
சுராவின் முன்னுரை
1944-ஆம் ஆண்டில் பி.கேசவதேவ் எழுதிய புதினம் ‘ஓடையில் நின்னு’ (Odaiyil Ninnu). கை ரிக்ஷா இழுக்கும் பப்பு என்ற ஈர மனம் கொண்ட மனிதனை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்தக் கதை பின்னர் மலையாளத்தில் திரைப்படமாகவும் வந்தது. சத்யன் அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்ற அப்படம் பின்னர் தமிழிலும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.
1971-ஆம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க, ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய அப்படத்தின் பெயர் ‘பாபு’(Babu). கருப்பு - வெள்ளையில் தயாரான அப்படத்தில் நடிகர் திலகம் ஒரு கை ரிக்ஷாக்காரராகவே வாழ்ந்திருந்தார் என்பதுதான் உண்மை. உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ‘பாபு’ படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கத்தில் பார்த்து, படம் முழுக்க நான் அழுதுகொண்டே இருந்தது இப்போது என் ஞாபகத்தில் வருகிறது. நான் மட்டுமல்ல, படம் பார்த்துக் கொண்டிருந்த எல்லாருமே அழுது கொண்டிருந்தார்கள். அந்த அளவிற்கு சிவாஜி படம் பார்ப்போரைக் கண்ணீரில் குளிப்பாட்டினார். முழுக்க முழுக்க சோகக் காட்சிகள் நிறைந்த அப்படம் திரையிடப்பட்ட எல்லா திரையரங்குகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் இடம் பெற்ற ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ என்ற பாடலை எத்தனை வருடங்கள் ஆனாலும், நம்மால் மறக்கத்தான் முடியுமா ? பி. கேசவதேவ் புதினத்தில் படைத்த ரிக்ஷாக்காரருக்கு நூறு சதவிகிதம் சிவாஜி உயிர் கொடுத்திருந்தார்.
இளம் வயதில் திரைப்படமாகப் பார்த்த கதையை இப்போது ‘பப்பு’ (Pappu) என்ற பெயரில் மொழி பெயர்க்கும் போதும், பல இடங்களில் என்னை மறந்து நான் அழத்தான் செய்கிறேன். பப்பு என்ற அந்த நல்ல மனம் கொண்ட மனிதனை கோவில் கட்டி வணங்க வேண்டும் போல் இருக்கிறது. அவனைப் படைத்த கேசவதேவ்வின் எழுத்தாற்றலுக்கு முன்னால் தலை குனிந்து தொழ வேண்டும் போல் இருக்கிறது. தன்னைப் பற்றி சிறிதும் எண்ணாமல், பிறர் மகிழ்ச்சியில் இன்பம் காணும் பப்புவைப் போன்ற மனிதர்கள் இந்த உலகில் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்களேயானால், இந்த உலகம் எவ்வளவு இன்பம் நிறைந்ததாக இருக்கும் !
என் இதயத்தில் பப்பு நிரந்தரமாக வாழ்வான். இதைப் படிக்கும் ஒவ்வொருவரின் இதயங்களிலும்தான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் சாகா வரம் பெற்று நம்முள் வாழ்ந்து கொண்டே இருப்பான் என்பது நிச்சயம்.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook