
பிறகு ஒரு பங்கு இஷ்யூ... இனிமேல் விரிவாக்கம் நீருக்குள் போனால்கூட அவர்களுக்கு என்ன நட்டம்? அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடத்திக்கொண்டு போயாகிவிட்டதே! ஒவ்வொரு வாங்கலும் விற்பதும் அவர்களுடைய குரூப் நிறுவனங்கள் மூலம்தான் நடக்கும். கணக்குகளில் இருக்கும் ஏராளமான தில்லுமுல்லுகள்!”
“இந்த முறை நஷ்டம் ஆகுமா என்று கேட்கிறேன்.”
“கணக்குகளில் நஷ்டத்தைக் காட்டுவதற்குத் திறமைசாலிகளான இளம் அடிவருடிகளை அவர்கள் அங்கு வேலைக்கு வைத்திருக்கிறார்கள் அல்லவா? எது எப்படி இருந்தாலும், கோவிந்தன் குட்டி இந்த அளவிற்குக் கீழே இறங்கிப் போய் காரியங்களை செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை சந்திப்பதற்கு தைரியமில்லாததால், எதுவுமே தெரியாத உன்னை அறைக்குள் வரவழைத்து, இந்த ராமாயணம் முழுவதையும் கூறியிருக்கிறான். அதனால் என்ன பிரயோஜனம்? முன்பு இதே விஷயம் நடந்திருந்தால், நான் அந்த ஆளின் முகத்தைப் பார்த்து நாலு வார்த்தைகள் கேட்டிருப்பேன்.”
திடீரென்று இருமல் வந்தது.
மடிக்குள்ளிருந்து பீடியைத் தடவி எடுத்து உதட்டில் வைத்து ஊன்றுகோலின் உதவியுடன் கால்களை நகர்த்தியவாறு அவர் வாசலுக்கு வந்தார்.
ராதிகா அவருக்குப் பின்னால் நடந்தாள்.
முற்றத்தின் தெற்கு மூலையில் இருந்த ஒட்டு மாமரத்திற்குக் கீழே அவர் சிறிது நேரம் அப்படியே நின்றார். மீண்டும் இருமல் வந்தபோது, எரிச்சலுடன் பீடியை விட்டெறிந்தார். அவர் எதைப் பற்றியோ நினைத்துக் கொண்டிருந்தார். சற்று நீர் வற்றிப்போன கழுத்திலிருந்த நரம்புகள் முறுக்கேறி நின்று கொண்டிருந்தன.
“கோவிந்தன்குட்டி சொல்வதிலும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இல்லையா மகளே?” சிறிது நேரம் கடந்ததும், அவர் மெதுவான குரலில் சொன்னார்: “ராகவனும் மற்றவர்களும் ஒரு மோதலுக்குத் தயாராகிறார்கள் என்றால் அது அந்த அளவிற்கு புத்திசாலித்தனமான காரியமாக இருக்காது. இப்போதைய சூழ்நிலைகளில், கோவிந்தன்குட்டி கூறுவது சரியாக இருக்கும் பட்சம், நம்முடைய பொருட்களை வாங்கக்கூடிய வட இந்தியாவைச் சேர்ந்த பார்ட்டிகள் மோசமான நிலைமையில் இருப்பதாக இருந்தால், சிறிது காலத்திற்கு இதைப் பூட்டுவதற்கு குப்தாஜி தயங்கவே மாட்டார். அப்படி செய்வதுதான் அவர்களுக்கு லாபமாகவும் இருக்கும். அது மட்டுமல்ல- ஒரே அடியில் பலரையும் ஓரம்கட்டிவிட முடியும். இங்கு இப்போது வழக்கு தொடுத்தவரே அதற்கு எதிரானவராகவும் ஆகியிருக்கிறார். இனிமேல் பணியாட்களை கோபம் கொள்ள செய்வது மேனேஜ்மென்ட்டாகத்தான் இருக்கும். எப்படியாவது ஏதாவது கூறி, சாதாரண காரியத்திற்கு அவர்களைக் கிளர்ந்தெழச் செய்து, அசைத்து, போர்க்களத்தில் கொண்டு போய் நிறுத்துவது... நம்முடைய ஆட்களின் புகழ்பெற்ற ‘கிங்சைஸ் ஈகோ’வைக் கணக்கில் எடுக்கும்போது அது சற்றும் சிரமமே இல்லாத விஷயம்தான். அந்தத் தூண்டிலில்தான் ராகவனும் மற்றவர்களும் போய் விழப் போகிறார்கள். மேனேஜ்மெண்டின் ஒத்துழைப்புடன் ஒரு போராட்டம்.”
“ஒருவேளை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இந்தக் கம்பெனியை விற்றுவிட்டால்...?”
கே.ஆர்.கே. திடீரென்று நின்றார். தன் மகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு கேட்டார்:
“அப்படிச் சொன்னாரா கோவிந்தன்குட்டி?”
“கேள்விப்பட்ட விஷயம்... சில நேரங்களில் சரியாகக்கூட இருக்கலாம்.”
தாடையைத் தடவிவிட்டுக் கொண்டே கே.ஆர்.கே. ஒரு நிமிடம் சிந்தனையில் மூழ்கினார். சிறிது நேரம் கழித்து அவர் தனக்குத்தானே கூறிக் கொள்வதைப்போலக் கூறினார்.
“பெரிய விலை கிடைப்பதற்கு தொழிற்சாலை இருக்கும் இடமும், கட்டிடங்களுமே போதும். பிறகு... இப்போது தற்காலிகமாக சில பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கக்கூடிய துறை. விஷயம் தெரிந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.”
ராதிகா எதுவும் சொல்லவில்லை. ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு வேக வேகமாக மூச்சு விட்டவாறு கே.ஆர்.கே. மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
மாலை நேரமானது. கிளிகள் கூட்டமாக சத்தம் உண்டாக்கியவாறு மரக்கிளைகளில் வந்து சேர ஆரம்பித்த போது, அதைக் காதில் வாங்கியவாறு அவர் நின்று கொண்டிருந்தார். மேற்கு திசையின் ஓரத்தில் இருண்டு இருண்டு வரும் சிவப்பு. பரவிப் பெருகும் மெல்லிய இருளின் புகைச் சுருள்களில் அதுவரை காணாத அர்த்தங்களை அவருடைய மனம் தேடிக்கொண்டிருந்தது. கண்களுக்கு முன்னால் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்த பலவும் மறதி என்ற சேற்றுக்குள் ஒவ்வொன்றாக நழுவி விழுந்து விட்டிருந்தன. பழைய நினைவுகளைத் தூசு தட்டிப் பார்க்கும்போது எத்தனையோ சந்தேகங்கள் கிளம்பி வந்தன. காலத்தின் புகைக் கறையும் சக்தியும் புரண்ட கோட்டோவியங்கள்...
ஒருநாள் தியாகராஜன் செட்டியார் கண்களை சுருக்கிக் கொண்டு சொன்னது ஞாபகத்தில் வந்தது. “மிஸ்டர் கே.ஆர்.கே. உங்களுக்கு இரவும் பகலும் இந்தக் கம்பெனியைப் பற்றி மட்டுமே நினைப்பு இருக்கிறது! இந்த நல்ல இளமையில், இந்த அழகான உலகத்தில் நினைப்பதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன!” பிறகு, முகத்தில் ஒரு போலித்தனமான சிரிப்பு - “இந்த அளவிற்கு அக்கறையும் ஆர்வமும் சிரமப்பட்டு பணத்தை முதலீடு செய்திருக்கும் எங்களுக்குக்கூட இல்லையே!”
அது சரிதான். சிறிதும் பொருத்தமே இல்லாத வயது குறைவானவனை, இளம் வயதிலேயே ஒரு அந்தி மாலைப் பொழுதில் யாரோ அந்தக் கம்பெனியின் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதற்குப் பிறகு அது மட்டுமே அவனுடைய உலகமாக ஆகிவிட்டது. விலை மதிப்புள்ள ஒரு பிறவி முழுவதும் வெளிச்சம் நுழைந்திராத அந்த சிறிய அறைக்குள்ளேயே அடங்கிவிட்டது. ஹமீதியா ஹோட்டலின் மாடியில் இருக்கும் யூனியன் அலுவலகம்... காலுக்குக் கீழே முணுமுணுக்கும் படிகளில் ஏறிச் செல்லும்போது, கரி படர்ந்த சுவர்கள்... பெரிய ஒரு அழுகையுடன் திறக்கும் சாளரத்தின் கதவுகள்... திருமணம் நடக்கும் வரை இரவு வேளைகளில் படுத்துக் கிடந்ததும் கிட்டத்தட்ட அங்குதான். இரண்டு பெஞ்சுகளை சேர்த்துப் போட்டு அதில் ஒரு பாயை விரித்து கண்களைத் திறந்து கொண்டு அவர் மல்லாக்கப் படுத்திருப்பார். கீழே ஹோட்டலின் ஆரவாரம் அடங்குவதுவரை அதே நிலைதான். தலைக்கு அடுத்து இருக்கும் ஜன்னலையும் திறக்க முடியாது... ஆரவாரம் முடிவது வரைக்கும். நேர் கீழே சமையலறையின் பின்பகுதி இருக்கிறது. அங்கிருந்து வரும் நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாது. அறையில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் நாளடைவில் பழக்கமாகிவிட்டன என்றாலும், கொசுக்கடியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற சூழ்நிலை உண்டானபோது, ஒரு மேஜை விசிறி வாங்குவதற்காக சொசைட்டியில் இருந்து கடன் வாங்கவேண்டிய நிலை அவருக்கு உண்டானது.
அப்படி இருக்கும்போது, சரஸ்வதி அவருடைய வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தாள். யாரெல்லாமோ சேர்ந்து வற்புறுத்தி நடத்தி வைத்த திருமணம். பிறகு... அவருக்கென்று கொஞ்சம் பிடிவாத குணம் இருந்தது. உலகம் தெரியாத அசல் கிராமத்துப் பெண்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook