
பப்புவின் கண்களிலிருந்து நீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. முகத்தில் வளர்ந்திருந்த ரோமங்களில் கண்ணீர்த் துளிகள் வைரத்துண்டுகளைப் போல மின்னின. அவன் அந்தச் சூழலையும், ஏன்... தன்னையும் கூட முழுமையாக மறந்து விட்டான். ‘‘லட்சுமி... என் லட்சுமி...” என்று கூறியவாறு அவன் முன்னோக்கி நடந்தான். முன்னால் கிடந்த பெஞ்ச் அவனைத் தடுத்தது. ‘‘என் லட்சுமி... இவ என் லட்சுமி...” - அவன் மீண்டும் முன்னோக்கிப் பாய்ந்தான். முழங்கால்கள் பெஞ்சில் பலமாக மோதின. அடுத்த நிமிடம் பெஞ்ச் கீழே விழுந்தது. ‘‘என் லட்சுமி...” - அவன் மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
ஒரு நாள் லட்சுமியின் விரலை உற்றுப் பார்த்த கல்யாணி கேட்டாள்: ‘‘மகளே, அந்த மோதிரம் யாரோடது?”
‘‘என் பாட்டுக்கு பரிசா கொடுத்தது.”
‘‘யாரு பரிசு தந்தது?”
‘‘கோபி!”
‘‘கோபியா? யார் அது?”
‘‘கோபிநாதன்றது முழுப் பேரு. ஆனா கோபின்னுதான் கூப்பிடுறது.”
‘‘எங்கே இருக்குற ஆளு?”
‘‘அவர் வீடு இங்கேதான் இருக்கு. பெரிய தேர்வுகள் தேர்ச்சி பெற்ற ஆளு அவர். அவருக்கு என் பாட்டு ரொம்பவும் பிடிச்சிருந்ததாம். தன் விரல்ல இருந்த மோதிரத்தைக் கழற்றி எனக்குத் தந்தாரு.”
‘‘வயசான ஆளா?”
‘‘இல்ல... இளைஞன்தான்...” - அவளுடைய உதடுகளில் புன்சிரிப்பு தவழ்ந்தது.
கல்யாணி ஆழமான சிந்தனையில் மூழ்கினாள்.
அன்று இரவு கல்யாணி பப்புவிடம் கேட்டாள்: ‘‘கோபின்ற ஆளை உங்களுக்குத் தெரியுமா?”
‘‘தெரியும்.”
‘‘அது யாரு?”
‘‘இந்த நகரத்துல அவரைத் தெரியாதவங்க யாருமே இல்ல. இளம் வயசா இருந்தாலும் அவர்மேல எல்லாருக்குமே மதிப்பு இருக்கு. பெரிய தேர்வுகள்ல வெற்றி பெற்ற ஆளு. நல்ல பண வசதி இருக்கு. எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பழகுற ஆளு. பணக்காரர்கள் கூட்டத்தைச் சேர்ந்த அவர் மட்டும்தான் ஏழைகளைக் கேவலமா நினைக்காத ஒரே ஆளு. அவரைத் தெரியுமான்னு கேட்டதற்குக் காரணம்?”
‘‘அவர் லட்சுமிக்கு ஒரு மோதிரம் கொடுத்திருக்காரு.”
‘‘எதுக்கு?”
‘‘அவளோட பாட்டைக் கேட்டு சந்தோஷப்பட்டு கொடுத்ததா அவ சொன்னா.”
‘‘அப்படியா? அவர் அப்படியெல்லாம் செய்யிற ஆளுதான். பலருக்கும் அவர் பரிசுகள் தந்திருக்காரு.
‘‘அவர் நடத்தை எப்படி?”
‘‘மோசமா நான் ஒண்ணும் கேள்விப்பட்டது இல்ல. ஆமா... எதுக்கு இதையெல்லாம் கேட்கணும்?”
‘‘அவரைப் பற்றி சொன்னப்போ, அவ முகத்துல ஒரு மலர்ச்சி தெரிஞ்சது.”
பப்பு ஆழமான சிந்தனையில் மூழ்கினான்.
நாட்கள் பல கடந்தன. லட்சுமி பள்ளிக்கூடத்திலிருந்து வழக்கமான நேரத்திற்கு வருவதில்லை. தாமதமானதற்குக் காரணம் என்ன என்று கல்யாணி கேட்டால், அவள் ஏதாவதொரு காரணத்தைக் கூறுவாள். ஒரு நாள் அவள் சொன்னாள்: ‘‘அம்மா, மாமா சிறையில இருந்திருக்காரு.”
‘‘என்ன? சிறையில இருந்திருக்கிறாரா? எதுக்கு?”
‘‘மாமா கயிறு தொழிற்சாலையில வேலை பார்த்தப்போ, அங்கே ஒரு அடிபடி தகராறு நடந்திருக்கு. அவங்க மாமாவை அடிச்சிருக்காங்க. பிறகு தண்டிக்கவும் செய்திருக்காங்க.”
‘‘உன்கிட்ட இதை யாரு சொன்னது.”
‘‘அவர்.”
‘‘யாரு?”
‘‘கோபி.”
‘‘அப்போ உங்களுக்குள்ளே பேச்சு வார்த்தை இருக்கு... அப்படித்தானே?”
லட்சுமி அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
பப்புவின் இருமலும் காய்ச்சலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் ஒரு நண்பன் பப்புவிடம் சொன்னான: ‘‘இது கவனமா இருக்க வேண்டிய நோய், பப்பு.”
‘‘நோயைக் கவனிச்சிக்கிட்டு இருந்தா, காரியங்கள் எப்படி நடக்கும்.”
‘‘கவனமா இல்லைன்னா நிலைமை அவ்வளவுதான். சயரோகம்... சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்... சயரோகம்!”
அந்த நோயின் கடுமை என்னவென்பது பப்புவிற்கும் தெரியும். அதன் மரண வலியை அவனும் அறிந்திருக்கிறான். வேதனைகள் அவனுக்குப் பழக்கமில்லாதவையும் அல்ல.
மரணம் அவனைப் பயமுறுத்தவும் இல்லை. ஆனால், அவனுக்கு வாழ்க்கையில் ஒரு விரதம் இருக்கிறது. ஒரு இலட்சியம் இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தில் வேதனைகளும், ஏன்... மரணமேகூட அவனைப் பயமுறுத்தவில்லை.
லட்சுமியின் கல்விக்கான செலவு கூடிக்கொண்டே வந்தது. பப்புவின் வரவோ குறைந்து கொண்டே வந்தது. அவனுடைய ரிக்ஷாவில் பெரும்பாலும் யாரும் ஏறுவது இல்லை. அவனுடைய ரிக்ஷாவில் ஏறினால் சேர வேண்டிய இடத்திற்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரமுடியாது. இருமியும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டும் மெதுவாக அவன் ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு போகும் காட்சியைப் பார்க்கும்போது நமக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். பகலிலும் இரவிலும் வெயிலிலும் பனியிலும் மழையிலும் இருமிக்கொண்டும் நடுங்கிக் கொண்டும் வண்டி இழுத்தால்கூட செலவிற்கேற்ற வருமானம் கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.
ஒரு நாள் அவன் பயணியை ஏற்றிக் கொண்டு போகும்போது ரிக்ஷாவிலிருந்த பிடியை அவன் விட்டுவிட்டான். அடுத்த நிமிடம் வண்டி பின்னோக்கிச் சாய்ந்தது. பயணி தலைக்குப்புறக் கீழே விழுந்தான். அதற்குப் பிறகு அவனுடைய ரிக்ஷாவைப் பார்த்தாலே பயணிகள் பயப்பட ஆரம்பித்தார்கள். புதிதாக அங்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் யாராவது ஏறினால் உண்டு.
கல்யாணி எங்கிருந்தோ சில மருந்துகளைக் கொண்டு வந்தாள். அதைக் குடிக்கும்படி அவள் பப்புவை வற்புறுத்தினாள். அவன் நகைச்சுவை உணர்வுடன் சிரித்தான்: ‘‘இந்த மருந்தைக் குடிச்சா, என் நோய் இல்லாமல் போயிடுமா?”
‘‘ஆமா...”
‘‘நோய் குணமாயிடும்னு டாக்டர் சொன்னாரா?”
‘‘சொன்னாரு.”
‘‘பாவம்! அவருக்கு என்ன நோய்னு தெரியாது?”
‘‘டாக்டருக்குத் தெரியாதுன்னா வேற யாருக்கு தெரியும்?”
‘‘எனக்கு மட்டும்தான் தெரியும் - எனக்கு என்ன நோய் இருக்குன்னு, இந்த நோய்க்கு ஒரே ஒரு மருந்துதான்.”
‘‘என்ன மருந்து?”
‘‘சொல்றேன்... பிறகு சொல்றேன்.”
கல்யாணி அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். பலமும் பளபளப்புமாக இருந்த அந்தச் சதைகள் இப்போது அந்த உடலில் இல்லை கையிலும் காலிலும் இருந்து தோல் எலும்புடன் சம்பந்தமே இல்லாமல் தொங்கிக் கிடந்தது. சுருக்கங்கள் விழுந்த முகத்தில் வளர்ந்து நின்றிருந்த ரோமங்களுக்கு மத்தியில் சில வெள்ளை அடையாளங்கள் தெரிந்தன. ஈரப்பசை இல்லாத பற்கள் நீட்டிக் கொண்டிருந்தன. கண்கள் உயிரற்று குழிக்குள் கிடந்தன. கல்யாணியின் கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்தது.
‘‘அழக்கூடாது என் நோய் குணமாகும்.” - அவன் அவளைத் தேற்ற முயற்சித்தான்.
லட்சுமி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வருவதற்கு மிகவும் தாமதமாகிக் கொண்டே வந்தது. சில நேரங்களில் அவள் பொழுது இருட்டும் நேரத்தில் தான் வீட்டிற்கு வருவாள். அவளுக்குப் படிப்பதில் ஒரு அலட்சியம் தோன்ற ஆரம்பித்தது. புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருப்பாள். சில வேளைகளில் எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டு காதல் வயப்பட்டு சிரித்துக் கொண்டிருப்பாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook