Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 25

en thathavukku oru yanai irunthathu

இருந்தாலும் எங்களுக்கு ஒரு வழியும் தெரியல. பாரு... இந்த நிலத்துல ஏதாவது மரம் அது இதுன்னு இருக்கா? இந்த ஊர்ல பெரும்பாலான ஆளுங்க சாயங்காலம் இருட்டின பிறகுதான் கக்கூஸுக்கே போவாங்க. ஒற்றையடிப் பாதையோரத்துல தான் என் பொண்டாட்டியும் மகளும் மலம் கழிக்கிறது... சொல்லப் போனால் நாங்க முன்னாடி கொஞ்சம் வசதியா இருந்தவங்க. எங்களைப் பார்த்தா எழுந்து நின்னவங்க இப்ப யாரும் எந்திருச்சு நிற்கிறது இல்ல. அவங்களுக்கு மத்தியில் என் பொண்டாட்டியும் மகளும் ஒற்றையடிப் பாதையில் போய் உட்கார்ந்து மலம் கழிச்சா நல்லவா இருக்கும்?”

நிஸார் அஹமது சொன்னான்:

“ஆளுங்க நடக்குற பாதையில் மலம் இருக்குறதோ மூத்திரம் பெய்யறதோ நல்ல விஷயமா? சொல்லுங்க. ஆளுங்க நடந்து போக வேண்டாமா? அதை அசுத்தம் செய்யலாமா? அந்த இடம் முழுவதும் ஒரே நாற்றமா இருந்தா எப்படி இருக்கும்?”

“அப்ப எங்க மாதிரி ஆளுங்க என்னதான் பண்றது?”

“அதனாலதான் சொல்றேன். வீட்லயே கக்கூஸ் உண்டாக்கணும். இதற்கு பெருசா பணம் ஒண்ணும் தேவையில்லை. கொஞ்சம் ஓலைகள் வேணும். அஞ்சாறு மூங்கில்கள் வேணும். கொஞ்சம் கயிறு. ஒரு மண்வெட்டியை வச்சோ தும்பாவை வச்சோ ஒரு மணி நேரம் வேலை செஞ்சா போதும். ஒரு வருஷத்துக்கு நாம கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. மனிதர்கள் ஏன் இதைச் செய்யாம இருக்காங்க? பெரிய நகரம்னா இடம் இல்லைன்னு சொல்லலாம். இங்க அப்படியொரு பிரச்சினையே இல்லியே! அழகான கிராமம். சுத்தமான தண்ணீர் வர்ற பெரிய ஆறு. இங்கே முஸ்லிம், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் எல்லாருமே மலம் கழிக்கிறது ஆற்றுக்குப் பக்கத்திலேயே. குடிக்கவும், குளிக்கவும் பயன்படுற தண்ணீரை அசுத்தமாக்கினா எப்படி? நான் எவ்வளவோ இடங்களுக்குப் போய் வந்த ஆளு. அழகான கடற்கரை. வெண்மை நிறத்தில் மணல் பரந்து கிடக்கும். கால்களை கீழே வைக்க முடியாது. பெண்ணும் ஆணும் எல்லாருமே மலம் இருக்குறதும், மூத்திரம் பெய்றதும் அங்கேதான். எங்கே பார்த்தாலும் ஒரே நாற்றமா இருக்கும்! மனிதர்கள் ஏன் இப்படி இருக்காங்க? மற்றவர்களுக்குக் கெடுதலும் தொந்தரவும் தராம அவங்களால வாழ முடியும்ல? இப்படி இருந்தா பாதையில நாம எப்படி நடக்க முடியும்? கக்கூஸ் உண்டாக்கணும். அதற்கு ஏகப்பட்ட இடம் இருக்கு. நான் சொல்றது மாதிரி செய்றீங்களா? ஏழெட்டு மூங்கில்களும் கயிறும் ஒரு மண்வெட்டியும் கொஞ்சும் ஓலைகளும் கொண்டுவர முடியுமா?”

“அது ஒரு பிரச்சினையில்லை...”

“அப்படின்னா அதைக் கொண்டு வந்துட்டு என்னைக் கூப்பிடுங்க!”

நிஸார் அஹமது வீட்டுக்குப் போனான். குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை சாமான்களைக் கொண்டு வருவதற்காக கிளம்பினார். அப்போது அவளின் தாய் குஞ்ஞுபாத்தும்மாவைப் பார்த்து சொன்னாள்:

“நீ என் மகளே இல்ல...”

குஞ்ஞுபாத்தும்மா எந்த பதிலும் கூறவில்லை. அவளின் தாய் சொன்னாள்:

“உன்னை நான் பெறவே இல்ல...”

குஞ்ஞுபாத்தும்மா பேசாமல் இருந்தாள்.

அவளின் தாய் சொன்னாள்:

“அடியே... உன் வாயில என்ன வச்சிருக்கே?”

குஞ்ஞுபாத்தும்மா வாயே திறக்கவில்லை

அவளின் தாய் கேட்டாள்:

“நீ என்கிட்ட பேசினா, உன் கையில வளையல் உருவி கீழே விழுந்திடுமா என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“என் கையில வளையலே இல்ல!”

அவளின் தாய் கேட்டாள்:

“இருந்தாலும் உனக்கு யார் பெரிசு? உன் உம்மாவா அவனா?”

குஞ்ஞுபாத்தும்மா பதில் எதுவும் கூறவில்லை.

அவளின் தாய் சொன்னாள்:

“இப்போ செம்மீனடிமையோட தைரியம்லாம் எங்கே போச்சு? நடந்ததைப் பார்த்தியா? அவன் ரெண்டு வார்த்தை பேசின உடனே, செம்மீனடிமை அவனுக்குப் பின்பாட்டு பாட ஆரம்பிச்சிட்டாரு. ஓலையும் மூங்கில்களும் எதற்கு? கல்லறை கட்டவா?”

இறந்தவர்களை அடக்கம் செய்த பிறகு, அந்த இடத்திற்கு மேலே சிறிய ஒரு கொட்டகை அமைத்து, ஒரு மாதகாலம் இரண்டு பேர் இரவிலும் பகலிலும் அமர்ந்து குர்ஆன் படிப்பார்கள். மறைந்த மனிதரின் ஆத்மா மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக. அதற்காகவா ஓலையும் மூங்கிலும் கயிறும்? இதுதான் குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் மனதிற்குள் நினைத்த விஷயம்!

குஞ்ஞுபாத்தும்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

அவளின் தாய் கேட்டாள்:

“நீ அவனுக்குச் சாதகமா சாட்சி சொன்னதற்குக் காரணம்?”

குஞ்ஞுபாத்தும்மா அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

“உன் தாயோட மானம் உனக்குப் பெரிசா தெரியல...”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“நான் பொய் சாட்சி சொல்ல மாட்டேன்!”

“சொன்னா என்னடி? உன் கழுத்துல இருந்து மாலை கீழே விழுந்திடுமா?”

“என் கழுத்துல மாலை எதுவும் இல்ல...”

“அப்ப நீ சொல்றதுக்கு என்ன?”

“வாப்பா அருவாவை வச்சு அவர் கழுத்தை வெட்டியிருந் தார்னா...”

“நமக்கென்ன? அவன் செத்துப் போவான்...”

“வாப்பாவை போலீஸ்காரங்க பிடிச்சிட்டுப்போய் அடிச்சு கொன்னிருந்தாங்கன்னா...?”

அவன் தாய் சில நிமிடங்களுக்கு எதுவுமே பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “கடவுளே... இவ சொல்றது உண்மைதான்” என்று சொல்லிய அவள் குஞ்ஞுபாத்தும்மாவின் அருகில் வந்தாள்.

“என் அருமை மகளே... நீ நம்ம குடும்பத்தைக் காப்பாத்திட்டே! என் மகளே... உனக்கு என்ன குறை சொல்லு... ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“என் நெஞ்செல்லாம் ஒரே வலி உம்மா...”

“கடவுளே... ஏதாவது இஃப்ரீத்தோ ஜின்னோ என் மகள் மேல் ஏறிடுச்சா என்ன?”

கண்ணுக்குத் தெரியாத அந்த உயிர்களுக்குக்கூட ஆசை என்ற ஒன்று உண்டாகலாம் அல்லவா?

9

ன் இதய வேதனை

தனக்கு என்ன குறை என்பதை குஞ்ஞுபாத்தும்மாவாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. அவளின் தந்தை பள்ளி வாசலில் கத்தீபிடம் மந்திரிக்கப்பட்ட ஒரு கயிறைக் கொண்டு வந்து அவள் கழுத்தில் கட்டினார். அது போதாதென்று முஸ்லிம்களிடம் சாதாரணமாக காணப்படும் ஒரு சின்ன சூட்கேஸைப்போல ஒன்று அவளின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அவளிடம் குடிகொண்டிருக்கும் “இஃப்ரீத்” அவளைவிட்டு போவதாகத் தெரியவில்லை. ஒரு நாள் ஆயிஷா வந்து சொன்னாள்- நிஸார் அஹமது சொன்னதாக. அது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு பெரிய விஷயமாகத் தோன்றியது. அவளின் ஒவ்வொரு அணுவும் ஆயிஷா சொன்னதை கவனமாகக் கேட்டது. ஆனால், ஆயிஷா சொன்ன விஷயத்தைக் கேட்டபோது, அவள் வேண்டுமென்றே தன்னிடம் விளையாடுகிறாள் என்று குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தோன்றியது. அவள் சொன்னாள்:

“போ துட்டாப்பி!”

ஆயிஷா சொன்னாள்:

“எந்த சைத்தானும் ஓடிடும். ஜின்னும் போகும். பிறகு... இஃப்ரீத் விஷயத்தைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வெறுமனே அதைக் கழுத்துல தொங்க விட்டுக்கிட்டு நடந்தா போதும். அண்ணனோட பெரிய பெட்டியிலதான் அது இருக்கு. என்ன, கொண்டு வரட்டுமா?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel