
நடு இரவு ஆனபோது பப்பு காய்ச்சலுடனும், இருமலுடனும் அங்கு வந்தான். வீட்டிற்குள் நுழைந்தபோது இருமல் மேலும் அதிகமானது. அங்கிருந்த மரத்தூணைப் பிடித்துக் கொண்டு அவன் இருமிக் கொண்டேயிருந்தான். மூச்சு விடுவதற்கே அவன் மிகவும் சிரமப்பட்டான். பின்னால் நின்றவாறு கல்யாணி அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மனதிற்குள் வேதனை அதிகமாக இருந்தது. அவள் அவனைத் தாங்கிப் பிடித்து உள்ளே கொண்டுபோய் படுக்க வைத்துவிட்டு, வெந்நீர் கொண்டு வருவதற்காகச் சமையலறைக்குள் சென்றாள்.
லட்சுமி தெற்குப் பக்க அறையிலிருந்து வடக்குப் பக்கமிருந்த அறைக்கு வந்தாள். பப்பு மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டே கேட்டான்: ‘‘இதுவரை ஏன் தூங்காம இருக்கே?”
அவள் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
‘‘தூங்காம இருக்கக் கூடாது. போய்த் தூங்கு...”
அவள் என்னவோ கூற முற்படுவதைப் போல அவனுடைய முகத்தையே பார்த்தாள். அவன் கேட்டான்: ‘‘என்ன! ஏதாவது சொல்லணுமா?”
‘‘எனக்கு ஒரு புதுப் புடவை வேணும்.”
‘‘உன்கிட்ட புடவை இல்லையா?”
பச்சை நிறத்துல ஒரு புதுப் புடவை வேணும். பள்ளிக்கூடத்துல ஆண்டு விழாவுக்குக் கட்டுறதுக்கு.”
பப்புவின் கண்கள் மூடின. அவன் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்திருந்தான். அவனுடைய மனதில் பலவிதப் போராட்டங்கள். அவன் கண்களைத் திறந்தான்: ‘‘எப்போ வேணும்?”
‘‘நாளைக்கு நாளை மறுநாள் ஆண்டு விழா.”
அவன் பிறகும் சிறிது நேரம் கண்களை மூடிப் படுத்திருந்தான். அவன் கண்களைத் திறந்தான்: ‘‘ம்... நாளைக்குப் பார்க்கலாம். போய் தூங்கு...”
அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவன் தூங்கவில்லை. இருமிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ‘அதற்கு என்ன வழி?’ ‘அதற்கு என்ன வழி?’ என்று தன் மனதிற்குள் அவன் கேட்டுக் கொண்டேயிருந்தான். கல்யாணியும் உறங்காமலே படுத்திருந்தாள்.
‘‘அதற்கு என்ன வழி?” - அவன் உரத்த குரலில் கேட்டான்.
‘‘எதுக்கு?” - கல்யாணி கேட்டாள்.
‘‘லட்சுமிக்கு ஒரு புது பச்சைப் புடவை வேணுமாம்.”
‘‘புது பச்சைப் புடவையா?” - அவள் எழுந்தாள்: ‘‘எதுக்கு இப்போ அவளுக்குப் பச்சைப் புடவை?”
‘‘பள்ளிக்கூடத்துல என்னவோ நடக்குதாம். அதுக்கு உடுத்திக்கிட்டு போகணுமாம்.”
‘‘தேவையில்லை... பச்சைப் புடவை உடுத்தாமலே அங்கே போனா போதும். அவ கேக்குற ஒவ்வொண்ணையும் நீங்க வாங்கிக் கொடுத்துக்கிட்டேதானே இருக்கீங்க! அதுக்குப் பிறகும் அது வேணும். இது வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தா...”
‘‘மெதுவா பேசணும்... அவ காதுல விழுந்திடப் போகுது.”
‘‘விழுந்தா என்ன?”
‘‘அவ மனசு வேதனைப்படும்.”
‘‘மத்தவங்க மனசு வேதனைப்படாதா? மத்தவங்க உடம்பு வலிக்காதா? இதை எல்லாம் அவ உணர வேண்டாமா?”
‘‘பேசாம இருக்கணும். என்கிட்ட இல்லாம அவ வேற யாருக்கிட்ட கேட்பா? அவ விருப்பப்படுறதை வாங்கித் தர்றதுக்கு என்னைத் தவிர வேற யார் இருக்குறது? அவளுக்கு வாங்கித்தர முடியலைன்னா, பிறகு எதுக்கு நான் வேலை செய்யணும்? அவள்... அவள்...” இருமல் வார்த்தைகளைத் தடை செய்தது.
‘‘தெய்வமே! - கல்யாணி மேல்நோக்கிப் பார்த்துக் கைகளைக் கூப்பினாள். பொழுது புலர்வதற்கு முன்பே அவன் எழுந்து விட்டான்:
‘‘அதுக்கு என்ன வழி?”
‘‘அதுக்கு என்ன வழி?” - கல்யாணி அதே கேள்வியைத் திரும்பக் கேட்டாள்.
திறந்து கிடந்த ஜன்னல் வழியாகக் கிழக்குத் திசை வானத்தின் விளிம்பைப் பார்த்தவாறு அவன் அமைதியாக இருந்தான். திடீரென்று என்னவோ கூற நினைப்பதைப் போல கல்யாணி அவனைப் பார்த்தாள். அவளுடைய உதடுகள் அசைந்தன. ஆனால், அவள் எதுவும் கூறவில்லை.
‘‘பப்பு கேட்டான்: ‘‘என்ன, சொல்ல வந்தது என்ன?”
‘‘என் கையில...” - பாதி சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
ஆசை கலந்த ஒரு மெல்லிய ஒளி பப்புவின் கண்களில் தோன்றியது. அவன் ஆர்வத்துடன் கேட்டான்: ‘‘கையில என்ன இருக்கு? சொல்லணும். முழுசா சொல்லணும்.”
‘‘என் கையில் கொஞ்சம் ரூபாய் இருக்கு.”
‘‘ரூபாயா? - அவன் சந்தோஷத்துடன் எழுந்தான்: ‘‘அதை எதுக்கு வச்சிருக்கே?”
‘‘மருந்து வாங்குறதுக்காக வச்சிருக்கேன்.”
‘‘யாருக்கு மருந்து? எனக்கா?”
‘‘தினமும் இப்படி காய்ச்சலும் இருமலுமா இருக்க முடியுமா? டாக்டர்கிட்ட சொல்லி மருந்து வாங்கணும்.”
அதைக் கேட்டு அவன் சிரித்தான்: ‘‘இந்தக் காய்ச்சலும் இருமலும் எனக்குப் பிரச்சினையா? அது குணமாயிடும். பணத்தை இங்கே தா. அவளுக்கு நான் புடவை வாங்கித் தந்திடுறேன்.
ஆண்டு விழா நாள் வந்தது. பள்ளிக்கூடமும் அதன் சுற்றுப் பகுதிகளும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களும் மாணவிகளும் விருந்தினர்களும் விழாவிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
எல்லா விஷயங்களிலும் லட்சுமி இருந்தாள். மாணவிகளை ஒழுங்குப்படுத்துவது, ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்வது - எல்லாமே அவள் தான். பச்சை நிறப் புடவை உடுத்தி, முடியில் பூமாலை சூடி, மிடுக்கான ஒரு புன்னகையுடன் நடமாடிக் கொண்டிருந்த அவள் அங்குக் கூடியிருந்த எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தாள் என்பதே உண்மை.
நிகழ்ச்சி நிரலில் முதலில் இடம் பெற்றிருந்தது இசை நிகழ்ச்சி. மூன்று மாணவிகள் சேர்ந்து வரவேற்புப் பாடல் பாடினார்கள். பிறகு லட்சுமியின் இசை. லட்சுமி மேடையில் ஏறினாள். அரங்கில் சந்தோஷமயமான ஒரு ஆரவாரம் உண்டானது. தலைமை பீடத்திற்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த புல்லால் ஆன பாயில் அவள் சப்பணமிட்டு அமர்ந்தாள். அரங்கு படு அமைதியாக இருந்தது.
அடக்கியும் அடங்காத இருமல்! லட்சுமியின் கண்கள் அரங்கின் மூலையை நோக்கின. பப்பு தன் இரண்டு கைகளாலும் வாயை மூடி இருமலை அடக்க வீணாக முயற்சித்துக் கொண்டிருந்தான். அடுத்த நிமிடம் அவளுடைய முகம் இருண்டு போனது. அது இரண்டு மூன்று நிமிடங்களுக்குத்தான்... மீண்டும் மிடுக்கான அந்தப் புன்சிரிப்பு அவளுடைய முகத்தில் தோன்றியது.
லட்சுமி பாடலைப்பாட ஆரம்பித்தாள். தொண்டை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் இருமவில்லை. சுருதி சேர்ப்பவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவள் பாட ஆரம்பித்தாள். அவள் முறைப்படி சங்கீதம் கற்றவள் இல்லை. சங்கீத அரங்குகளில் பாடிய அனுபவமும் அவளுக்கு இல்லை. பிறவியிலேயே அமைந்த திறமையும், பல இடங்களிலும் காதால் கேட்ட அறிமுகமும் மட்டுமே அவளுக்கு மூலதனமாக இருந்தன. ஒன்றிரண்டு நிமிடங்களில் அந்த அரங்கே இசை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. அப்படியொரு சூழலை அவள் உண்டாக்கினாள். மலைச்சரிவில் புற்களையும், செடிகளையும் தடவியவாறு பாய்ந்தோடி வரும் வசந்த கால நதியைப் போல, அவளுடைய பாடல் அரங்கில் கூடியிருந்தவர்களின் இதயங்களில் இசை வெள்ளத்தை ஓடச் செய்து கொண்டிருந்தது. மொத்த அரங்கும் எந்தவித அசைவும் இல்லாமல் படு அமைதியாக இருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook