
அதற்கு காஸ்ட்டிலின் எந்த பதிலும் கூறவில்லை. அதற்குப் பதிலாக தனக்குள் மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தவாறு வந்து கொண்டிருந்தான். அந்தப் பரந்து கிடக்கும் பள்ளத்தாக்கு வழியே அவர்கள் நீண்ட நேரம் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். வலது பக்கத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது. ஜிலின் நின்று சுற்றிலும் பார்த்தான். கைகளால் தடவியவாறு மலைமேல் ஏற ஆரம்பித்தான். ‘‘ச்சே!’’ - அவன் சொன்னான்: ‘‘நாம தப்பான வழியில வந்துட்டோம். வலது பக்கம் நாம ரொம்ப தூரம் வந்துட்டோம். இங்கோ இன்னொரு ‘அவுல்’ இருக்கு. இந்த கிராமத்தை மலைமேல இருந்து ஒரு தடவை நான் பார்த்திருக்கேன். நாம திரும்பவும் இடது பக்கம் இருக்குற மலை மேல ஏறணும். அங்கே ஒரு காடு இருக்கும்.’’ அதற்கு காஸ்ட்டிலின் சொன்னான்: ‘‘கொஞ்ச நில்லு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிறேன். என் பாதங்கள்ல ஒரே காயம். இரத்தம் வழிஞ்சிக்கிட்டு இருக்கு.’’ ‘‘அதற்காக கவலைப்படாதே, நண்பனே... அது சீக்கிரம் குணமாயிடும். நீ கொஞ்சம் வேகமாக நடக்கணும் என்னை மாதிரி.’’ ஜிலின் திரும்பி வேகமாக ஓடினான். இடது பக்கம் திரும்பி மலைமேல் ஏறி காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். காஸ்ட்டிலின் அவனுக்கு மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தான். அவன் தனக்குள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஜிலின் அவனைப் பார்த்து ‘‘சீக்கிரம்!’’ என்று சொல்லியவாறு படுவேகமாக மேலே போய்க்கொண்டே இருந்தான். அவர்கள் மலையின் மேற்பகுதியை அடைந்தார்கள். அங்கு ஜிலின் சொன்னதைப்போலவே ஒரு காடு இருந்தது. அவர்கள் காட்டிற்குள் நுழைந்தார்கள். முற்களுக்கு மத்தியில் அவர்கள் நடந்து சென்றார்கள். முற்கள் அவர்களின் ஆடைகளைக் கிழித்தன. கடைசியில் அவர்கள் ஒரு பாதைக்கு வந்து, அதில் நடக்க ஆரம்பித்தார்கள். ‘‘நில்லு...’’ அவர்கள் குளம்புச் சத்தம் அந்தப் பாதையில் ஒலிப்பதைக் கேட்டார்கள். சிறிது நேரம் நகராமல் சென்று எங்கிருந்து அந்தச் சத்தம் வருகிறது என்று கவனித்தார்கள். குதிரைகளின் காலடிச் சத்தத்தைப் போல இருந்த அது சிறிது நேரத்தில் நின்றது. அவர்கள் நடக்க ஆரம்பிக்க, மீண்டும் அந்தக் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்கள் நின்றதும், அந்தச் சத்தமும் நின்றது. ஜிலின் மெதுவாக ஊர்ந்து சென்று பார்த்தபோது, பாதையில் என்னவோ கருப்பாக ஒன்று நின்றிருந்தது. இங்கிருந்து பார்த்தபோது அது குதிரையைப்போல் இருந்தது. ஆனால், குதிரைதானா என்பதை இங்கிருந்து முடிவு பண்ண முடியவில்லை. அதன்மேல் மனிதனொருவன் அமர்ந்திருப்பதைப் போலவும் இருந்தது. ஒரு கனைக்கும் ஓசையும் ஜிலினின் காதில் விழுந்தது. ‘‘அது என்னவாக இருக்கும்?’’ என்று மெதுவான குரலில் தனக்குள் முணுமுணுத்தபடி அவன் மெதுவாக விசிலடித்தபடி சடக்கென்று பாதையிலிருந்து விலகி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தான். காடு முழுக்க எதுவோ ஒடியும் சத்தம் கேட்டது. கொடுவும் சூறாவளியொன்று புறப்பட்டு வந்து காட்டிலுள்ள மரங்களின் கிளைகளையெல்லாம் முறிப்பதைப் போல் அந்த ஓசை இருந்தது. காஸ்ட்டிலின் மிகவும் பயந்து விட்டான். அவன் தரையோடு தரையாகப் படுத்து விட்டான். ஆனால், ஜிலின் சிரித்தவாறு சொன்னான்: ‘‘அது வேறு யாருமல்ல; ஒரு மான். அது தன்னோட கொம்பால மரக்கிளைகளை ஒடிப்பதை நீ கேட்கவில்லையா? நாம அதைப் பார்த்து பயந்தோம். அது நம்மைப் பார்த்து பயந்திருக்கு.’’ அவர்கள் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள். நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட மறைந்து விட்டிருந்தன. காலை நெருங்க ஆரம்பித்தது. தாங்கள் செல்வது சரியான பாதையில்தானா, இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்கே சரியாகத் தெரியவில்லை. அந்த வழியாகத்தான் தன்னை டார்ட்டர்கள் கொண்டு வந்தார்கள் என்று நினைத்தான் ஜிலின். ரஷ்ய முகாமிற்குச் செல்ல வேண்டுமென்றால் இடையில் இன்னும் ஏழு மைல்கள் இருக்கின்றன என்பதையும் அவன் மனதில் எண்ணிப் பார்த்தான். ஆனால், எல்லாம் சரியாக நடக்குமா என்பதைப் பற்றி அவனால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இரவு நேரத்தில் ஒரு மனிதன் சர்வ சாதாரணமாக பாதையைத் தவறவிட்டுவிட முடியும். சிறிது நேரம் கழித்து அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். காஸ்ட்டிலின் தரையில் அமர்ந்தவாறு சொன்னான்: ‘‘நீ எப்படி நடக்கணும்னு நினைக்கிறியோ, அப்படி நட நான் இனிமேல் வர்றதா இல்ல. என்னால இதுக்கு மேல நடக்க முடியாது.’’ ஜிலின் அவனைத் தேற்ற ஆரம்பித்தான். ‘‘இல்ல... என்னால நிச்சயம் வரமுடியாது. என்னைப் புரிஞ்சிக்கோ...’’ அதைக் கேட்டு ஜிலினுக்கு பயங்கர கோபம் வந்தது. அவன் கடுமையான குரலில் அவனைப் பார்த்து சொன்னான்: ‘‘சரி... அப்படின்னா நான் மட்டும் தனியாப்போறேன்; சரிதானா?’’ அவ்வளவுதான்- காஸ்ட்டிலின் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டான். அவர்கள் மூன்று மைல்கள் நடந்திருப்பார்கள். காட்டிற்குள் பனிப்படலம் மிகவும் அடர்த்தியாகப் படர்ந்திருந்தது. அவர்களுக்கு முன்னால் ஒரு அடி தூரத்தைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை. நட்சத்திரங்கள் இல்லாததால், வானம் ஒளியே இல்லாமல் இருந்தது. அப்போது அவர்கள் தங்கள் முன் குதிரையின் குளம்படியோசை ஒலிப்பதைக் கேட்டார்கள். குளம்புச் சத்தம் கற்களில் பட்டு ஒலிப்பதை அவர்களால் உணர முடிந்தது. ஜிலின் தரையில் படுத்து தன்னுடைய காதால் அந்த ஒலியைக் கேட்டான். ‘‘நான் நினைச்சது சரிதான்... குதிரை மேல உட்கார்ந்து ஒரு மனிதன் நம்மை நோக்கி வந்துக்கிட்டு இருக்கான்!’’ அவர்கள் பாதையை விட்டு விலகி ஓட ஆரம்பித்தார்கள். புதருக்குள் மெதுவாக ஊர்ந்து சென்று ஒரு இடத்தில் மறைந்து நின்று என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஜிலின் புதரை நீக்கிக் கொண்டு பார்த்தான். டார்ட்டர் ஒருவன் ஒரு குதிரையின்மேல் அமர்ந்து கொண்டு மாடொன்றைத் துரத்தியவாறு தனக்குத்தானே ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். அவன் மிகவும் வேகமாக குதிரையில் பயணித்துக் கொண்டிருந்தான். ஜிலின் காஸ்ட்டிலினின் பக்கம் திரும்பினான். ‘‘கடவுள் அவனை நம்மைக் கடந்து போகும்படி செஞ்சிட்டார். சரி எழுந்திரு. நாம போவோம்.’’ காஸ்ட்டிலின் இருந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான். ஆனால், அவனால் நிற்க முடியவில்லை. மீண்டும் கீழே விழுந்தான். ‘‘என்னால முடியல. நான் சொல்றேன்- என்னால நடக்க முடியாது. என் உடம்புல அதற்கான சக்தி கொஞ்சமும் இல்ல.’’ அவன் மிகவும் பருமனாகவும், உடல் எடை அதிகமாகக் கொண்ட மனிதனாகவும் இருந்ததால், அவன் பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தான். பனிப்படலத்தால் உண்டான குளிர்ச்சியாலும் பாதங்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்ததாலும், அவன் கிட்டத்தட்ட நடக்க முடியாத நிலையில்தான் இருந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook