Lekha Books

A+ A A-

ஒரு காதல் கதை - Page 3

oru kathal kathai

ஜீசஸ் கோட்டை உண்மையாகவே சொல்லப்போனால் ஒரு கல்லறையேதான். வரலாற்றின் சவக் கல்லறை. போர்த்துக்கீசியர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் செய்த அக்கிரமங்கள், அவர்கள் செய்த கூட்டக் கொலைகள், சதி, பகை ஆகியவற்றைக் காட்டும் ஒரு நினைவுச் சின்னம் அது.

முந்நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஜான் பாப்டிஸ்ட் கைரோன் என்ற வெள்ளைக்காரர், ஏசுநாதரின் புனிதப் பெயரில் கட்டிய அந்தக் கருங்கல் கோட்டையில், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் சைத்தானின் கூத்தாட்டம்தான் நடந்தது. அந்தக் கோட்டையைக் கட்டப் பயன்படுத்திய கருங்கற்களைவிட பல மடங்கு பிணங்களை அங்கிருந்து எடுத்திருக்கிறார்கள். ரத்த ஆறுகள் அங்கு ஓடியிருக்கிறது. பட்டினியாலும் நோயாலும் பாதிக்கப்பட்டு, செயல்பட முடியாமல் போன பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கோட்டைக்குள் பேய்களைப்போல மனித மாமிசத்தைச் சாப்பிட்டிருக்கிறார்கள். அந்தக் கோட்டையின் வரலாற்றை அறிந்தவர்கள் அதை தூரத்தில் இருந்து சிறிது நேரம் பார்ப்பதற்குக்கூட பயப்படுவார்கள்.

ஜீசஸ் கோட்டையின் ஒரு பகுதியை மொம்பாஸாவின் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரிகள் இப்போது ஒரு சிறையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் தங்களுடைய முக்கிய எதிரிகளான அரேபியர்களுடன் போராடி நிற்பதற்கான ஓர் இடமாக, மொம்பாஸா தீவில் ஒரு மறைவான இடத்தில் போர்த்துக்கீசியர்கள் இந்தக் கோட்டையை உண்டாக்கினார்கள். கோட்டையை உண்டாக்கி இரண்டு வருடங்கள் கடந்தபோது, 1594-ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவைத் தங்களுக்குக் கீழே கொண்டு வரக்கூடிய முழுமையான அதிகாரங்களைக் கொண்ட ஒரு கவர்னரை ஜீசஸ் கோட்டையின் கமான்டராக நியமித்தார்கள். அதற்கு முன்பே மொம்பாஸா மீது சில அதிகாரங்களைப் போர்த்துக்கீசியர்கள் தாங்களாகவே உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், அரேபியர்கள் வெள்ளைக்காரர்களின் அந்த அதிகாரங்களை ஒப்புக் கொள்ளவில்லை.

பல வழிகளையும் பயன்படுத்தி, குறுநில மன்னர்களைத் தங்கள் பக்கம் கொண்டு வந்து, இறுதியில் அவர்களுடைய தலையிலேயே ஏறி நின்று நாடு முழுவதையும் பிடித்து அடக்குவது என்ற அந்தப் பழைய தந்திரத்தைத்தான் போர்த்துக்கீசியர்கள் இங்கும் பயன்படுத்தினார்கள். மலிந்தியின் முஸ்லிம் மன்னரான ஹஸ்ஸன் பின் அலியை போர்த்துக்கீசியர்கள், போர்ச்சுக்கல் மன்னரின் ஆசீர்வாதங்களுடன் மொம்பாஸாவின் மன்னராக ஆக்கினார்கள். ஜீசஸ் கோட்டையின் வெள்ளைக்காரப் படையின் தலைவன்தான் உண்மையிலேயே மொம்பாஸாவில் வாழும் மன்னர் என்பதைப் புரிந்து கொண்டபோது ஹஸ்ஸன் பின் அலி கவர்னருடன் மோதினார். போர்த்துக்கீசிய கவர்னருடன் மோதினால் தன்னுடைய தலை தப்பிக்கவே முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஹஸ்ஸன் பின் அலி ஆப்பிரிக்கா கரையைத் தேடி ஓடி, அங்கு ரப்பாயி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். போர்த்துக்கீசிய ஒற்றர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். ஹஸ்ஸன் பின் அலி உயிருடன் இருந்தால், ஆபத்து உண்டாகும் என்று போர்த்துக்கீசியர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை உண்டாகாமல் இருப்பதற்காக போர்த்துக்கீசியர்கள் ஒரு ரப்பாயி கூட்டத்திற்கு நல்ல ஒரு தொகையைக் கைக்கூலியாகக் கொடுத்து ஹஸ்ஸன் பின் அலியின் தலையை வெட்டினார்கள்.

ஹஸ்ஸன் பின் அலிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் யூஸுஃப். யூஸுஃபை நல்லவனாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் போர்த்துக்கீசியர்களின் அடுத்த முயற்சியாக இருந்தது. ஒரு குறுநில மன்னன் தங்களிடம் இருந்தால், ஒரு பெரிய ராணுவத்தை வைத்துக் காப்பாற்ற வேண்டிய சுமை இல்லாமல் போகும். அந்தக் குறுநில மன்னனை மக்கள் அனுசரித்து ஏற்றுக்கொள்வார்கள் அல்லவா? இளவரசனான யூஸுஃபிற்கு உயர்தரக் கல்வி அளிப்பதற்காக போர்த்துக்கீசியர்கள் அவனை கோவாவிற்கு அனுப்பினார்கள். யூஸுஃபிற்காக மொம்பாஸாவை போர்த்துக்கீசியர்களே ஆட்சி செய்தனர்.

போர்த்துக்கீசியர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக பல மாறுதல்களை கோவா வாழ்க்கை யூஸுஃபிடம் உண்டாக்கியது. அவன் ஒரு போர்த்துக்கீசிய பெண்ணுடன் காதல் வயப்பட்டான். அவளைத் திருமணம் செய்வதற்காக அவன் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு ஒரு ரோமன் கத்தோலிக்கனாக மாறினான்.

ஜோசப் ஆக மாறிய யூஸுஃப் 1630-ல் மொம்பாஸாவிற்குத் திரும்பி தன்னுடைய ஆட்சி அதிகாரத்தைத் திரும்பத் தரும்படிக் கேட்டான். வெளிநாட்டு வாழ்க்கையும், உயர்தர படிப்பும், திருமணமும், மதமாற்றமும் யூஸுஃபின் நரம்புகளில் ஓடிக் கொண்டிருந்த அரேபிய ரத்தத்தின் வீரியத்தைக் குறைக்கவில்லை. யூஸுஃபிற்கு ஆட்சி அதிகாரத்தைத் திருப்பித்தர போர்த்துக்கீசியர்கள் தயாராக இல்லை. யூஸுஃபிற்காக வாதாட வந்த அரேபியர் கூட்டத்தை ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளையர் பட்டாளம் ஒருவரைக்கூட விடாமல் கொலை செய்தது. அதைத் தொடர்ந்து யூஸுஃபின் ஆட்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் இடையில் பயங்கரமான மோதல்கள் நடந்தன. போர்த்துக்கீசியர்களின் ஆயுத பலத்திற்கு முன்னால் அதிக காலம் எதிர்த்து நிற்க முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதும் யூஸுஃப் அரேபியாவிற்கு ஓடித் தப்பித்துக் கொண்டான். தந்தையின் அனுபவம்தான் இறுதியில் யூஸுஃபிற்கும் உண்டானது. போர்த்துக்கீசியர்களிடம் கைக்கூலியைப் பெற்று, ஒரு அரேபியக் கூட்டம் யூஸுஃபின் தலையை அறுத்தது.

போர்த்துக்கீசியர்களின் கூட்டக் கொலை, சதிச் செயல்கள் ஆகியவற்றின் வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கும் கோட்டையைத்தான் நான் எனக்கு முன்னால் பார்க்கிறேன்.

ஜீசஸ் கோட்டையில் வரலாற்றுத் தொடர்பு அங்கேயே முடிந்து விடவில்லை. மொம்பாஸாவின் வரலாற்றிலேயே மிகவும் நீண்ட காலம் நீடித்த போர், யூஸுஃப்பின் தலை வெட்டப்பட்டு முப்பது வருடங்கள் கடந்த பிறகுதான் ஆரம்பமானது. 1696-ல் ஓமானின் சுல்தானான ஸெய்ஃப், மொம்பாஸாவில் இருந்த போர்த்துக்கீசிய வெள்ளைப் பேய்களை விரட்டியடிப்பதற்காக மிகப்பெரிய முயற்சியைத் தொடங்கினார். ஓமான் அரேபியர்கள் படை மொம்பாஸாவில் இறங்கி நகரத்தைக் கைப்பற்றியது. கடற்கரையில் இருந்த பழைய ஜோசப் கோட்டைக்குள் நுழைந்து ஜீசஸ் கோட்டையை நோக்கிப் போர் செய்ய ஆரம்பித்தார்கள். ஐம்பது போர்த்துக்கீசிய வெள்ளைப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் ஜீசஸ் கோட்டைக்குள் இருந்தார்கள். உள்ளூர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும், போர்த்துக்கீசிய பாதிரியார்கள் மதம் மாற்றம் செய்த அந்த ஊரைச் சேர்ந்த கொஞ்சம் புதிய கிறிஸ்தவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் அடங்கிய இரண்டாயிரம் பேர் இருக்கக்கூடிய ஒரு கறுப்பின மக்களின் கூட்டமும் அந்தக் கோட்டைக்குள் அபயம் தேடித் தங்கியிருந்தன.

உலக வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமானதும் இரக்கமற்றதுமான அந்தப் போர் இரண்டு வருடங்கள், ஒன்பது மாதங்கள் நடந்தது. ஜீசஸ் கோட்டையில் இருந்த மக்களைப் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி சாகச் செய்ய வேண்டும் என்பது ஓமான் அரேபியர்களின் திட்டமாக இருந்தது. அது நடந்தது. ஓமான் அரேபியர்கள் ஜோசப் கோட்டைக்குள் பட்டாசுகள், பாட்டு, கூத்து, விருந்து என்று களிப்பில் ஈடுபட்டிருக்க, ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுடன் இருந்தவர்களும் பட்டினி, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, துயரங்களை அனுபவித்து அழிந்து கொண்டிருந்தார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel