Lekha Books

A+ A A-

பப்பு - Page 10

pappu

‘‘அன்னைக்கு ஒரு படி அரிசியும், உப்பும் மிளகாயும் வாங்கித்தந்த ஆள்தானே” நிறைந்த நன்றியுடன் அவள் சொன்னாள். ‘‘மகளே அந்தப் பலகையை அங்கே தள்ளிப் போடு. அங்கே அவர் உட்காரட்டும்.”

லட்சுமி விளக்கைக் கீழே வைத்து விட்டு பலகையைத் தள்ளி வைத்தாள். பப்பு அதில் உட்காரவில்லை. அவன் அந்த இடிந்து போயிருந்த குடிசையையும் குடிசை வாசலில் ஓரு ஓரத்தில் மறைந்த நின்றிருந்த கல்யாணியின் முகத்தையும் லட்சுமியையும் மாறி மாறிப் பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்தான்.

‘‘கல்யாணி கேட்டாள்: ‘‘நீ இவரை எங்கே பார்த்தே, மகளே!”

‘‘மண்ணெண்ணெய் வேணும்னு நான் கேட்டுப் போனப்போ, நீ லட்சுமிதானேன்னு இவர் கேட்டாரு. அப்போதான் எனக்கு ஆள் யாருன்னே தெரிஞ்சது.”

‘‘அங்கே உட்காரச் சொல்லு மகளே!”

பப்பு சொன்னான்: ‘‘வேண்டாம்.... நான் இங்கேயே நிக்கிறேன்.” அவன் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தவாறு கேட்டான்: ‘‘லட்சுமியின் அப்பா இறந்து எவ்வளவு நாட்களாச்சு?”

‘‘இவளுக்கு இப்போ அஞ்சு வயசாகுது. முணு வயது இருக்குறப்போ இவளோட அப்பா இறந்தாரு.”

‘‘நீங்க எப்படி வாழ்றீங்க?”

‘‘கடவுளோட கருணையால்தான் நாங்க வாழ்றோம். குடிச்சும் குடிக்காமலும்.... இடி மாதிரி இருந்த ஒரு ஆளை தெய்வம் கொண்டு போயிடுச்சு” அவளின் தொண்டை இடறியது. ‘‘நாங்க இப்படியெல்லாம் கஷ்டபடணும்ன்றது கடவுளோட விருப்பமா இருக்கும்.”

பப்புவின் பீடி அணைந்தது. அவன் மீண்டும் தீப்பெட்டியை உரசி பீடியைப் பற்ற வைத்தான்: ‘‘உங்களுக்கு இன்னைக்கு ராத்திரி சாப்பாடு இருக்குதா?”

‘‘ராத்திரி சாப்பாடு சாப்பிட்ட நாளே எங்களுக்கு மறந்து போச்சு. லட்சுமியின் அப்பா இறந்த பிறகு நாங்க கஞ்சி மட்டும்தான் குடிச்சிக்கிட்டு இருக்கோம். எனக்கு இருக்குறது ஒரே ஒரு விருப்பம்தான். என் பொண்ணுக்கு ஒரு நேரமாவது வயிறு நிறைய சாப்பாடு போடணும்.” அதைச் சொல்லி விட்டு அவள் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.

பப்பு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அவன் எதுவும் பேசாமல் அசையாமல் இருந்த தீபத்தையே பார்த்தவாறு சிலையென நின்றிருந்தான்.

வெளியே ரிக்ஷாவின் மணி அடிக்கப்படும் சத்தம் கேட்டது. பப்புவின் ரிக்ஷாவில் ஏறி வந்த ஆள் அவனை அழைக்கிறான். பப்பு குடிசையின் வாசல் பக்கம் சென்றான். இடுப்பிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து நீட்டியவாறு அவன் சொன்னான்: ‘‘இதை வாங்கிக்கங்க. லட்சுமிக்கு வயிறு நிறைய சாப்பாடு போடணும்.”

கல்யாணி அதை வாங்கத் தயங்கினாள்.

“தயங்காதீங்க. நீங்க ரெண்டு பேரும் வயிறு நிறைய சாப்பிடணும். இதை வாங்கிக்கங்க.”

கல்யாணி கையை நீட்டினாள். பப்பு அவளின் கையில் பணத்தைத் தந்துவிட்டு லட்சுமியைப் பிடித்து அருகில் நிற்க வைத்து அவளின் தலையை வருடியவாறு சொன்னான்: ‘‘கண்ணு... நான் நாளைக்கு வர்றேன்.”

‘‘நாளைக்கு வருவீங்களா?”

‘‘வருவேன்... நிச்சயமா வருவேன்.”

‘‘எப்போ வருவீங்க?”

‘‘மத்தியானம்.”

வெளியே அதற்குப் பிறகும் மணி ஒலித்தது. பப்பு வேகமாக வெளியேறினான்.

காலையிலிருந்து லட்சுமி பப்புவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவள் கல்யாணியிடம் கேட்டாள்: ‘‘அம்மா, அந்த ஆளை நான் எப்படிச் சொல்லிக் கூப்பிடணும்?”

‘‘மாமான்னு கூப்பிடு.”

‘‘ம்... மாமா... மாமா.... இப்படிச் சொன்னா போதுமா?”

சாலையில் ஏதாவது ரிக்ஷா வருவது தெரிந்தால் போதும். அவள் தன் தாயை அழைத்துக் கூறுவாள். ‘‘அம்மா, மாமா வந்தாச்சு.”

கல்யாணி வெளியே வந்து பார்ப்பாள். அப்போது அவள் கூறுவாள்: ‘‘ஓ... அது வேற யாரோ. நீ பேசாம இரு. மத்தியானம் வர்றதாதானே அவர் சொன்னாரு?”

கல்யாணி அன்று சாதமும் குழம்பும் கூட்டும் தயார் பண்ணினாள். அவளுடைய மகளுக்கு வயிறு நிறைய சாதம் கொடுக்கும் நல்ல நாள் அது. அவள் சொன்னாள்: ‘‘மகளே, இன்னைக்கு உனக்கு வயிறு நிறைய சாதம் தர்றேன். போயி குளிச்சிட்டு வா.”

‘‘அம்மா நாம மாமா வந்த பிறகு சாப்பிட்டா போதும். மாமாவுக்கும் சாதம் தரணும். சாப்பிடுவாரு.... நான் சொன்னா மாமா சாப்பிடுவாரு.

‘‘அப்படின்னா நாம பிறகு சாப்பிடுவோம். மகளே, நீ போய் குளிச்சிட்டு வா.”

லட்சுமி குளித்து முடித்து வந்தாள். கல்யாணியும் குளித்தாள்.

‘‘மாமா வர்றப்போ இந்த முண்டையா உடுத்தி நிக்கிறது?” - லட்சுமி கேட்டாள்.

‘‘பிறகு என்ன செய்றது? நமக்கு வேற நல்ல முண்டு எங்கே இருக்கு?”

‘‘அம்மா, நல்ல முண்டு வாங்கித் தரச்சொல்லி நான் மாமாகிட்ட சொல்லட்டுமா?”

மகளுடைய அந்தக் கேள்வி தன்னுடைய கவுரவத்தைத் தொட்டுப் பார்ப்பதைப் போல் கல்யாணி உணர்ந்தாள். அவள் தன் மகளைத் திட்டினாள்: ‘‘வேண்டாம்... எதுவும் கேட்க வேண்டாம்... முண்டு வாங்கித் தர நமக்கு என்ன அவர் சொந்தக்காரரா?”

அதைக் கேட்டு லட்சுமியின் முகம் அந்த நிமிடமே வாடி விட்டது. திரும்பவும் அது பிரகாசமானது. ‘‘மாமா நமக்கு யாரும் இல்லைன்னா பிறகு எதுக்கு அவர் நமக்கு அரிசி வாங்கித்தரணும்? நமக்கு எதுக்கு அவர் ரூபாய் தரணும். இப்போ அவர் ஏன் இங்கே வரணும்?” லட்சுமி கேட்டாள்.

‘‘அது எல்லாம் நாம கேட்காமலே அவர் தந்ததுதானே? நாம எதுவும் அவர்கிட்ட கேட்கக் கூடாது. அவருக்கே மனசுல பட்டு வாங்கித் தந்தார்னா வாங்கிக்குவோம்.”

அப்போது ஒரு ரிக்ஷா வாசலில் வந்து நின்றது.

‘‘மாமா... மாமா...” - லட்சுமி ஓடிச்சென்று பப்புவை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ‘‘மாமா... மாமா” - அவள் அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.

பப்புவின் கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. அதை அவன் லட்சுமியின் கையில் கொடுத்தான்.

‘‘இது என்ன மாமா?”

‘‘பிரிச்சு பாரு...”

அவள் அந்தப் பொட்டலத்தை அவிழ்த்துப் பார்த்தாள். ஒரு பாவாடையும் ஒரு ஜாக்கெட்டும் இருந்தன. அவள் தன்னை மறந்து ஒரு குதி குதித்தாள்.

கல்யாணி தன் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை மறைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.

பப்பு லட்சுமிக்குப் பாவாடை அணிவித்து ஜாக்கெட் இட்டு, தலை முடியை அழகாகக் கட்டி விட்டான். அவள் சமையலறைக்குள் சென்றாள். ‘‘அம்மா, இதை பார்த்தீங்களா?”- லட்சுமி கேட்டாள்.

கல்யாணியின் கண்கள் ஈரமாயின. அவள் சொன்னாள்: ‘‘இதை இப்போ போட்டு அழுக்காக்க வேண்டாம். கழற்றி வச்சிடு... எங்காவது போறப்போ போட்டுக்கலாம்.”

அதைக் கழற்றி வைக்க பப்பு ஒத்துக் கொள்ளவில்லை. ‘‘இவ இதை உடுத்தியிருக்கட்டும். எங்காவது போறப்போ உடுத்திக்கிறதுக்கு நான் வேற வாங்கித் தர்றேன்” - அவன் சொன்னான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பூனை

பூனை

November 1, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel