Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 27

en thathavukku oru yanai irunthathu

எதற்காக அவள் தன்னை அழைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள் குஞ்ஞுபாத்தும்மா. புளிய மரத்தடிக்கு அவளை அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி பிரம்பால் ஆயிஷா ஒரு வட்டம் வரைந்தாள்.

“வட்டத்துக்கு  நடுவுல நில்...” அவள் கட்டளையிட்டாள்.

“என்ன துட்டாப்பி?” என்று கேட்டவாறு குஞ்ஞுபாத்தும்மா அந்த வட்டத்திற்குள் நின்றாள்.

“வலது கையை நீட்டு.” ஆயிஷா மீண்டும் கட்டளையிட்டாள்.

“என்னை அடிக்கப்போறியா?”

“நீட்டு...”

குஞ்ஞுபாத்தும்மா கையை நீட்டினாள். ஆயிஷா அவள் கையில் ஒரு பென்சிலையும் ஒரு நோட்டு புத்தகத்தையும் ஒரு சிறுவர்களுக்கான புத்தகத்தையும் கொடுத்தாள்.

“நான் இன்னைக்கு முதல் உன்னோட குரு...” ஆயிஷா சொன்னாள்.

குஞ்ஞுபாத்தும்மா சிரித்தாள்.

ஆயிஷா சொன்னாள்:

“எனக்கு தெரியாத எந்த ரகசியமும் என்னோட சிஷ்யைக்குள் இருக்கக்கூடாது. எல்லா விஷயங்களையும் மனசைத் திறந்து சொல்லிடணும். அதற்குப் பிறகுதான் படிப்பு எல்லாம்.... என்னோட சகோதரன் என்று சொல்லப்படுகிற அந்தப் பெரிய மனிதனுக்கும் உனக்கும் இடையே... அப்படி என்ன?”

“சும்மா இரு துட்டாப்பி!”

“வாயைத் திறந்து உண்மையைச் சொல்றியா இல்லியா? இல்லாட்டி உதை வேணுமா? கள்ள புத்தூஸ்... உன்னை நான் நாலாயிரம் துண்டா அறுத்துப் போடப்போறேன்... உண்மையைச் சொல்லு...”

“போ துட்டாப்பி...”

“உண்மையைச் சொல்லு!”

“என்ன?”

“உனக்கும் என்னோட அண்ணனுக்குமிடையே அப்படியென்ன உறவு?”

குஞ்ஞுபாத்தும்மாவை அடிக்கப் போவதைப்போல அவள் பாவனை காட்டினாள்.

“சும்மா இரு துட்டாப்பி...”

ஆயிஷா சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பிறகு கேட்டாள்:

“குஞ்ஞுபாத்தும்மா, உனக்கு நடனம் ஆட தெரியுமா?”

அது என்னவென்றே அவளுக்குத் தெரியாது என்பதே உண்மை.

“எனக்குத் தெரியாது.” அவள் சொன்னாள்.

“சவரம், துணி துவைத்தல், சமையல், ஓவியம்- இது எதுவாவது உனக்குத் தெரியுமா?”

“சும்மா இரு துட்டாப்பி... எனக்கு இதெல்லாம் தெரியாது. எனக்கு இதெல்லாத்தையும் சொல்லி தர்றியா துட்டாப்பி?”

“அப்படின்னா... நான் சொல்றதை நீ கேட்கணும். ஆண்களைப் போன்ற கள்ள புத்தூஸ்கள் இந்த உலகத்துல வேற யாருமே கிடையாது!”

“சும்மா இரு துட்டாப்பி... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.” குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஆயிஷாவின் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட ஒரு விஷயம் கிடைத்தது. இரண்டு மூன்று எறும்புகள் ஒரு செத்துப்போன ஈயை புல்லோடு சேர்த்து இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தன. குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“துட்டாப்பி... இப்போ ஹஜ்ரத்துல் முந்தஹாவோட ஒரு சின்ன இலை கீழே விழுந்திருக்கும்... தெரியுதா?”

ஆயிஷா சொன்னாள்:

“நாம எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசிக்கிட்டு இருந்தோம்! குஞ்ஞுபாத்தும்மா, நீ எழுத படிக்கணுமா?”

“படிக்கணும்!”

“சரி... அப்போ நான் கேட்கிற கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லணும். என் அண்ணனை எப்போ உனக்குத் தெரியும்?”

“எனக்கு எழுதப் படிக்க சொல்லித் தா, துட்டாப்பி!”

“குஞ்ஞுபாத்தும்மா, என்னைத்தானே முதல்ல உனக்கு பிடிச்சது?”

“இல்ல... துட்டாப்பி...” குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“என்ன?” ஆயிஷா வியப்பு மேலோங்கக் கேட்டாள்: “என்னை இல்லியா?”

“இல்ல...”

“அப்ப நீயே சொல்லு!”

“நான் உங்க கிணற்றின் கரையில குளிக்கிறதுக்காக வந்தேன். அப்போ துட்டாப்பி, நீங்க யாரும் இங்கே வரல. ஒருநாள், ஒரு ஆண் குருவி பெண் குருவியை கொத்தி கொல்லப் பார்த்துச்சு. அப்போ பெண் குருவி ஓடையில விழுந்திடுச்சு. அதைப் பார்க்கப் போன நானும் வாய்க்கால்ல ஓடைக்குள்ளே விழுந்துட்டேன். என் கையில நல்லா கீறிடுச்சு. ரத்தம் ஒழுகிக்கிட்டு இருக்கு. நான் கொஞ்சம் என்னோட ரத்தத்தை எடுத்து பெண் குருவி வாயில வச்சேன். அதோட வயிற்றுல ரெண்டு முட்டைகள் இருந்துச்சு. அப்ப வர்றாரு துட்டாப்பி, உன்னோட அண்ணன்...”

“என் அண்ணனா?”

“துட்டாப்பி... அப்ப நீ அங்கே இருந்தே. உன் அண்ணன் கீழே இறங்கி வந்தாரு. என் கையில இருந்த காயத்தைக் கட்டினாரு. என்னைக் கரையில ஏற வச்சாரு. குளிக்கிறப்போ காயத்துல தண்ணி பட்டுடக்கூடாதுன்னு சொன்னாரு...”

“அதற்குப்பிறகு குருவியோட நிலைமை என்ன ஆச்சு?”

“பறந்து அதோட வீட்டுக்கு ஓடிடுச்சு.”

“ஓ... இதுதான் விஷயமா?” ஆயிஷா சொன்னாள்: “ஆண்கள் என்று சொல்லப்படுகிற கள்ள புத்தூஸ்களைப் பற்றி...”

“சும்மா இரு துட்டாப்பி. அப்படியெல்லாம் சொல்லலாமா?”

“இனிமேல் நான் சொன்னா நீ என்னை அடிச்சே கொன்னுடுவே. அதுவும் நடக்கத்தான் போகுது. “ஆயிஷா பீவிக்கு இப்படியொரு நிலைமையா”ன்னு உலகம் பேசத்தான் போகுது...”

“என்ன சொல்ற துட்டாப்பி?”

“நான் பாடம் சொல்லித் தரப்போறேன். கவனமா கேளு...”

ஆயிஷா நிலத்தில் “ப” என்று எழுதினாள்.

“கவனமா பாரு. இந்த எழுத்து அந்த புத்தகத்துல இருக்கான்னு பாரு” என்று சொன்ன அவள் புல்மேல் மல்லாக்க படுத்தாள்.

குஞ்ஞுபாத்தும்மா புத்தகம் முழுக்க பார்த்தாள். அந்த எழுத்தையே காணவில்லை. கடைசியில் அவள் அதைப் புத்தகத்திற்கு வெளியே கண்டுபிடித்தாள்.

ஆயிஷா எழுந்தாள்.

“அதுதான் “ப”- எங்கே சொல்லு?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“ப!”

“ “ப”ன்னு ஆரம்பிக்கிற ஒரு வார்த்தை சொல்லு...”

“பழி...”

“புத்தூஸே! கள்ள புத்தூஸே! பழி இல்ல... வழின்னு சொல்லணும்...”

“வழி...”

“இதுல எங்கே “ப” இருக்கு?”

“இல்ல...”

“அப்படின்னா யோசிச்சு இன்னொரு வார்த்தை சொல்லு.”

“பயிதனங்கா...”

“வழுதனங்கான்னு சொல்லணும்...”

குஞ்ஞுபாத்தும்மா இப்படித்தான் எழுத படிக்க ஆரம்பித்தாள்.

இரவும் பகலும் அவள் இதற்காக கஷ்டப்பட்டாள். தன் தந்தையிடமும், தாயிடமும் அவள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. தன் தாய்க்கு இது தெரிந்தால், அவள் தன்னைக் கண்டபடி திட்டுவாள் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். அவளின் தாய் தீவிரமான தொழுகையில் ஈடுபட்டாள். பெரிய பிரார்த்தனைதான். தொழுகை இருக்கும் பாயைவிட்டு அவள் எழுந்திருக்கவே இல்லை. அங்கே இருந்தவாறே வீட்டுக் காரியங்களை அவள் விசாரிப்பாள். குஞ்ஞுபாத்தும்மா சமையலறை யிலிருந்தும் படுக்கும் பாயில் இருந்தவாறும்கூட படித்தாள். அவளுக்கு எப்போது பார்த்தாலும் சந்தேகம் வரும். அப்போது பக்கத்து வீட்டைத் தேடிப் போவாள். மொத்தத்தில் அவளிடம் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி தென்படும். ஒருநாள் ஆயிஷாவின் தாய் ஏதோ ஒரு குருவியைப் பற்றி அவளிடம் கேட்டாள்:

அதைக் கேட்டதும் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது!

“வெட்கப்படுறதைப் பார்த்தீங்களா?” ஆயிஷா சொன்னாள்.

அப்போது அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ஆயிஷாவின் தாய் சிரித்தவாறு குஞ்ஞுபாத்தும்மாவின் தலையைத் தடவினாள்.

“நீ தலைமுடி வார்றது இல்லயா?” ஆயிஷாவின் தாய் கேட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel