Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 31

abimanyu

அடுத்த நிமிடம் அவனுடைய சிந்தனை அவனை நோக்கியே திரும்பி வந்தது. என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வடிவமே இல்லை. தன்னுடைய உள் மன ஆசைகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்றால், அந்த வாழ்க்கையில் ராகுலனும் ஷீபாவும், அவர்களுடைய... இல்லாவிட்டால் தன்னுடைய... அம்மாவும் ரேடியோக்ராமும் ரேடியோவும் உம்மிணியும் இருக்க வேண்டும் என்று உண்ணிக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட ஈர்க்கக்கூடிய விஷயங்கள் இருக்கும் வலைகளில் சென்று விழுந்து விடக்கூடாது என்று அறிவுரை கூறும் மாமா இன்னொரு வலையின் காரணகர்த்தாவாக இருக்கிறாரே! பலம் படைத்த காரணகர்த்தா அல்லவா என்று உண்ணி பலமாக சந்தேகப்பட்டான். இதுவும் வலைதானே? தன்னை சிக்க வைக்கும் வலை. இது ஒரு பத்ம வியூகம். தான் வந்து சிக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆபத்தான வட்டத்தில் இருந்து தனக்கு விடுதலையே இல்லை என்பதை உண்ணி ஒரு உள் நடுக்கத்துடன் நினைத்துப் பார்த்தான்.

திடீரென்று மழைக்காலத்தின் மின்னல் கீற்றைப் போல ஏதோ ஒன்று அவனுடைய மனதிற்குள் தோன்றி மறைந்தது. அவன் காளி சிலையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களையே பார்த்தான். அடுத்த நிமிடம் உண்ணி எழுந்தான். நடுக்கமும் பயமும் தன்னிடமிருந்து விலகிப் போய்விட்டன என்பதை அவன் புரிந்து கொண்டான். உறுதியான எட்டுக்களுடன் உண்ணி மலையில் இறங்கினான்.

பூஜையறையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த மாமா வெளியிலிருந்து உள்ளே வந்த உண்ணியைப் பார்த்தார். அவர் சில நிமிடங்கள் உண்ணியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“உண்ணி, தாமதம் ஏன்? பூஜைக்கு இல்லையே!'' -அவர் சொன்னார்.

“நான் குளித்து முடித்து விட்டு, கோவிலுக்குப் போயிருந்தேன்!'' - உண்ணி சொன்னான்.

“முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?'' என்று மாமா கேட்டார்.

“விழுந்து விட்டேன்.'' -உண்ணி பதில் சொன்னான்.

உண்மையாகக் கூறுவதாக இருந்தால் மாமா கூறியதைத் தொடர்ந்து காலைப் பார்த்த பிறகுதான் தன்னுடைய முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருப்பதையே உண்ணி தெரிந்து கொண்டான்.

“கவனமா நடக்கணும்.'' -மாமா அறிவுரை கூறினார். உண்ணி அந்த அறிவுரையை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு மனதிற்குள் வைத்துக் கொண்டான். மாமா கூறியது எல்லா அர்த்தங்களையும் வைத்து பார்க்கும்போது சரிதான் என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

“போய் ஆடையை மாற்றி விட்டு வா.'' -மாமா தொடர்ந்து சொன்னார்: “உணவு சாப்பிடுவோம்.''

“சரி....'' -உண்ணி உள்ளே சென்றான்.

வெளியே செல்வதற்கான ஆடைகளை அணிந்து கொண்டு உண்ணி அறையை விட்டு வெளியே வந்தான். உணவு சாப்பிட உட்கார்ந்தபோது, மாமா அதை கவனித்து அவனிடம் கேட்டார்:

“இது என்ன வெளியே போகக்கூடிய ஆடைகளுடன்? இன்று பள்ளிக்கூடம் இல்லாத நாளாயிற்றே!''

“ஆமாம்...'' -உண்ணி சொன்னான்: “ஆனால், நான் கிராமத்திற்குக் கொஞ்சம் போக வேண்டியிருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் இருந்தேன் அல்லவா? என்னவெல்லாம் சொல்லித் தந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மாமா, நீங்கள் அனுமதி தந்தால் போகலாம் என்று ஆடைகளை அணிந்தேன்.''

“அது எதற்கு?'' -மாமா சொன்னார்: “போயிட்டு... போயிட்டு வா.''

மானின் மாமிசத்தின்மீது அடையை எடுத்து சேர்த்து வைத்து அவர் சாப்பிட்டார். அதற்கிடையில் அவர் அழைத்தார்: “அய்யப்பா?''

“எஜமான்...'' -அய்யப்பன் வந்து சேர்ந்தான்.

“உண்ணி கிராமத்திற்குப் போகணுமாம்.''

“போகட்டும் எஜமான்.''

உண்ணி எதுவும் பேசவில்லை. ஆனால், அய்யப்பன், மாமா இருவரின் வெளிப்பாடுகளையும் கூர்ந்து கவனித்தான்.

உணவு சாப்பிட்டு முடித்து, உண்ணி புறப்பட்டான். அவன் நேராக சென்றது ராகுலனின் வீட்டிற்குத்தான். ராகுலனின் தாய்தான் அவனை முதலில் பார்த்தாள். அம்மா மகனை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு வரவேற்றாள். முந்தைய இரவில் தன்னுடைய படுக்கையின் மீது உட்கார்ந்து கொண்டு தலைமுடியையும் கன்னத்தையும் வருடிக் கொண்டிருந்த பெண்ணின் தொடுதலில் இருந்து கிடைக்காத சந்தோஷம் ராகுலனின் தாய் கட்டிப்பிடித்து அணைத்தபோது அவனுக்குக் கிடைத்தது.

“அம்மா...'' -அவன் அழைத்தான். அடுத்த நிமிடம் அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“என்ன மகனே? என்ன ஆச்சு?'' -அம்மா பதைபதைப்புடன் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல அம்மா.'' -உண்ணி கண்களைத் துடைத்துக் கொண்டான்: “ஒண்ணுமில்ல.''

ஷீபாவும் ராகுலனும் உண்ணியும் ஒன்றாக உட்கார்ந்து நீண்ட நேரம் கேரம் விளையாடினார்கள். சிறிது நேரம் கதை கூறிக் கொண்டிருந்தார்கள். ஷீபா சமீபத்தில் வாசித்த ஒரு கதையை உண்ணியிடம் கூற ஆரம்பித்தபோது, அது தான் வாசித்த ஒன்றுதான் என்று கூறி ராகுலன் எழுந்து சென்றான். ராகுலன் போனவுடன் ஷீபா உண்ணியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவளுடைய தொடல் அவனுக்குள் ஒரு புதிய சந்தோஷத்தைப் பரவச் செய்தது. அவளிடமிருந்து வந்த இனிய வாசனை அவனுடைய நாசியின் வழியாக நுழைந்து உடல் முழுவதும் பரவுவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது. கதை முன்னேற முன்னேற அவர்கள் ஒருவரோடொருவர் மேலும் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். உண்ணிக்கு வேடர்கள் அளித்த மாலையின் கண்ணிகளைத் தொட்டு, அதன் அழகை ஷீபா ரசித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று உண்ணி சில நாட்களுக்கு முன்னால் கரடிப் பாறைக்குப் பின்னால் பார்த்த காட்சியை நினைத்துப் பார்த்தான். அவனுடைய கைகள் ஷீபாவை அணைத் தன. அவள் அவனுடைய கண்களையே வெறித்துப் பார்த்தாள். ஆனால், அந்தப் பார்வையில் பகையோ எதிர்ப்போ இல்லை. அவர்களுடைய பார்வைகள் மேலும் ஆழம் கொண்டவையாக ஆயின. முகங்கள் ஒன்றோடொன்று நெருங்கின. அப்போது யாரோ படிகளில் ஏறிவரும் சத்தம் கேட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டு, சற்று தள்ளி உட்கார்ந்தார்கள்.

"கதை முடிந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டே ராகுலன் உள்ளே வந்தான். அவன் தொடர்ந்து சொன்னான்: “கொஞ்சம் நிறுத்துங்க, அக்கா. நாம கார்ட்ஸ் விளையாடுவோம்.''

அவர்கள் எல்லாரும் வற்புறுத்தியும் உண்ணி அங்கே சாப்பிடவில்லை.

“சீக்கிரமே, சாப்பாட்டுக்கு முன்பே திரும்பி வந்துவிட வேண்டும் என்று மாமா கூறியிருக்கிறார்.'' -உண்ணி சொன்னான். தான் வேறு யாருடைய குரலிலோ பேசுவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது.

“கொஞ்சம் சாப்பிடுவதால் என்ன ஆகிவிடப் போகிறது மகனே?'' -அம்மா வற்புறுத்தினாள்.

“வேண்டாம் அம்மா.'' -உண்ணி சொன்னான்: “பிறகு... அம்மா உங்களுக்குக் கட்டாயம் என்றால்... ஒரு ஃப்ரூட் சாலட் சாப்பிடுறேன். அது எங்களுடைய மலையில் கிடைக்காதே!''

“அப்படியென்றால் அதைச் சாப்பிடு.'' -அம்மா ஃப்ரிட்ஜில் இருந்து ஃப்ருட் சாலட்டை எடுத்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel