Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 3

Oru Latchamum Kaarum

மரவள்ளிக்கிழங்கு வியாபாரியான வேலாயுதனின் மகன் சுசீலன் ரத்னம்மாவைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னான். ஆனால், அவனுக்கு ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை வைப்பதற்கான பணத்தைத் தரவேண்டும்.

இரவு உணவு சாப்பிட்டு முடித்த பிறகு, தாயும் மகனும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு திருமணத்தைப் பற்றிப் பேசுவார்கள். தாய் கூறுவாள்:

‘‘வீடு முழுவதும் நிறைந்து நின்றிருக்கும் பெண் பிள்ளைகள் ஆச்சே! எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. இதையே நினைத்துக் கொண்டு படுத்திருப்பேன். பொழுது விடியிறது வரை.’’

‘‘வர்றவன் எல்லாம் பணம் கேட்டால், பிறகு நாம என்ன செய்றது அம்மா?’’

‘‘அதையேதான் நானும் நினைக்கிறேன். ஒருத்தனுக்கு தையல் இயந்திரம் வேணும். பிறகு... இன்னொருத்தனக்கு வெற்றிலைப் பாக்குக் கடை வேணும். இப்படியெல்லாம் சொன்னால் பிறகு...’’

‘‘நீர் இல்லாத இடத்தில் மூழ்க முடியுமா?’’

சில நேரங்களில் குஞ்ஞுலட்சுமி கேட்பாள்:

‘‘டேய் மாதவா, நாம ஒரு சீட்டுல சேர்ந்தால் என்ன?’’

‘‘சீட்டு சேர்ந்தால் போதுமா? பணம் தர வேண்டாமா?’’

‘‘வாரத்திற்கோ மாதத்திற்கோ ஒரு ரூபாய் கொடுத்தால் போதாதா?’’

‘‘ஒரு ரூபாய் கொடுத்தால், நமக்கு என்ன கிடைக்கும்?’’

‘‘நூறும் நூற்றைம்பதும் கிடைக்காதா?’’

‘‘நூறும் நூற்றைம்பதும் கொடுத்தால் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்ய ஆட்கள் வருவார்களா?’’

‘‘எப்படியாவது பெண் பிள்ளைகளை இங்கேயிருந்து அனுப்பி வைக்க வேண்டாமா மகனே?’’

‘‘எப்படியாவது வெளியே அனுப்பி வைத்தால் போதுமா அம்மா?’’

குஞ்ஞுலட்சுமி நீண்ட பெருமூச்சை விடுவாள்.

தான் வாங்கிய லாட்டரிச் சீட்டை மாதவன் குஞ்ஞுலட்சுமியின் கையில் கொடுத்தான். குஞ்ஞுலட்சுமி கேட்டாள்:

‘‘இது என்ன மகனே?’’

‘‘டிக்கெட் அம்மா... லாட்டரிச் சீட்டு.’’

‘‘இதன் விலை என்ன?’’

‘‘ஒரு ரூபாய்.’’

‘‘நமக்கு கிடைக்குமா மகனே?’’

‘‘நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். நம்மைவிட அதிர்ஷ்டம் உள்ளவர்கள் வேறு இருந்தார்கள் என்றால் அவர்களுக்குக் கிடைக்கும்.’’

‘‘கிடைத்தால் நமக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?’’

‘‘அதுவா? எனக்குத் தெரியாது அம்மா.’’

‘‘கேட்கலையா?’’

‘‘சங்கரன் வாங்கிய இரண்டு டிக்கெட்கள்ல ஒண்ணை நான் வாங்கினேன். என்ன கிடைக்கும் என்று நான் அவனிடம் கேட்கல.’’

‘‘ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அப்படித்தானே?’’

‘‘பத்தாயிரம்னு தோணுது.’’

‘‘பத்தாயிரமா! ஓ... அந்த அளவிற்குக் கிடைக்காது. ஒரு ரூபாய் கொடுத்தால் சும்மா பத்தாயிரம் ரூபாயை யாராவது தருவாங்களாடா மாதவா?’’

‘‘சங்கரன் குட்டியிடம் நாளைக்கு நான் கேட்கிறேன்.’’

‘‘கேளு. ஆயிரம் ரூபாய் கிடைத்தால் பெண் பிள்ளைகளை யாருடனாவது சேர்த்து அனுப்பி வைத்து விடலாம். பிறகு உனக்கு ஒரு பெண்ணைக் கொண்டு வரணும். நான் சாகுறதுக்கு முன்னால்... நமக்கும் கிடைக்கும் மகனே... வெள்ளாயிணி பகவதி அங்கேதான் இருக்கிறாள் என்றால் நமக்கு இது கிடைக்கும்.’’

‘‘கிடைக்கும்!’’

அன்று இரவு ரத்னம்மா ராஜம்மாவிடம் சொன்னாள்:

‘‘அக்கா என் மனதிற்குள் யாரோ வந்து இருந்து கொண்டு சொல்றாங்க.’’

‘‘என்னன்னு...?’’

‘‘லாட்டரிச் சீட்டுல பரிசு நமக்குக் கிடைக்கும் என்று! எனக்குத் தோணுது... வெள்ளாயிணி பகவதி வந்து சொன்னதுதான் அதுன்னு.’’

‘‘நீ கொஞ்சம் சும்மா இருடி ரத்னம்மா. நாம அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இல்லைடீ...’’

‘‘வெள்ளாயிணி பகவதி மனசு வைத்த பிறகு, அதற்கு அப்பால் யாராலாவது முடியுமா அக்கா? அக்கா, பார்க்கத்தானே போறீங்க - லாட்டரிச் சீட்டுல பரிசு நமக்குத்தான் கிடைக்கப் போகுது.’’

‘‘கிடைத்தால் சரிதான்.’’

மறுநாள் சாயங்காலம் மாதவன் வேலை முடிந்து வந்தபோது குஞ்ஞுலட்சுமியிடம் சொன்னான்:

‘‘அம்மா, விஷயம் தெரியுமா?’’

‘‘என்ன?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய்.’’

‘‘ஓ! சும்மா இருடா மாதவா. ஒரு லட்சம் ரூபாயை சும்மா யாராவது வாரி எடுத்துக் கொடுத்திடுவாங்களா?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய் மட்டுமில்லை அம்மா. ஒரு காரும் கிடைக்கும்.’’

‘‘உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.’’

‘‘உண்மைதான் அம்மா. முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயும் காரும் என்று பத்திரிகையில் போட்டிருக்காங்க. சங்கரன் குட்டியும் சொன்னான்.’’

‘‘உண்மையாகவா?’’

‘‘உண்மையாக இல்லாமல் இருந்தால், பத்திரிகையில் போடுவாங்களா?’’

‘‘உண்மையாகத்தான் இருக்கும். நமக்குக் கிடைத்தால் சரி தான். ஆனால் நமக்கு அதற்கான அதிர்ஷ்டம் இருக்காடா மகனே?’’

‘‘நம்மைவிட அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வேறு இருந்தார்கள் என்றால் அவர்களுக்குத்தான் கிடைக்கும்.’’

‘‘என் வெள்ளாயிணி பகவதி!’’ - குஞ்ஞுலட்சுமி கைகளைக் கூப்பி மேல்நோக்கிப் பார்த்தவாறு வணங்கினாள்.

‘‘அன்று இரவு ரத்னம்மா ராஜம்மாவிடம் சொன்னாள்:’’

‘‘ஒரு காரும் கிடைக்குமாம்.’’

‘‘அது பிரச்சினைக்குரிய விஷயம்டி ரத்னம்மா.’’

‘‘என்ன பிரச்சினை?’’

‘‘கார் கிடைத்தால் யார் அதை ஓட்டுறது?’’

‘‘கார் ஓட்டத் தெரிஞ்சவங்க இருக்காங்க அக்கா. டிரைவர்கள் பஸ், கார் எல்லாவற்றையும் ஓட்டுறவங்க டிரைவர்கள்தானே?’’

‘‘டிரைவர் வந்து நம்முடைய காரை ஓட்டினால், அந்த ஆளுக்கு சம்பளம் தர வேண்டாமா?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய் கிடைக்குதுல்ல? பிறகு ஏன் சம்பளம் தர முடியாது.’’

‘‘பிறகும் ஒரு பிரச்சினை இருக்குதுடி ரத்னம்மா.’’

‘‘அக்கா, உங்களுக்கு எல்லாமே பிரச்சினைதான்.’’

‘‘அடியே! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு.’’

‘‘சரி... சொல்லு.’’

‘‘காரை நம்முடைய வீட்டுக்கு எப்படி கொண்டு வர முடியும்? ’’

‘‘டிரைவர் ஏறி உட்கார்ந்து ஓட்டி இங்கே கொண்டு வருவார்.’’

‘‘குண்டும் குழியுமா இருக்குற ஒற்றையடிப் பாதையின் வழியாக காரைக் கொண்டு வர முடியுமான்னு நான் கேக்குறேன்.’’

‘‘இங்கே வர்றதுக்கு ஒரு சாலை உண்டாக்கணும். ஒரு லட்சம் ரூபாய் கிடைக்குதே!’’

‘‘அது உண்மைதான்.’’

குமாரன் நாயரின் தேநீர்க் கடையில் பெரிய அளவில் மனிதர்களின் கூட்டம் இருந்தது. பத்திரிகை வந்திருக்கவில்லை. பத்திரிகை ஏஜெண்ட் பேருந்து நிறுத்தத்தில் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

தேநீர்க் கடையில் கூடி நின்றிருந்த அனைவரும் லாட்டரி டிக்கெட் வாங்கியிருப்பவர்கள். அவர்களுடைய அதிர்ஷ்டம் தலைமுடி இழையில் தொங்கிக் கொண்டிருந்தது.

நேற்று கோழிக்கோட்டில் குலுக்கல் நடைபெற்றது. அன்றைய நாளிதழில் பரிசு கிடைத்தவர்களின் எண்கள் பிரசுரமாகும்.

குமாரன் நாயரின் தேநீர்க் கடையில் தங்களுக்குப் பரிசு கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் மாதவனும் இருந்தான். அவன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பத்திரமாகத் தன்னுடைய மடிக்குள் வைத்திருந்தான்.

‘‘ஒரு தேநீர் கொடு’’ - இப்படிக் கூறியவாறு பத்திரிகை ஏஜெண்ட் பத்திரிகைக் கட்டுடன் தேநீர்க் கடைக்குள் வந்தான்.

‘‘பத்திரிகைக் கட்டை சீக்கிரமா அவிழ்டா சுகுமாரா’’ - சங்கரன் குட்டி சொன்னான்.

‘‘மெதுவாத்தான் அவிழ்க்க முடியும்’’ - சுகுமாரன் மெதுவாகக் கட்டை அவிழ்க்க ஆரம்பித்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel