Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 7

Oru Latchamum Kaarum

தலையில் இரண்டு நாற்காலிகளைச் சுமந்து கொண்டு, ஒரு லாந்தர் விளக்கைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு சங்கரன்குட்டி வந்தான். நாற்காலிகளையும் லாந்தர் விளக்கையும் திண்ணையில் வைத்தான்.

செக்ரட்டரி சொன்னார் : ‘‘உட்காரு மாதவா உட்காரு. சில விஷயங்களைக் கூற வேண்டியதிருக்கு.’’

‘‘ஒரு நாற்காலியில் அவர் உட்கார்ந்தார். மாதவனும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.’’

‘‘தெரியுதா மாதவா? இந்த வீட்டில் இருந்து மாறி வேறொரு வீட்டில் இருக்கணும். இன்னும் சில நாற்காலிகளையும் மேஜைகளையும் வாங்கணும். பெரிய ஆட்கள் பலரும் உன்னைப் பார்க்க வர்றப்போ, குடிசையில இப்படி... ’’

‘‘பணம் கிடைத்த பிறகு ஒரு வீடு உண்டாக்கணும் செக்ரட்டரி... ’’

‘‘வீடு உண்டாக்கணும் ஓர் அருமையான மாளிகை! அதுவரை இருப்பதற்கு நான் ஒரு வீடு தர்றேன். கிராம அலுவலகத்திற்கு எதிரில் இருக்குற வீடு இருக்கே! அது எங்களுக்குச் சொந்தமானது தான். அது இப்போது யாரும் இல்லாமல் சும்மாதான் கிடக்குது. நானும் என்னுடைய இரண்டு சகோதரிகளும்தான் அதற்கு உரிமையாளர்கள். மாதவா, உனக்கு வேணும்னா, அந்த இடத்தையும் விலைக்குத் தர தயாராக இருக்கோம்.’’

‘‘பணம் கிடைக்கட்டும் செக்ரட்டரி...’’

‘‘பணம் கிடைப்பது வரையில் அங்கே இருக்கலாம்னு நான் சொல்றேன். வாடகை எதுவும் தர வேண்டாம். உன்னுடைய அந்தஸ்த்தைக் காப்பாற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமை. சங்கரன் குட்டி, நீ என்ன சொல்றே?’’

‘‘இந்த இடத்தை விட்டு வேறு இடத்துல இருக்கணும் என்பதுதான் என்னுடைய கருத்து. மாதவன் அண்ணன் இனிமேல் மதிப்பா இருக்கணும்.’’

‘‘என்ன சொல்றே மாதவா?’’

‘‘அப்படியே நடக்கட்டும்.’’

‘‘அப்படின்னா... நான் இப்போ கிளம்புறேன். நாளைக்கு நானும் என் மனைவியும் இங்கே வர்றோம். அம்மா, நான் இப்போ புறப்படட்டுமா?’’

‘‘சரி...’’

செக்ரட்டரி புறப்பட்டார். குஞ்ஞுலட்சுமி சொன்னார்:

‘‘அந்த வீட்டையும் நிலத்தையும் விற்பதற்கு அந்த ஆள், ஆளைத் தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்காரு. அதனால் இப்போ சமுதாயத்தின் பெயரைச் சொல்லிக்கிட்டு வந்திருக்காரு. இந்தப் பிள்ளைகளை வளர்க்க நான் இங்கே கிடந்து கஷ்டப்பட்டப்போ, ஒரு சமுதாயக்காரனையும் காணவில்லை. எச்சரிக்கையா இருக்கணும் மகனே... நெருங்கி வர்றவனையெல்லாம் கவனமா பார்க்கணும்.’’

மறுநாளே மாதவனும் சங்கரன் குட்டியும் சேர்ந்து திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டார்கள். சவுக்காரம் போட்டு வெள்ளை ஆக்கியிருந்த வேட்டியையும் சட்டையையும் அணிந்து கொண்டு மாதவன் சென்றான். சங்கரன்குட்டி சொன்னான்:

‘‘இன்னைக்கு நல்ல சட்டையும் வேட்டியும் வாங்கணும் மாதவன் அண்ணே. பேருந்து ஏறுகிற இடத்தில் ஒரு துணிக்கடை இருக்குதே! அங்கே வாங்கலாம்.’’

‘‘பணத்தை ரொக்கமா கொடுத்திடுவோம்டா சங்கரன்குட்டி...’’

‘‘பரமேஸ்வரன் பிள்ளை ஐயா கொடுத்து விட்ட பணம்தானே? அது கையில் இருக்கட்டும் மாதவன் அண்ணே. தேவைப்படும் வேட்டி, சட்டையைக் கடனுக்கு வாங்கலாம்.’’

மாதவன் அதற்கு ஒப்புக் கொண்டான். இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார்கள். பேருந்து வருவதற்கு சற்று நேரம் இருந்தது. அவர்கள் துணிக் கடைக்குள் நுழைந்தார்கள். சங்கரன்குட்டி துணிக்கடைக்காரரிடம் கேட்டான்:

‘‘இது யாருன்னு தெரியுமா?’’

‘‘யாரு?’’

‘‘இவர்தான் லாட்டரிச் சீட்டுல முதல் பரிசு கிடைத்திருக்கும் மாதவன்.’’

‘‘வாங்க.’’

துணிக்கடைக்காரன் மரியாதை கலந்த குரலில் சொன்னான்:

‘‘உட்காருங்க... உட்காருங்க. இப்போ எங்கே போறீங்க?’’

மாதவன் உட்கார்ந்தான். சங்கரன்குட்டி சொன்னான்:

‘‘நாங்க இப்போ லாட்டரிச் சீட்டு அலுவலகத்திற்குப் போறோம். சீட்டை அவர்களிடம் காட்டணும். அதற்காகப் போறோம்.’’

‘‘எங்கே சீட்டு?’’ - கடைக்காரன் கேட்டான்.

மாதவன் சீட்டை எடுத்துக் காட்டினான். சங்கரன்குட்டி சொன்னான்:

‘‘மாதவன் அண்ணனுக்கு வேட்டியும் சட்டையும் வாங்கணும். சாலையில வாங்கலாம்னு மாதவன் அண்ணன் சொன்னார். இங்கே வாங்கலாம்னு நான் சொன்னேன்.’’

‘‘இங்கே வாங்குறதுதானே நல்லது! விலை மதிப்பு உள்ள சில்க் வகைகளும் டெர்லின் துணிகளும் இங்கே இருக்கு தையல்காரரும் இருக்காரு.’’

அதைக் கேட்டுக் கொண்டிருந்த தையல்காரன் எழுந்தான். அவன் சொன்னான்:

‘‘சார், உங்களுக்கு டெர்லின் பொருத்தமா இருக்கும். ஜரிகை போட்ட இரட்டை மடிப்பு வேட்டி சரியா இருக்கும்.’’

கடைக்காரன் பலவகைப்பட்ட துணிகளை எடுத்து, விரித்துக் காட்டினான்.

‘‘சார், உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கணும்.’’

‘‘எது டெர்லின்? ’’ - மாதவன் கேட்டான்.

கடைக்காரன் டெர்லினை எடுத்துக் கொடுத்தான்.

மாதவன் சொன்னான்:

‘‘இதுல ஒரு சட்டை...’’

‘‘ஒண்ணு போதுமா சார்? நான்கு சட்டைகள் தைத்தால், தினந்தோறும் தைப்பதற்காக நடந்து திரிய வேண்டாமே!’’ - தையல்காரன் சொன்னான்.

‘‘அப்படின்னா, நாலு எடுத்திட வேண்டியதுதான். சட்டையும் வேட்டியும்’’ - மாதவன் ஒப்புக்கொண்டான்.

சங்கரன்குட்டி தையல்காரனிடம் கேட்டான்: ‘‘நாங்கள் திரும்பி வருவதற்குள் தைத்துத் தரமுடியுமா?’’

‘‘எப்போ திரும்பி வருவீங்க?’’

‘‘சாயங்காலம் ஆகும்.’’

‘‘முடியாது. ஒரு சட்டையை தைத்து வைக்கிறேன். மீதி இருப்பவற்றை நாளை மறுநாள் தர்றேன்.’’

‘‘வேட்டிகளை இப்போ கொண்டு போறீங்களா சார்?’’  - கடைக்காரன் கேட்டான்.

‘‘திரும்பி வர்றப்போ வாங்கிக் கொள்கிறேன்.’’

பேருந்து வந்தது. சங்கரன்குட்டி துணிக்கடைக்காரனிடம் என்னவோ ரகசியம் சொன்னான். கடைக்காரன் சொன்னான் ‘‘இந்தத் துணி முழுவதும் வேணும்னாகூட சாருக்குக் கடனாகக் கொடுக்கலாமே!’’

மாதவனும் சங்கரன் குட்டியும் பேருந்தில் ஏறிப் புறப்பட்டார்கள்.

சங்கரன்குட்டியின் மைத்துனரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் லாட்டரிச் சீட்டு அலுவலகத்திற்குச் சென்றார்கள். முதல் பரிசு விழுந்திருந்த சீட்டைக் கொடுத்து பெயரையும் முகவரியையும் எழுதினார்கள். பெயர் என்ன என்று கேட்டதற்கு சங்கரன் குட்டிதான் பதில் சொன்னான்:

‘‘மாதவன் முதலாளி.’’

‘‘என்ன வியாபாரம்?’’

மாதவன் பதில் கூற முயற்சிக்க, சங்கரன் குட்டி கண்களைச் சுருக்கிக் காட்டியவாறு சொன்னான்: ‘‘பல வியாபாரங்கள் இருக்கு.’’

‘‘இரண்டு வியாபாரங்களின் பெயர்களைச் சொல்லுங்க.’’

‘‘வியாபாரம் இருக்கு... பிறகு... விவசாயமும் இருக்கு...’’

லாட்டரிச் சீட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது சங்கரன்குட்டியின் சகோதரியின் கணவன் சங்கரன்குட்டியைப் பாராட்டினான்.

‘‘அது நல்லதாப் போச்சு மச்சினா. அப்படித்தான் சொல்லணும்.’’

4

மாதவன் வெளியே எங்கும் செல்வதில்லை. வெளியேறி நடக்க சங்கரன்குட்டி ஒப்புக் கொள்வதில்லை. அவன் கூறுவான்:

‘‘மாதவன் அண்ணே, இப்போ நீங்க லட்சாதிபதி. சும்மா வெளியே போய் கண்டவன்கூடவெல்லாம் பேசிக்கொண்டிருப்பது, உங்களுக்கு மரியாதைக் குறைவான செயல். என்ன விஷயமாக இருந்தாலும் நான் போயி முடிச்சிட்டு வர்றேன்.’’

காலையிலும் மாலை நேரத்திலும் சங்கரன்குட்டி குமாரன்நாயரின் கடையில் இருந்து பலகாரங்களை வாங்கிக்கொண்டு வருவான். சங்கரன்குட்டியும் அங்கேயே தேநீர் அருந்துவான். செல்லப்பனின் கடையில் இருந்து மாதவனுக்கு ப்ளேயரஸ் சிகரெட் வாங்கிக் கொடுப்பான். தனக்கு பர்க்லி சிகரெட்டை வாங்கிக் கொள்வான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel