Lekha Books

A+ A A-

கையெழுத்து

kaiezhuthu

1

ன்டர்காம் மூலமாக வந்த கூர்மையான கோபக் குரலை யாரோ காதில் வாங்கினார்கள்.

             “யார் இந்த கே.ஆர்.கே.யின் மகள்?” -லூஸி உரத்த குரலில் கேட்ட பிறகும், பதில் கிடைக்காமல் அந்தக் கேள்வி வரிசையாக வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர்களுக்கு மத்தியில் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தது.

“கே.ஆர்.கே.யின் மகளுக்குத் தொலைபேசி அழைப்பு” - லூஸி திரும்பத் திரும்ப கேட்டாள். அத்துடன் ஆர்வம் கலந்த ஒரு பரபரப்பும்... “யார் இந்தப் பெண், சினேகிதிகளே? தனக்கென்று சொந்தமாக ஒரு பெயர் இல்லாத பெண்.”

மானிட்டரின் பச்சை சதுரத்தில் நெளிந்து கொண்டிருக்கும் வெள்ளை நிறப் புழுக்களில் இருந்து கண்களை எடுத்து ராதிகா வேகமாக எழுந்தாள்.

“கே.ஆர்.கே.யின் மகள் நான்தான்” - அவள் சொன்னாள். “பி.ஆர்.ராதிகா.”

“ஓ... நீயா? - லூஸி சிரித்தாள்: “உனக்கு சொந்தமாக ஒரு பெயர் இருக்கிறதே? சரி... அது இருக்கட்டும். உன்னை சீனியர் வைஸ் பிரசிடெண்ட் பார்க்கணுமாம். உடனடியாக... சீனியர் வி.பி.பெர்சனல்...”

“எதற்கு?”

“எதற்கோ? அதெல்லாம் யாருக்குத் தெரியும்டா?” - லூஸி கொட்டாவி விட்டாள். “உடனடியாக உன்னை வரும்படி அவருடைய செக்ரட்டரி சொன்னாள்.”

லூஸியின் அடுத்த கொட்டாவி வெள்ளை நிற சதுரக் கட்டங்களின் தாளத்தில் கரைந்து போனது. கபோர்டில் மெல்லிய விரல்களின் பதிவுகள்... பச்சைப் பரப்பில் திடீரென்று முளைக்கும் சிறுசிறு வெள்ளை மொட்டுக்கள் அந்த தாளத்திற்கேற்ப புழுக்களாக மாறி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. 

இ.டி.பி. அறையின் குளிர்ச்சியை விட்டு ராதிகா வராந்தாவின் இளம் வெப்பத்திற்குள் வந்தாள்.

சீனியர் வி.பி.யின் செக்ரட்டரி திருமதி டிக்கோஸ்டா நகரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்டிருந்தாள். கண்ணாடி வழியாக அவள் கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தாள்.

“கே.ஆர்.கே.யின் மகள். அப்படித்தானே?”

“பி.ஆர்.ராதிகா.”

“அதாவது - கே.ஆர்.கே.யின் மகள் இல்லையா?”

“ஆமாம்...”

“ஒரு வருடத்திற்கு முன்பு கம்பாஸனேட் மைதானத்தில்...”

“என்ன?”

“ஒரு நிமிடம் நில்லுங்க.”

டிக்கோஸ்டா இன்டர்காமின் சிவப்பு நிறக் கட்டையை அழுத்தி மெதுவான குரலில் சொன்னாள்: “அந்தப் பெண் வந்திருக்கிறாள் சார். கே.ஆர்.கே.யின் மகள். சரி... ஓ.கே.சார்.”

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு மீண்டும் நகரத்தைப் பளபளப்பு செய்ய ஆரம்பிக்கும்போது, அவளுடைய குரல் மேலும் குளிர்ச்சியாக இருந்தது.

“போங்க...”

சற்று பயத்துடன் மெதுவாக கதவைத் திறந்து தயக்கத்துடன் பார்த்தவாறு ராதிகா உள்ளே தன் கால்களை எடுத்து வைத்தாள்.

சுழலக்கூடிய பெரிய நாற்காலியில் சீனியர் வி.பி. அமர்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் அவர் சற்று நகர்ந்து உட்கார்ந்தார்.

“உட்காரு” - வி.பி. அசைந்தபோது, ஒட்டுமொத்த நாற்காலியும் குலுங்கியது.

ராதிகா வணக்கம் செலுத்தியவாறு தள்ளி நின்றாள்.

“கே.ஆர்.கே.யின் மகள்தானே? வா... உட்காரு.”

வி.பி.யின் முகத்தில் நிறைய நெருக்கமான நட்பு வெளிப்பட்டது. எனினும் அவள் அமரவில்லை. தன்னைத்தானே ஒதுக்கிக்கொண்டு, தேவையற்ற ஒரு இடத்தை அடைந்துவிட்ட பதைபதைப்புடன் அவள் நின்றிருந்தாள்.

“கே.ஆர்.கேக்கு எப்படி இருக்கிறது?” - வி.பி. விசாரித்தார்.

“அப்படித்தான் இருக்கிறது சார்.”

“நடக்க முடிகிறதா? அதாவது மற்றவர்களின் உதவி இல்லாமல்.”

“கைத்தடியைப் பிடித்துக்கொண்டு நடப்பார். வீட்டிலும் வாசலிலும்... இருந்தாலும் சிரமம்தான்.”

வி.பி.யின் முகத்தில் மிகப்பெரிய கவலை படர்ந்துவிட்டிருந்தது. அது அப்படியே பெருகிப் பெருகி அந்த வட்டமான முகமெங்கும் வீக்கம் தெரியும்படி செய்தது. முகம் சிவப்பானது.

“ச்சோ... என்ன ஒரு மோசமான சம்பவம் அது” - அவருடைய கண்கள் சிறிதாயின. குரல் வறண்டது. “என்னால் அதை இப்போதுகூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. மழை பெய்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவு நேரத்தில் வரவேற்பறையின் தொலைபேசி மணி அடிச்சப்போ, நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். கே.ஆர்.கே.விற்கு... அதுவும் நம் எல்லோருக்கும் எல்லாமுமான கே.ஆர்.கே.விற்கு அப்படியொன்று... அதுவும் இந்தக் கம்பெனிக்கு உள்ளேயே... கஷ்டகாலம் என்று சொன்னால் கே.ஆர்.கே. அதை நம்பவே மாட்டாரே!”

ராதிகா எதுவும் சொல்லவில்லை. அவளுடைய கண்களுக்கு முன்னால் இருந்த பச்சைப்புல் பரப்பில் இப்போது ஓராயிரம் வெள்ளைநிறப் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. கல்லூரியில் படிக்கும்போது அணிந்த கண்ணாடியை சமீபத்தில் மாற்ற வேண்டிய சூழ்நிலை அவளுக்கு உண்டானது. ஒருவேளை இனி மேலும்கூட கண்ணாடியின் அடர்த்தி அதிகமாகலாம். ஏழெட்டு மணி நேரங்கள் தொடர்ந்து பச்சைப் புல்வெளியில் நகர்ந்து கொண்டிருந்த வெள்ளைப் பொட்டுக்களையே வெறித்துப் பார்த்தவாறு அவள் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, கண்கள் வலிக்க ஆரம்பித்தன. தாமாகவே மூடிக்கொண்ட கண்களுக்குள் ஓராயிரம் சிறிய சிறிய பொட்டுக்கள் ஒன்று சேர்ந்து கோடுகளாகவும் அடையாளங்களாகவும் தெரிந்தன. எழுத்துக்களாக ஆயின. எண்களாக ஆயின.

வி.பி. இதற்கிடையில் எழுந்து கையைப் பின்னால் கட்டிக்கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நடக்க ஆரம்பித்தார். கடந்த காலத்தின் பாசிகளும் காளான்களும் நிறைந்த அகலம் குறைவான பாதைகளில் அவர் நடந்து கொண்டிருந்தார். அத்துடன் அவருடைய குரலுக்கு இனம்புரியாத மென்மைத் தனமும் ஆழமும் வந்து சேர்ந்தன.

கம்பெனியின் ஆரம்பத்தைப் பற்றி, முதலில் கைகொடுத்து வளர்த்த கோயம்புத்தூரைச் சேர்ந்த செட்டியார்களைப் பற்றி அவர் சொன்னார். “அவர்களுடைய காலத்தில் கம்பெனி நல்ல வளர்ச்சியில் இருந்தது. குறிப்பாக தியாகராஜ செட்டியார் தலைமை ஏற்றிருந்த காலத்தில், பிறகு குடும்பத்தில் உண்டான பிரச்சினைகளைத் தொடர்ந்து குரூப் நிறுவனங்களை கணக்குப் போட்டு நிறுத்த பாகம் பிரித்தபோது, நம்முடைய கம்பெனியில் இருப்பவர்களிலேயே மிகவும் ஊதாரித்தனமான குணத்தைக் கொண்ட இளைய மகனுக்குக் கிடைத்தது. அவரோ இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்ததுகூட இல்லை. குதிரைப் பந்தயம்... சில வேளைகளில் வெளிநாடுகளில் நடக்கும் காசினோக்கள்... அவருடைய ஈடுபாடு முழுவதும் அவற்றில்தான் இருந்தது. இறுதியில் எல்லாம் தாறுமாறாகி, பூட்ட வேண்டிய சூழ்நிலை உண்டானபோது, ஒரு கட்டளை என்பதைப்போல வடக்கிலிருந்து ஒரு மார்வாடி குரூப் இங்கே வந்தார்கள். மாணிக்சந்த் குப்தா குரூப். அவர்களுடைய பார்வை தெற்கு திசை நோக்கித் திரும்பியது. நம்முடைய அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டால் போதும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel