ஒரு லட்சமும் காரும் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 5984
வேலை முடிந்து கூலியை வாங்கிக் கொண்டு, தேநீர்க் கடைக்குள் நுழைந்து ஒரு தேநீரையும் குடித்துவிட்டு வெளியே வந்த போதுதான், மாதவன் சங்கரன் குட்டியைப் பார்த்தான். மாதவன் கேட்டான்:
‘‘சங்கரன்குட்டி, நீ ஏன்டா வேலைக்கு வரல?’’
‘‘நான் திருவனந்தபுரத்துக்குப் போயிருந்தேன். மாதவன் அண்ணே. அக்காவை அங்கே தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கு! நான் அங்கே போயிட்டு வந்தேன்.’’
‘‘உன் மச்சான் நல்லா இருக்காரா? வெற்றிலைப் பாக்குக் கடை நல்லா நடக்குதா?’’
‘‘ஒரு தேநீர்க் கடையையும் ஆரம்பிக்கணும்னு மச்சான் ஆசைப்படுறாரு. அதற்காகப் பணம் தயார் பண்ணுவதற்காக இப்போ அங்கேயும் இங்கேயுமா ஓடித் திரிகிறார். அக்காவின் கழுத்தில் கிடக்கும் செயினை அடமானம் வைப்பதற்காகக் கேட்டதற்கு, அவள் தூக்குல தொங்கி இறந்திடுவேன்னு சொல்கிறாள்.’’
‘‘அப்படின்னா லாட்டரிச் சீட்டு வாங்கச் சொல்லு. இப்போ அரசாங்கம்தானே லாட்டரிச் சீட்டை நடத்திக் கொண்டிருக்கு!’’
‘‘லாட்டரிச் சீட்டுல சேர்ந்தால், பணம் கிடைக்குமா மாதவன் அண்ணே?’’
‘‘கிடைக்குமான்னு கேட்டால்... கிடைக்காது என்று யாராவது சொன்னாங்களா? நம்மைப் போல ஒரு கூலி வேலை செய்யிறவனுக்கு முதல் பரிசு கிடைக்குதே! அப்படி இருக்குறப்போ, ஒரு வெற்றிலைப் பாக்குக் கடைக்காரனுக்குக் கிடைக்கக் கூடாதா?’’
‘‘அப்படின்னா... மாதவன் அண்ணே, நான் ஒரு விஷயம் சொல்றேன். மச்சானும் நானும் லாட்டரிச் சீட்டு வாங்கிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.’’
‘‘அப்படிச் சொல்லு!’’
‘‘மாதவன் அண்ணே, உங்களுக்கு டிக்கெட் வேண்டாமா?’’
‘‘ஓ! நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்டா சங்கரன்குட்டி. பிறகு... நான் எதற்கு லாட்டரிச் சீட்டு வாங்க வேண்டும்?’’
‘‘உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று யார் சொன்னது?’’
‘‘எனக்குத் தெரியும்டா சங்கரன்குட்டி... எனக்கு அதிர்ஷ்டம் இல்லை...’’
‘‘இருந்தாலும்... சோதிச்சுப் பார்க்கலாமே! மாதவன் அண்ணே, லாட்டரிச் சீட்டு வாங்கிப் பாருங்க!’’
‘‘வேண்டாம்டா சங்கரன்குட்டி எனக்கு வேண்டாம்...’’
‘‘அப்படின்னா எனக்காக... மாதவன் அண்ணே, ஒரு டிக்கெட் வாங்குங்க. ஏனென்றால் என் கையில் இரண்டு சீட்டுகள் இருக்கு.’’
‘‘ஏதாவதொரு சீட்டுக்குப் பரிசு கிடைக்கும்டா சங்கரன் குட்டி பத்திரமா வைத்திரு.’’
‘‘அதில் ஒரு விஷயம் இருக்கு மாதவன் அண்ணே.’’
‘‘அது என்னடா?’’
‘‘நான் ஒரு சீட்டு வாங்கி, ஒரு இரண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அப்போ அந்த ஆளு கேட்டாரு, இன்னொரு சீட்டையும் தரட்டுமா என்று. அப்போ மச்சினன் சொன்னாரு- இன்னொரு சீட்டையும் வாங்கிக்கோ மச்சினா என்று. நான் இன்னொரு சீட்டையும் வாங்கினேன். நான் இப்போ குழப்பத்துல இருக்கேன்.’’
‘‘என்ன குழப்பம்?’’
‘‘ரேஷன் வாங்க வச்சிருந்த பணத்தை வைத்து நான் லாட்டரிச் சீட்டு வாங்கிட்டேன்.’’
‘‘அப்படின்னா ஒரு காரியம் செய். ஒரு டிக்கெட்டை இங்கே கொடுத்திடு’’ - மாதவன் மடியில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.
சங்கரன் குட்டி ஒரு லாட்டரிச்சீட்டைத் தந்தான். சீட்டை மடித்து, மடியில் வைத்துக்கொண்டு மாதவன் கேட்டான்.
‘‘நாளைக்கு வேலைக்கு வருவியா?’’
‘‘ம்... வருவேன்.’’
அவர்கள் பிரிந்து சென்றார்கள்.
திருவனந்தபுரம் நகரத்திற்கு வெளியேதான் மாதவனின் வீடு இருக்கிறது. வீடு என்றால் - ஒரு சிறு மண்ணாலான வீடு.
‘‘மாதவனின் தாய் - குஞ்ஞுலட்சுமி. மாதவனுக்கு இளையவர்கள் இருவரும் சகோதரிகள் - ராஜம்மாவும், ரத்னம்மாவும். மாதவனின் தந்தை அந்த ஊரிலேயே மிகவும் திறமைவாய்ந்த வேலை செய்யக்கூடியவனாக இருந்தான். எந்த வேலையாக இருந்தாலும் அவன் செய்வான். மரவள்ளிக் கிழங்குகளைக் கிளறுவான். வயலில் உழுவான். அறுவடை செய்வான். மிதிப்பான். வீட்டை வேய்வான். சுமையைச் சுமப்பான். தென்னை மரத்தில் ஏறுவான் - இப்படி எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய திறமை கொண்டிருந்த அவன், பாம்பு கடித்து இறந்துவிட்டான்.
தந்தை இறந்தபோது, மாதவனுக்கு பத்து வயது நடந்து கொண்டிருந்தது. ராஜம்மாவிற்கு ஏழு வயதும் ரத்னம்மாவிற்கு ஐந்து வயதும் நடந்து கொண்டிருந்தன. பிள்ளைகளை வளர்ப்பதற்கு குஞ்ஞுலட்சுமி மிகவும் சிரமப்பட்டாள். அவள் நாற்று நடுவதற்கும் அறுவடை செய்வதற்கும் போவாள். ஆனால் எல்லா நேரங்களிலும் நாற்று நடுவதும், அறுவடை செய்வதும் இருந்து கொண்டே இருக்காதே! சில நேரங்களில் நெல் குத்துவதற்காகச் செல்வாள். இரண்டு வீடுகளில் பசுக்களுக்குப் புல் அறுத்துக் கொடுத்தால் ஏதாவது கிடைக்கும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்கு உணவு உண்டாக்கி அவள் தந்து கொண்டிருந்தாள்.
மாதவனுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, அவன் வேலைக்குப் போகத் தொடங்கினான். தன் தந்தையைப் போலவே அவனும் ஒரு நல்ல வேலை செய்யக் கூடியவனாக இருந்தான். ஆனால், பையனாக இருந்ததால், பாதி சம்பளம்தான் கிடைத்தது. தாயுடன் பெண் பிள்ளைகளும் சேர்ந்து வேலைக்குப் போவார்கள். சாயங்காலம் ஆகிவிட்டால், அவர்களும் ஏதாவது கொண்டு வருவார்கள். கிடைப்பவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்ந்து பரிமாறி, எல்லாரும் அள்ளிக் குடித்து தூங்கச் செல்வார்கள்.
மாதவனுக்கு இருபத்து ஐந்து வயது கடந்தது. வேலை தேவைப்பட்டவர்களுக்கெல்லாம் மாதவன் தேவைப்பட்டான். அவன் செய்யும் வேலைக்கு மேற்பார்வை தேவையில்லை. எந்த வகையான வேலையாக இருந்தாலும் அதில் முழுமையான மனதுடன் அவன் ஈடுபட்டான். தன்னுடைய சொந்த வேலையைப் போல எண்ணி அவன் அதைச் செய்வான். அதனால் எல்லாருக்கும் மாதவன் தேவைப்பட்டான்.
குஞ்ஞுலட்சுமிக்கு வயதானது உடல் நலமும் பாதிக்கப்பட்டது. ராஜம்மாவிற்கு இருபத்து இரண்டு வயது ஆனது. ரத்னம்மாவிற்கு இருபது வயது ஆனது. வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால் சரியாக இருக்குமா? ஏதாவது பிரச்சினை உண்டாகிவிட்டால்? வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது’ என்று மாதவன் உத்தரவு போட்டான். அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது இல்லை. மாதவன் வேலை செய்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றினான்.
தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மாதவனுக்கு இருந்தது. ஆனால், வயதிற்கு வந்த இரண்டு தங்கைகள் வீட்டில் இருக்கும்போது, அண்ணன் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்குமா? அவர்களுக்குத் திருமணம் செய்து அனுப்பிவைத்து விட்டுத் திருமணம் செய்து கொள்வதற்காக அவன் காத்திருந்தான்.
குஞ்ஞுலட்சுமிக்கு எப்போதும் ஒரே சிந்தனைதான். பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அது. பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் திருமணம் செய்து கொள்வதற்காகப் பலரும் வந்தார்கள். அந்த ஊரிலேயே இருக்கும் ஒரே தையல்காரனான வாசுக்குட்டி, ராஜம்மாவைத் திருமணம் செய்து விரும்பினான். ஆனால், ஒரு புதிய தையல் இயந்திரத்தை வாங்கக்கூடிய பணத்தை தந்தால் மட்டுமே, அவன் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தான்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,