Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 6

Oru Latchamum Kaarum

"இல்ல..."

"அப்படின்னா நாளைக்கே கொண்டு போய் கொடுக்கணும். அப்படின்னாத்தான் பரிசு கிடைக்கும்."

"அது எனக்குத் தெரியாதே!"- மாதவன் பதைபதைத்துப் போய்விட்டான்.

"இல்லாவிட்டால் அவங்களுக்குத் தெரியுமா முதல் பரிசு உனக்கு கிடைச்சிருக்குன்னு? தலைமை அலுவலகம் உனக்குத் தெரியுமா? தேவைப்பட்டால் நானும் வர்றேன். அங்கே இருக்குறவங்க எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும்."

சங்கரன்குட்டி சொன்னான்:

"என் மச்சினனுக்குத் தெரியும். பேட்டைக்குப் போய் என் மச்சினனை அழைச்சிட்டுப் போனால் போதும்."

"அப்படின்னா, அதைச் செய்யுங்க. நாளைக்கே கொண்டு போகணும்."

"நாளைக்கு காலையில போறோம்."

பரமேஸ்வரன் பிள்ளை நடந்தார். திடீரென்று அவர் திரும்பி நின்று கொண்டு சொன்னார்:

"மாதவா, நெல்லோ பணமோ வேணும்னா, எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினால் போதும். நான் கொடுத்து அனுப்புறேன்."

"சொல்லி அனுப்புறேன்."

பரமேஸ்வரன் பிள்ளை ஒரு நடுத்தர ஜமீன்தார். அவருடைய நிலத்தைப் பண்படுத்தவும், அறுவடை செய்வதற்கும் எப்போதும் மாதவன் போவதுண்டு. அவர்தான் மாதவனின் தோளில் கையை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

மாதவன் தலையை உயர்த்தி கையை வீசிக்கொண்டு நடந்தான்.

3

ரு பெரிய கூடையில் ஒரு சுமை சுமக்கும் தொழிலாளி பொருட்களைக் கொண்டு வந்து இறக்கியபோது குஞ்ஞுலட்சுமியும் ராஜம்மாவும் ரத்னம்மாவும் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டார்கள். குஞ்ஞுலட்சுமி கேட்டாள்:

‘‘இது எங்கே இருந்து வந்திருக்கு?’’

‘‘மாத்தச்சன் கடையில் இருந்து.’’

‘‘இங்கேதானா?’’ - ராஜம்மா கேட்டாள்.

‘‘மாதவன் வீட்டுல கொண்டு போய் கொடுன்னு என்கிட்ட சொல்லி அனுப்பினாரு. மாதவனின் வீடு இதுதானே?’’

‘‘இதேதான்.’’

‘‘அப்படின்னா... இவை எல்லாவற்றையும் அங்கே எடுத்து வச்சிட்டு கூடையை இங்கே தாங்க.’’

சாமான்கள் அனைத்தையும் எடுத்து உள்ளே வைத்துவிட்டு கூடையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். சுமை தூக்கும் தொழிலாளி கூடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘சீக்கிரமா அடுப்புல நீரை வையிடி... அவன் இன்னைக்கு எதுவும் சாப்பிடல.’’

ராஜம்மாவும் ரத்னம்மாவும் சமையலறைக்குள் சென்றார்கள். குஞ்ஞுலட்சுமி ஒவ்வொரு பொட்டலத்தையும் பிரித்துப் பார்த்தாள். உப்பு, மிளகு, கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சிறு பயறு - எல்லாம் அங்கு இருந்தன. தேங்காய் இருந்தது. ஒரு பொட்டலத்தைப் பரித்துவிட்டு, குஞ்ஞுலட்சுமி உரத்த குரலில் சொன்னாள்:

‘‘சர்க்கரையும் இருக்குடி ராஜம்மா... தேங்காயும் இருக்கு. பச்சை அரிசியும் இருக்கு.’’

ராஜம்மாவும் ரத்னம்மாவும் ஓடி வந்தார்கள். இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கூறினார்கள்:

‘‘பாயசம்... பாயசம் செய்யணும்.’’

‘‘நாளைக்கு வைக்கலாம்டி... இன்னைக்கு நேரமில்லை.’’

‘‘சாமான்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்துட்டார்களா அம்மா?’’ -  இப்படிக் கேட்டவாறு மாதவன் திண்ணையில் போய் உட்கார்ந்தான். அவனுடன் சங்கரன் குட்டியும் இருந்தான்.

‘‘இவை எங்கேயிருந்து வந்ததுடா மகனே? கடனுக்கு வாங்கியதா?’’ குஞ்ஞுலட்சுமி உள்ளேயிருந்து திண்ணைக்கு வந்தாள்.

மாதவன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். சங்கரன்குட்டி ஒரு பீடியைப் பற்ற வைத்தான். மாதவன் சொன்னான்:

‘‘மாத்தச்சன் கடையில கடனுக்கு வாங்கியவைதான். இனிமேல் என்ன வேணும்னாலும் அங்கே சொல்லிவிட்டால் போதும். அவர் கொடுத்து அனுப்பிடுவாரு.’’

ஒற்றையடிப் பாதையைப் பார்த்துக் கொண்டே சங்கரன்குட்டி கேட்டான்.

‘‘இங்கே வர்றது யாரு?’’

‘‘செக்ரட்டரி புருஷோத்தமன்தானே அது?’’

எஸ்.என்.டி.பி. கிளை செக்ரட்டரி புருஷோத்தமன் திண்ணைக்கு வந்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் சொன்னார்:

‘‘காலையில்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது. அப்போதே இங்கே வரணும்னு நினைச்சேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்துக்காக திருவனந்தபுரத்திற்குப் போக வேண்டியது இருந்தது. திரும்பி வர்ற வழியில இங்கே வந்தேன். மாதவா, தெரியுதா? உன்னுடைய அதிர்ஷ்டம் சமுதாயத்தின் அதிர்ஷ்டம்! நீ சமுதாயத்தின் மரியாதை!’’

குஞ்ஞுலட்சுமி ஒரு பழைய பாயைக் கொண்டு வந்து திண்ணையில் விரித்தாள். செக்ரட்டரி கேட்டார்:

‘‘இங்கே நாற்காலி எதுவும் இல்லையா? இனிமேல் பல முக்கிய மனிதர்களும் வரக்கூடிய வீடாயிற்றே இது! இங்கு ஒரு நாற்காலி கூட இல்லை என்ற குறை சமுதாயத்தைச் சேர்ந்ததாயிற்றே!’’

மாலை நேரம் கடந்தது. குஞ்ஞுலட்சுமி ஒரு மண்ணெண்ணெய் விளக்கை எரிய வைத்து, திண்ணையில் வைத்தாள். செக்ரட்டரி கடுமையான கோபத்துடன் சொன்னார்:

‘‘ச்சே... ச்சே... சாயங்கால நேரத்துல மண்ணெண்ணெய் விளக்கு எரிய வைக்கப்பட்டிருக்கு! சமுதாயத்திற்கு இது எவ்வளவு கேவலம் தரக்கூடிய விஷயம்! சங்கரன்குட்டி, நீ என்னுடைய வீட்டிற்குச் சென்று லாந்தர் விளக்கை வாங்கிக் கொண்டு வா. இரண்டு நாற்காலிகளையும் அங்கேயிருந்து எடுத்துக் கொண்டு வரணும். நான் சொல்லி அனுப்பினதா சொன்னால் போதும். நான் இங்கேதான் இருக்கேன்னு சொல்லிடு...’’

சங்கரன்குட்டி ஓடி மறைந்தான். குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘எங்களுக்கு இன்னைக்குத்தானே லாட்டரியில பரிசு கிடைச்சிருக்கு!’’

‘‘நான் குறை சொல்லல. மாதவன் பழைய மாதவன் இல்ல. லட்சாதிபதி. சமுதாயத்தின் மதிப்புமிக்க தூண் மாதவன்.’’

ஒரு மனிதன் ஒரு சாக்கு மூட்டையைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தான். திண்ணையில் சுமையை இறக்கி வைத்துவிட்டு, தாள் பொட்டலத்தை மாதவனிடம் நீட்டியவாறு சொன்னான்:

‘‘பரமேஸ்வரன் பிள்ளை ஐயா கொடுத்து அனுப்பினாரு.

‘‘மாதவன் பொட்டலத்தை வாங்கித் திறந்து பார்த்தான். அடுத்த நிமிடம் அதை மடித்து இடுப்பில் சொருகிக் கொண்டான். செக்ரட்டரி கேட்டார்:

‘‘அந்தப் பொட்டலத்துல என்ன இருக்கு மாதவா?’’

‘‘பணம்.’’

‘‘அந்த மூட்டையில் என்ன இருக்கு?’’

‘‘நெல்.’’

‘‘மாதவா, நீ கேட்டா பரமேஸ்வரன் பிள்ளை நெல்லையும் பணத்தையும் அனுப்பியிருக்காரு?’’

‘‘கேட்கவில்லை. கொடுத்து விடுறதா சொன்னாரு. சொன்ன மாதிரியே கொடுத்து அனுப்பியிருக்காரு.’’

‘‘எச்சரிக்கையா இருக்கணும். அவர் ஒரு ஆபத்தான ஆளு. லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்தவுடன் நெருங்குகிறார். ஆபத்தான விஷயம்!’’

‘‘உண்மைதான். லாட்டரியில் பரிசு கிடைத்தவுடன் பார்க்கும்போது பேசாதவர்கள் எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. சிலர் வெளியில பார்த்து நட்பு கொள்ள தொடங்கிட்டாங்க. சிலர் இங்கேயே வர ஆரம்பிச்சிட்டாங்க’’ - மாதவன் செக்ரட்டரியை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே தொடர்ந்தான்.’’

‘‘கேட்காமலே ஒவ்வொன்றையும் கொண்டு வரவும் தொடங்கிட்டாங்க.’’

செக்ரட்டரியின் முகம் வெளிறியது. குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘நாம எச்சரிக்கையா இருக்கணும் மகனே. எல்லாரும் நெருங்கி வர்றது ஆபத்தான விஷயம்!’’

முகத்தைத் துடைத்துவிட்டு செக்ரட்டரி சொன்னார்:

‘‘மாதவா, ஒரு விஷயம் தெரியுமா? பணம் கையில் வர்றப்போ பலரும் நெருங்கி வருவாங்க. அதற்காக வர்றவங்க எல்லோரும் சுயநலம் கருதி வர்றவங்கன்னு நினைச்சிடக் கூடாது. நீ உயர்வது சமுதாயத்திற்கு மதிப்பு தரக்கூடிய ஒரு விஷயம். உயர்வை நோக்கிச் செல்லும் மாதவனுக்கு உதவ வேண்டியது சமுதாயத்தின் கடமை.’’

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel