Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 32

abimanyu

“உணவு சாப்பிட்டிருந்தால் அது முடித்தவுடன் நாம் எல்லாரும் சேர்ந்து திரைப்படத்திற்குப் போகலாம்.''- ராகுலன் சொன்னான்.

“நீ போய்ப் பார்த்தால் போதும்.'' -உண்ணி சொன்னான்: “ பிறகு எனக்கு கதைக் கூற மறந்துவிடக் கூடாது. அவ்வளவுதான்.''

அதைச் சொன்னபோது உண்ணி உள்ளுக்குள் சிரித்தான்.

புறப்படும் நேரத்தில் அவன் ஒவ்வொருவரிடமும் திரும்பத் திரும்ப விடை பெற்றான்.

ஷீபாவின் கையைப் பிடித்து அழுத்தினான். ராகுலனை இறுக அணைத்துக் கொண்டு அவனுடைய கன்னங்களில் முத்தமிட்டான். அம்மா இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தமிட்டபோது எல்லா கட்டுப்பாடுகளையும் இழந்துவிட்டு உண்ணி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

“அழாதே மகனே.'' -அம்மா சொன்னாள்: “அழாதே.''

அவன் வேண்டாம் என்று எவ்வளவு கூறியும், அம்மா அவனை காரிலேயே அனுப்பினாள்.

ராகுலனின் வீட்டின் வெளி வாசலைக் கடந்து கார் வெளியேறியபோது, காரையே பார்த்துக் கொண்டு வழியின் அருகில் நின்று கொண்டிருந்த அய்யப்பனை உண்ணி பார்த்தான். அவனுக்கு சிறிதும் ஆச்சரியம் உண்டாகவில்லை.

அய்யப்பனை அவன் இயல்பாகவே எதிர்பார்த்தான். அவன் அய்யப்பனைப் பார்த்துச் சிரித்தான். கையை அசைத்துக் காட்டினான்.

உண்ணி மாமாவுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டான். அவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அய்யப்பனைப் பார்த்த விஷயத்தை உண்ணி மாமாவிடம் கூறி விட்டிருந்தான்.

“அவன் என்னவோ வாங்குவதற்காகப் போயிருந்தான். இப்படியொரு மறதிக் காரன். நேற்றும் மார்க்கெட்டிற்குப் போயிருந்தான். அப்போ மறந்துவிட்டானாம்!'' -மாமா விளக்கிக் கூறினார். மாமாவின் விளக்கம் மனதிற்குள் உண்டாக்கிய சிரிப்பு வெளியே வராமல் உண்ணி பார்த்துக் கொண்டான்.

உணவு சாப்பிட்டு முடித்து மாமாவின் அனுமதியை வாங்கிக் கொண்டு உண்ணி காளி கோவிலை நோக்கிப் புறப்பட்டான். மலையில் ஏறும்போது, ஏராளமான முகங்கள் அவனுடைய மனதில் வரிசையாக தோன்றின. ராகுலனின் அம்மா, ராகுலன், ஷீபா, ராகுலனின் தந்தை, இரண்டு நாட்கள் தன்னுடைய தாயாக நடிப்பதற்கு வந்த அதிர்ஷ்ட மில்லாத பெண், உம்மிணி, மாமா, அய்யப்பன், திரைப்படத்தின் சுவரொட்டியில் இருந்த காதலியும் காதலனும், கத்தியைப் பிடித்திருந்த கொடூரமான மனிதன், கோமன்... இப்படி எத்தனையெத்தனை முகங்கள்! பள்ளிக்கூடத்து நண்பர்கள், ஆசிரியர்... மனிதர்களின் நீளமான வரிசைக்கு முடிவே இல்லை என்று தோன்றியது. அந்த வரிசை அவனைச் சுற்றி வட்டமாக மாறி நகர தொடங்கியது. பல சுற்றுக்களாக ஆகியும், மனிதர்கள் முடிவடையவில்லை. மிகவும் அருகில் நிற்பவர்களின் முகங்களை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ராகுலன், அம்மா, அப்பா, ஷீபா- எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அய்யப்பன்கூட பற்களைக் காட்டினான். மாமா மட்டும் சிரிக்கவில்லை.

“கொஞ்சம் சிரிங்க மாமா.'' -உண்ணி சொன்னான்: “இப்போதாவது கொஞ்சம் சிரிங்க. சந்தோஷத்திற்காக சிரிக்க வேண்டாம். அன்பு காரணமாகவும் சிரிக்க வேண்டாம். வெறுமனே கொஞ்சம் சிரிங்க. நீங்க சிரித்தால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும்...''

மாமாவின் மேலுதட்டின் ஒரு முனை மேல்நோக்கி அவலட்சணமாக வளைந்தது.

காளியின் சிலைக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்த உண்ணி சொன்னான்: “தாயே, இந்த சக்கர வியூகத்தில் இருந்து தப்பிப்பதற்கு வேறு எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை.''

அவன் நிமிர்ந்தான். யாருக்கும் தெரியாமல் கைகளுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த, மாமாவின் பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகையைக் கையில் எடுத்து வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டு, உண்ணி மீண்டும் காளி சிலையின் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களையே பார்த்தான்.

அந்த ஜூவாலைகள் குறையக் குறைய உண்ணி காளியின் காலடிகளில் குலைந்து விழுந்தான்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel