
அவர்: நாம ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமாகி நீ பேசத் தொடங்கிய பிறகு நான் அந்த வீடுகளின் வாசல்களில் இருக்கும் மரத்தூண்களின் சிதிலமான நிலையைப் பற்றித்தான் மனசுக்குள்ள சிந்திச்சேன். காலம் ஆச்சர்யப்படும் விதத்தில் அந்தத் தூண்களைக கொஞ்சம் கொஞ்சமா தின்னுக்கிட்டு இருந்துச்சு. அழிவின் அழகை நான் அப்போதான் பார்த்தேன்.
அவர்கள் இருவரும் பத்து அல்லது பன்னிரெண்டு மணி நேரங்கள் தொடர்ந்து உட்கார்ந்து குழந்தைகளைப் பற்றியோ இன்ஷுரன்ஸ் பாலிஸியைப் பற்றியோ டி.டி.ஏ ஃப்ளாட்டுகளைப் பற்றியோ அல்ல பேசிக் கொண்டிருந்தது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து எந்தெந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் பொதுவாக பேசினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
புதன்கிழமை (காப்பிக்கடை): இயற்கையும் மனிதனும்; மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, இயற்கையும் மனிதனும் என்று கூறப்படும் பொருத்தமின்மை.
வியாழக்கிழமை (பார்ஸி சுடுகாடு): இந்தியாவில் இடதுசாரி அமைப்புக்களின் எதிர்காலம்; கம்யூனிசமும் பாலுணர்வும் இலக்கியத்தில்; எதற்காக ஃபிடல் காஸ்ட்ரோ வெற்றி பெற்றார் என்பதையும் சேகுவாரே தோல்வியடைந்தார் என்பதையும்.
வெள்ளிக்கிழமை (பல இடங்களிலும் நடந்துகொண்டு): மனசாஸ்திரம்; ஃப்ராய்டில் இருந்து லக்கானுக்குள்ள தூரம்; சமூக அக்கறை கொண்டு சில செயல்கள் மூலம் அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி.
சனிக்கிழமை (ஒரு புதருக்குள் ஒளிந்து உட்கார்ந்துகொண்டு): நகரங்களில் எப்படி சேரிகள் உண்டாகின்றன என்பதைப் பற்றி; சேரிகளை ஒழிப்பதற்கான வழிகள்; சேரிகளும் விலை மாதர்கள் இருக்கும் தெருக்களும் சமூகத்தின் மனதில் மண்டிக்கிடக்கும் அழுக்குகளைப் போக்கும் அவுட்லெட்டுகளாக இருக்கின்றன என்ற கண்டுபிடிப்பு.
ஞாயிற்றுக்கிழமை (தோபிகாட்டில் தோபிகள் துணிகள் துவைப்பதைப் பார்த்தவாறு): அரசியல் கட்சிகள் பிழைப்பதற்கு மக்களின் வறுமை அவசியம் என்பது; மறைவிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சியாளர்கள் தங்களின் பாலுணர்வை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது; தோப்பில் பாஸியின் ‘மறைவு வாழ்க்கையின் நினைவுகள்’ என்ற நூலைப் பற்றி.
காப்பி கடையிலும் பார்ஸி சுடுகாட்டிலும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசியது எதற்காக என்பதையும் ஆராய்ந்து பார்த்து நாம் இந்த விஷயத்தை முடித்துக் கொள்வோம்.
கோவிந்தன்: அன்று நாங்க பேசினது காசியில் குளிக்கிற இடத்தில் இருக்கும் அசுத்தத்தைப் பற்றி; இந்து மதமும் அசுத்தமும்; அசுத்தம் கலந்த கங்கை நீரைக் கொண்டு ஆன்மாவில் இருக்கிற அழுக்குகளை நீக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் புத்திசாலித்தனத்தைப் பற்றி.
சில நேரங்களில் கோவிந்தன் மிகவும் அமைதியான மனிதனாகி விடுவார். அப்போது தன்னுடைய தோழியுடன்கூட அவர் ஒரு வார்த்தை பேசமாட்டார். மவுன விரதம் இருக்கும் அவரிடம் ஏதாவது கேட்பதாலோ அல்லது அவரிடம் ஏதாவது சொல்வதாலோ எந்தவிதப் பயனும் இருக்காது என்பதை நன்கு அறிந்திருந்த அவள் அவரைப்போலவே தானும் மவுனமாக இருந்து கொண்டு அவரோடு சேர்ந்து நகரத்தின் தெருக்கள் வழியே நடப்பாள். களைப்பு தோன்றும்போது அவர்கள் பாதையோரங்களில் நின்று பால் கலக்காத தேநீர் வாங்கிப் பருகி ஓய்வெடுப்பார்கள்.
அவள்: அது நகரத்தில் ஹிப்பிகள் வந்து இறங்கிய காலம். பட்டாம்பூச்சி கூட்டத்தைப் போல அவங்க நகரத்தில் வந்து குழுமிக் கொண்டிருந்தாங்க. பணத்தை இழந்த சில ஹிப்பிகளுக்கு நீங்க உதவி செஞ்சீங்க. நிகம்பாய் சுடுகாட்டிற்குப் பக்கத்துல சில பொறுக்கிப் பசங்க ஒரு பெண் ஹிப்பியை மானபங்கப்படுத்த முயற்சி செய்தப்போ திரைப்படங்கள்ல வர்ற கதாநாயகனைப்போல நீங்க அங்கே போயி அவளோட மானத்தைக் காப்பாத்தினீங்க....
அவர் அவளிடம்: அடுத்த வருடம் தீரச் செயலுக்கான தேசிய விருது எனக்குக் கிடைக்கும், நெஞ்சுல மெடலைத் தொங்கப் போட்டுக்கிட்டு நான் குடியரசு நாள் அணிவகுப்புல பந்தாவா நடந்து போவேன்னு நீ என்னைப் பார்த்து கிண்டல் பண்ணினே.
வயதாகி விட்ட கோவிந்தனுக்கு இருக்கும் ஒரு வருத்தம் தன்னுடைய இளமைக் காலத்தில் தான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்காரனைப் போல வாழவில்லை என்பதுதான். ஐம்பத்தெட்டாம் வயதில் மீண்டும் டில்லியில் வந்திறங்கி அதன் சிறிதும் மாற்றமில்லாத வறுமையையும் பசியையும் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மனதில் அசைபோட்டவாறு ரெக்ஸின் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு தெருவில் நடக்கும்போது ஒரு கம்யூனிஸ்ட்காரனாக வாழவேண்டியதன் தேவையைப் பற்றி மீண்டும் அவர் சிந்திக்கலானார். பெண்களுடன் சேர்ந்து இங்குமங்குமாய் நடந்து கொண்டு தத்துவ சாஸ்திரங்களைப் பற்றி பேசிக் கொண்டும் தன்னுடைய அருமையான நாட்கள் முழுவதையும் வீணாக்கி விட்டோமே என்ற சிந்தனை இந்த வயதான காலத்தில் அவரிடம் ஒரு பரிதாபமான நிலையை உண்டாக்கியது. அவரின் சில நண்பர்கள் தங்களின் சொந்த கொள்கைகளின் வெற்றிக்காக வாழ்க்கையையே இழந்தார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் போலீஸ்காரர்களின் அடி, உதைகளையும் பிற்காலத்தில் மத வெறியர்களின் கத்தி குத்துக்களையும் வாங்கினர். அவருடைய உற்ற நண்பனான உபேந்திரனின் மனைவி லதாவிற்கு வாழ்க்கையில் ஒருமுறை கூட உடலுறவு என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. காரணம்- இரவு படுக்கையில் படுத்தவாறு உபேந்திரன் சிந்தித்ததும், சொல்லிக்கொண்டிருந்ததும் பட்டினியை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பதைப் பற்றித்தான். இருந்தாலும் லதா பிரகாசமான முகத்தைக் கொண்டவளாகவும் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவளுமாக இருந்தாள்.
கோவிந்தன் உபேந்திரனிடம்: நீ அவளுக்குச் சிரிப்பைத் தராவிட்டாலும் அவள் எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்காளே, அது எப்படி?
உபேந்திரன் கோவிந்தனிடம்: சிரிப்புக்கும் அழுகைகளுக்கும் அப்பால் இருப்பதுதான் ஒரு உண்மையான லட்சியவாதியின் வாழ்க்கை. இலட்சியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் என்னுடைய இந்த சோகங்கள் நிறைந்த வாழ்க்கையில் கோவிந்தா, உன்னுடைய அல்லது லதாவின் தனிப்பட்ட சிரிப்பையும் அழுகையையும் நான் ஒரு பொருட்டாகவே நினைக்கல.
இந்த ஒரு துளியில்தான் கம்யூனிஸமும் ஆன்மிகமும் சந்திக்கின்றன என்று கோவிந்தன் ருஸ்ஸியிடம் சொன்னார்:
FREDERIC ARTENSEN: WHAT DOES LIFE STAND FOR?
WILLIAM HEYSENTBERG: THE WHOLE MEANING OF LIFE IS SUMMED UP IN A SINGLE WORD-SHIT
GORDENSTEIN: AGREED, BUT ADD A PINCH OF SALT AND PEPPER.
இன்று போலீஸ்காரர்கள் உபேந்திரனின் பாதுகாப்பாளர்கள். காரணம்- மத வெறியர்களின் கத்திகள் அவன் நெஞ்சுக்கு நேராக பிரகாசமாக நீட்டிக் கொண்டிருக்கின்றன.
செயல்களால் அல்ல, சிந்தனைகளின் மூலம்தான் நாம் வாழ்க்கைக்கு ஒரு விளக்கம் தர முடியும் என்று இளைஞனான கோவிந்தன் முழுமையாக நம்பினார். அந்தப் புரிந்து கொள்ளல் மூலம்தான் அவர் தனக்குள்ளேயே ஒரு சிந்தனையைத் தோற்றுவித்து வளர்த்துக் கொண்டிருந்தார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook