Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 28

abimanyu

காலையில் உண்ணியைத் தூக்கத்திலிருந்து எழுப்பியதுகூட அம்மாதான். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆற்றின் படித்துறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தார்கள்.

பூஜை நேரத்தில் அம்மா மட்டும் வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தாள். பெண்கள் பூஜையறைக்குள் வரக்கூடாது என்பது மாமாவின் கொள்கை.

பூஜைக்குப் பிறகு அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவு சாப்பிட்டார் கள். அய்யப்பன் அல்ல- அம்மாதான் பரிமாறினாள். ஆனால், மாமாவிற்கு அய்யப்பன் பரிமாறுவதைப் பார்த்தபோது, உண்ணிக்கு ஆச்சரியமாக இருந்தது.

உணவு சாப்பிடும்போது, உண்ணி கேட்க இருந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டதைப் போல மாமா சொன்னார்:

“உண்ணி, நீ பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டாம். அம்மா இன்றைக்கும் இருக்கிறாள் அல்லவா, அய்யப்பா?''

“ஆமாம் எஜமான். உண்மைதான்.'' -அய்யப்பன் சொன்னான்.

உண்ணி சிரித்தான். “வைத்தியன் சொன்னதும்...'' -அவன் சொன்னான்.

அய்யப்பனும் அம்மாவும் சிரித்தார்கள். மாமா சிரிக்கவில்லையென்றாலும், அவரும் அந்த நகைச்சுவையை ரசித்தார் என்பதை உண்ணி புரிந்து கொண்டான்.

இவை எல்லாம் நடந்தாலும், ஒரு பிரச்சினை உண்ணியைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அம்மா தலைமுடியை வருடியபோதும், அவள் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டபோதும், அவள் உணவைப் பரிமாறியபோதும் ராகுலனின் தாயின் முன்னிலையில் உண்டாகக்கூடிய ஒருவகையான சந்தோஷம் தனக்குள் உண்டாகவில்லை என்பதே அவனிடம் இருந்த பிரச்சினை. இந்த அம்மாவின் தொடுதலில் அந்த வெப்பம் இல்லை. இவளுடைய பேச்சிலும் நடத்தையிலும் அந்த உயிர்ப்பு இல்லை. இவளுடைய நடத்தை முற்றிலும் இயந்திரத்தனமாக இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அது அவனுக்குள் ஆச்சரியத்தின் வித்துக்களை விதைத்தன. எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு மகனைப் பார்க்கும் தாயிடமிருந்து அவன் எதிர்பார்த்த தரத்திற்கு நடத்தை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டபோது அவன் ஆச்சரியத்துடன் கவலைப்பட ஆரம்பித்துவிட்டான். அம்மா விற்கு தன்னிடம் அளவான பாசம்தான் இருக்கிறதோ என்றுகூட அவன் சந்தேகப் பட்டான்.

அவன் சிந்தித்துச் சிந்தித்து தன் தாயின் நடத்தைக்கு மிகவும் சிரமப்பட்டு ஒரு நியாய விளக்கத்தையும் கண்டுபிடித்தான். தான் மிகவும் சிறிய குழந்தையாக இருந்த போதே தன்னை மாமா தன் தாயிடமிருந்து இங்கு கொண்டு வந்துவிட்டார். அப்போது அவளுடைய தாய் இதயம் மிகவும் துடித்திருக்கும். காலப் போக்கில் அந்தக் கவலை குறைந்திருக்கும். சாதாரண வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போய் வாழ முடிந்தபோது, தன்னை விட்டுப் போன மகனைப் பற்றி கவலைப்பட்டு கவலைப்பட்டு கவலையே வறண்டு போய்விட்ட ஒரு மனநிலையை அவள் அடைந்திருக்க வேண்டும். கவலைப் பட முடியாத அந்த தனிப்பட்ட மனநிலையில் அம்மா இப்போது இருக்க வேண்டும்.

ஆனால், தாய்க்காக மகன் கற்பனை பண்ணும் ஒரு பலவீனமான விளக்கமே அது என்பதை அவன் பின்னால் உணர்ந்தான். அவளுக்கு ஏதாவது மன ரீதியான நோய் இருக்குமோ என்பது அடுத்த சந்தேகமாக இருந்தது. சிந்தித்துச் சிந்தித்து இறுதியில் உண்ணி ஒரு முடிவுக்கு வந்தான். சந்தேகங்களுக்கு இடமில்லை. வெறுமனே அதையும் இதையும் சிந்தித்துப் பிரயோசனமில்லை. குறைந்த நேரத்திற்காவது எனக்கு என் தாய் திரும்பக் கிடைத்திருக்கிறாள். நான் என் தாயைத் தொட்டேன். என் தாய் எனக்கு உணவு பரிமாறினாள். அருகில் இருந்து கதை சொல்லி, தழுவி, கொஞ்சி என்னைத் தூங்கச் செய்தாள். எனக்கு அது போதும் என்று தனக்குள் அவன் கூறிக் கொண்டான்.

மீண்டும் அவனுக்குள் சந்தேகம் உண்டானது அய்யப்பனுக்கும் அம்மாவிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை சிறிதும் எதிர்பாராமல் கேட்க நேர்ந்த அந்த நாளில்தான். அவர்கள் இருவரும் சமையலறையில் இருந்தார்கள். நீர் குடிப்பதற்காக சாப்பாட்டு அறைக்கு உண்ணி போயிருந்தான். அப்போது அம்மாவின் குரலைக் கேட்டான்.

“என்னிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றவில்லையென்றால், உண்மை முழுவதையும் நான் உண்ணியிடம் சொல்லிவிடுவேன்.''

“நீ பேசாமல் இரு.'' -அய்யப்பன் சொன்னான்: “நான் எஜமானிடம் கேட்டுச் சொல்றேன்.''

அப்போது உண்ணி டம்ளரிûல் நீர் எடுக்கும் சத்தம் கேட்டது. சமையலறையில் நடந்த உரையாடல் திடீரென்று நின்று விட்டது.

அய்யப்பன் சாப்பிடும் அறைக்கு வந்தான். அவனுடைய முகத்தில் தாங்க முடியாத வெறுப்பு இருந்தது. “என்ன எஜமான்?'' -அவன் கேட்டான்.

“ஒண்ணுமில்ல...'' -உண்ணி சொன்னான்: “நான் நீர் குடிப்பதற்காக வந்தேன்.''

அவன் நீர் குடித்துவிட்டு வெளியேறினான். வெளியே சென்ற உண்ணி நேராக ஆற்றின் படித்துறைக்குப் போனான். அவன் ஆற்றின் கரையின் வழியாக காட்டில் அலைந்து திரிந்தான். அவனுடைய மனம் மீண்டும் சுழல்கள் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நீர் மையமாக மாறியது. அய்யப்பனுக்கும் அம்மாவுக்குமிடையே இந்த அளவிற்கு தனிப்பட்ட விஷயங்களை எப்படிப் பேச முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான். உண்ணியிடம் எந்த உண்மையைக் கூறப் போவதாக அம்மா சொன்னாள்? அம்மா கூற நினைத்த உண்மை என்ன? ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொள்வாளோ? அய்யப்பனுக்கும் மாமாவிற்கும் விருப்பமில்லாத ஒன்றை அவள் கூற நினைக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் திடீரென்று அய்யப்பன் பேசாமல் இருக்கும்படி சொன்னான். மிகவும் கெஞ்சுகிற குரலில் அய்யப்பன் சொன்னான். மாமாவிடம் கேட்டு தேவையானதைச் செய்வதாகச் சொன்னான். அப்படியென்றால் மாமாவும் சம்பந்தப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றுதான் அம்மா தன்னிடம் கூற நினைக்கும் விஷயமாக இருக்கிறது. ஒரு முடிவுக்கும் வர முடியாமல் சந்தேகத்தின் புதர்களில் அவன் சுற்றித் திரிந்தான்.

“எனக்கு எதுவுமே புரியவில்லையே!'' -அவன் கவலைப்பட்டான்.

அன்று சாயங்காலம் குளித்து முடித்து கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கி விட்டுத் திரும்பும்போது, அவன் தன் தாயிடம் அந்த விஷயத்தைக் கேட்டான்.

“ஒண்ணுமில்ல மகனே.'' - உரத்த குரலில் அம்மா சொன்னாள்.

“என்னவோ இருக்கு.'' -உண்ணி சொன்னான்: “அம்மா, உண்மையை என்னிடம் கூறப் போவதாக நீங்க அய்யப்பனிடம் சொன்னதை நான் கேட்டேனே!''

“ஒண்ணுமில்ல, மகனே.'' -அம்மா மீண்டும் சொன்னாள்.

“ம்... என்னவோ இருக்கு.'' -உண்ணி மெதுவான குரலில் சொன்னான்.

“அம்மா, உங்களுக்கு என்மீது விருப்பம் இல்லாத காரணத்தால்தான் நீங்க சொல்லாமல் இருக்கீங்க.''

“ஐயோ... என் மகனே, நீ உடனே கோபிச்சிட்டியா?''

அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவள் சொன்னாள்: “மகனே, உன்னைத் தவிர வேறு யார்மீது எனக்கு விருப்பம் இருக்கப் போகிறது? நான் எல்லாவற்றையும் சொல்றேன். நீ சிரித்து விடுவாய்.''

“அப்படின்னா சொல்லுங்க.'' -அவன் சொன்னான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel