Lekha Books

A+ A A-

ஒரு காதல் கதை - Page 18

oru kathal kathai

மொம்பாஸாவில் என் மலையாளி நண்பரான திரு. குறுப்புவின் வீட்டிற்குத் திரும்பும் சாலையின் ஒரு மூலையில் நான் போய் சேர்ந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். நெருப்பு பற்றி எரிந்து அழிந்த ஒரு வீட்டின் கோலம்தான் நான் கண்டுபிடித்த அடையாளம்.

குறுப்பு என்னை எதிர்பார்த்துப் பதைபதைப்புடன் வீட்டிற்கு முன்னால் சாலையிலேயே நின்றிருந்தார்.

“ஹாவ்!”  - குறுப்பு என்னைக் கண்டதும் நிம்மதியடைந்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார். பிறகு என்னை தலையிலிருந்து கால்வரை ஒருமுறை பார்த்துவிட்டு சந்தேகத்துடன் கேட்டார்: “நீங்கள் கடலில் குளிப்பதற்காகப் போயிருந்தீர்களா? முழுசா நனைந்திருக்கிறீர்களே?”

நான் வியர்வையில் நனைந்திருந்தேன். “நான் கொஞ்சம் வேகமாக நடந்தேன். அதனால் வியர்வை...” - நான் எப்படியோ கூறிவிட்டேன். மூச்சு விட்டதில் வார்த்தைகள் ஒழுங்காக வர மறுத்தன.

“பிறகு... நீங்கள் இவ்வளவு நேரமும் எங்கே இருந்தீங்க? நீங்க போய் விட்ட பிறகுதான் நான் அதை நினைத்தேன். ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். இந்த தெருவில் இருந்து வீடு இருக்கும் தூரத்திற்கு வேறு எங்கும் போயிடாதீங்க. மொம்பாஸாவில் கொலை செய்யும் கூட்டங்களின் தொந்தரவு சமீபகாலமாக மிகவும் அதிகமாயிருக்கு. நகரத்தின் தெற்குப் பகுதியில் இரவு எட்டு மணி தாண்டிவிட்டால் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் அந்தப் பகுதிக்கு போய்விடப் போகிறீர்களோ என்பதுதான் என்னுடைய பயமாக இருந்தது. நீங்க எங்கே போயிருந்தீங்க?”

“ஓ... நான் இதற்கு அருகில் இருந்த ஏதோ ஒரு பூங்காவில் போய் உட்கார்ந்துகொண்டு, காற்று வாங்கியவாறு அப்படியே தூங்கி விட்டேன்”- நான் திடீரென்று தோன்றிய ஒரு பொய்யைச் சொன்னேன்.

“அங்கு போயிருக்க வேண்டியது இல்லை” - குறுப்பு என்னை அழைத்துக்கொண்டு வீட்டின் மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறியவாறு சொன்னார்: “அறிமுகமில்லாதவர்களை ஈர்த்து ஆபத்தான விஷயங்களில் சிக்க வைப்பவதற்கு சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துத் திரியும் மோசடி மனிதர்கள் இந்தப் பகுதியில் ஏராளமாக இருக்கிறார்கள். முகமூடி அணிந்து நடக்கும் மோகினிகள் - அவர்கள் பயங்கரமானவர்கள். நீங்கள் ஆபத்தில் எதிலும் சிக்காமல் திரும்பி வந்துவிட்டீர்கள் அல்லவா? அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இனிமேல் மாலை நேரம் தாண்டினால் நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. புரியுதா?”

குறுப்பின் அறிவுரையைக் கேட்டு, சொன்னபடி கேட்கும் தம்பியைப்போல நான் வெறுமனே புன்னகைக்க முயற்சித்தேன். அது ஒரு இளித்துக் காட்டலாக ஆனதைப்போல எனக்கே தோன்றியது.

என்னுடைய நடவடிக்கைகளில் மொத்தத்தில் ஏதோ வேறுபாடு இருக்கிறது என்பதை குறுப்பு உணர்ந்திருக்க வேண்டும். அவர் சாந்தமான குரலில் சொன்னார்: “குளிர்ந்த நீரில் ஒரு குளி குளித்தால் நல்லது.”

நான் குழாய் நீரில் சிறிது நேரம் தலையை நனைய வைத்தேன். குறுப்பு சொன்னதைப்போல குளித்ததும் ஒரு சுகம் தோன்றியது. இரவு உணவு சாப்பிடவில்லை. ஒரு சூடான காப்பியை பருகிவிட்டு உறங்குவதற்காகக் கிடந்தேன்.

மறுநாள் காலையில் நான் கடினமான ஜுரத்துடன் கண் விழித்தேன். என்னுடைய நெற்றியிலும் மார்பிலும் கையை வைத்துப் பார்த்துவிட்டு குறுப்பு சொன்னார்: “மலேரியாவின் ஆரம்பமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவிற்கு வந்தால் மலேரியா பாதிக்காமல் திரும்பிப் போவது என்பது ஒரு மரியாதைக் கேடான விஷயம். நான் ஒரு டாக்டரை இங்கு அனுப்புகிறேன். நீங்கள் முழுமையாக ஓய்வு எடுக்கணும்.”

குறுப்பு அறிவுறுத்தியதைப்போல நான் படுக்கையிலேயே படுத்திருந்தேன். டாக்டர் வந்து சோதித்துப் பார்த்தார். மலேரியாவே தான். டாக்டர் ஒரு ஊசியைப் போட்டார் - விழுங்குவதற்கு சில மஞ்சள் நிற மாத்திரைகளையும்.

அன்று சாயங்காலம் குறுப்பு அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது கையில் ‘மொம்பாஸா டைம்ஸ்’ என்ற ஆங்கில நாளிதழின் மாலைப் பதிப்பு இருந்தது. என்னுடைய நோயின் நிலையை விசாரித்தவாறு பத்திரிக்கையை என் படுக்கையில் போட்டுவிட்டு குறுப்பு நல்ல ஒரு குளியலுக்காக குளியலறையைத் தேடிப் போனார்.

நான் பத்திரிகையைக் கையில் எடுத்து விரித்தேன். முன் பக்கத்தில் வெண்டைக்காய் எழுத்தில் ஒரு செய்தியின் தலைப்பு:

‘கொலை செய்யும் ரகசிய சங்கத்தின் தலைவன் போலீஸின் குண்டடிபட்டு மரணம்’.

அந்தச் செய்தி இப்படி விரிந்திருந்தது:

‘மோம்பாஸா,

செப்டம்பர் 15.

நேற்று இரவு 11 மணிக்கு ஜீசஸ் கோட்டைப் பகுதியில் பிரபலமான ஹம்தா ரகசிய சங்கத்தின் தலைவன் ஒற்றைக் கண்ணன் ஹமீத் என்ற ஹஸ்ஸனை போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

ஒற்றைக் கண்ணன் ஹமீத்தின் நண்பனும் மெய்க்காப்பாளனுமான யூசுப்பை காயம்பட்டு விழுந்த நிலையில் போலீஸ் கைது செய்தது.

கடந்த சில மாதங்களாக மொம்பாஸாவில் நடந்த பல கொலைகளுக்கும் காரணமாக இருந்தவர்கள் இந்த ஹம்தா ரகசிய சங்கம்தான் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த அக்கிரமச் செயல்களை அடக்குவதற்கு அரசாங்கம் தனி கவனம் செலுத்தி ஏற்படுத்திய குற்றங்களுக்கு எதிரான குழு, கேப்டன் கோல் அவர்களின் தலைமையில் செயல்பட ஆரம்பித்து மூன்று மாதங்களாகின்றன. அவர்களுடைய முதல் வெற்றி நேற்று கிடைத்திருக்கிறது.

ரகசிய சங்கத்தின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவனை போலீஸ் ஒற்றர்கள் ஜீசஸ் கோட்டையின் சமீபம் வரை பின் தொடர்ந்தார்கள். அவர்களைப் பற்றிய குறிப்பு கிடைத்தவுடன் இரண்டு வேன்கள் நிறைய ஆயுதங்கள் ஏந்திய போலீஸ்காரர்கள் கோட்டையின் தெற்குப் பகுதிக்கு விரைந்தார்கள். வானொலி, தேடும் விளக்குகள் ஆகிய நவீன பொருட்களுடன் அவர்களுடைய தொழில் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. திடீரென்று போலீஸ்காரர்க்ள முற்றுகை இட்டார்கள். எனினும் ரகசிய சங்கத்தின் உறுப்பினர்களில் இரண்டு பேர்களைத் தவிர மீதி எல்லோரும் தப்பித்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடிந்த இருவரில் ஒரு ஆள் சங்கத்தின் தலைவனான ஒற்றைக்கண்ணன் ஹமீத் என்ற ஹஸ்ஸனும் இன்னொரு ஆள் ஹமீத்தின் மெய்க்காப்பாளனான யூசுப்பும்.

கொல்லப்பட்ட ஒற்றைக்கண்ணன் ஹமீத், ஒரு கொலைக் குற்றத்திற்கு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, ஜீசஸ் கோட்டையின் சிறையில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்பே தப்பித்துச் சென்ற ஒரு புள்ளி என்ற உண்மை இப்போது தெரிய வந்திருக்கிறது.

கறுத்த முகமூடி அணிந்து நடமாடும் ஹம்தா ரகசிய சங்கம் கொலை செய்வதற்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆட்களைக் கழுத்தை நெரித்துக் கொள்வதுதான் அவர்களுடைய செயல்முறையின் முக்கியத்துவம்.’

அந்தச் செய்தியின் ஒரு பக்கத்தில் ஒற்றைக் கண்ணன் ஹமீத் என்ற ஹஸ்ஸனின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.

நான் அந்தப் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தேன். ஹஸ்ஸனின் ஒற்றைக்கண் பிரகாசிப்பதைப்போல இருந்தது. அந்த விழியின் பச்சை பிரகாசத்தில் அற்புதமான ஒரு கதை உலகம் மனதில் தெரிந்தது. ஒரு கறுப்பினப் பெண்ணின் தீவிரக் காதலும், ஒரு வெள்ளைக்காரப் படைவீரனின் முழுமையான ரத்தினப் பைத்தியமும் அந்தக் கதையில் கண் சிமிட்டுகின்றன.

‘கொலைகாரனான ஹமீத்’ என்று அந்தப் பத்திரிகையில் புகைப்படத்திற்குக் கீழே அச்சடிக்கப் பட்டிருந்தது. நான் என்னுடைய பேனாவின் மையால் அதை அழித்து, அதற்கு பதிலாக இப்படி எழுதினேன்: ‘கதை சொல்லியான ஹஸ்ஸன்.’

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel