Lekha Books

A+ A A-

முழுமையற்ற சிலை

முழுமையற்ற சிலை
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா

வுக்கார் கோவிந்தரேயின் மாளிகையிலிருந்து சாயங்காலம் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன் மாலி, சங்கரபாபாவிடம் கூறினான்:

‘பாபா, உங்களை நாளைக்கு காலையில் எஜமானன் பார்க்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.’

நரைத்த தாடி மண்ணில் படுகிற அளவிற்கு குனிந்து அமர்ந்து, மினியுடன் ‘யானை’ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த பாபா அதை கேட்டாரா என்பதென்னவோ சந்தேகம்தான்.

அதற்குப் பிறகு மாலி அதைப் பற்றி எதுவும் கூறவுமில்லை, வழக்கம்போல அன்றும் புகைந்து கொண்டிருக்கும் மண்ணெண்ணெய் விளக்கிற்கு முன்னால் அமர்ந்திருந்து அவர்கள் எல்லோரும் இரவு உணவு சாப்பிட்டார்கள். தூங்குவதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை நண்பனான ஃபிடிலை எடுத்து அன்றும் பாபா சுருதி கூட்டினார். அப்போதும் பாபாவிடம் மாலி, சவுக்காரின் விஷயத்தை நினைவுபடுத்தவில்லை.

அதனால்தான் மறுநாள் மாளிகைக்குச் சென்றவுடன், திரும்பி வந்து பாபாவை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை மாலிக்கு உண்டானது.

தன்னை எதற்காக அழைத்திருக்கிறார் என்பதைப் பற்றி பாபாவிற்கு எந்தவொரு வடிவமும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும்? சிலை செய்யும் அந்த செயலை பாபா நிறுத்தி சில வருடங்கள் ஆகி விட்டன. அப்போதுதான் சவுக்காருக்கு அப்படிப்பட்ட ஒரு தேவை உண்டாகிறது. சவுக்கார் கூறும்போது, மறுத்து கூறுவதும் இயலாது சங்கர பாபு குழப்பத்திற்கு ஆளானார். எப்படியாவது ஒரு சாதகமான பதிலைக் கூற வேண்டுமே!

பணத்திற்கான தேவை காரணமாக இருக்கலாம் – சவுக்காருக்குத் தோன்றியது. அதை நினைத்து ஒதுங்கிச் செல்ல வேண்டியதில்லை. கூற வேண்டியது மட்டும்தான் பாக்கி. எதை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு தயார். இலட்சப் பிரபு ஆயிற்றே! ஆனால், ஒரே ஒரு விஷயம்தான். கூடுமான வரை மிகவும் வேகமாக சிலையை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். விநாயக சதுர்த்திக்கு அப்படியொன்றும் அதிக நாட்கள் இல்லை. அதிக பட்சம் போனால், ஒரு எட்டு நாட்கள். இதற்கிடையில் எல்லா விஷயங்களும் அவர் நினைத்ததைப் போல நடந்தே ஆக வேண்டும். களி மண், சாயம், எண்ணெய் ஆகியவற்றை பணியாட்கள் உடனடியாக பாபாவின் வீட்டிற்குக் கொண்டு போய் சேர்க்கிறார்கள். அனைத்தும் முதல் தரம் கொண்டவை! அந்த வருடம் சதுர்த்தி நாளன்று உருவாகும் கணபதி சிலைகளில் முதல் பரிசு சவுக்காரின் சிலைக்குத்தான் என்று ஊரில் உள்ளவர்களெல்லாம் தலையைக் குலுக்கி ஒத்துக் கொள்ள வேண்டும்.

கல் மோதிரம் அணிந்த விரல்களைக் கொண்டு மீசையின் ஓரத்தைத் தடவியவாறு, சவுக்கார் புன்னகைத்தார். அவருக்கு முன்னால் எளிமையின் சின்னமாக நின்று கொண்டிருந்த கிழவர் கூறினார்:

‘எனக்கு வயதாகி விட்டது. முன்பு போல எதையும்...’

‘அதெல்லாம் எனக்கு தெரியும். மறுத்து கூறக் கூடாது.’

திருவாய்க்கு எதிர் வாய் கூறாமல் பாபா திரும்பி வந்தார். அன்று மாலி பணத்தைக் கொண்டு வந்தபோது, சிலை செய்யும் விஷயத்தில் அதற்குப் பிறகு எந்தவொரு பிரச்னையும் இல்லை என்ற நிலை உண்டானது. சவுக்காரின் மானத்தைக் காப்பாற்றுவதற்கு தன்னுடைய திறமை முழுவதையும் பயன்படுத்தி பாபா முதல் தரம் கொண்ட ஒரு கணபதி சிலையைச் செய்ய வேண்டும்!

கிராமத்தில் மட்டுமல்ல – நகரத்திலும் விநாயக சதுர்த்தி இருக்கிறது. இரு திசைகளிலும் மக்கள் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்டத்தின் அளவிலும் முறையிலும் வேறுபாடு தெரியலாம். கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஒருவரோடொருவர் பழகிக் கொள்வதற்கும், அன்பு செலுத்துவதற்கும், ஆசீர்வதிப்பதற்குமான ஒரு சந்தர்ப்பம் அது. நகரத்தில் இருப்பவர்களுக்கோ – தங்களுடைய பெருமையை மற்றவர்களுக்கு முன்னால் வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம்.

அதற்கான ஒரு வழிதான் விநயாக சதுர்த்தி நாளன்று விக்னேஸ்வரனின் சிலை உருவாகுவது. யாருடைய சிலைக்கு அதிக அழகு இருக்கிறது என்ற விஷயத்தில் அதன் சொந்தக்காரருக்கு பெருமைப்பட்டுக் கொள்வதற்கு உரிமை இருக்கிறது. வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் கொஞ்ச நாட்களுக்கு அது ஒரு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயமாக இருக்கும்.

எல்லோரும் கூறினார்கள் – இந்த முறை சவுக்கார்தான் பரிசைப் பெறுவாரென்று. இதற்கு முன்பும் சவுக்காரின் நிலையைக் கேள்வி கேட்பதற்கு யாருமே இருந்ததில்லை. இரண்டு மூன்று வருடங்களாக அவர் அதில் போட்டியிடவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதற்கு காரணமும் இருக்கிறது. பாபா அந்த பணியிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். பாபாவின் கணபதியே கணபதி. கணபதி என்றல்ல.... எதுவுமே! அது தவிர, சில முக்கியமான விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையும் சவுக்காருக்கு உண்டானது. ஒரு சர்க்கரை ஆலையின் தொடக்கம், நகராட்சிக்கான தேர்தல்.

இப்போது எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலை. இந்த முறை சதுர்த்தியை நன்றாக கொண்டாட வேண்டும். அருகிலும் தூரத்திலும் இருக்கக் கூடிய அன்பு செலுத்தும் அனைத்து மக்களும், உறவினர்களும் வந்து சேர்வார்கள். எதற்கும் எந்தவொரு குறையும் இருக்காது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் – இது எதுவுமே இல்லையென்றாலும் கூட, விக்னேஸ்வரனை சந்தோஷமடையச் செய்வது எப்படி பார்த்தாலும் நல்ல ஒரு விஷயம்தானே?

ஆனால், ஒரு விஷயத்தை சவுக்கார் நினைத்துப் பார்க்கவில்லை. பாபாவிற்கு வயதாகி விட்டது என்பதைத்தான். அந்த ஏழையின் சுருக்கங்கள் விழுந்த தோலைக் கொண்ட கைகளுக்கு களி மண்ணை வைத்து பணி செய்யக் கூடிய பலம் குறைவாக இருக்கிறது என்பதை.... இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் - அது ஒரு முக்கியமான விஷயமா? அப்படியும் நியாயமான ஒரு சந்தேகம் உதித்தது. சவுக்கார் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வார். நல்ல ஒரு தொகையையும் தருவார். அதற்குப் பிறகு ஏன் பாபா சிலையை உண்டாக்கக் கூடாது?

சவுக்கார் பொறுமையற்ற மனிதராக இருந்தார். அதைப் பார்த்து அவருடைய மனைவியும், பிள்ளைகளும் கூட சிரித்தார்கள். என்ன ஒரு பிடிவாதம்! ஆனால், அவருக்கு மனதில் சமாதானம் இருந்தது. சதுர்த்திக்கு இனி அதிக நாட்கள் இருக்கிறதா என்ன? இல்லை – எவ்வளவு சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது.

பாபா மீண்டும் அழைக்கப்பட்டார்.

சவுக்காரின் கேள்வியைக் கேட்கும்போதுதான், பாபாவிற்கு நினைவே வந்தது. அவர் என்ன கூறுவார்?

‘வேலை எந்த அளவில் இருக்கிறது?’

நல்ல கதை! அவர் ஒரு விஷயத்தை அப்படியே மறந்து விட்டிருக்கிறார். பாபாவிற்கு வெட்கமாக இருந்தது. வயதாகி விட்டாலும், ஒரு விஷயத்தை ஒப்படைத்தால், அதில் கவனம் இருக்க வேண்டாமா? வாழ்க்கையில் முதல் தடவையாக அப்படியொரு பிரச்னை உண்டாகியிருக்கிறது என்பதை நினைத்தபோதுதான், கிழவருக்கு மேலும் அதிகமாக கவலை உண்டானது.

சவுக்காருக்கு கோபம் உண்டானது. கடுமையான குரலில் அவர் கூறினார்:

‘நன்றி இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்தவை எதையும் மறக்கக் கூடாது.’

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel