Lekha Books

A+ A A-

ஒரு காதல் கதை - Page 7

oru kathal kathai

நானும், என்னுடைய நாட்டைச் சேர்ந்த சுமார் ஐம்பது படை வீரர்களும், ஊர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும், எங்களை நம்பி வந்திருக்கும் சுமார் ஆயிரம் கறுப்பினப் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் இங்கு - இந்த ஜீசஸ் கோட்டையில் ஓமான் அரேபியர்களின் படையெடுப்பிற்கு ஆளாகி மிகவும் சிரமப்பட்டு இருந்து கொண்டிருக்கிறோம். சிறைக் கைதிகளைவிட மிகவும் மோசமான நிலையில் நாங்கள் இருக்கிறோம். கைதிகளுக்குத் தண்ணீரும் உணவும் கிடைக்குமே! எங்களுக்கு அவைகூட கிடைப்பதற்கான வழியில்லை. ஜோசப் கோட்டையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஓமான் அரேபியர்கள் ஜீசஸ் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல தந்திரங்களையும் பயன்படுத்தி எங்களுடைய வெடிமருந்துகளை வெறுமனே வீண் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வெடிமருந்தோ ஆயுதங்களோ கிடைப்பதற்கான வழியே இல்லை. ஜீசஸ் கோட்டைக்கான எல்லா உதவக்கூடிய வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன. ஓமான் அரேபியர்கள் தடை செய்து வைத்திருக்கிறார்கள். மொஸாம்பிக்கில் இருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக வந்த போர்த்துக்கீசியக் கப்பல்கள் எல்லாவற்றையும் அரேபியர்கள் மூழ்கச் செய்துவிட்டார்கள் என்பது எங்களுக்கு வந்த தகவல். அவர்களை எதிர்த்து நிற்பதற்கு வெடிமருந்தும், ஆயுதங்களும், உணவுப் பொருட்களும் இல்லாமல் நாங்கள் உயிர் இருந்தும் பிணங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொற்று நோய்களும் எங்களை அழித்து நாசம் செய்து கொண்டிருக்கின்றன. எங்களை இப்படிப் பட்டினி போட்டுக் கொல்வது என்பதுதான் அரேபியர்களின் திட்டம். இந்த பயங்கரமான சதிச் செயலுடன் போராடி எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பதை மனதில் கற்பனை பண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. போர்த்துக்கீசிய படையைச் சேர்ந்த பத்தொன்பது பேர் இதுவரை மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். இந்தக் கடிதம் அங்கு கிடைக்கும்போது எங்களில் இன்னும் சிலர் பிணமாக ஆகியிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களின் பழைய நண்பனான இயாகோ வாகிய நானும் இருக்கலாம். (அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால், இந்தக் கடிதத்தை இயாகோவின் இறுதி விடை பெறலாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.)

எங்களை இந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்ற ஒரு ஆளால் முடியும். ஸாஞ்சிபார் சுல்தான்தான் அது. அப்படிப்பட்ட ஒரு ஆசையை மனதில் வைத்துத்தான் உங்களுக்கு இந்தத் கடிதத்தை எழுதுகிறேன். சுல்தானின் புதிய மனைவியாக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் சொன்னால், ஒரு கூட்டம் அரேபிய போர் வீரர்களை இங்கு அனுப்பி வைக்காமல் இருக்க மாட்டார். நீங்கள் அதைச் செய்வீர்களா? இயலாது என்றால் இந்த விஷயத்தை மறந்து விடுங்கள். இயாகோவையும் மறந்துவிடுங்கள்.

சொந்தம்,

இயாகோ வயாஸ்

(கேப்டன்)

அந்தக் கடிதத்தை முத்தமிட்டுக் கொண்டு கறாம்பு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

மொம்பாஸாவின் ஜீசஸ் கோட்டையில் மரணத்தை எதிர்பார்த்து இருக்கும் இயாகோவின் முகத்தை அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள். அந்த நீலநிற விழிகளில் பரிதாபமான கெஞ்சல் இருப்பதையும் பார்த்தாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஸாஞ்சிபாரில் இருந்த ஒரு கிராமத்து நடன சாலையில் இருக்கும்போது, அந்த அழகான தோற்றத்தைக் கொண்ட வெள்ளைக்கார போர் வீரனை முதல்முறையாகச் சந்தித்த மாலை நேரம் அவளுடைய ஞாபகத்தில் வந்தது. அவள் அப்போது ஸாஞ்சிபாரில் புகழ்பெற்ற நடனப் பெண்ணாக இருந்தாள். நடனம் முடிந்தவுடன், பார்வையாளர்களுக்கு மத்தியில் இருந்து உயர்ந்து, மெலிந்து காணப்பட்ட அழகான ஒரு வெள்ளைக்கார இளைஞன் அவளுக்கு அருகில் வந்து அவளுடைய கையைப் பிடித்து முத்தமிட்டு, தன்னுடன் சேர்ந்து நடனமாட அவளை கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அந்த வெள்ளைக்காரனின் இளமையான தோற்றத்தைவிட அவனுடைய பணிவும் சினேகத்துடன் நடந்து கொண்ட விதமும் அவளுக்குப் பிடித்தன. வெள்ளைக்காரர்கள் பொதுவாக உள்ளூரைச் சேர்ந்த நடனம் நடக்கும் இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள். கறுப்பின மக்களுடைய ‘பேய் நடனங்கள்’ மீது கிண்டல் கலந்த ஒரு வெறுப்பு அவர்களுக்கு இருக்கும். ஒருவேளை அவர்கள் வருகிறார்கள் என்றால், அந்த வருகையின்போது அவர்கள் மது அருந்தி, சுய உணர்வு இல்லாமல், வெளிப்படையான பலாத்கார எண்ணத்துடன்தான் அவர்கள் இருப்பார்கள். இந்த இளைஞனான வெள்ளைக்காரப் போர்வீரன் மது அருந்தியிருக்கவில்லை. ஒரு பணிவும், சந்தோஷமும், மனித அன்பும் அவனுடைய நீலநிறக் கண்களில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கறாம்பூவும் இயாகோவும் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடனமாடினார்கள். பார்வையாளர்களாக இருந்த கறுப்பின மக்கள் அவர்களின் நடனத்திற்கு சீராக கைகளைத் தட்டினார்கள்.

அன்று முதல் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

கறாம்பூ தன்னுடைய கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தை மெதுவாகத் தடவி அதை ஒருமுறை முத்தமிட்டாள். இயாகோ பரிசாகத் தந்த ரத்தின மோதிரம் அது. அந்த மோதிரத்தில் இருந்த ரத்தினக் கல்லைப் பற்றிய கதையை இயாகோ கூறியதை அவள் நினைத்துப் பார்த்தாள். இந்தியாவில் இருந்த ஏதோ ஒரு கோவிலின் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த மாலையில் இருந்த ஒரு ரத்தினம் அது.

வெள்ளைக்காரப் படை வீரர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கு கண்ட தங்கத்தையும் ரத்தினத்தையும் கொள்ளையடித்து, சிலையை அடித்துப் பெயர்த்து, அங்கு ஒரு மரத்தாலான சிலுவையை வைத்து விட்டுத் திரும்பிச் சென்று விட்டார்கள். அன்று அந்தஆலயத்தைக் கொள்ளைடித்த கூட்டத்தில் இருந்த வெள்ளைக்காரர்களில் இயாகோவைத் தவிர, எல்லோரும் கடலில் பயணம் செய்யும் போது, அரேபியர்களுடன் உண்டான மோதலில் மரணமடைந்த கதையையும் இயாகோ கூறியிருந்தான். ‘நான் இனிமேலும் இந்தியாவிற்குச் செல்வேன். ரத்தின மூட்டையுடன் ஸாஞ்சிபாருக்குத் திருப்பி வந்து உங்களின் காலடிகளில் அந்த ரத்தின மூட்டையைச் சமர்ப்பணம் செய்வேன்’- இயாகோவின் வார்த்தைகளை அவள் நினைத்துப் பார்த்தாள்.

இந்தியாவில் உள்ள தெய்வத்தின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ரத்தின மாலையைக் கொள்ளையடித்த வெள்ளைக்காரர்களில் எஞ்சியிருந்த இயாகோவும் இதோ ஜிசஸ் கோட்டையில் மரணத்தை எதிர்பார்த்துக் கிடக்கிறான்.

கறாம்பூ அந்த மோதிரக் கல்லையே உற்றுப் பார்த்தாள். ‘இது சாபம் ஏற்ற ரத்தினமாக இருக்குமோ?’

இருக்காது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். அந்த ரத்தினக்கல் அவளுடைய கையில் வந்த பிறகுதான் சுல்தான் அவளைச் சந்தித்தார். மறுநாளே சுல்தான் அவளைக் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டு அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றும் விட்டார். அதற்கு முன்பே இயாகோ இந்தியாவிற்குப் போய்விட்டான்.

அவள் இயாகோவைப் பற்றி நினைக்காத இரவுகள் இல்லை. சுல்தானின் அரண்மனையில் இருந்த அற்புதமான சுக போகங்களுக்கு மத்தியிலும், கறாம்பூ இயாகோவின் கை அணைப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் மெத்தையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். காதலைப் பற்றி சிந்தித்து நேரத்தைக் கடத்துவது இந்த சூழ்நிலையில் ஆபத்தானது. உடனடியாக ஏதாவது தீர்மானித்தாக வேண்டும். கறுப்புநிறப் பணியாள் அங்கு காத்து நின்றிருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel