோம் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். இரண்டு நாட்கள் தன்னுடைய தாயாக இருந்த- அல்லது தாயாக நடித்த ஒரு பெண்ணின் மரணத்தைப் பற்றிய கவலை அல்ல; அவனைத் தளரச் செய்து கொண்டிருந்தது மரணம் என்ற சம்பவம்தான்.
அது ஒருவகையில். இன்னொரு வகையில் பார்த்தால் தான் சிக்கியிருக்கும் வலையின் கனத்தை அவன் தெரிந்து கொண்டான். இறந்த உடலைப் பார்த்தவுடனே அய்யப்பனின் சிறிய கண்கள் தன்னுடைய மனக்கண்களில் ஏன் தோன்றின என்று அவன் ஆச்சரியப்பட்டான். அய்யப்பனின் உருவம் மட்டுமல்ல; அய்யப்பனுக்கும் தாய்க்கும் இடையில் நடைபெற்ற உரையாடலும் அவனுடைய நினைவில், அந்த நிமிடங்களில், பயந்துபோய் பதைபதைப்பு அடைந்து ஓடிக் கொண்டிருந்த அந்த நிமிடங்களில் ஏன் தோன்றியது என்று அவன் யாரிடம் என்றில்லாமல் கேட்டான். அவனுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த அய்யப்பனின் பயங்கரமான தோற்றம், வாளுக்கு பதிலாக முகத்தைச் சவரம் செய்யப் பயன்படுத்தும் பழைய கத்தியைப் பிடித்துக் கொண்டு கன்னங்களிலும் தாடையிலும் ரத்தத்தைக் கசிய விட்டுக் கொண்டு நிற்பதை, நின்று கொண்டு அலறுவதை உண்ணி பார்த்தான். அந்த அலறல் சத்தம் அவனுடைய காதுகளையும் அவனுடைய காட்டையும் நடுங்கச் செய்தது. முகத்தைச் சவரம் செய்யும் கத்தியில் இருந்து சொட்டுச் சொட்டாக விழும் ரத்தம் கோழியின் ரத்தம் அல்ல- தன்னுடைய தாய் என்று தான் நம்பவில்லையென்றாலும், அந்தத் தோற்றத்தில் தனக்கு முன்னால் வந்து நின்ற பெண்ணுடைய ரத்தம் என்று அவனுக்கு வெறுமனே தோன்றியது.
தன்னுடைய நரம்புகளின் வழியாக குளிர்ச்சியாக ஏதோவொன்று பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. அது பயமாக இருக்குமோ? நடுக்கமாக இருக்குமோ? மரணமாக இருக்குமோ?
"எனக்குத் தெரியவில்லையே!' -உண்ணி கவலையுடன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: "எனக்குத் தெரியவில்லையே!'
அந்தப் பெண்ணின் மரணத்துடன் அய்யப்பனைத் தொடர்பு படுத்திப் பார்க்க தனக்கு எந்தவொரு உரிமையும் ஆதாரங்களும் இல்லை என்பதை உண்ணி நினைத்துப் பார்த்தான். பிறகு வெறுமனே ஒரு சிந்தனை எதற்காக உண்டாக வேண்டும்? அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். பதில் கூறுவதற்கு அவனுக்குத் தெரியவில்லை. தான் கேள்விகளின் ஒரு பெரிய சின்னமாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை உண்ணி புரிந்து கொண்டான்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,