Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 24

abimanyu

உண்ணிக்கு சிரிப்பு வந்தது. ஆசிரமம் என்பதையே மறந்துவிட்டு, இரவு வேளை என்பதை மறந்துவிட்டு, உண்ணி சிரிக்க ஆரம்பித்தான். ஒரு வலிப்பு நோய் வந்தவனைப் போல உரத்த குரலில் சிரிக்கத் தொடங் கினான். இறுதியில் சிரிப்பு நின்றபோது, சிரித்து சிரித்து தளர்ந்தபோது, உண்ணி பலவிதப்பட்ட சிந்தனைகளுடன், இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் எதையும் சிந்திக்காததைப் போல, கதவை நோக்கி நடந்தான். நிறைந்த வெளிச்சத்தை நோக்கி கதவை இழுத்துத் திறந்தான்.

பூஜையறையில் பார்த்த காட்சி அவனை திகைப்புக்குள்ளாக்கியது. தரையில் ஓடிக்கொண்டிருந்த குருதிக்கு மத்தியில், கையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்த வாளை வைத்துக் கொண்டு உரத்த குரலில் கத்தியவாறு அய்யப்பன் குதித்துக் கொண்டிருந்தான். அய்யப்பனுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தார் மாமா. மாமாவின் கையிலும் உடலிலும் ரத்தம் தோய்ந்திருந்தது. உண்ணி சத்தம் போட்டுக் கத்திவிட்டான். அய்யப்பனின் முகம் அந்த அளவிற்கு குரூரமாக இருந்தது. அவன் பயப்பட்டான். இதற்கு முன்பு கேட்டிராத, பயத்தை வரவழைக்கக்கூடிய அந்த மிருகத்தின் சத்தம் அய்யப்பனிடம் இருந்துதான் வந்திருக்கிறது என்பதை நம்புவதற்கு உண்ணிக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவன் அங்கு நிற்பதை அறியாமல் அய்யப்பன் குதித்துக் கொண்டிருந்தான். தான் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று உண்ணி நினைத்தான். என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அய்யப்பன் உரத்த குரலில் கத்திக் கொண்டே இருந் தான். குதித்துக் கொண்டும். இறுதியில் அனைத்து சக்திகளையும் கொண்டு வந்து, முழு தைரியத்தையும் வரவழைத்து, ரத்தம் முழுவதையும் நாவின் முனையில் இருக்கும்படி செய்து முடிந்தவரையில் சத்தமான குரலில் உண்ணி கத்தி அழைத்தான்.

“அய்யப்பா!!!''

அய்யப்பனின் சத்தம் நின்றது. குதித்துக் கொண்டிருப்பது நின்றது. அய்யப்பன் அவனின் முகத்தையே வெறித்துப் பார்த்தான். குரூரம் நின்று எரிந்து கொண்டிருந்த சிறிய கண்களில் இதற்கு முன்பு பார்த்திராத தன்மையும் பகையும் இருப்பதை உண்ணி கண்டான். அய்யப்பனின் கண்கள் கூர்மையான ஈட்டிகளாக மாறி தன் உடலுக்குள் நுழைந்திருப்பதைப் போலவும், தன்னுடைய இதயம் பிளப்பதைப் போலவும் அவன் உணர்ந்தான். அய்யப்பனுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த நாக்கு தன்னுடைய இதயத்திலிருந்து குத்தப்பட்டு வழிந்து கொண்டிருந்த ரத்தத்திற்காக தாகமெடுத்து இருப்பதைபோல உண்ணிக்குத் தோன்றியது.

அய்யப்பனின் கையில் இருந்த வாள் ஆடியது. உடல் அசைய ஆரம்பித்தது. கால்களில் சலங்கைகள் ஓசை உண்டாக்கின. முழு உடலும் ஆட ஆரம்பித்தது. அய்யப்பன் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு விட்டதைப்போல குதிக்க ஆரம்பித்தான். குதிப்பது மேலும் அதிக பயங்கரத்தனம் கொண்டதாக இருந்தது. கண்களிலும் முகத்திலும் குரூரம் மேலும் அதிகமாகத் தெரிந்தது. குதிப்பது அதிகமானவுடன் அய்யப்பன் கத்த ஆரம்பித்தான். சத்தம் மீண்டும் மிருகத்தனத்துடன், பயத்தை வரவழைக்கிற மாதிரி, இதற்கு முன்பு கேட்டிராத அலறலாக மாறியது. நடுங்கித் திகைத்துப்போய் நின்றிருந்த உண்ணியின்மீது பார்வையை பதித்து நின்றிருந்த அய்யப்பனின் அலறல் அதன் உச்ச நிலையை அடைந்தபோது, ஆடிக்கொண்டிருந்த வாளை ஓங்கியவாறு ஒரு கொடிய மிருகத்தைப் போல அவனை நோக்கிப் பாய்ந்தோடி வந்தான்.

அதிர்ச்சியடைந்ததைப் போல உண்ணி ரத்தம் தோய்ந்த தரையில் தலைக் குப்புற விழுந்தான்.

10

”எஜமான்... எஜமான்...''

அய்யப்பனின் குரலைக் கேட்டுத்தான் உண்ணி கண்களையே திறந்தான். அய்யப்பன் அவனைப் பிடித்துக் குலுக்கினான். அய்யப்பன் தினமும் பார்க்கக்கூடிய அய்யப்பனாக இருந்தான். ஆனால், உண்ணி பார்த்தது அய்யப்பனின் இன்னொரு வடிவத்தைத்தான். வாளை ஆட்டிக் கொண்டு, சிலம்பு சத்தங்கள் கேட்க, எரியும் கண்களில் கோபமும் பகையுணர்வும் நெருப்பு நாக்குகளும் தெரிய, ஒரு பழிவாங்கும் கடவுளைப்போல உரத்த குரலில் அலறியவாறு குதித்துக் கொண்டு வந்த வடிவம். அந்த வடிவமும் அந்த அசாதாரணமான அலறலும் உண்ணியை நடுங்கச் செய்தன.

அவன் சத்தம் போட்டுக் கத்தினான். மீண்டும் சுய உணர்வை இழந்து கீழே சாய்ந்துவிட்டான்.

பிறகு உண்ணி சுய உணர்விற்கு வந்தபோது அவனை மாமாவின் கைகள் தொட்டுக் கொண்டிருந்தன. அவனுடைய காதுகளில் மாமாவின் ஏற்ற இறக்கம் இல்லாத குரல் ஒலித்தது.

“உண்ணி...'' -மாமா மென்மையான குரலில் அழைத்தார்: “உண்ணி... உண்ணி...''

உண்ணி நம்பிக்கையில்லாமல் மாமாவைப் பார்த்தான். இது மாமாவின் ஆவியாக இருக்குமோ என்று அவன் பயப்பட்டான். ஆனால், அவனைத் தொட்டுக் கொண்டி ருந்த மாமாவின் கைகளுக்கு வெப்பம் இருந்தது. மாமாவின் குரல் சாதாரணமானது. இது ஆவி அல்ல. மாமாதான் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால், அது அவனுக் குள் அதிகமான சந்தேகங்களை உண்டாக்கியது. அப்படியென்றால் இரவில் அய்யப்பனின் வெறி பிடித்து குதித்துக் கொண்டிருந்த பயங்கரமான உருவத்திற்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தது யார்? தரையிலும் அய்யப்பனின் கையில் இருந்த வாளிலும் குருதி எங்கேயிருந்து வந்தது? உண்ணி முழுமையான குழப்பத்தில் மூழ்கி விட்டான்.

“சந்தேகப்பட வேண்டாம் உண்ணி.'' -மாமா சொன்னார்: “நானேதான். உன் பெரிய மாமாவேதான்.''

அப்போது உண்ணி நடுங்குகிற குரலில் தயங்கித் தயங்கி சொன்னான்: “அப்படியென்றால்...''

“எல்லாவற்றையும் சொல்றேன்.'' -மாமா சொன்னார்: “உண்ணி, எழுந்திரு. இந்த மருந்தைச் சாப்பிடு. பிறகு கொஞ்சம் பாலைக் குடி. குடித்தால் களைப்பு மாறும். காய்ச்சலும் சரியாகும். ம்... எழுந்திரு.''

எழுந்திருப்பதற்கு மாமா அவனுக்கு உதவினார். எழுந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகும் உண்ணி நடுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு குளிராக இருந்தது. அவன் சுற்றிலும் திகைப்புடன் பார்த்தான். மூங்கிலால் ஆன சுவர்கள்... மேஜை... நாற்காலி... பெட்டி... மேஜையின்மீது புத்தகங்கள். பிறகு அவன் கேட்டான்: “நான் எங்கே இருக்கிறேன்?''

“இங்கே.'' -மாமா அவனுடைய கண்களையே பார்த்துக் கொண்டு சொன்னார்: “நம்முடைய ஆசிரமத்தில்... உன்னுடைய அறையில்... அதோ பார். உன்னுடைய புத்தகங்கள். உன் பெட்டி. உன் நாற்காலி. உன் மேஜை. மரக்கொம்பில் உன்னுடைய ஆடைகள்.''

உண்ணிக்குப் புரியவில்லை. “என்னுடையவையா?'' -அவன் சிரித்தான். “என்னுடையவையா?''

“உண்ணி, இந்த மருந்தைச் சாப்பிடு.'' -மாமா சொன்னார்: “அப்படியென்றால் சரியாகிவிடும். அப்போது எல்லாம் புரியும்.''

“எனக்கு வேண்டாம்.'' -உண்ணி சொன்னான். பிறகு அவன் படுக்கத் தொடங்கினான். அப்போது மாமா அவனை இறுகப் பிடித்தார். தன் மீது செலுத்தப்பட்ட பலத்தை அவன் புரிந்து கொண்டான்.

மாமா அவனுடைய கண்களையே மீண்டும் வெறித்துப் பார்த்தார். “உண்ணி'' -அவர் அழைத்தார். “ம்... இந்த மருந்தைச் சாப்பிடு.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel