Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 8

Oru Latchamum Kaarum

மாத்தச்சனின் மளிகைக் கடையில் இருந்து சாமான்களை வாங்கி மாதவனின் கையில் கொடுப்பான். அப்போது சந்தடி சாக்கில் தன்னுடைய வீட்டிற்கும் சங்கரன்குட்டி சாமான்கள் வாங்கிக் கொள்வான். மாத்தச்சன் சங்கரன்குட்டியிடம் சொன்னான்:

‘‘சங்கரன்குட்டி, எனக்கு நீ உதவி செய்யணும்.’’

‘‘உங்களுக்கு என்ன உதவி வேணும்? சொன்னால் நான் நடத்திக் காட்டுறேன்.’’

‘‘எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் வேணும். இரண்டு மாதங்களுக்குள் அதைத் தந்திடுறேன். வட்டியும் தர்றேன்.’’

‘‘நீங்க வட்டி எதுவும் தரவேண்டாம். ஐயாயிரம் ரூபாய் தர்றேன். உங்களின் கையில் இருக்குறப்போ திருப்பித் தந்தால் போதும்.’’

‘‘நான் இந்த வியாபாரத்தை விருத்தி பண்ண விரும்புகிறேன் சங்கரன்குட்டி. இந்தக் கடையை பெரிதாக ஆக்கணும். அதற்காகவும் தான் நான் ஐயாயிரம் ரூபாய் கேட்டேன்.’’

‘‘தர்றேன். மாத்தச்சா... தர்றேன்.’’

தேநீர்க் கடைக்காரன் குமாரன் நாயர் சங்கரன்குட்டியிடம் சொன்னார்:

‘‘சங்கரன்குட்டி என் விஷயத்தை மறந்துட மாட்டீல்ல?’’

‘‘இது என்ன எப்போ பார்த்தாலும் மறந்துட மாட்டீல்ல மறந்துட மாட்டீல்லன்னு சொல்லிக்கிட்டே இருக்குறது! நான் எதை ஞாபகத்துல வச்சிருக்கணும்னு சொல்லுங்க குமாரன் நாயர்...’’

‘‘எனக்கு ஓர் ஆயிரம் ரூபாய் தரணும்.’’

‘‘அவ்வளவுதானா! அதைத்தான் மறந்துடக்கூடாதுன்னு மறந்துடக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?’’

‘‘நான் இந்த தேநீர்க் கடையை விரிவுபடுத்தணும்னு நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பணத்தைத் திருப்பித் தந்திடுறேன்.’’

‘‘லாட்டரிச் சீட்டுல பரிசு வாங்கிட்டு வந்து உடனே உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன். உங்கள் கையில் பணம் வர்றப்போ தந்தால் போதும்.’’

வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் செல்லப்பன் சங்கரன்குட்டியிடம் சொன்னான்.

‘‘வெற்றிலைப் பாக்கையும் பீடியையும் விற்றுக் கொண்டிருந்தால் வீட்டுச் செலவுக்கு சரியாக இருக்காது சங்கரன்குட்டி. வேறு ஏதாவது பிஸினஸ் பண்ணினால்தான் சரியாக இருக்கும்.’’

‘‘வேறு என்ன பிஸினஸ் இருக்கு?’’

‘‘எவ்வளவோ பிஸினஸ் இருக்கு. எனக்கு எல்லா பிஸினஸும் தெரியும்.’’

‘‘பிறகு ஏன் செய்யல?’’

‘‘பணம் வேண்டாமா சங்கரன்குட்டி?’’

‘‘எவ்வளவு பணம் வேணும்?’’

‘‘ஒரு மூவாயிரம் ரூபாயாவது இருந்தால்தான் ஒரு பிஸினஸைத் தொடங்க முடியும். நீ மாதவன் முதலாளிக்கிட்ட சொன்னால் எனக்கு பணம் தருவாரு.’’

‘‘அதை முதலாளிக்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை செல்லப்பா. எல்லா விஷயங்களையும் என்கிட்டத்தான் அவர் விட்டிருக்காரு. உனக்கு நான் பணம் தந்தால் போதாதா?’’

‘‘போதும்... போதும்... சங்கரன்குட்டி, நீ மனசு வச்சா எல்லாம் நடக்கும்.’’

‘லாட்டரிச் சீட்டில் பரிசு விழுந்து எல்லாருக்கும் எர்ணாகுளத்தில் 20-ஆம் தேதி பரிசு தரப் போகிறார்கள் என்பது பத்திரிகையில் வந்த செய்தி. சங்கரன்குட்டி தேநீர்க் கடையில் இருந்து பத்திரிகையை எடுத்துக் கொண்டு ஓடினான்.

‘‘மாதவன் அண்ணே... 20-ஆம் தேதி எர்ணாகுளத்துல....’’ - இப்படிக் கூறியவாறு சங்கரன்குட்டி மாதவனின் வீட்டிற்குள் நுழைந்தான்.

‘‘எங்கே தர்றாங்க?’’ - இப்படிக் கேட்டவாறு குஞ்ஞுலட்சுமி உள்ளேயிருந்து திண்ணைக்கு வந்தாள்.

ராஜம்மாவும் ரத்னம்மாவும் கதவிற்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு எட்டிப் பார்த்தார்கள்.

‘‘எர்ணாகுளத்துல... எர்ணாகுளத்துல...’’ - சங்கரன்குட்டி பத்திரிகையை மாதவனின் கையில் கொடுத்தான்.

‘‘என்னைக்கு? என்னைக்கு?” - குஞ்ஞுலட்சுமி ஆர்வத்துடன் கேட்டாள்.

‘‘20-ஆம் தேதி சாயங்காலம்.’’

‘‘எர்ணாகுளம் என்று சொல்லப்படும் ஊர் தூரத்திலயா இருக்கு? சாதத்தை தயார் பண்ணி பொட்டலம் கட்டி எடுத்துட்டுப் போக வேண்டாமா?’’

‘‘அதெல்லாம் வேண்டாம் அம்மா. பேருந்தில் போனால் போதும்.’’ - மாதவன் சொன்னான்.

‘‘அப்போ... ஒரு விஷயம் இருக்கு மாதவன் அண்ணே. எர்ணாகுளத்துல இருந்து இங்கே காரைக் கொண்டுவர வேண்டாமா? அதற்கு ஓட்டுநர் வேண்டாமா?’’

‘‘திருவனந்தபுரத்தில் ஓட்டுநர்கள் இல்லையாடா சங்கரன்குட்டி? ஒரு ஆளை அழைச்சிட்டு வா.’’

‘‘என் மச்சானின் வீட்டுக்குத் தெற்குப் பக்கத்துல இருக்குற வீட்டில் ஒரு ஆள் இருக்காரு மாதவன் அண்ணே. நான் போய் கூப்பிடுகிறேன். அவர் பேரு சிவராமன் பிள்ளை. பெரிய பெரிய பதவிகள்ல இருந்தவர்களிடம் ஓட்டுனரா இருந்தவர். நான் அழைச்சால் இங்கே வருவார்.’’

உள்ளே ராஜம்மா குஞ்ஞுலட்சுமியிடம் என்னவோ சொன்னாள். குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘அது உண்மைதான். கார் இங்கே வர முடியாது.’’

‘‘ஏன் வர முடியாது?’’ - மாதவன் கேட்டான்.

‘‘ஒற்றையடிப்பாதை குண்டும் குழியுமா இருக்குல்ல? அந்த வழியா கார் வர முடியுமா?’’

‘‘நான் அதை மறந்துட்டேன் மாதவன் அண்ணே. அந்தப் பாதையை மண் போட்டு சரி பண்ணணும். இரண்டு மூணு ஆட்களை வைத்து வேலை செய்தால் இரண்டு மணி நேரத்துல சரி பண்ணிடுவாங்க.’’

‘‘அதெல்லாம் வேண்டாம்டா சங்கரன்குட்டி. நாம இரண்டுபேரும் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு நின்றால் ஒரு மணி நேரத்துல சரி பண்ணிடலாம்! ’’

‘‘மாதவன் அண்ணே, நீங்க மண்வெட்டியை எடுப்பதற்கும் வெட்டுவதற்கும் மண்ணை அள்ளுவதற்கும் நான் சம்மதிக்க மாட்டேன்.’’

‘‘அப்படின்னா நீயே அதைச் செய்திடு’’

‘‘பிறகு... ஒரு விஷயம்...’’

‘‘என்ன?’’

‘‘காரைக் கொண்டு வந்தால் எங்கே நிறுத்துறது?’’

‘‘அதற்கு நாம ஒரு காரியம் செய்வோம்டா சங்கரன்குட்டி நாம ஒரு ஷெட் கட்டிடுவோம்.’’

‘‘ஷெட் உண்டாக்க ஓலையும் கொம்புகளும் வேண்டாமா?’’

‘‘வடக்கு வீட்டுல இருக்குற கல்யாணி ஓலை பண்ணி வச்சிருக்கா. அவள் விற்பனைக்குத்தான் வச்சிருக்கா’’ - குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘பரமேஸ்வரன் பிள்ளையின் வீட்டில் கொம்புகளும் பாக்கு மரமும் இருக்கு. நான் போய் வாங்கிட்டு வர்றேன்.’’

‘‘அன்றே ஒற்றையடிப் பாதை சரி செய்யப்பட்டது. மறுநாள் பரமேஸ்வரன் பிள்ளையின் வீட்டிலிருந்து பாக்கு மரத்தையும் கொம்புகளையும் சங்கரன்குட்டி கொண்டு வந்தான். வடக்கு வீட்டில் இருக்கும் கல்யாணியிடமிருந்து ஓலையை அவன் கடனுக்கு வாங்கிக் கொண்டு வந்து வாசலில் கார் நிறுத்துவதற்காக ஷெட்டை உண்டாக்கினான்.’’

மறுநாள் சங்கரன்குட்டி திருவனந்தபுரத்திற்குச் சென்றான். ஓட்டுனர் சிவராமன் பிள்ளையை அழைத்துக் கொண்டு வந்தான். மாதவனுக்கு அருகில் வந்து அவனை வணங்கிவிட்டு, அவர் சொன்னார்:

‘‘சார், இதற்கு முன்னால் உங்களை நான் பார்த்திருக்கிறேனே! நீதிபதி அய்யா வீட்டில் வைத்து பார்த்திருப்பேன்னு நினைக்கிறேன். சார் ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கோங்க. நீதிபதி அய்யாவைப் பற்றி சொல்வதாக இருந்தால் அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்ததே இல்லை. அவருடைய வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. சரி... சார் நீங்க ஏன் இந்த குடிசையில் வந்து இருக்கீங்க?’’

‘‘இதுதான் என்னோட வீடு’’ - மாதவன் சாதாரணமாக சொன்னான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel