Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 27

abimanyu

அந்த நேரத்தில் அய்யப்பன் வந்தான். அய்யப்பனுக்குப் பின்னால் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பெண் இருந்தாள். முண்டும் ஜாக்கெட்டும் மேற்துண்டும் அணிந்த அவள் நல்ல உடல் நிலையுடன் இருந்தாள். சற்று முன்னோக்கி தள்ளிய பற்களையும் குழி விழுந்த கண்களையும் கண்களுக்கு நடுவில் கறுப்புப் புள்ளிகளையும் கொண்டிருந்த அவளிடம் அழகைக் காண உண்ணியால் முடியவில்லை. அய்யப்ப னைக் கண்டவுடன் மாமா சொன்னார்: “அய்யப்பா, உண்ணியை காளி தேர்ந்தெடுத்து விட்டாள். இன்றைக்கு கோவிலில் வேடர்கள் அவனை வணங்கி இருக்கிறார்கள். அவனுக்கு மாலை அணிவித்ததைப் பார்.'' மாமா உண்ணியின் கழுத்தில் கிடந்த மாலையை விரலால் சுட்டிக் காட்டினார்.

அய்யப்பனின் சிறிய கண்கள் மலர்ந்தன.

“உண்மையா எஜமான்?'' -அவன் உரத்த குரலில் அலறினான்: “தாயே மாரியம்மா.'' அவனுடைய குரல் காடுகளை நடுங்கச் செய்தது.

அய்யப்பன் உண்ணியின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவனுடைய கால்களில் முத்தமிட ஆரம்பித்தான்.

உண்ணி நின்று கொண்டே நெளிந்தான்.

எஜமான் பக்தியும் நன்றியும் கொண்ட ஒரு நாயைப் போல அய்யப்பன் ஆகிவிட்டிருந்தான்.

அவன் கால்களில் முத்தமிட்டு, நக்கினான். அளவுக்கு மேலே தலையையும் உடலையும் அசைத்தான்.

வால் இல்லாமலே அவன் வாலை ஆட்டுவதைப்போல உண்ணிக்குத் தோன்றியது.

கிச்சு கிச்சு மூட்டப்பட்டதைப் போன்ற ஒரு அமைதியற்ற தன்மையில் உண்ணி இப்படியும் அப்படியுமாக நெளிந்தான்.

இறுதியில் எல்லா செயல்களும் முடிவடைந்து அய்யப்பன் மேலும் கீழும் மூச்சு விட்டவாறு எழுந்து அதிகமான பக்தியுடன் உண்ணியைச் சுற்றிவிட்டு வந்து நின்றபோது, மாமா அழைத்தார்: “அய்யப்பா.''

“எஜமான்.'' - நாய் திடீரென்று வேலைக்காரனாக மாறியது.

“தேநீர் தயார் பண்ணு.'' -மாமா உத்தரவிட்டார்.

“எஜமான்...'' -அய்யப்பன் சமையலறையை நோக்கி ஓடினான்.

அய்யப்பன் போனவுடன், அய்யப்பனுடன் வந்திருந்த பெண்ணைச் சுட்டிக்காட்டி, மாமா சொன்னார்:

“உண்ணி, இதுதான் உன்னுடைய தாய்.''

உண்ணி ஒரு அதிர்ச்சியுடன் அய்யப்பனுடன் வந்த பெண் இருந்த பக்கம் திரும்பினான். அவனுக்குள் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு எதுவும் உண்டாகவில்லை. அவளைப் பார்த்த அவனுடைய கண்களில் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் காணப்பட்டன.

மாமா அந்தப் பெண்ணிடம் சொன்னார்: “உண்ணியிடம் போ, சுபத்ரா!'' -அவர் மேலும் சொன்னார்: “அவனை காளி தேர்ந்தெடுத்திருக்கிறாள். அவனுக்கும் மாறுதல் உண்டாகி இருக்கிறது. சாதாரண விஷயங்கள் அவனிடம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கின்றன.''

தனக்குள் உணர்ச்சிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் மாமா கூறியவை தானா என்று சந்தேகப்பட்டவாறு, உந்திய பற்களை வெளியே காட்டி, சிரித்து, கைகளை நீட்டி, தன்னை அழைக்கும் பெண்ணை நோக்கி நீட்டப்பட்ட கைகளுடன் உண்ணி நடந்தான்.

“அம்மா...'' -அவன் அழைத்தான். அவர்கள் இறுக்கமான ஒரு அணைப்பில் மூழ்கினார்கள்.

11

ண்ணி தன் தாயை அழைத்துக் கொண்டு ஆற்றின் படித்துறையில் குளிப்பதற்காகச் சென்றான். மாமா படித்துறையையும் அய்யப்பன் படித்துறையையும் தாய்க்குக் காட்டினான். தாய் தன் படித்துறையில் குளித்தால் போதும் என்று கட்டாயப் படுத்தினான். தாய் குளிப்பதற்கு முன்னால் உண்ணி குளித்துவிட்டு மேலே வந்தான்.

அம்மா குளித்த நேரத்தில் உண்ணி ஆற்றின் கரையிலும் சுற்றுப் புறங்களிலும் சுற்றி நடந்தான். உம்மிணி அங்கு எங்காவது இருக்கிறாளா என்று பார்த்தான். பயத்துடன்தான் பார்த்தான். தன் தாய் தன்னுடன் இருக்கும்போது பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. உம்மிணி அங்கு எங்கும் இல்லை.

தன் தாயுடன் உண்ணி காளி கோவிலுக்கும் சென்றான். அந்த கோவிலின் பெருமையைப் பற்றி அம்மாவிடம் விளக்கிச் சொன்னான். அம்மா நடந்து களைப் படைந்தபோது, அவளைக் கிண்டல் பண்ணினான். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தாயுடன் சேர்ந்து நடக்க அவன் முயன்றான்.

அம்மா அவனிடம் அவனுடைய விஷயங்களைவிட கோவிலைப் பற்றியும் ஆசிரமத்தைப் பற்றியும் மாமா, அய்யப்பன் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும்தான் விசாரித்தாள். அது உண்ணியைச் சற்று ஆச்சரியப்பட வைக்காமல் இல்லை. ஆர்வம்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான். எனினும், அந்த ஆர்வம் அவனுக்கு அசாதாரணமாகத் தோன்றியது.

“இந்த அய்யப்பன் எங்கே இருந்து வந்திருக்கிறான்?'' -அம்மா கேட்டாள்.

“பாண்டி நாட்டுக்காரன் என்று தோன்றுகிறது.'' -உண்ணி சொன்னான்: “என்ன... அம்மா, உங்களுக்கு அவனை முன்பே தெரியாதா?''

திடீரென்று அம்மா சொன்னாள்: “தெரியாது.''

பிறகு அவர்களுக்கு இடையில் அமைதி நிலவியது.

சிறிது நேரம் சென்றதும் அம்மா மீண்டும் கேட்டாள்: “அந்த ஆள் திருமணம் செய்துக்கலையா? இந்த அய்யப்பன்?''

உண்ணி ஆச்சரியப்பட்டான். “இல்லையென்றுதான் தோணுது.''

அவர்கள் கோவில் தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மெல்லிய இருட்டு விழுந்திருந்ததாலும், பாதை இதற்கு முன்பு அவளுக்குத் தெரியாததாக இருந்ததாலும், உண்ணிதான் தாயின் கையைப் பிடித்திருந்தான்.

“இங்கு பாம்புகள் தாராளமாக இருக்கும். அப்படித்தானே?'' -அம்மா உரத்த குரலில் கேட்டாள்.

“பாம்புகள் இருக்கு.'' -உண்ணி சொன்னான்: “ஆனால் அம்மா... பயப்பட வேண்டாம். என்னுடன் வரும்போது பாம்பு கடிக்காது. அப்படியே கடித்தாலும் மாமாவிடம் விஷத்தை முறிக்கக்கூடிய மூலிகை இருக்கு!''

மெல்லிய இருட்டின் -மெல்லிய வெளிச்சத்தின் வழியாக அவர்கள் நடந்து சென்றார்கள்.

“இந்த அய்யப்பன் வாக்குறுதி அளித்தால், அதன்படி நடக்கக் கூடியவனா?'' -எதிர்பாராமல் அம்மா விசாரித்தாள்.

உண்ணி திகைத்துப் போய் விட்டான். அவனால் தன் தாயின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், தன்னுடைய கைக்குள் இருந்த தாயின் கை நடுங்கு வதை அவனால் உணர முடிந்தது.

“தெரியாது.'' -உண்ணி சொன்னான்: “அம்மா, ஏன் இப்படியெல்லாம் கேட்கறீங்க?''

“ஒண்ணுமில்ல...'' -அம்மா சொன்னாள்: “வெறுமனே கேட்டேன். அவ்வளவு தான்.''

அம்மா பொய் கூறுகிறாள் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். ஆனால், அவன் அந்த விஷயத்தைப் பற்றி அதற்கு மேல் கேட்கவில்லை. அவனுடைய மனம் பல திசைகளில் இருந்து பல அலைகள் வந்து சுற்றித் திரும்பி உயர்ந்து சிதறும் ஒரு சுழலாக ஆகிவிட்டிருந்தது.

அம்மா அவனுக்கு உணவு பரிமாறினாள். அவனும் அம்மாவும் ஒன்றாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்கள்.

மாமா சுருட்டைப் புகைத்தவாறு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். இடையில் அவ்வப்போது மாமா அம்மாவிடம் பேசவும் செய்தார். உண்ணியைப் பெரிய ஆளாக ஆக்கப் போவதாக மாமா அம்மாவிடம் சொன்னார்.

இரவில் உண்ணி தூங்குவது வரை அம்மா அவனுக்கு அருகில் இருந்தாள். அம்மா அவனுடைய படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அவனுடைய கன்னத்தையும் தலைமுடியையும் தடவினாள். அவனிடம் பேசினாள். தூக்கத்தில் வழுக்கிவிழும் வரையிலும் அம்மாவின் தொடலை அவன் உணர்ந்திருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel