Lekha Books

A+ A A-

பப்பு - Page 7

pappu

அவன் ஓடிக்கொண்டேயிருப்பான். இடது கையால் வண்டியை அழுத்திப் பிடித்துக் கொண்டு, வலது கையை அலட்சியமாக மணிக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு உடலை முன்னோக்கி இலேசாக வளைத்து தலையை உயர்த்தியவாறு வேகமாக அவன் பாய்ந்தோடும் காட்சி கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.

புகைவண்டி நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும், படகுத் துறையிலும், திரையரங்கு வாசலிலும், நீதிமன்ற வாசலிலும் - இப்படி எங்கெல்லாம் ரிக்ஷா தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் பப்பு கட்டாயம் போய் நிற்பான். புகை வண்டியும் பேருந்தும் படகும் எப்போது வரும், எப்போது போகும் என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். புதிய திரைப்படங்கள் வந்தால் அது எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓடும் என்பதும், எத்தனை மணிக்கு அது முடியும் என்பதும் அவனுக்கு நன்கு அத்துப்படியான விஷயங்கள். நீதிமன்றத்திற்குக் காரில் பயணம் செய்யும் வக்கீல்கள் எவ்வளவு பேர் என்பதும், நடந்து செல்பவர்கள் எவ்வளவு பேர் என்பதும் ரிக்ஷாவில் பயணம் செய்கிறவர்கள் எவ்வளவு பேர் என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் மற்ற ரிக்ஷாக்காரர்களைப் போல ஆட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்குமங்குமாய் அலைந்து திரிவதில்லை. அலட்சியமாகச் சிரித்தவாறு ரிக்ஷாவிற்கு முன்னால் அவன் நின்றிருப்பான். அவ்வளவுதான். பப்புவின் ரிக்ஷாவில் ஒரு தடவை ஏறிய ஆள் அதற்குப் பிறகு அவனுடைய ரிக்ஷாவைத்தான் தேடுவான்.

பப்புவிற்குத் தாராளமாகப் பணம் வந்து கொண்டிருந்தது. கையில் கிடைத்த பணத்தை எல்லாம் அவன் ஒரு தேநீர்க் கடைக்காரனிடம் கொடுத்து வைத்தான். உணவு, தேநீர், படுக்கை எல்லாமே அவனுக்கு அங்குதான். அவன் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த நண்பனாக இருந்தான் அந்தத் தேநீர்க் கடைக்காரன். பப்பு கொடுக்கும் பணத்திலிருந்து அவனுடைய செலவுக்கு ஆகும் தொகையைக் கழித்து மீதி இருக்கும் பணத்தை அவன் பத்திரமாக வைத்திருந்தான்.

ஒரு நாள் தேநீர்க் கடைக்காரன் பப்புவிடம் சொன்னான்: ‘‘பப்பு, எல்லா நாட்களிலும் இதே மாதிரி ரிக்ஷாவுக்கு வாடகை கொடுத்து வருவதுன்றது நஷ்டமான ஒண்ணாச்சே?”

‘‘எனக்கென்ன நஷ்டம்? கிடைக்குற காசுல ரிக்ஷா சொந்தக்காரனுக்கு ஒரு பகுதியைக் கொடுக்குறேன் அவ்வளவுதான்.”

‘‘சொந்தத்துல ரிக்ஷா இருந்தா வாடகை தர வேண்டியது இல்லையே?”

‘‘சொந்தத்துல ரிக்ஷா வேணும்னா அதற்குப் பணம் வேண்டாமா?”

‘‘வேணும்.”

‘‘பணத்துக்கு எங்கே போறது?”

‘‘பணம் இங்கே இருக்கு.”

‘‘உனக்கு எங்கேயிருந்து பணம் வந்தது?”

‘‘நீ கொண்டு வந்து தந்ததுதான்!”

‘‘எனக்கு ஆகற செலவுக்குத்தானே நான் பணம் தந்தேன்?”

‘‘உன் செலவு போக மீதி இருக்கு!”

‘‘அது ஒரு ரிக்ஷா வாங்குற அளவுக்கு இருக்குமா என்ன?”

‘‘இருக்கும். ஒரு ரிக்ஷாவை விலை பேசி வச்சிருக்கேன். நாளைக்கு அதை நாம வாங்கலாம்.”

மறுநாள் பப்பு தன்னுடைய சொந்த ரிக்ஷாவுடன் சென்றான்.

4

மாலை நேரம். சாலை மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. கார்கள், பேருந்துகள், ஜட்கா வண்டிகள், மாட்டு வண்டிகள், ரிக்ஷாக்கள்.... புதுமையின் இளமையும் பழமையின் முதுமையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் உரசிக் கொண்டும், வேகமாகப் பாய்ந்து கொண்டும் மெதுவாக ஊர்ந்து கொண்டும் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு நடுவில் வாழ்க்கை ததும்பி உயர்ந்து கொண்டும், பதுங்கி ஒளிந்து கொண்டும், சாய்ந்தும், சரிந்தும், சிரித்துக் கொண்டும் அழுதுகொண்டும் நீங்கிக் கொண்டிருந்தது.

பப்புவின் ரிக்ஷா பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் மத்தியில் மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. அவனுடைய வலது கை மணிக்கு அருகில் இருந்தாலும், அதை அவன் பயன்படுத்தவில்லை. வாகனங்களையும், சாலையில் நடந்து செல்வோரையும் கடந்து அவன் தன்னுடைய ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு ஓடும் காட்சி உண்மையிலேயே ஒரு அற்புதமான காட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

ரிக்ஷாவில் அமர்ந்திருப்பவர்கள் எங்கே வாகனங்களுடன் மோதி விபத்து உண்டாகிவிடப் போகிறதோ என்று பயப்படுவார்கள். சாலையில் நடந்து செல்பவர்கள் எங்கே ரிக்ஷா தங்கள் உடல்மீது வந்து ஏறி விடப் போகிறதோ என்று நினைப்பார்கள். எல்லோர் மீதும் தொட்டும் தொடாதது மாதிரியும் ரிக்ஷாவை மிகவும் அலட்சியமாக இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக் கொண்டு சிரித்தவாறு பப்பு போய்க்கொண்டிருப்பான். எதைப் பார்த்தும் பயப்படாதவர்களால் மட்டுமே அதைப் பார்க்க முடியும். பப்பு எதைப் பார்த்தும் பயப்படாதவன்.

அந்த மாலை நேரத்தில் படகுத் துறையிலிருந்து புகை வண்டி நிலையத்திற்கு ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு பப்பு ஓடிக் கொண்டிருந்தான். புகை வண்டி ப்ளாட்ஃபாரத்திற்கு வந்து சேர்ந்து விட்டது. அங்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே அது நிற்கும். பப்பு பேருந்து நிலையத்தை அடைந்தான். அங்கிருந்து புகை வண்டி நிலையத்திற்கு மூன்று நிமிடங்கள் ஓட வேண்டும் புகை வண்டியில் ஏற்றி விடுவதாக அவன் பயணம் செய்யும் ஆளிடம் உறுதி அளித்திருந்தான்.

‘‘வண்டி கிடைக்குமா?”- பயணம் செய்த மனிதன் பொறுமையில்லாமல் கேட்டான். பப்பு வெறுமனே ‘‘ம்...” என்று முனக மட்டும் செய்தான். அவன் மூச்சுக்கூட விடாமல் ஓடிக்கொண்டிருந்தான்.

‘‘வண்டி புகை வண்டி நிலையத்துல எவ்வளவு நிமிடங்கள் நிற்கும்?”

பப்பு அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை.

பயணம் செய்த மனிதர் பொறுமையை இழந்து விட்டான். அவன் சொன்னான்: ‘‘வண்டி கிடைக்கும்னு தோணல.”

ரிக்ஷா திடீரென்று நின்றது. பப்பு அந்த ஆளை நோக்கித் திரும்பிச் சொன்னான்: ‘‘சார்... கொஞ்சம் பேசாம இருங்க.” தன்னுடைய வார்த்தைகளை நம்பாமல் போனது, தன்னுடைய திறமையைச் சோதித்துப் பார்த்தது. இந்த விஷயங்களை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அதற்குப் பிறகு அந்தப் பயணி எதுவும் பேசவில்லை. பப்பு கோபத்துடன் வண்டியைப் பின்னோக்கித் தள்ளிவிட்டு முன்னோக்கி ஒரு இழு இழுத்தான். வண்டிக்குப் பின்னால், ‘‘அய்யோ!” என்றொரு சத்தம் கேட்டது. உடனே அங்கு வந்து நின்றவர்களும், ‘‘அய்யோ!” என்று கத்தினார்கள். தூரத்திலிருந்தவர்கள் பப்புவின் ரிக்ஷாவை நோக்கி ஒடிவந்தார்கள். அவன் வண்டியின் கைப் பகுதியைக் கீழே வைத்து பின்னால் ஓடினான்.

ஒரு சிறுமி ஓடையில் மல்லாக்க விழுந்து கிடந்தான். அவன் வேகமாக அந்தச் சிறுமியைத் தூக்கினான். சிறுமி சுற்றிலும் திகைத்துப் போய் பார்த்தாள். ‘‘என் அரிசி... என் அரிசியெல்லாம் போச்சு...” அவள் அவனுடைய பிடியிலிருந்து விலகினாள்.

ஒரு சிறிய கூடை சற்று தூரத்தில் தரையில் சாய்ந்து கிடந்தது. அதற்குப் பக்கத்தில் கொஞ்சம் அரிசியும், மூன்று மிளகாய்களும், சிறிது உப்பும் சிதறிக் கிடந்தன.

‘‘என் அரிசி, உப்பு, மிளகாய் எல்லாம் போச்சு.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel