
அவள் கூடை கிடந்த இடத்தை நோக்கி ஓடினான்.
‘‘வீட்டுக்குப் போனா, அம்மா என்னை நல்லா அடிப்பாங்க” அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே கீழே கிடந்த அரிசியைப் பொறுக்க ஆரம்பித்தாள்.
பப்பு சிலையென அந்தச் சிறுமியைப் பார்த்தவாறு நின்றிருந்தான். கடந்த பதினெட்டு மாதங்களாக அவன் ரிக்ஷா இழுத்துக் கொண்டிருக்கிறான். இந்த மாதிரியான ஒரு சம்பவம் இப்போதுதான் முதல் தடவையாக நடக்கிறது. அந்தச் சிறுமி மீது பரிதாப உணர்ச்சி தோன்றியது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ரிக்ஷாக்காரன் என்ற நிலையில் தான் இதுவரை வாங்கியிருந்த நல்ல பெயருக்கு ஒரு களங்கம் உண்டாகி விட்டதே என்ற வருத்தமும் அவனைப் பாடாய்ப்படுத்தியது.
‘‘வண்டி இப்போ போகும்” - அந்த பயணி சொன்னான். பப்பு அப்போதுதான் சுய உணர்விற்கு வந்தான். பயணியைப் புகை வண்டி நிலையத்தில் கொண்டு போய்விட வேண்டும். அந்தச் சிறுமியை அமைதிப்படுத்த வேண்டும். அவன் தர்மச்சங்கடமான நிலையில் இருந்தான். அவன் சிறுமியைப் பிடித்துத் தூக்கினான். ‘‘அரிசி போனா போகட்டும் குழந்தை.... அழாதே. நான் அரிசி வாங்கித் தர்றேன்.”
‘‘ராத்திரி சாப்பாட்டுக்கு உள்ள அரிசி அது. அம்மா என்னை அடிப்பாங்க.”
‘‘உன்னை அடிக்க மாட்டாங்க. அரிசி, உப்பு, மிளகாய் எல்லாத்தையும் நான் வாங்கித் தர்றேன். நீ கொஞ்சம் தள்ளி நில்லுடா, கண்ணு. நான் இதோ கொஞ்ச நேரத்துல வந்திர்றேன்.” அவன் அவளைச் சாலையின் ஒரு ஓரத்தில் நிற்க வைத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு ஓட்டமாக ஒட ஆரம்பித்தான்.
அந்தச் சிறுமி அப்போதும் அழுகையை நிறுத்தவில்லை. தூரத்தில் நின்றிருந்த தெருப் பையன்கள் எல்லோரும் அவளைச் சுற்றிக் கூட்டமாக நின்றிருந்தார்கள். அவர்கள் பரிதாபம் மேலோங்க அவளைப் பார்த்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். யாருடைய ரிக்ஷா அவள்மீது மோதியது. அவள் எங்கே விழுந்தாள், ஏதாவது காயம் உண்டானதா, எவ்வளவு அரிசி இருந்தது, வீடு எங்கே இருக்கிறது, அவளின் பெயர் என்ன - இப்படி பல விஷயங்களையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் எதுவும் பேசவில்லை. சிதறிக் கிடந்த அரிசியைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
நடந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஒரு பையன் சொன்னான்: ‘‘அந்தச் சிறுமியை இடித்துக் கீழே தள்ளிவிட்டது பப்புவின் ரிக்ஷாதான்” என்று. அதை மற்ற சிறுவர்கள் சிறிதுகூட நம்பவில்லை. பப்புவின் ரிக்ஷா இதுவரை யார் மீதும் இடித்ததில்லை. - இடிக்கவும் செய்யாது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. அதைப் பற்றி அவர்களுக்குள் பலமான வாதங்களும் எதிர்வாதங்களும் நடந்தன. கடைசியில் பப்புவின் ரிக்ஷாதான் இடித்தது என்று ஒரு பிச்சைக்காரப் பெண் சாட்சி சொன்னாள். அதன் மூலம் அங்கு நடந்த வாக்குவாதம் ஒரு முடிவுக்கு வந்தது. பப்பு உடனே திரும்பி வருவான் என்றும், அவன் அந்தச் சிறுமிக்கு அரிசி வாங்கித் தருவதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான் என்ற விஷயத்தையும் அந்தப் பிச்சைக்காரி அவர்களிடம் சொன்னாள். அதுவும் ஒரு மாறுபட்ட கருத்தை அங்கு உண்டாக்கிவிட்டது.
‘‘ஓ... சும்மா அப்படிச் சொல்லியிருப்பான்...” என்று ஒருவன் சொன்னான்.
‘‘குளத்துல மூழ்கி கிணற்றுல எழுந்திரிக்கிற ஆளாச்சே, பப்பு” - இது இன்னொரு மனிதனின் கருத்து.
அவர்கள் பல வகைகளிலும் வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருந்ததை அந்தச் சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மனதிற்குள்ளும் அதே மாதிரியான ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அருகில் நின்றிருந்த ஒரு பையனிடம் அவள் கேட்டாள்: ‘‘உனக்கு அந்த ஆளைத் தெரியுமா?”
‘‘ம்... தெரியும்... சொன்னா சொன்னபடி நடக்குற ஆளுதான்.”
அதைக் கேட்டு இன்னொருவன் அவனைப் பலமாக எதிர்த்தான்.
‘‘சொன்னா சொன்னபடி நடக்குற ஆளா அவன். உனக்கு எப்படி அது தெரியும்டா?”
‘‘அந்த ஆளை இனிமேல் பார்க்கணும்னா, ஒரு வருடம் பொறக்கணும்”- வேறொருவன் சொன்னான்.
அதைக் கேட்டு அந்தச் சிறுமி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். ‘‘இரவு சாப்பாட்டுக்கான அரிசி அது. அம்மா என்னைக் கொன்னுடுவாங்க.”
‘‘உங்களுக்கு இங்கே என்னடா வேலை?” என்று கூறியவாறு பப்பு அப்போது அங்கு வந்தான். அவனைப் பார்த்ததும் எல்லா பையன்களும் விலகி நின்றார்கள். அவன் அவளுடைய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரையும் உடம்பில் இருந்த அழுக்கையும் கையால் துடைத்து விட்டான். பரிதாபம் மேலோங்க அவன் கேட்டான்: ‘‘நீ இன்னைக்கு ஏதாவது சாப்பிட்டியா?”
‘‘ம்... மத்தியானம் ஒரு சட்டி நிறைய பச்சைத் தண்ணி குடிச்சேன்.”
‘‘வா...” - அவன் நடந்தான். கூடையை எடுத்துக் கொண்டு அவள் அவனுக்குப் பின்னால் நடந்தாள்.
ஒரு கடையில் பப்பு ஆறு பழங்களை வாங்கி அவளின் கைகளில் தந்தான். ஆறு பழம் - நல்ல தரமான ஆறு பாளேங்கோடன் பழம்! அவளுடைய வறண்டு போயிருந்த உதடுகளில் புன்னகை மலர்ந்தது. பழங்களைக் கூடைக்குள் போட்ட அவள், கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
‘‘என்ன, நீ அந்தப் பழத்தைச் சாப்பிடலையா?”
‘‘வீட்டுக்குப் போயி சாப்பிட்டுக்குறேன்.” - அவள் சிரித்தாள். அவனும் சிரித்தான்.
‘‘இப்போ சாப்பிட்டா என்ன?”
வீட்டுல அம்மா இருக்காங்க. அம்மாவும் நானும் சேர்ந்து சார்ப்பிடுறோம்.
அவன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அவன் கேட்டான்: ‘‘உனக்கு அப்பா இல்லையா?”
‘‘இறந்துட்டாரு.”
‘‘உனக்கு மூத்தவங்க, இளையவங்க யாரும் இல்லையா?”
‘‘நான் மட்டும்தான்.”
“உன் வீடு எங்கே இருக்கு?”
‘‘அங்கே...” - அவள் கையால் சுட்டிக் காட்டினாள். பப்பு அதைக் கவனிக்கவில்லை.
‘‘உன் பேர் என்ன?”
‘‘லட்சுமி.”
‘‘அம்மா பேர் என்ன?”
‘‘கல்யாணி...”
அவன் ஒரு கடையில் ஏறினான். அப்போது அவன் கேட்டான்: ‘‘அந்தக் கூடையில எவ்வளவு அரிசி இருந்துச்சு?”
‘‘ஒரு ஆழாக்கு. பிறகு... உப்பு, மிளகாய் எல்லாம் இருந்தது?”
ஒரு படி அரிசியும் அதற்குத் தேவையான உப்பும் மிளகாயும் தரும்படி பப்பு கடைக்காரனிடம் சொன்னான். லட்சுமி பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கூடையைக் கடைக்காரன் கையில் கொடுத்தாள். அவன் சாமான்களை எடுப்பதற்கு மத்தியில் லட்சுமி பப்புவிடம் கேட்டாள். ‘‘இதை எங்கே வாங்கினேன்னு அம்மா கேட்டா, நான் என்ன சொல்றது?”
‘‘நீ என்ன சொல்வே?”
‘‘என்ன சொல்லணும்?”
‘‘உண்மையைச் சொல்லணும்.”
‘‘பேர் என்ன?”
‘‘பப்பு.”
‘‘பப்பு உங்க வீடு எங்கே இருக்கு?”
‘‘எனக்கு வீடு இல்ல.”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook