Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 29

abimanyu

“நான் இன்றைக்கே போகணும் என்று அவர்கள் சொன்னார்கள்.'' -அம்மா சொன்னாள்: “நான் உன்னுடன் இதற்கு மேலும் தங்கினால், உன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உன்னுடன் மேலும் ஒரு நாளாவது இருக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை. அதற்கு அனுமதித்தே ஆக வேண்டும் என்று நான் பிடிவாதம் பிடித்தேன். மாமாவிடம் கூறுவதற்கு தைரியம் இல்லாததால்தான் அய்யப்பனிடம் சொன்னேன். அப்போ அவன் முடியாது என்று சொன்னான். உன்னுடன் நான் இரண்டு நாட்கள் இருக்கலாம் என்று அவன் என்னிடம் முன்பு கூறியிருந்தான். பிறகு திட்டத்தை மாற்றி விட்டார்கள். அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று நான் சொன்னேன். அப்படிப் பிடிவாதம் பிடித்தால், அவர்கள் தான் என்னைத் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை என்ற விஷ யத்தை நான் உன்னிடம் கூறிவிடுவேன் என்று சொன்னேன்.'' சற்று நிறுத்திவிட்டு வெற்றி பெற்று விட்டதைப் போல சிரித்துக் கொண்டே அம்மா முடித்தாள்: “இறுதியில் அவர்கள் சம்மதித்துவிட்டார்கள். மாமாகூட. அப்படியில்லாமல் வேறென்ன நடக்கும்?''

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பொய்தான் என்று உண்ணிக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணின் விளக்கங்களின்மீது இருந்த ஆர்வம் அவனுக்கு இல்லாமல் போயிருந்தது. தனக்கு என்னவோ புரிபடுவதாக அவனுக்குத் தோன்றியது. திடீரென்று அவன் ஒரு அன்னியனாகி விட்டான். வீட்டை அடையும் வரை அவன் அந்தப் பெண்ணிடம் பேசவில்லை.

வீட்டை அடைந்த பிறகும் அவன் அமைதியாகவே இருந்தான். மாமா அதை கவனித்தார்.

“உண்ணி, நீ ஏன் உற்சாகமே இல்லாமல் இருக்கே?'' -உண்ணியும் அம்மாவும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சுருட்டைப் புகைத்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த மாமா கேட்டார்.

உண்ணி மாமாவைப் பார்த்துச் சிரித்தான். “ஒண்ணுமில்ல...'' அவன் சொன்னான்.

“நான் நாளை புறப்படுவதால் உண்டான கவலையாக இருக்கும்.'' -அம்மா சொன்னாள். உண்ணி உள்ளுக்குள் சிரித்தான்.

மாமாவின் மேலுதட்டின் ஒரு முனை மேல்நோக்கி வளைவதை உண்ணி கவனித்தான். மாமா சொன்னார்: “உண்மைதான். நாளை புறப்படுகிறாய் அல்லவா? அதை நான் மறந்துவிட்டேன்.'' -மாமா அழைத்தார்: “அய்யப்பா!''

“உண்மை எஜமான்.'' -அய்யப்பனின் பதில் வந்தது.

“ஆனால், உண்ணி...'' -மாமா உண்ணியின் பக்கம் திரும்பினார். “இப்படிப்பட்ட உணர்ச்சிகள்தான் உனக்கு இருக்கக்கூடாது என்று நான் சொன்னேன். இப்படிப்பட்ட உறவுகள், கடமைகள் ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. உறவுகளும் கடமைகளும் வலைகள் என்று நான் சொன்னேன் அல்லவா? தாயும் ஒரு வலைதான். நீ இந்த மாதிரியான வலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டியவன் அல்ல. பிறகு... உன் பிறப்பிற்குக் காரணமாக இருந்த பெண்ணைப் பார்க்க வேண்டும் என்பது உன்னுடைய ஒரு உரிமை. அது உன்னுடைய இருப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். அதனால்தான் சுபத்ராவை வரவழைத்தேன். அவள் வந்தாள். நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டீர்கள். இனி இருவரும் அவரவர்களுடைய கடமைகளை நோக்கித் திரும்பிச் செல்வதுதான் நடக்க வேண்டியது. புரியுதா?''

“புரியுது.'' -உண்ணி சொன்னான்.

“நல்லது... மிகவும் நல்லது...'' -மாமா அவனுடைய தோளில் தட்டினார்.

அன்றும் உண்ணி தூங்குவது வரை அம்மா அவனுடைய படுக்கையின் அருகிலேயே இருந்தாள். தன் தந்தையைப் பற்றித் கேட்டபோது, அதற்கு தெளிவான பதில்கள் அம்மாவிடமிருந்து கிடைக்காமல் போனது உண்ணியை ஆச்சரியப்பட வைத்ததுடன் வேதனைப்படவும் வைத்தது. தன் தந்தை இறந்துவிட்டார் என்பதையும், நல்ல மனிதராக இருந்தார் என்பதையும் தவிர, வேறு எதையும் அம்மா என்ற பெண் கூறவில்லை. உண்ணி தன் தந்தையைப் பற்றி மிகவும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அவனுடைய கேள்விகளுக்கு அம்மா தெளிவற்ற பதில்களைக் கூறவோ, இல்லாவிட்டால் விஷயத்தை மாற்றவோ செய்தாள். விஷயத்தை மாற்றுவதற்காக அவள் பாம்புகளைப் பற்றியோ அய்யப்பனைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தாள். ராகுலனின் வீட்டைப் பற்றியும் அங்கு இருக்கும் அம்மாவைப் பற்றியும் உண்ணி பேசிய போதும் அவள் பெரிய அளவில் ஆர்வத்தைக் காட்டவில்லை.

“எனக்கு அது சொந்த வீட்டைப் போல அம்மா.'' -அவன் சொன்னான்: “அவங்க எந்த அளவிற்கு ஒரு நல்ல அம்மா தெரியுமா?''

உண்ணியின் தாய் வெறுமனே "உம்' கொட்டினாள்.

“அங்கு என்னவெல்லாம் பொருட்கள் இருக்கின்றன தெரியுமா?'' -உண்ணி தொடர்ந்து சொன்னான்: “ரேடியோ, ரேடியோக்ராம், டெலிஃபோன், கார், ஃப்ரிட்ஜ், கேரம் போர்டு, செஸ் போர்டு... இவையெல்லாம் நம் வீட்டில் இருக்கின்றனவா அம்மா?''

அம்மா விழித்தாள்: “நம் வீட்டில் எல்லாம் இருக்கு மகனே.'' அவள் சொன்னாள்: “மகனே, நீ இருக்கே.''

மறுநாள் காலையில் புறப்பட இருக்கும் தன்னுடன் மேலும் ஒருநாள் இருக்க வேண்டும் என்பதற்காக மாமாவிடமும் அய்யப்பனிடமும் சண்டை போட்டதாகச் சொன்ன தாய்க்கு, தான் தூங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை உண்ணி ஆச்சரியத்துடன் சிந்தித்துப் பார்த்தான். எவ்வளவு சிந்தித்தும் திருப்தி அளிக்கும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க அவனால் முடிய வில்லை. அவன் கவலைப்பட்டான். தூக்கம் வருவது வரையில் அவன் பேசாமல் படுத்திருந்தான். அம்மா இயந்திரத்தனமாக அவனுடைய தலை முடியையும் கன்னத்தையும் வருடிக் கொண்டிருந்தாள். அவளுடைய மனம் வேறு எங்கோ இருக்கிறது என்பதை உண்ணி புரிந்து கொண்டான். தான் தன்னுடைய தாயுடன் செலவிடும் இறுதி இரவு இப்படி இயந்திரத்தனமாக இருப்பதை நினைத்து அவனுக்கு வேதனை தோன்றியது. வேதனையை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு, கண்களை மூடி அவன் படுத்திருந்தான்.

அடுத்த அதிகாலை வேளையில் அவனை கண்விழிக்கச் செய்தது அம்மா அல்ல. அவன் தானே கண் விழித்தான். எழுந்தபோது, அருகில் அம்மா இல்லை. எழுந்து வாசலுக்குச் சென்று பார்த்தபோது, உடல் பயிற்சிக்கு தயார் பண்ணிக் கொண்டு நின்றிருந்த மாமாவைப் பார்த்தான்.

“அம்மா எங்கே?'' -அவன் கேட்டான்.

“அவள் போய்விட்டாள்.'' -மாமா சொன்னார்: “உன்னைப் பார்த்து விடை பெறுவதற்கு அவள் நின்றால், அவளால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. பிறகு... அது உனக்கும் சிரமமான விஷயமாக இருக்கும் என்று தோன்றியதால் அவளை சற்று முன்கூட்டியே போகலாம் என்று கூறிவிட்டேன்.''

உண்ணி எதுவும் பேசவில்லை. அவன் உடற் பயிற்சியில் இறங்கினான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel