Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 9

Oru Latchamum Kaarum

‘‘அப்படித்தான் இருக்கணும். பெரிய பெரிய பணக்காரர்கள் குடிசையில் வசிப்பதை மற்றவர்கள் தெரிஞ்சிக்கணும். உள்ளவனும் இல்லாதவனும் கடன் வாங்கித்தானே வீடு உண்டாக்குகிறார்கள்? கடன் வாங்கி வீடு உண்டாக்கினால் அங்கே மன அமைதியுடன் படுத்துத் தூங்க முடியுமா? அப்போ... என்ன விஷயம்னா... உங்களைப் போல அவன் குடிசையில இருக்கல. அவன்கள் எல்லோரும் வரணும்... சரி... எர்ணாகுளத்துல இருந்துதானே காரை ஓட்டிக் கொண்டு வர வேண்டும்? அப்படின்னா... எர்ணாகுளத்திற்கு எப்படிப் போறது?’’

‘‘பேருந்தில் போகலாம்.’’

‘‘அது மரியாதைக் குறைவான விஷயம் சார், உங்களைப் போல உள்ள ஒருத்தர் பேருந்தில் பயணம் செய்வது என்பது... அது வேண்டாம் சார். அது மரியாதைக் குறைவான விஷயமாக இருக்கும்.’’

‘‘அங்கு பேருந்தில் போய் இங்கே காரில் வருவோம் சிவராமன் பிள்ளை...’’

‘‘அப்படின்னா அதுதான் நல்லது அது மட்டுமில்ல. சார் உங்களைப் போல உள்ளவர்கள் பேருந்தில் ஏறிப் பயணம் செய்வதை மற்றவர்கள் பார்க்க வேண்டும். இப்போ எல்லா அவன்களும் காரில்தானே போறதும் வர்றதும்! நம்முடைய டைரக்டர் அய்யா பேருந்தில்தான் பயணம். அவர் காரை ஷெட்ல நிறுத்திட்டு பேருந்தில் ஏறிப் போவார். நான் சும்மா இருந்தாலும் சம்பளத்தையும் செலவுக்கு பணத்தையும் தந்திடுவாரு. சம்பளம் என்ன தெரியுமா? இருநூற்றைம்பது ரூபாயும் செலவுத் தொகையும் சார், நீங்க அவ்வளவு தர வேண்டாம். இருநூறும் செலவுத் தொகையும் கொடுத்தால் கூட நான் இங்கே நின்னுடுவேன். ஏன் தெரியுமா? உண்மையைச் சொல்லிடுறேனே! சார், உங்களைப் பார்த்தவுடனே எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. அப்போ... எர்ணாகுளத்திற்கு நாம பேருந்துல போறோம்... அப்படித்தானே?’’

‘‘ஆமாம்...’’

‘‘எப்போ போறோம்?’’

‘‘நாளை மறுநாள் சாயங்காலம்.’’

‘‘இருபதாம் தேதிதானே பரிசுப் பணத்தைத் தர்றாங்க? அப்படின்னா பத்தொன்பதாம் தேதி சாயங்காலம் அங்கே போய்ச் சேர வேண்டாமா? அப்படின்னா... இங்கேயிருந்து மத்தியானம் கிளம்ப வேண்டாமா?’’

‘‘தேவையில்ல சிவராமன் பிள்ளை. நான் அங்கே... பேருந்து நிலையத்துக்கு வந்திடுறேன்.’’

அவர் திரும்பி நடக்க தொடங்கி, சற்று திரும்பி நின்று சொன்னார்:

‘‘விஷயம் என்னன்னா... எர்ணாகுளத்துக்குப் போறதா இருந்தால் வீட்டில் செலவுக்கு ஏதாவது கொடுத்திட்டுப் போகணும். பத்து ரூபாயாவது கொடுத்திட்டுப் போகணும்.’’

‘‘ஒரு லட்சம் கிடைக்கிறப்போ எல்லாவற்றையும் ஒரே நேரத்துல தந்துடலாம் சிவராமன் பிள்ளை. அது போதாதா?’’

‘‘அது போதும். அது போதும். நான் வெறுமனே சொன்னேன். சரி... நான் கிளம்பட்டுமா?’’ - அவர் புறப்பட்டார்.

அன்று சாயங்காலம் செக்ரட்டரி புருஷோத்தமனும் அவருடைய மனைவியும் வந்தார்கள். செக்ரட்டரி கேட்டார்:

‘‘இது என்ன மாதவா? வாசல்ல ஒரு ஷெட் உண்டாக்கப்பட்டிருக்கு?’’

‘‘காரை நிறுத்துறதுக்கு செக்ரட்டரி.’’

அதிகமான வருத்தத்துடன் செக்ரட்டரி சொன்னார்:

‘‘இது சமுதாயத்திற்கு குறைச்சல் உண்டாக்கக்கூடிய ஒரு விஷயம் மாதவா. லட்சாதிபதியான மாதவன் இப்படி இந்தக் குடிசையில் வசிக்கிறப்போ எங்களால் வெளியில் இறங்கி நடக்க முடியுமா? உன்கிட்ட நான் சொன்னேனே, இங்கேயிருந்து வேறு இடத்திற்குப் போய் வசிக்கணும்னு...’’

மாதவன் சிரித்துக்கொண்டே சொன்னான்:

‘‘வசிப்பிடத்தை மாற்றலாம் செக்ரட்டரி. பணம் கிடைத்த பிறகு இடத்தை வாங்கி வீட்டைக் கட்டி இருப்பிடத்தை மாற்றணும்.’’

‘‘அதுவரையில் வெறுமனே கிடக்கும் எங்களுடைய வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று நான் சொன்னேன்ல!’’

‘‘நான் என்னுடைய வீட்டில் தங்கணும்னு நினைக்கிறேன் செக்ரட்டரி.’’

‘‘அப்படின்னா என்ன செய்றது? மாதவா உன் விருப்பப்படி நடக்கட்டும்.’’

‘‘அந்த வீட்டிற்கும் நிலத்திற்கும் என்ன விலை தரணும் செக்ரட்டரி?’’

‘‘அப்படிக் கேளு... நிலம் ஒரு ஏக்கர் இருக்கு. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் அந்த வீடு கட்டப்பட்டது. அப்போ பதின்மூன்றாயிரம் ரூபாய் செலவானது இப்போ கட்டுறதா இருந்தால் முப்பதாயிரம் ரூபாயாவது செலவழிக்காமல் அப்படியொரு வீட்டைக் கட்ட முடியாது மாதவா உன்கிட்ட எல்லா விஷயங்களையும் மறைக்காமல் சொல்றேன். என் சகோதரிக்காக என் தந்தை கட்டிய வீடு அது. அவளுடைய கணவருக்கு திருவனந்தபுரத்தில்தானே வேலை! அவர்கள் அங்கு ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டார்கள். அப்படின்னா, இங்கே இருக்குற வீட்டை விற்று விடலாம் என்று அவங்க நினைக்கிறாங்க.’’

‘‘என்ன விலை தரணும்னு சொல்லுங்க செக்ரட்டரி.’’

‘‘மாதவா உனக்கு விருப்பமான விலையைத் தந்தால் போதும். உன்கிட்ட விலைபேச நான் விரும்பல. சமுதாயத்திற்கு கவுரவம் நீ...’’- எதையோ திடீரென்று நினைத்துக் கொண்டவரைப் போல அவர் தொடர்ந்து சொன்னார்:

‘‘வேறு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காகத்தான் நான் இப்போ வந்திருக்கேன்.’’

‘‘என்ன அது?’’

‘‘மாதவா, நீ ஒரு லட்சமும் காரும் வாங்கிக் கொண்டு வர்றப்போ மிகப்பெரிய ஒரு வரவேற்பை அளிக்க நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். வரவேற்பு விழாவில் தலைமை தாங்குவதற்காக அமைச்சர் ஒருவரை அழைக்க வேண்டும் என்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.’’

‘‘அமைச்சரா?’’- மாதவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

‘‘ஆமாம்... அமைச்சர்தான். முடியுமானால், கவர்னரை வரவேற்பு விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றுகூட முடிவு செய்திருக்கிறோம்.’’

‘‘அப்போ...’’- மாதவன் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான்.

அந்த உரையாடல் இப்படி நடந்து கொண்டிருந்தபோது அங்கு இன்னொரு உரையாடலும் நடந்து கொண்டிருந்தது. செக்ரட்டரியின் மனைவி வனஜா, குஞ்ஞுலட்சுமியிடம் கேட்டாள்.

‘‘மாதவன் அண்ணனுக்கு இப்போ வயது இருபத்தெட்டு ஆயிடுச்சுல்ல?’’

‘‘ஓ... அந்த அளவிற்கு ஆகல. அவனுக்கு இப்போ இருபத்து நான்கு முடிந்து இருபத்தைந்து ஆகப்போகுது.’’

‘‘பொண்ணு கொடுக்குறதா யாரும் வரலையா குஞ்ஞுலட்சுமி அக்கா?’’

‘‘இங்கே வயசுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்களே! இவங்களை யாருடனாவது திருமணம் பண்ணி அனுப்பி வைக்காமல், அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டான்.’’

‘‘இவங்களோட கல்யாணத்தை நீங்க ஏன் நடத்தாமல் இருக்கீங்க?’’

‘‘ஏன்னு கேட்டால் இப்போ என்ன பதில் சொல்றது? பெண் கேட்டு வர்றவங்க எல்லோரும் பணம் கேக்குறாங்க.’’

‘‘பணம் கொடுக்கத்தான் வேணும். பணம் கொடுக்காமல் யாராவது வந்து வெறுமனே திருமணம் செய்து கொண்டு போவார்களா? மாதவன் அண்ணனின் இப்போதைய நிலைமையில் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தால்தான் நல்ல ஒரு பையன் கிடைப்பான். என் பெரியப்பாவை உங்களுக்குத் தெரியுமா குஞ்ஞுலட்சுமி அக்கா?’’

‘‘ம்... பார்த்திருக்கேன்.’’

‘‘பெரியப்பாவின் மகன். எம்ஏ. படிச்சிருக்கான். போன வருடம்தான் தேர்வில் வெற்றி பெற்றான். வேணும்னா நான் கொஞ்சம் சொல்லிப் பார்க்கிறேன்.’’

‘‘அப்படின்னா... கொஞ்சம் முயற்சிப் பண்ணிப்பார் வனஜா.’’

‘‘பெரியப்பாவிற்கு இப்போ கொஞ்சம் கடன் இருக்கு. கடன் வாங்கித்தான் அவனைப் படிக்க வைத்தார். அந்த கடனை அடைக்க வேண்டியதிருக்கு.’’

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel