பப்பு - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 5969
பப்புவைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால், அவனால் உண்டாகக்கூடிய தொல்லைகள் முழுமையாக இல்லாமல் போய்விடும் என்று அவனுடைய தாய் நினைத்தாள். தந்தையும் அண்ணனும் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டார்கள்.
அவர்கள் ஜமீந்தாருக்குச் சொந்தமான நிலத்தில் கொஞ்சத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்களும், ஜமீந்தாரை நம்பி இருப்பவர்களும் ஆவார்கள். அதனால் பப்புவைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதாக இருந்தால், ஜமீந்தாரிடம் அதற்கு அனுமதி வாங்கவில்லையென்றால், அது ஒரு குற்றச் செயலாக அங்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
‘‘ம்... உன் விருப்பப்படி செய்...” இப்படி ஒரு பாதி சம்மதம் மட்டுமே ஜமீந்தாரிடமிருந்து கிடைத்தது எனினும், பப்புவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்.
பள்ளிக்கூடத்திற்குச் செல்வது குறித்து அவனுக்கு மிகவும் விருப்பம்தான். படிப்பில் இருக்கும் விருப்பத்தால் அல்ல. விளையாடுவதற்குரிய சந்தர்ப்பங்களே காரணம். வகுப்பில் இருப்பவர்களிலேயே சற்று வயது அதிகமான மாணவன் அவன்தான். அதே மாதிரி உடலமைப்பிலும்கூட அவன்தான். வகுப்பிலும் வகுப்பிற்கு வெளியிலும் அவன் எப்போதும் ஏதாவது குறும்புத் தனங்கள் செய்து கொண்டே இருப்பான். ஆசிரியர்களுக்கு அவன் தொந்தரவு தரக்கூடிய ஒரு பையனாக இருந்தான். அதிகாரச் சக்திகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பதும், பணிவுள்ளவனாக நடிப்பது என்பதும் இயற்கையாகவே அவனால் முடியாத ஒன்று. வீட்டிலிருந்த தொல்லை பள்ளிக்கூடத்திற்கு மாறிவிட்டது என்பதைத் தவிர அவன் பள்ளிக்கூடத்திற்குப் போவதால் எந்தவிதப் பிரயோஜனமும் உண்டாகவில்லை. எனினும், உடன்படிக்கும் மற்ற மாணவர்களுக்கெல்லாம் அவன் மீது பயம் கலந்த ஒரு மரியாதை இருந்தது. அவன் என்ன சொன்னாலும், அவர்கள் அதன்படி நடப்பார்கள். காலப்போக்கில் அவன் மாணவர்களுக்கெல்லாம் தலைவனாக ஆனான். ஜமீந்தாரின் மகளுடைய மகனும் பப்புவின் வகுப்பில் உடன் படித்துக் கொண்டிருந்தவன்தான். அவனும் பப்புவைப் பின்பற்றுபவர்களில் ஒருவனாகிவிட்டிருந்தான். பள்ளிக்கூடத்திலும், பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் தலைவனாகவே பப்பு நடந்தான்.
மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களுக்கு உதவ வேண்டுமென்றால் எந்நேரமும் அவன் முன்னால் போய் நின்றான். அவன் இல்லாமல் அவர்களுக்கு வேறு எந்த விஷயமும் இல்லை என்றானது.
ஒரு நாள் பப்புவும் அவனுடைய நண்பர்களும் தங்களுடன் ஒரு பறவையைப் பிடித்து வகுப்பறைக்குள் கொண்டு வந்திருந்தார்கள். அவன் பறவையின் காலில் சணலைக் கட்டி பறக்க விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். உரத்த சிரிப்பு சத்தமும், கைதட்டல்களும், கூக்குரல்களும் என்று மொத்த வகுப்பறையும் படு ஆரவாரமாக இருந்தது. அப்£து ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். அடுத்த நிமிடம் ஆரவாரம் முற்றிலுமாக அடங்கியது. எல்லோரும் அவரவர் இடங்களில் போய் அமர்ந்தார்கள். பறவை அப்போதும் பப்புவின் கையில்தான் இருந்தது. ஆசிரியர் கோபத்தில் உரத்த குரலில் கத்தினார்: “இந்தக் கிளியைப் பிடித்து வகுப்பறைக்குக் கொண்டு வந்தது யாரு?”
‘‘நான்தான் சார்” - பப்பு அந்த நிமிடத்திலேயே பதில் சொன்னான்.
‘‘நீ வகுப்பறையை விட்டு வெளியே போ!”
அவன் எழுந்து, பறவையையும் எடுத்துக்கொண்டு மெதுவாக வராந்தாவிற்குப் போய் நின்றான்.
‘‘முற்றத்துல இறங்கி நில்லுடா போக்கிரி” - ஆசிரியர் கத்தினார்.
பப்பு அதற்காகச் சிறிதும் கூச்சப்படவில்லை. அவன் முற்றத்தில் போய் நின்றான்.
‘‘வகுப்பறையில் சத்தம் உண்டாக்கியது யார் யார்?” - அந்தக் கேள்வியை மற்ற மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டார். அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை.
‘‘எல்லாரும் எழுந்து நில்லுங்க.”
எல்லாரும் எழுந்து நின்றார்கள்.
சிறிய பிரம்பொன்றை எடுத்துக்கொண்டு அவர் முதலில் நின்றிருந்த மாணவன் அருகில் சென்றார்.
‘‘கையை நீட்டு...”
அவன் கையை நீட்டினான். ஆசிரியர் அவனுடைய உள்ளங்கையில் இரண்டு அடிகள் கொடுத்தார். இரண்டாவதாக நின்றவனுக்கு இரண்டு அடிகளும், மூன்றாவதாக நின்ற மாணவனுக்கு அதே அடிகளும் கிடைத்தன. நான்காவதாக நின்றிருந்தவன் ஜமீந்தாரின் மருமகன். அவனைப் பார்த்ததும் ஆசிரியரின் முகத்திலிருந்த் கோபம் சற்று குறைந்தது. அவர் அன்பு பொங்கக் கேட்டார்: ‘‘குழந்தை... நீ சத்தம் போட்டியா?”
‘‘ம்...” - அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
‘‘இனிமேல் இப்படி சத்தம் போடக்கூடாது. இந்தப் பசங்ககூட நீ சேராதே”- இப்படி ஒரு அறிவுரையும் அன்புடன் ஒரு தடவலும் கொடுத்துவிட்டு ஆசிரியர் அடுத்து நின்றிருந்த மாணவனைக் கையை நீட்டச் சொன்னார். அவன் கையை நீட்டினான். அவனுக்கு அவர் இரண்டு அடிகள் கொடுத்தார்.
முற்றத்தில் நின்றிருந்த பப்பு வராந்தாவிற்கு வேகமாகப் பாய்ந்து வந்தான். ‘‘அடிக்காதீங்க...” அவன் உரத்த குரலில் கத்திக் கொண்டே வகுப்பறைக்குள் வேகமாக வந்தான்.
‘‘ச்சீ! வெளியே போடா!” - ஆசிரியர் பப்புவைப் பார்த்துச் சொன்னார்.
‘‘இனி அடிக்கக் கூடாது. இனி யாரையும் தொடக்கூடாது” - அவனுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறந்தது.
‘‘அடிச்சா நீ என்ன செய்வேடா? அடிக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா?”
‘‘அந்தப் பையனை மட்டும் நீங்க ஏன் அடிக்கல? அவனும் எங்களை மாதிரி தப்பு பண்ணினவன்தானே?”
‘‘எனக்கு எல்லாம் தெரியும். அதைக் கேட்க நீ யாருடா? போடா... போடா... வெளியே...” அவர் பப்புவின் கழுத்தைப் பிடிப்பதற்கு முயன்றார்.
பப்பு முன்னோக்கி வேகமாக வந்தான்: ‘‘என்னைத் தொட்டா...” அந்தச் சிறு சிங்கத்தின் கர்ஜனை அந்த ஆசிரியரை அதிர்ச்சியடையச் செய்தது. அநியாயத்தில் அதிகாரச்சக்தி நியாயத்தின் ஆத்ம சக்திக்கு முன்னால் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. பப்பு நண்பர்கள் பக்கம் திரும்பிச் சொன்னான்: ‘‘நாம யாரும் இனிமேல் இங்கே படிக்கக்கூடாது. இங்கே எல்லாம் ஆள் பார்த்து நடக்குது. ஒருத்தருக்கு ஒரு மாதிரி இன்னொருத்தருக்கு வேற மாதிரின்னு....”
அவன் திரும்பி வெளியே நடந்தான். வராந்தாவில் நின்றவாறு அவன் திரும்பிப் பார்த்தான். ஆசிரியர் கோபத்தால் கண்களை அகல விரித்து வைத்துக்கொண்டு நின்றிருந்தார். மாணவர்கள் அவருக்கு முன்னால் தலையைக் குனிய வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் யாரும் அவனுடன் வெளியே செல்லத் தயாராக இல்லை.
‘‘நீங்க எல்லாரும் நாய்கள்டா... நாய்கள்” என்று சொல்லியவாறு அவன் அங்கிருந்து ஓடினான்.
அந்தச் சம்பவத்தை ஜமீந்தார் அறிந்தார். அவருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. அவர் பப்புவின் தந்தையை உடனே வீட்டிற்கு வரவழைத்தார். ‘‘உன் மகன் ஒரு அதிகப் பிரசங்கி. அவனை இனிமேல் நீ வீட்டுக்குள்ளே நுழையவிடக் கூடாது. சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது” என்று அவனுக்கு அவர் கட்டளையிட்டார்.
ஜமீந்தார் சொன்னபடி நடக்கவில்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். அவன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியிடம் பப்புவை வீட்டிற்குள் விடக்கூடாது என்றும், சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது என்றும் சொன்னான்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,