Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 10

Oru Latchamum Kaarum

‘‘எவ்வளவு கடன்?’’

‘‘ஏழாயிரமோ எட்டாயிரமோ இருக்கும் என்று நினைக்கிறேன். கல்லூரியில் அவனை விரிவுரையாளராக ஆக்குறது என்று சொல்லியிருக்காங்க. ஆனால் அதற்கு ஐயாயிரமோ ஆறாயிரமோ அங்கே கொடுக்கணும்.’’

‘‘அப்படின்னா... எல்லாவற்றையும் சேர்த்தால்...’’ - குஞ்ஞுலட்சுமி திகைத்துப் போய் விட்டாள்.

‘‘இருபதாயிரம் ரூபாய் கொடுக்குறதுக்கு ஆள் இருக்கு குஞ்ஞுலட்சுமி அக்கா. எம்.ஏ. படித்தவன் ஆச்சே!’’

‘‘நான் மாதவனிடம் சொல்லிப் பார்க்குறேன்.’’

‘‘பெரியப்பாவிடம் நானும் சொல்லிப் பார்க்குறேன்.’’

5

‘‘டேய் சங்கரன்குட்டி! எர்ணாகுளத்திற்குப் போய் திரும்பி வர்றதுக்கு எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?’’ - மாதவன் கேட்டான்.

‘‘மூணு பேர் போவதற்கும் வருவதற்கும் ஆகுற செலவுதானே?’’

‘‘யார் மூணு பேர்?’’

‘‘நீங்க... ஓட்டுனர், நான்...’’

‘‘நீயும் வர்றியா?’’

‘‘நான் வரவேண்டாமா?’’ மாதவன் அண்ணே, உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் வரல.’’

‘‘நீ வர்றது எனக்கு பிடிக்கலைன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?’’

‘‘நீ வர்றியான்னு கேட்டப்போ நான் நினைச்சேன் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு.’’

‘‘அப்படின்னா நீ வரணும். உன்னை அழைச்சிட்டுத்தான் நான் போவேன்.’’

‘‘மாதவன் அண்ணே, நீங்க வரவேண்டாம்னு சொன்னால் நான் வரல. வரணும்னு சொன்னால் நான் வருவேன்.’’

‘‘அப்படின்னா சொல்லு... எவ்வளவு பணம் வேணும்?’’

‘‘மூணு பேருக்கு பேருந்து கட்டணம் வேணும். பிறகு... சாப்பிடுவதற்கும், தேநீருக்கும் வேணும். எர்ணாகுளத்திற்குப் போறதா இருந்தால் சாப்பிடவும் தேநீர் அருந்தவும் செய்யணும். பிறகு... நாம இங்கே காரில்தானே வருகிறோம்? காருக்கு பெட்ரோல் வாங்கி ஊற்றணும். பிறகு... சில்லரை சிலவு ஏதாவது வரும்ல?’’

‘‘எல்லாவற்றுக்கும் சேர்த்து எவ்வளவு பணம் வேணும்னு கணக்கு பார்த்து சொல்லு.’’

சங்கரன்குட்டி சிந்திப்பதைப்போல நடித்து விட்டு பதில் சொன்னான்:

‘‘ஐந்நூறு ரூபாயாவது வேணும் மாதவன் அண்ணே.’’

‘‘ஐந்நூறு ரூபாயா? எர்ணாகுளத்திற்குப் போயிட்டு வர்றதுக்கு ஐந்நூறு ரூபாய் வேணுமாடா சங்கரன்குட்டி?’’

‘‘அவ்வளவு பணமும் கையில் இருக்கணும் மாதவன் அண்ணே. ஏனென்றால் நினைத்துப் பார்க்காத ஏதாவது ஒரு தேவை வந்திடுச்சுன்னு வச்சுக்கோங்க. உடனே செலவழிப்பதற்குக் கையில் பணம் இருக்க வேண்டாமா?’’

‘‘பணம் இருக்கணும்.’’

‘‘அதனால்தான் நான் சொன்னேன்- ஐந்நூறு ரூபாயாவது கையில் இருக்கணும்னு.’’

‘‘அப்போ ஒரு விஷயம்.’’

‘‘என்ன?’’

‘‘ஐந்நூறு ரூபாயை எங்கேயிருந்து தயார் பண்ணுவது?’’

‘‘மாதவன் அண்ணே, நீங்க சும்மா இங்கே உட்கார்ந்திருந்தால் போதும். பணத்தை நான் கொண்டு வர்றேன்.’’

சங்கரன்குட்டி திரும்பி நடந்தான்.

மூன்று மனிதர்கள் ஒற்றையடிப் பாதையிலிருந்து மாதவனின் வீட்டை நோக்கி வந்தார்கள். ஒரு மனிதர் நடுத்தர வயதைக் கொண்டிருந்தார். அவர் பெயர் ராகவன் பிள்ளை. ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்ற இருவரும் இளைஞர்கள். விஸ்வநாதனும், ஹுசைனும். விஸ்வநாதன் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஹுசைன் கல்லூரி மாணவன்.

மூவரும் மாதவனை வணங்கினார்கள். ராகவன் பிள்ளை கேட்டார்:

‘‘எங்களைத் தெரியுதா?’’

‘‘இல்லையே!’’

‘‘மாதவன் முதலாளி, எங்களை உங்களுக்குத் தெரியலைன்னாலும் எங்களுக்கு உங்களை நன்றாகத் தெரியும்.’’

‘‘லாட்டரிச் சீட்டுல பரிசு கிடைத்து விட்டால், பிறகு எல்லாருக்கும் தெரியத்தானே செய்யும்?’’

‘‘அதற்கு முன்பே எனக்குத் தெரியும்’’- விஸ்வநாதன் சொன்னான்.

‘‘அது எப்படி?’’

‘‘என் வீட்டில் வேலைக்கு வந்திருக்கீங்க.’’

‘‘எந்த வீடு?’’

‘‘குட்டப் பணிக்கரின் மகன் நான்.’’

‘‘அப்படிச் சொல்லு. குட்டப் பணிக்கரின் மூத்த மகன்... அப்படித்தானே? சரிதான். நான் அங்கே வேலைக்கு வந்திருக்கேன். ஆனால், இப்போ பார்த்தால் தெரியாது. அந்த அளவுக்கு அவர் ஆளே மாறிவிட்டார்.’’

‘‘ராகவன் பிள்ளை ஒரு பள்ளி ஆசிரியர். இவர் ஒரு கல்லூரி மாணவர். பெயர் ஹுசைன்.’’

‘‘இங்கே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கு. இதுல எப்படி மூன்று பேர் இருக்க முடியும்?’’

‘‘வேண்டாம்... நாங்கள் நிற்கிறோம்.’’

‘‘சரி... என்ன விஷயமாக வந்தீங்க?’’

‘‘நாங்கள் இங்குள்ள நூல் நிலையத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறோம்’’- ராகவன் பிள்ளை சொன்னார்.

‘‘அதற்கு என்னைத் தேடி ஏன் வந்தீங்க.’’

‘‘மாதவன் முதலாளி, இந்த ஊருக்குப் பெருமை சேர்த்த உங்களுக்கு மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய நூல் நிலையக் குழு தீர்மானித்திருக்கு.’’

"அப்படியொரு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க... இல்லையா? சரிதான். கிளை செக்ரட்டரி சொன்னார் - அவர்களும் எனக்கு ஒரு வர்வேற்பு தரப்போகிறார்களாம்."

‘‘எங்களுடைய வரவேற்பு எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கெடுக்கும் ஒரு வரவேற்பாக இருக்கும்.’’

‘‘சரிதான்...’’

‘‘கிராம அலுவலகத்திற்கு அருகில்தான். அங்கே பெயர்ப்பலகை கூட வைக்கப்பட்டிருக்கு- அறிவியல் நூலகம் என்று!’’

‘‘ஏதோ ஒரு பெயர்ப்பலகை அங்கு தொங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கேன். அது நூலகம் என்பது இப்போத்தான் தெரியுது.’’

‘‘நாங்கள் ஒரு நூலகக் கட்டிடம் உண்டாக்கத் தீர்மானிச்சிருக்கோம். அடித்தளம் அமைக்கப்பட்டாகிவிட்டது.’’

‘‘நல்ல விஷயம். இனி கட்டிடம் கட்டினால் போதுமே!’’

‘‘கட்டிடம் கட்ட வேண்டுமென்றால்... மாதவன் முதலாளி உங்களைப் போன்றவர்களின் உதவி வேணும்.’’

‘‘என்னைப் போன்றவர்கள் இன்னும் இந்த ஊரில் இருக்கிறார்களா?’’

‘‘அப்படியென்றால்- பணக்காரர்கள்’’- ராகவன் பிள்ளை சொன்னார்.

‘‘பணம் உள்ளவர்கள் நூலகம் உண்டாக்க உதவுவார்கள்... இல்லையா?’’

‘‘முதலாளி, நீங்களும் உதவணும்.’’

‘‘எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நிலைமை அப்படி இருக்குறப்போ எனக்கு எதற்கு நூலகம்? சரி... வரவேற்பு எப்போது?’’

‘‘தேதி முடிவு செய்யல. முதலாளி, உங்க வசதியைத் தெரிஞ்சிக்கிட்டு தேடி முடிவு பண்ணலாம்னு நினைச்சோம்.’’

‘‘உங்க வசதிதான் என்னோட வசதி. தேடி முடிவு பண்ணிட்டு யாரிடமாவது கூறிவிட்டால் போதும்- நான் அங்கே வந்திடுவேன்.’’

‘‘பெரிய இலக்கியவாதிகளெல்லாம் பங்குபெற வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்’’- விஸ்வநாதன் சொன்னான்.

‘‘அப்படின்னா....’’

‘‘பெரிய கவிஞர்கள், புதினம் எழுதுபவர்கள், நாடகங்கள் எழுதுபவர்கள் போன்றோரை அழைத்து சொற்பொழிவு ஆற்றும்படி செய்ய வேண்டும் என்பது நோக்கம்.’’

‘‘சரிதான்...’’

ராகவன் பிள்ளை விஸ்வநாதனின் காதில் முணுமுணுத்தார்:

‘‘செலவு விஷயத்தைப் பற்றி இப்போ ஏதாவது சொல்லணுமா?’’

விஸ்வநாதன் ராகவன்பிள்ளையின் காதில் முணுமுணுத்தான்:

‘‘இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். பிறகு... எல்லாத்தையும் சேர்த்து ஒரு தொகையை வாங்கிடலாம்.’’

‘‘அப்படின்னா நாங்கள் கிளம்புறோம். தேதி முடிவு பண்ணிட்டு சொல்லுறோம்.’’

‘‘அது போதும்.’’

அவர்கள் புறப்பட்டார்கள்.

‘‘வரவேற்பு என்றால் என்ன மகனே?’’ - குஞ்ஞுலட்சுமி கேட்டாள்.

‘‘ஆட்கள் எல்லோரும் வந்து கூடுவாங்க. பிறகு... என் கழுத்தில் பூ மாலைகள் அணிவித்து என்னை நாற்காலியில் உட்கார வைப்பாங்க.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel