Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 30

en thathavukku oru yanai irunthathu

இங்க பாரு... யார்னு உனக்குத் தெரியுமா?”

11

புதிய தலைமுறை பேசுகிறது

குஞ்ஞுபாத்தும்மாவை நிஸார் அஹமது திருமணம் செய்தது ஒரு இரவு வேளையில்தான். அன்று பகல் நான்கு மணிக்கு ஒரு இனிமையான சம்பவம் நடந்தது.

திருமணம் செய்விப்பதற்காக பள்ளி வாசல் கத்தீபை அழைப்பதற்காக குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை சென்றிருந்தார். ஊரில் இருந்த பெரும்பாலான வீடுகளுக்கும் திருமணக் காரியத்தை அறிவித்திருந்தாலும், யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. விருந்தோ வேறு வகையான கொண்டாட்டங்களோ எதுவுமே இல்லை. எதுவுமே தேவையில்லை என்று திட்டவட்டமாக நிஸார் அஹமதுவின் தாயும் தந்தையும் கூறிவிட்டார்கள். வேண்டுமென்றே பெரிய விருந்துகள் நடத்தி கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து ஏழையாகிப்போன முஸ்லிம் குடும்பங்கள் எத்தனையோ! அதை நினைத்துப் பார்ப்பது நல்லது. ஏழெட்டு பேருக்கு நெய் சோறு தயாராகிக் கொண்டிருந்தது. புதுப்பெண்ணிற் குத் தேவையான புதிய ஆடைகளை அவர்கள்தான் வாங்கியிருந் தார்கள். இது எதுவுமே குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. குளித்து முடித்தபிறகு, அவளை அங்கு செல்லும்படி சொன்னாள் ஆயிஷா. குளித்து முடித்ததும், ஆயிஷாவே வந்து அவளை அழைத்துக்கொண்டு போனாள்.

உள்ளே போகும்போது இருந்த குஞ்ஞுபாத்தும்மா அல்ல வெளியே வந்தது. அவள் பாவாடை அணிந்திருந்தாள். பாடீஸ் அணிந்திருந்தாள். ப்ளவுஸ் அணிந்திருந்தாள். பச்சை புடவை அணிந்திருந்தாள். முடி அழகாக வாரப்பட்டிருந்தது. அதில் பூ வேறு வைத்திருந்தாள். புடவையின் ஒரு தலைப்பால், தலையை மறைத்திருந்தாள். அதற்கும் மேலாக அவள் செருப்புகள் வேறு அணிந்திருந்தாள். நூறு முறையாவது அறைக்குள் இங்குமங்குமாய் நடக்கவிட்டிருப்பார்கள். நன்றாக அவள் நடந்த பிறகுதான் அவளை வீட்டுக்கே அனுப்பினார்கள்.

நிஸார் அஹமது சொன்னான்:

“குனியக்கூடாது. முழுசா நிமிர்ந்து, தைரியசாலி மாதிரி நடந்து போகணும்...”

அப்படி நடந்துதான் குஞ்ஞுபாத்தும்மா வீட்டுக்கு வந்தாள்.

அவள் அழகு தேவதையென ஜொலித்தாள். அவளின் கன்னத்தில் இருந்து கறுப்பு மரு மின்னியது. அவள் நடந்து செல்வதை வழியில் நின்றிருந்த சிறுவர்- சிறுமிகள் பார்த்தார்கள். அவளின் தாய் மிதியடிகளைப் போட்டுக்கொண்டு முற்றத்தில் நின்றிருந்தாள். அங்கு ஏதோ கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் குஞ்ஞுபாத்தும்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னவோ அங்கு பேச்சு கேட்டது. என்ன பேசுகிறார்கள் என்பதை அவளால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவளின் தாய் சிறுவர்- சிறுமிகளைப் பார்த்து கேட்டாள்:

“என்ன பிள்ளைங்களா?”

சிறுவர்- சிறுமிகளாக நின்றிருந்த குஞ்ஞுபாத்தும்மாக்களும், குஞ்ஞுதாச்சும்மாக்களும், அடிமைகளும், மக்கார்களும் சொன்னார்கள்:

“குளுகுளு...”

அவளின் தாய் புதிய தலைமுறையைப் பார்த்து கேட்டாள்:

“பிள்ளைங்களா, என்ன சொல்றீங்க?”

பிள்ளைகள் சொன்னார்கள்:

“லுல்லுலு!”

அவளின் தாய்க்கு இதைக் கேட்டதும் கோபம் வர ஆரம்பித்தது. அவள் சொன்னாள்:

“உங்களைப் பாம்பு கடிக்கப் போகுது...”

“மெம்மம்மே!”

“பன்றிகளே!”

“பெப்பப்பே!”

அவளின் தாய் சொன்னாள்:

“நான் உலக்கையை எடுத்து அடிக்கப் போறேன்!”

குஞ்ஞுபாத்தும்மா தூரத்தில் வரும்போதே சொன்னாள்:

“உம்மா, பேசாம இருங்க. நீங்க பாட்டுக்கு ஏதாவது சொல்லி, அவங்களோட வாப்பாங்க சண்டைக்கு வந்துடப் போறாங்க!”

“வரட்டும்டி...” அவளின் தாய் ஊரே கேட்கிற மாதிரி உரத்த குரலில் சொன்னாள்: “உன்னை அவங்க எல்லாரும் வந்து பார்க்கட்டும். யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளை அவுங்க தான் வந்து பார்க்கட்டுமே! உன் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்துச்சு... பெரிய ஒரு ஆண் யானை!”

“அது ஒரு குழி யானை.” மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த முகத்தையும், சொறி பிடித்த கைகளையும் கொண்ட ஒரு கறுப்பான ஒரு முழம் உயரமே உள்ள ஒரு அடிமை சொன்னான்:

“குழி யானை குழி யானை!”

அதை குஞ்ஞுதாச்சும்மாவால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? பெரிய ஒரு வரலாற்றின் பெருமையைத் தகர்த்து உடைப்பது என்றால்... சூரபராக்கிரமசாலியான யானை மக்கார் சாஹிப்பிற்குச் சொந்தமானதும், தைரியசாலியும் நான்கு காஃப்ரிகளைக் கொன்றவனும், கம்பீரமான தோற்றத்தைக் கொண்டவனுமான அந்தப் பெரிய ஆண் யானையை- முற்றத்தில் சுவரோடு சேர்ந்து மண்ணில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் “குழி யானை” என்ற சின்னஞ்சிறு வண்டுடன் ஒரு சிறுவன் ஒப்பிட்டுப் பேசுவது என்றால்...?

“கடவுளே!” குஞ்ஞுதாச்சும்மா நெஞ்சில் அடித்தவாறு சொன்னாள்: “வாய்க்கு வந்தபடி பேசுற இந்தப் பிள்ளைங்களோட தலையை நீ நொறுக்கக் கூடாதா?”

அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்தச் சிறுவர்- சிறுமிகளின் தலைகள் உடைந்து நொறுங்கவில்லை. இடிந்து விழவில்லை. பாம்பும் அவர்களைக் கடிக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கூவினார்கள்.

“யானை மக்காரோட பெரிய ஆண் யானை... ஒரு குழி யானை! குழி யானை!”

குஞ்ஞுதாச்சும்மாவிற்கு தலை சுற்றியது மாதிரி இருந்தது. மூச்சுவிடவே சிரமப்பட்டாள். அந்தச் சில நிமிடங்களில் வாழ்க்கை முழுவதும் அவளுக்கு முன்னால் கடந்து போனது. எல்லா பெருமைகளும்... இரண்டு கைகளையும் தலையில் வைத்தவாறு அவள் உட்கார்ந்துவிட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா தன் தாயின் அருகில் வந்தாள். சிறுவர்- சிறுமிகளைப் பார்த்து அவள் கேட்டாள்:

“என்ன பிள்ளைங்களா?”

பிள்ளைகள் சொன்னார்கள்:

“ஞ்ஞு! ஞ்ஞு!”

“என்ன?”

“பெப்பப்பே!”

“என்ன சொல்றீங்க?”

பிள்ளைகள் சொன்னார்கள்.

“குழி யானை! குழி யானை!”

“என்ன குழி யானை?” குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் நினைத்தது என்னவென்றால் இந்தச் சிறுவர்களில் யாராவது குழி யானையைப் பிடித்து தன் தாயின் காதில் விட்டிருப்பார்கள் என்றுதான். அவள் தன் தாயின் அருகில் அமர்ந்தவாறு கேட்டாள்:

“என்ன உம்மா?”

அவளின் தாய் எதுவுமே பேசவில்லை. என்ன பேசுவாள்? பழைய சரித்திரங்கள் எல்லாமே எரிந்து தூள் தூளாகிப் போய்விட்டனவே! இனி எதற்காக வாழ வேண்டும்?

குஞ்ஞுபாத்தும்மா மீண்டும் கேட்டாள். அழகுப் பதுமை என தன் முன் நின்றிருக்கும் குஞ்ஞுபாத்தும்மாவைப் பார்த்தாள். நல்ல மனிதனான நிஸார் அஹமதுவை நினைத்துப் பார்த்தாள். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி கடவுளின் அருளுடன் அவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ரப்புல் ஆலமீன் தம்புரான் எல்லாவற்றையும் சரியான பாதையில் நடத்திச் செல்வார். சரித்திரம்... சரித்திரம்தான்... கடைசியில் அவளின் தாய் கண்ணீருடன் விக்கிய குரலில் குஞ்ஞுபாத்தும்மாவிடம் சொன்னாள்:

“உன் தாத்தாவோட... பெரிய ஆண் யானை... ஒரு குழி யானை! குழி யானை!”

மங்களம்

சுபம்

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

தேன் மா

தேன் மா

March 8, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel