Lekha Books

A+ A A-

பப்பு - Page 19

pappu

ஒருநாள் கல்யாணி பப்புவிடம் சொன்னாள்: ‘‘சமீப நாட்களா லட்சுமி பள்ளிக்கூடத்துல இருந்து பொழுது இருட்டுற நேரத்துலதான் திரும்பி வர்றா, அதுக்கு என்ன காரணம்?”

‘‘கேட்கலையா?”

‘‘கேட்டா, அவ பொய்தான் சொல்றா அவ இப்போ வாசிக்கிறதோ படிக்கிறதோ இல்ல. புத்தகத்தைப் பார்த்து உட்கார்ந்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்கா.”

அதற்கு பப்பு எதுவும் சொல்லவில்லை. அவன் சிந்தனையில் மூழ்கினான்.

லட்சுமியின் தேர்வுக்குக் கட்டணம் கட்ட வேண்டிய நாள் நெருங்கியது. அதற்கு வழி என்ன என்பதுதான் பப்புவை அலட்டிக் கொண்டிருந்த ஒரே சிந்தனை. அவன் சிந்தித்துச் சிந்தித்துக் கடைசியில் சிந்திப்பதையே விட்டுவிட்டான். அப்போதும் இருமிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் அவன் வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருந்தான். எப்படியோ செலவுக்கான பணத்தைச் சம்பாதித்து விட்டுத்தான் திரும்பி வருவான்.

தேர்வுக் கட்டணம் கட்ட வேண்டிய நாளுக்கு முந்தின நாள் காலையில் லட்சுமி பப்புவின் அறையின் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றாள். கல்யாணி கட்டிலுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். பப்பு எழுந்திருக்கவில்லை. அவனால் எழ முடியவில்லை.

கல்யாணி கூறினாள்: ‘‘லட்சுமி வந்து நிக்கிறதா?”

‘‘எதுக்கு”

‘‘அவளுக்கு ஏதாவது சொல்றதுக்கு இருக்கும்.”

‘‘என்னடா கண்ணு! சொல்லு...” - அவன் மிகவும் சிரமப்பட்டு அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

அவள் எதுவும் சொல்லவில்லை. அவள் அவனுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

கல்யாணி சொன்னாள்: ‘‘நாளைக்கு ஃபீஸ் கட்டணும்னு...”

‘‘நாளைக்கு ஃபீஸ் கட்டணும்ல? ம்... கட்டிடலாம்... நீ புறப்படுடா கண்ணு...

அவள் புறப்படவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.

‘‘ம்... கிளம்பு...நாளைக்கு ஃபீஸ் கட்டிடலாம்.”

அவள் தெற்குப் பக்கமிருந்த அறைக்குள் சென்றாள். அங்கிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு கேட்டது.

கல்யாணி கேட்டாள்: ‘‘ஃபீஸ் கட்ட பணம் எங்கிருந்து வரும்?”

‘‘ஃபீஸ் கட்டணும். கட்டித்தான் ஆகணும்.” - அவனுடைய உயிரற்ற கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. கீழுதடை பலமாகக் கடித்தவாறு அவன் கட்டிலிருந்து எழுந்தான்.

அவன் வாசலை நோக்கி நடந்தான்.

கல்யாணி அவனைத் தடுத்தாள்: ‘‘போகவேண்டாம். இப்போ போக வேண்டாம். வழியில் எங்காவது விழுந்திடுவீங்க.”

‘‘அவளுக்கு ஃபீஸ் கட்டணும். அவளுக்கு நான் ஃபீஸ் கட்டுவேன். அவளுக்கு ஃபீஸ் கட்ட என்னை விட்டா வேற யாருமில்லை...”

‘‘இப்போ போக வேண்டாம். வழியில் எங்காவது விழுந்திடுவீங்க.”

‘‘தள்ளி நிக்கணும்... நான் புறப்படுறேன்.” - அவன் கட்டளைக் குரலில் சொன்னான்.

அவன் விலகி நின்றாள். அவன் வெளியேறி வண்டி நின்றிருந்த ஷெட்டுக்குள் நுழைந்து ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு நடந்தான்.

கல்யாணி வாசலில் நின்றவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஒழுகியது.

லட்சுமி பின்னால் சென்று கேட்டாள்: ‘‘அம்மா, மாமா எங்கே போயிட்டாரு?”

வண்டியை இழுத்துக்கிட்டு போயிட்டாரு மகளே! வழியில் எங்காவது விழுந்திடுவாரோ என்னவோ! நமக்காக... நமக்காக...” - அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

‘‘எனக்காகக்தான் அம்மா” - லட்சுமியின் தொண்டை இடறியது. ‘‘எனக்காகத்தான் தன் வாழ்க்கையையே அவர் இழந்துட்டாரு. எனக்காக மாமா செத்துக்கிட்டு இருக்காரு” - அவள் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அந்தக் கண்ணீர் அவளுடைய இதயத்தில் படிந்திருந்த அழுக்குகளை முழுமையாகக் கழுவிச் சுத்தமாக்கியது.

தாயும் மகளும் தியாகத்தின் பாதங்களில் அவர்கள் கண்ணீரைக் கொண்டு  அர்ச்சனை செய்தார்கள்.

பொழுது இருட்ட ஆரம்பித்த பிறகும் பப்பு திரும்பி வரவில்லை. கல்யாணி படியில் காத்து நின்றிருந்தாள். லட்சுமி முற்றத்தில் என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தாள். அவள் அவ்வப்போது பொறுமையை இழந்து படி இருக்கும் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் தொடர்ச்சியாக இருமல் சத்தம் கேட்டது. கல்யாணி பாதையில் இறங்கினாள். பப்பு ஒரு கம்பித் தூணைப் பிடித்து நின்றவாறு இறுமிக் கொண்டிருந்தான். தினந்தோறும் ஏராளமான மனிதர்களை இழுத்துக் கொண்டு அந்த நகரத்தின் சாலையில் மின்னல் வேகத்தில் பாய்ந்தோடிக்கொண்டிருந்த அந்தக் கால்களுக்கு வெறும் எலும்புகள் மட்டுமே மீதியிருக்கும் அவனுடைய உடலைத் தாங்குவதற்கான சக்தி இல்லாமல் போய்விட்டது. அவள் அவனுக்கு அருகில் ஓடினாள். லட்சுமியும் அவளைத் தொடர்ந்து அங்கு வந்தாள். அவள் அவனைத் தாங்கினாள்.

பப்பு கம்பித் தூணில் இருந்த தன் பிடியை விட்டான். அவன் நிமிர்ந்து நின்றான். “தள்ளி நில்லு... என்னைப் பிடிக்க வேண்டாம். நானே நடக்குறேன்”- அவன் நடந்தான். அவர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

அவன் கட்டிலில் போய் விழுந்தான். லட்சுமி அருகில் நின்றாள். கல்யாணி விளக்கைப் பற்ற வைத்துவிட்டு அருகில் போய் அமர்ந்தாள்.

பப்புவும் லட்சுமியும் கண்களை இமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் கடந்த காலத்தின் சுருள்களைப் பிரித்துப் பார்த்தார்கள்.

எதிர்ப்புகளும் துன்பங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கை அதோ தகர்ந்து போய் கிடக்கிறது. ஏராளமான எதிர்பார்ப்புகளும், ஆசைகளும், செயல்களும் நிறைந்த இன்னொரு வாழ்க்கை அதோ வாழ்க்கையின் வசந்தத்தை அடைந்து பூந்தேனைச் சுவைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் சாட்சியாக மூன்றாவதொரு வாழ்க்கை அதோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறது.

யாரும் எதுவும் பேசவில்லை. மிகவும் கனமான அர்த்தங்கள் நிறைந்த ஒரு பேரமைதி!

‘‘கண்ணு!” - அந்த அழைப்பில் பத்து நெடிய வருடங்களின் அன்பும், தியாகத்தின் சரித்திரமும் இருந்தது.

அவள் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

‘‘கண்ணு... இங்கே உட்காரு.”

அவள் உட்கார்ந்தாள். அவளுடைய சதைப்பிடிப்பான அழகான கை அந்த எலும்புக் கூட்டின் மார்பைத் தொட்டது. பப்புவின் நடுங்கிக் கொண்டிருந்த கை அவளுடைய கையைப் பிடித்தது. அந்தக் கைதான் அவளை ஓடையிலிருந்து தூக்கியது. அந்தக் கை அவளுக்காகப் பத்து வருடங்கள் வேலை செய்த கை. சோர்வு என்பதை அறிந்திராத அந்தக் கை - யாருடைய பிடியிலும் அகப்படாத அந்தக் கை - அதோ நடுங்கிக் கொண்டிருக்கிறது! அந்த நடுக்கம் அவளுடைய நரம்புகளையும் பாதித்தது. அது அவளுடைய இதயத்தை இறுகச் செய்தது.

‘‘கண்ணு!” - எந்த சமயத்திலும் தடுமாறாத அந்தத் தொண்டை இடறியது. அவன் அவளுடைய கையை நெஞ்சி அழுத்திப் பிடித்தான். அவனுடைய கண்கள் மூடின. அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

கல்யாணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கண்களைச் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தாள். அவள் எழுந்து தன் மகளின் தலையில் கையை வைத்தாள். அந்த மூன்று இதயங்களும் ஒன்றாயின.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel