Lekha Books

A+ A A-

ஒரு காதல் கதை - Page 9

oru kathal kathai

கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்த ஹஸ்ஸனின் முகம் அழகாக இருந்தது. சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டே ஹஸ்ஸன் கதையைத் தொடர்ந்தான்:

“ஷிராஸில் மது அருந்திக் கொண்டிருக்கும் சுல்தானுக்கு முன்னால் கறாம்பூ பேகம் அப்படியே நடனம் ஆடிக்கொண்டிருக்கட்டும். அந்த நாட்களில் ஜீசஸ் கோட்டையில் என்னவெல்லாம் நடக்கிறது என்று நாம் போய்ப் பார்ப்போம்.”

அணி வகுக்கும் முகமூடிகள்

“ஜீசஸ் கோட்டையின் நிலை எப்படி இருந்தது? கோட்டைக்குள் - சரியாக சொல்லப்போனால் ஒரு மோசமான உலகமாக மாறி விட்டிருந்தது. தாகமும் பசியும் வெள்ளைக்காரனையும் கருத்த மனிதனையும் சமமான நிலையில் பாதிக்கும் என்ற விஷயம் அங்கு பிரச்சினையை உண்டாக்கியது. அங்கு யாருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும்? வெள்ளைக்காரர்களுடைய உயிரா, கறுப்பின மக்களின் உயிரா? சந்தேகமே இல்லை. வெள்ளைக்காரனின் உயிர்தான் விலைமதிப்பு உள்ளது என்று வெள்ளைக்காரனே தீர்ப்பு எழுதிவிட்டான். கறுப்பு மனிதர்களை ஆட்சி செய்யக்கூடிய கடவுளுக்கு நிகரான உரிமையைக் கைவசம் வைத்திருப்பவர்கள் வெள்ளைக்காரர்கள்தான் என்ற பிரச்சாரத்தை - புதிய மதத்தை போதனை செய்து வந்த கூட்டத்தில், வெள்ளைக்கார பாதிரியார்கள் விருப்பப்படும் அளவிற்கு செய்திருக்கிறார்கள். ஆனால் பசி என்ற ஒன்று வந்தபோது, புனித வேதங்களின் உபதேசங்களைப் பின்பற்ற புதிய கிறிஸ்துவர்களான கறுப்பின மக்களில் சிலர் தயாராக இல்லை. உடல் பலம் அதிகமாக இருந்தது கறுப்பின மக்களிடம்தான். துப்பாக்கியும் வெடிமருந்தும் வெள்ளைக்காரர்களின் கையில் இருந்தது. அந்த வகையில் ஜீசஸ் கோட்டையில் மிக முக்கியமான உணவு என்ற விஷயத்திற்காக வெள்ளைக்காரர்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் இடையில் கொள்ளையும் சண்டையும் உண்டாகும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. கறுப்பர்கள் முதலில் சண்டையை ஆரம்பிக்க வேண்டும் என்பது போர்த்துக்கீசியர்களின் விருப்பமாக இருந்தது. அப்படி நடந்தால் அதன் மூலம் கொஞ்சம் கறுப்பின மக்களை உயிரை விடும்படி செய்யலாமே! ஜீசஸ் கோட்டையில் இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்கள் ஆசைப்படுவது. அப்படி நடந்தால் எஞ்சியிருப்பவர்களின் உயிரை பட்டினியால் உண்டாகும் மரணத்திலிருந்து சிறிது காலத்திற்குக் காப்பாற்றலாம். அந்தக் கெட்ட எண்ணத்துடன் கறுப்பின மக்களை மரணமடையச் செய்ய தயார் பண்ணுவதற்கு மிருகத்தனமான பல உத்திகளையும் போர்த்துக்கீசியர்கள் பயன்படுத்திப் பார்த்தார்கள். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு விபத்து அந்தக் கோட்டையைத் தேடி வந்தது. ப்ளேக்... பசியைப் போலவே ப்ளேக்கும் வெள்ளைக்காரர்கள் என்றோ கறுப்பு மனிதர்கள் என்றோ இன வேறுபாடு பார்ப்பதில்லை. அந்த பயங்கரமான தொற்றுநோய் வெள்ளைக்காரர்களையும் கறுப்பின மக்களையும் ஒரே மாதிரி பாதித்தது. எந்தவொரு உடனடி புரட்சியும் இல்லாமலேயே இரு இனத்திலும் பலர் இறந்தார்கள்.

ஜோசப் கோட்டையில் ஷேக் சம்சுதீனும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தார்கள். மொஸாம்பிக்கில் இருந்து வந்த போர்த்துக்கீசிய படைக் கப்பலை எதிர்த்தபோது, வெள்ளைக்கார கப்பல் படையினர் காட்டிய எதிர்ப்புகளையும் முட்டாள்தனங்களையும் பற்றி பல வகைகளிலும் கிண்டல் பண்ணி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். சிரித்துக்கொண்டே அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஷேக்கின் நம்பிக்கைக்கு உரிய படை வீரரான நூரியூசுஃப், அந்தக் கூட்டத்தில் ஒரு கோமாளியாகவும் இருந்தான். பின்பாகத்தில் குண்டடிபட்ட ஒரு வெள்ளைக்காரக் கிழவனின் மரணத்தின்போது அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நூரி யூசுஃப் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்துக் காட்டினான். அதைப் பார்த்து பானை வயிற்றைக் கொண்ட ஷேக் வயிற்றில் அடித்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபோது, ஷேக்கின் வாயில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் ஒரு துப்பாக்கியிலிருந்து குண்டுகள் சிதறுவதைப்போல, முன்னால் இருந்த அரேபியர்களின் முகத்திலும் நெஞ்சிலும் தெறித்து விழுந்தன.

அரேபியர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வலிப்பு நோய் வந்தவர்களைப்போல நடந்து கொண்டார்கள்.

நாட்கள் அப்படியே போய்க் கொண்டிருந்தன. ஓமான் அரேபியர்கள் தங்கியருந்த ஜோசப் கோட்டையில் அன்று எப்போதையும்விட அதிகமான உற்சாகம் நிலவிக் கொண்டிருந்தது. மொத்தத்தில், ஒரு திருவிழாவிற்கான சூழ்நிலை அங்கு இருந்தது. ஜீசஸ் கோட்டையில் இருக்கும் வெள்ளைக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக வந்த மொஸாம்பிக்கைச் சேர்ந்த ஒரு கப்பலையும் அதில் இருந்த வெள்ளைக்கார படை வீரர்களையும் ஓமான் அரேபியர்கள் எதிர்த்து விரட்டினார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஓமானில் இருந்து உணவுப் பொருட்களுடன் ஒரு கப்பல் வந்து சேர்ந்தது. அரேபியர்கள் ஒரு ஒட்டகத்தை அறுத்து ஒரு மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்த இரவு நேரமாக அது இருந்தது. முகமூடி அணிந்த ஒரு கூட்டம் பெண்களும், அவர்களுக்கு முன்னால் ஒரு அரேபிய இளைஞனும் ஜோசப் கோட்டைக்கு முன்னால் நடந்து சென்றார்கள். கோட்டை வாசலில் இருந்த காவலாளியான கிழவன் ஹமீத் அந்தக் கூட்டத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். சந்தேகப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. இரவு நேரத்தில் - குறிப்பாக நிலவு வெளிச்சம் இருக்கும் இரவு வேளையில் - நல்ல குடும்பங்களைச் சேர்ந்த அரேபியப் பெண்கள் கறுத்த முகமூடி அணிந்து உறவினர்களின் அல்லது நண்பர்களின் இல்லத்திற்குப் போவது என்பதோ, இல்லாவிட்டால் வெறும் பொழுதுபோக்கிற்கு கூட்டமாகப் போவது என்பதோ அங்கு அசாதாரணமான ஒரு விஷயமல்ல. அவர்களுடைய நடவடிக்கைகளை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருந்த கோட்டை வாசல் காவலாளி ஹமீத்தின் பார்வையில் சற்று சந்தேகம் உண்டானது. அவன் அந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளை மிகவும் கூர்மையாகப் பார்த்தான். ஆமாம் - அந்த பர்தா அணிந்தவர்கள் ராணுவத்தில் இருப்பவர்களைப் போல சரியாக எட்டுகள் வைத்து முன்னோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். பெண்கள் அந்த மாதிரி பட்டாளக்காரர்களைப் போல நடப்பது என்பது ஒரு புதுமையான விஷயம்தானே? ஹமீத்தின் சந்தேகம் அதிகரித்தது. அவன் சோதனை செய்து பார்ப்பதற்காக வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டான். குண்டு சத்தம் கேட்ட பிறகும் அந்த முகமூடி அணிந்தவர்கள் மத்தியில் எந்தவித அதிர்ச்சியும் உண்டாகவில்லை. அந்தப் பட்டாள முறைக்கு எந்த ஒரு மாறுதலும் உண்டாகவில்லை. ஏதோ உத்தரவை எதிர்பார்த்திருப்பதைப்போல அந்த பர்தா அணிந்த கூட்டம் திடீரென்று நின்றது. அவ்வளவுதான்.

ஹமீத் தன் ஆடையில் நெருப்பு பிடித்ததைப்போல அங்கிருந்து ஓடி, கோட்டைக்குள் சென்று படைத் தலைவரான ஷேக் சம்சுதீனைத் தேடினான்.

‘எழுந்திருங்க...! வெளியே ஓடி வாங்க! ஆபத்து... சதி! ஒரு கூட்டம் பர்தா அணிந்தவர்கள் கோட்டைக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel