
கோவிந்தன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
சிறிது நேரம் சென்றதும் கோவிந்தன் ஒரு சிறு குழந்தையைப்போல சொன்னார்: “நான் ருஸ்ஸியைப் பார்க்கணும்.”
“இன்னைக்கு அவளைப் பார்க்க முடியாது” - நண்பர் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். “ஆறு மணிவரைத்தான் பார்வையாளர்களுக்கான நேரம்.”
தனக்கும் ருஸ்ஸிக்கும் இடையில் நேரமோ காலமோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. கோவிந்தன் ஒரு சிறு குழந்தையைப்போல பிடிவாதம் பிடித்தார். சற்று முன்பு வயதான கோவிந்தன் இளைஞனாக மாறினாரோ, அதேபோல இப்போது இளைஞனான கோவிந்தன் குழந்தையாக மாறினார்.
அந்த மனிதர் குழந்தை கோவிந்தனின் பிடிவாதத்தைப் பார்த்து அவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார். வெயில் மங்கலாகிக் கொண்டிருந்த பலதரப்பட்ட தெருக்கள் வழியாக கார் ஓடிக்கொண்டிருந்தது. வசதி படைத்த அந்த நண்பர் தன்னுடைய விலை மதிப்புள்ள காரை மிகவும் கவனத்துடன் ஓட்டினார். பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்துவிட்டது என்ற விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அத்தகைய சட்டங்கள் எதுவும் பணக்காரர்களைப் பொறுத்தவரை இல்லை என்பதையும் அவர் அறியாமல் இல்லை. மூடிக்கிடக்கும் எந்தக் கதவுகளையும் திறப்பதற்கு அவரால் முடியும். அவருடைய நடவடிக்கைகளிலிருந்து கோவிந்தன் புரிந்து கொண்ட விஷயம் இது.
ஒரு பழைய சிதிலமடைந்து போன வீட்டிற்கு முன்னால் போய் கார் நின்றது. நண்பர் உள்ளே போய், உடனே திரும்பி வரவும் செய்தார்.
“கோவிந்தா, நான் உங்களை ருஸ்ஸிக்குப் பக்கத்துல அழைச்சிட்டு வந்துட்டேன்” - அந்த மனிதர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “இனி நான் போறேன்.”
அவர் எதற்காக அப்போது சிரித்தார் என்பதை கோவிந்தனால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிரிக்க வேண்டிய இடத்தில் அல்ல அவர் சிரிப்பது என்ற உண்மையையும் அவர் ஏற்கனவே புரிந்து கொண்டிருந்தார்.
“எப்ப வேணும்னாலும் நீங்க என்னை வந்து பார்க்கலாம்.” - அவர் தொடர்ந்து சொன்னார்: “என் வீட்டுல வந்து நீங்க தங்கலாம்.”
பொருத்தமில்லாத இடங்களில் சிரிக்கும் அந்தப் பழைய நண்பர் கோவிந்தனிடம் விடைபெற்றுக் கொண்டு காரை ஓட்டியவாறு திரும்பிப் போனார்.
கோவிந்தன் கேட்டுக்கு முன்னால் உள்ளே பார்த்தவாறு நின்றிருந்தார்.
கேட்டுக்கு மேலே பிறைச் சந்திர வடிவத்தில் ஒரு பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. கோவிந்தன் இதயம் ‘டக்டக்’கென்று துடிக்க அந்தப் பெயர்ப்பலகையை வாசித்தார். டில்லி ஆளுகைக்குட்பட்ட ‘நாரி நிகேதன்’ அது. அதாவது- பாதை தவறிப் போனவர்களுக்கும் அனாதைப் பெண்களுக்குமான காப்பகம்.
கோவிந்தன் கேட்டைக் கடந்து மெதுவாக நடந்தார். அவளுடைய மனம் உள்ளே அழுது கொண்டிருந்தது. பார்வையாளர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த அறையில் சென்று அவருடைய தலை மார்பு மீது தொங்கிக் கொண்டிருந்தது.
அவர் யாரோ நடந்து வரும் மென்மையான காலடி சத்தத்தைக் கேட்டார்.
அவர் முகத்தோடு முகம் பார்த்தவாறு நின்றார். அவளுடைய முகத்தில் எந்த ஒரு உணர்ச்சி வேறுபாடும் இல்லை. “அவள் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லையா?” - கோவிந்தன் ஒரு நடுக்கத்துடன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.
“ஹே, கோவிந்தா!”
மேலேயிருந்து வந்த குரலைக் கேட்ட வயதான கோவிந்தன் வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தினார்.
‘தத்துவங்கள் பிறக்கும், இறக்கும். இறக்காமல் இருப்பது மனதில் இருக்கும் கருணை மட்டும்தான்.”
கோவிந்தன் சிலையென காதைத் தீட்டிக்கொண்டு நின்றிருந்தார்.
‘மனதில் இருக்கும் கருணை இல்லாமல் போய்விட்டால், அதற்குப் பிறகு நீ இல்லை...’ - அசரீரி தொடர்ந்தது: “கருணை உனக்கு ஒரு ஒளியாக இருக்கட்டும்.”
வானத்தை நோக்கியிருந்த அவரின் பார்வை திரும்பவும் அவள் மீது வந்து நின்றது.
அவர் அவளின் மென்மையான கையைத் தன் கையால் தொட்டார். அவளுடைய மேற்தோல் காய்ந்து உதிர்ந்துபோய்க் காணப்பட்டது. அவளின் தலையும், முகமும் வாடிச் சுருங்கிப்போய் இருந்தது. அவர் அவளின் கையை மெதுவாக அழுத்தியபோது, அவள் எச்சிலை விழுங்கினாள்.
“இந்த ஒரு வாழ்க்கையை மட்டும்தான் நாம வீணாக்கிட்டோம். வாழுறதுக்கு இன்னும் எவ்வளவோ பிறவிகள் இருக்கு. வரப்போற பிறவிகளுக்கு உன்னை அழைச்சிட்டுப் போகத்தான் நான் வந்திருக்கேன்.”
படிகளிலிறங்கும்போது உடம்பில் சுற்றியிருந்த துணியில் சிக்கி அவள் விழ இருந்தாள். அவர் அப்போது அவளைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டார்.
“இடிந்து விழும் காலம் முடிந்து விட்டது.” - அவர் சொன்னார்: “இடிபாடுகளுக்கு இடையிலிருந்து நாம் ஒரு புதிய சிறு உலகத்தை உருவாக்கி உயர்த்துவோம்.”
பிறைச்சந்திர வடிவத்திலிருந்த பெயர்ப் பலகைக்குக் கீழே நடந்து அவர்கள் வெளியே வந்தார்கள். வெளியில் இருட்டு இருந்தாலும், ஆகாயத்தில் மங்கலான வெளிச்சம் இருந்தது. அந்த வெளிச்சத்தின் உதவியுடன் அவர்கள் மெதுவாக முன்னோக்கி நடந்தார்கள்...
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook