Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 18

Oru Latchamum Kaarum

‘‘விடுடா செல்லப்பா’’- செல்லப்பனின் கையில் மாதவன் ஒரு தட்டு தட்டினான்.

பிடி விட்டுப் போனது. குமாரன் நாயரும் சங்கரன் குட்டியின் கையிலிருந்த தன் பிடியை விட்டார். மாதவன் உரத்த குரலில் சொன்னான்:

‘‘டேய் செல்லப்பா... உன்கிட்ட நான் கடன் வாங்கியிருக்கேன். அது உண்மை. சாயங்காலத்திற்குள் நான் அதைத் திருப்பித் தந்திடுவேன். ஆனால் நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கணும். முன்பு ஒருநாள் நான் உன்னோட கடைக்கு வந்து ஐந்து பைசாவுக்கு பீடி கடனாகக் கேட்டேன்ல? அப்போ நீ தந்தியா? எனக்கு லாட்டரிச் சீட்டுல பரிசு கிடைச்சிடுச்சுன்னு தெரிஞ்சவுடனே, நீதானே பர்க்கிலி சிகரெட்டை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வந்தே? பிறகு தினமும் ப்ளேயர்ஸைத் தந்ததும் நீதானே? தங்கச்சியின் கழுத்தில் கிடந்த மாலையை அடகு வைத்து, ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்ததும் நீதானே? அவற்றையெல்லாம் நீ எனக்கு கடனாகத் தந்ததற்குக் காரணம் என்ன? என்னை காக்கா பிடிக்கிறதுக்குத்தானேடா செல்லப்பா? நான் ஒரு லட்சத்தைக் கொண்டு வர்றப்போ, அதுல இருந்து கடன் வாங்கலாம் என்பதற்காகத்தானே நீ எனக்குக் கடன் தந்தே?’’

எல்லோரும் அமைதியாக நின்றிருந்தார்கள். மாதவன் குமாரன் நாயருக்கு நேராகத் திரும்பினான்:

‘‘உங்கக்கிட்ட வாங்கிய பணத்தையும் இன்னைக்கே தந்திடுறேன். நான் இப்போ வங்கிக்குப் போறேன். ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாற்றிக் கொண்டு வந்த உடனே உங்களுடைய பணத்தைத் தந்திடுறேன். ஆனால் ஒரு விஷயம் ஒரு காசுகூட அதிகமாகத் தரமாட்டேன். ஏனென்றால் என்னை ஏமாற்றலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒருநாள் தேநீர் குடித்துவிட்டு, பிறகு காசு தர்றேன்னு சொன்னதற்கு நீங்க என்னைப் பிடிச்சு நிறுத்தியது ஞாபகத்தில் இருக்குதா?’’

‘‘சொல்லிக் காட்டுங்க மாதவன் அண்ணே... சொல்லிக் காட்டுங்க’’- சங்கரன்குட்டி உற்சாகப்படுத்தினான்.

‘‘அங்கே செக்ரட்டரி இருக்காரா?’’- மாதவன் தலையை உயர்த்திப் பின்னால் பார்த்துக்கொண்டே தொடர்ந்தான்:

‘‘என் வீட்டுக்கு வந்து நான் சமுதாயத்திற்குப் பெருமை என்று நீங்கதானே சொன்னீங்க? உங்க மனைவி வந்து என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதைப் பற்றி பேசினாங்கள்ல? பிறகு... இப்போ எப்படி நான் சமுதாயத்தின் அவமானச் சின்னமா ஆனேன்? உங்களுடைய புல் முளைக்காத நிலத்தையும் மனிதன் வாழாத வீட்டையும் என்னை வாங்கச் செய்வதற்காகத்தானே நீங்க எனக்கு வரவேற்பு தரப்போறதா சொன்னீங்க? முடியாதுடா செக்ரட்டரி... மாதவனை ஏமாற்ற முடியாது...’’

‘‘சொல்லிக் காட்டு மாதவன் அண்ணே... கணக்குக்கு கணக்கா சொல்லிக்காட்டுங்க’’- சங்கரன்குட்டி உற்சாகமூட்டினான்.

 ‘‘வேலை செய்தவனுக்கு கூலி தராத மனிதர்தானே பரமேஸ்வரன் பிள்ளை! இருந்தாலும் நான் கேட்காமலே பணத்தையும் நெல்லையும் நீங்க ஏன் கொடுத்து அனுப்ப வேண்டும்? என்னை ஏமாற்றுவதற்காகத்தானே? நடக்காது பரமேஸ்வரன் பிள்ளை.... மாதவனை ஏமாற்றுவது என்பது நடக்காது. பிறகு... ஒரு விஷயம். வாங்கிய பணத்தை இன்னைக்கே தந்திடுறேன். மாத்தச்சா, நான் உங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் கடன் தரப்போறது இல்ல. வாங்கிய பணத்தை இன்னைக்கு திருப்பித் தந்திடுறேன். இன்னும் எல்லோரிடமும் ஒரு விஷயம் சொல்ல வேண்டியது இருக்கு. என்னை ஏமாற்ற முடியாது. திருமண விஷயமா யாரும் என்னைத் தேடி வரவேண்டாம். வாடா சங்கரன்குட்டி... வா...’’

சங்கரன்குட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு மாதவன் நடந்தான்.

எல்லாரும் மாதவனுக்கு வழியை விட்டுக் கொடுத்தார்கள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel