
பப்புவின் தலை சுற்றுவதைப் போல் இருந்தது. மூன்று நான்கு நிமிடங்கள் அவன் செயலற்று சிலையென நின்றிருந்தான். அடுத்த நிமிடம் அவனுடைய கை உயர்ந்தது.
‘‘உனக்குப் படமெடுக்கவும் தெரியுமாடா சின்னப் பாம்பே?” அந்த ஆள் பப்புவின் நெஞ்சின்மீது ஓங்கி மிதித்தான். பப்பு மல்லாக்கப் போய் விழுந்தான். அந்த ஆள் அங்கிருந்து நீங்கினான்.
பப்பு அந்த இடத்தை விட்டு எழுந்தபோது அவனை அடித்த அந்த ஆள் தூரத்தில் போய்விட்டிருந்தான். பப்பு சிறிது நேரம் அவன் போன திசையை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். வயலில் நின்றிருந்த நெற்கதிர்கள் அப்போதும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. ஜமீந்தாரின் கறுப்பு நிறப் பசு வயல் வரப்பில் மேய்ந்து கொண்டிருந்தது. பப்பு ஓடிச் சென்று பசுவை அவிழ்த்து விட்டான். அடுத்த நிமிடம் அது வயலுக்குள் குதித்துக் கொண்டு இறங்கியது. பப்பு அதற்குப் பிறகு சுற்றிலும் பார்த்தான். அவனுக்குள் பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சி மேலும் உயர்ந்து கொண்டிருந்தது. தூரத்தில் இன்னொரு பசு மேய்ந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அந்தப் பசுவையும் அவிழ்த்து வயலுக்குள் விட்டான். இப்போது அவன் வயலைப் பார்த்தவாறு பற்களைக் கடித்துக் கொண்டே சொன்னான்: ‘‘எல்லாம் நாசமாகட்டும்.”
ஒரு புலையச் சிறுவன் கல்லை விட்டெறிந்து பசுக்களை வயலிலிருந்து விரட்டுவதற்காக முயன்றான். பப்பு அவனுடைய கன்னத்தில் இரண்டு அடிகள் கொடுத்தான். அவ்வளவுதான் - அந்தச் சிறுவன் அழுதுகொண்டே அங்கிருந்து ஓடினான்.
தூரத்தில் ஒரு மிகப் பெரிய ஆரவாரம் கேட்டது. ஜமீந்தாரின் வேலைக்காரர்கள் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். பப்பு அப்போதும் வயலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ‘‘எல்லாம் நாசமாகட்டும்.”
‘‘அவனைப் பிடிங்கடா...” ஒரு பணியாள் உரத்த குரலில் சொன்னான்.
பப்பு அந்த இடத்தில் நின்றுகொண்டே திரும்பிப் பார்த்தான். அடுத்த நிமிடம் அங்கிருந்து அவன் ஓடினான். அதற்குப் பிறகு அவன் அந்த கிராமத்தில் கால் வைக்கவே இல்லை.
நகரம் பப்புவிற்குப் புதுமையான ஒன்றாக இருந்தது. அகலமான தெருக்கள், உயர்ந்த கட்டிடங்கள், கார்கள், புகைவண்டிகள், மின் விளக்குகள் என்று பல விஷயங்களையும் பார்த்து அவன் திகைத்துப் போய் நின்றான். பகல் முழுவதும் நடந்து கிட்டத்தட்ட மாலை நேரம் நெருங்கிய நேரத்தில் அவன் நகரத்தை அடைந்தான். வரும் வழியில் இரண்டு தடவை அவன் பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்தான். அதற்குப் பிறகு பசியையும் தாகத்தையும் மறந்து அவன் பலவிதப்பட்ட காட்சிகளையும் பார்த்தவாறு சுற்றித் திரிந்தான்.
பசியும் களைப்பும் அதிகமானவுடன் அவன் ஒரு கடையின் வாசலில் போய் உட்கார்ந்தான். தனக்குத் தெரிந்த ஒரு முகத்தைக் கூட அவனால் பார்க்க முடியவில்லை. நகரத்திற்கு அவன் வந்திருக்கும் விஷயம் ஒரு மனிதனின் கவனத்தைக் கூட திருப்பவில்லை என்பதே உண்மை. அவன்மீது ஒரு பரிதாபப் பார்வை கூட யாராலும் செலுத்தப்படவில்லை. அந்தக் கடையின் வாசலில் பிச்சைக்காரர்கள் பலரும் இடம் பிடித்திருந்தார்கள். அவனும் அவர்களில் ஒருவனாக இருந்தான். உடம்பில் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக அவன் தன்னை மறந்து உறங்கிவிட்டான். நகரத்திற்கு வந்த அவனுடைய முதல் இரவில் அவன் உணவே இல்லாமல் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் ஓருவனாக இருக்க வேண்டிவந்தது.
அடுத்த நாள் காலையில் அவன் அங்கிருந்து எழுந்து நடந்தான். அவன் வேலை தேடி அலைந்தான். ஆனால், அவன் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. என்ன வேலை வேண்டும் என்றோ என்ன வேலை தன்னால் செய்ய முடியும் என்றோ அவனுக்கே தெரியாது. யாரிடம் அதைப் பற்றி கேட்க வேண்டுமென்றும் எப்படிக் கேட்பது என்றும் அவனுக்கே தெரியாது.
நடந்து நடந்து அவன் புகைவண்டி நிலையத்தை அடைந்தான். அவனுடைய வயதில் இருக்கும் சில சிறுவர்கள் ஒரு இடத்தில் பீடி பிடித்தவாறு விளையாட்டாகப் பல விஷயங்களையும் பேசி உரத்த குரலில் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பப்பு சற்று தூரத்தில் அவை ஒவ்வொன்றையும் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தான்.
தூரத்தில் புகைவண்டியின் விசில் சத்தம் கேட்டது. ‘‘வண்டி வந்திருச்சுடா... வண்டி வந்திருச்சு...” ஒருவன் உரத்த குரலில் சொன்னான்.
அடுத்த நிமிடம் எல்லோரும் அந்த இடத்தைவிட்டு எழுந்து, பிளாட்ஃபாரத்தை நோக்கி வேகமாக ஓடினார்கள். ‘‘கூலி.... கூலி...” என்று சத்தம் போட்டுக் கூறியவாறு அவர்கள் பயணிகளுக்கு நடுவில் ஓடினார்கள். சிறிது நேரம் சென்றதும் அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு சுமையைச் சுமந்தவாறு பயணிகளின் பின்னால் நடக்க ஆரம்பித்தார்கள். பப்புவும் ப்ளாட்ஃபாரத்தை நோக்கி நடந்தான். ஒரு இளைஞன் பெட்டியையும் படுக்கையையும் முன்னால் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். ‘‘நான் இதை எடுக்கட்டுமா?” அவன் அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டான். அந்த இளைஞன் அதற்குச் சம்மதித்தான்.
அந்தச் சுமைக்கு இரண்டு அணாக்கள் கூலியாகக் கிடைத்தன. பப்பு அந்தக் காசுடன் ஒரு தேநீர்க் கடையைத் தேடிச் சென்றான். தேநீரும் பலகாரமும் வாங்கி தின்றான். அதற்குப் பிறக அவன் மீண்டும் புகை வண்டி நிலையத்தை நோக்கி நடந்தான்.
ஒரு புதிய கூலியாள் அங்கு நின்று கொண்டிருப்பது மற்ற கூலியாட்கள் விரும்பக் கூடிய ஒரு விஷயமாக இருக்கவில்லை. அவர்களில் ஒருவன் பப்புவைப் பார்த்துக் கேட்டான்: ‘‘நீ யார்டா?”
அந்தக் கேள்வியில் இருந்த அதிகாரத் தொனி பப்புவிற்குச் சிறிதும் பிடிக்ககில்லை. எனினும் அதை அவன் பொறுத்துக் கொண்டு சொன்னான்: ‘‘நான் தூர இடத்துல இருந்து வந்திருக்கேன்.”
‘‘நீ எதற்கு இங்கே வந்தே?”
‘‘சும்மாதான்”
‘‘சும்மா வந்தவனுக்குப் புகைவண்டி நிலையத்துல என்ன வேலை?”
அதைக் கேட்டு பப்புவால் வெறுமனே இருக்க முடியவில்லை. அவன் கேள்வி கேட்ட ஆளைப் பார்த்துக் கேட்டான்: ‘‘உனக்கு இங்கு என்ன வேலை?”
அந்த ஆளுக்கு அதைக் கேட்டு பயங்கரமாகக் கோபம் வந்தது. அவன் கேட்டான்: ‘‘நீ யார்டா என்னைப் பார்த்து அதைக் கேக்கறதுக்கு?”
அடுத்த நிமிடம் அவன் முன்னோக்கி நடந்து வந்து பப்புவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்.
அடியை வாங்கிக் கொண்டு பப்பு வெறுமனே இருக்கவில்லை. அவன் தன் கையை சுருட்டி வைத்துக் கொண்டு ஒரு அடி கொடுத்தான். அடி எதிரில் நின்றிருந்த மனிதனின் மூக்கில் விழுந்தது. அடியை வாங்கிய அடுத்த நிமிடம் அவன் தலை சுற்றிக் கீழே விழுந்தான். அவனுடைய நண்பர்கள் ஓடி வந்து அவனைத் தரையிலிருந்து எழுப்பினார்கள். பப்பு அப்போதும் அலட்சியமாக அந்த இடத்தில் நின்று கொண்டுதான் இருந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook